“ஓங்கி விட்டேனா பாரு. கிட்சன் சிங்ல தானா போய் விழுவ…” என்று உஷா தன் மகளை மிரட்ட குழந்தை மீண்டும் உதட்டை பிதுக்கவும்,
“இதெல்லாம் நான் கிளம்பவும் உன் அப்பா கிட்ட வச்சுக்க. நான் டென்ஷனாகிடுவேன்…” என்றவள் மகளை கூட்டிக்கொண்டு சென்று கையை கழுவி முகத்தையும் துடைத்துவிட்டாள்.
“நாளைக்கு ஸ்கூலுக்கு போறப்ப உன் பாட்டியும், அப்பாவும் கூட வரமாட்டாங்க. அங்க இந்த அழிச்சாட்டியம் பண்ணு. உன் வாயிலையே நாலு போடுவாங்க…” என அதட்டிக்கொண்டே தான் மீண்டும் கூட்டிக்கொண்டு வந்தாள்.
“முதல்ல உன் வாய்ல போடனும். எப்ப பாரு அவளை திட்டிட்டு…” கௌஷிக் மகளை தூக்கிக்கொள்ள,
“இப்படி செல்லம் குடுங்க. அவ உருப்பட்டுடுவா….” என்றதும் மனைவியின் தலையில் மகள் பாராமல் நறுக்கென குட்டியவன்,
“கிளம்பறப்போ வெளில லாக் பண்ணிட்டு போ…” என சொல்லிவிட்டு மகளுடன் அறைக்குள் சென்றுவிட்டான்.
“முடிஞ்சதா? நான் இருக்கவா போகவா?…” என்ற முல்லையின் சத்தத்தில் தான் உஷா கையிலிருந்த போனையே கவனித்தாள்.
“உன்னை யார் இருக்க சொன்னா? படிக்கிற வேலை இல்லையா?…” என கிண்டலாக கேட்ட உஷா,
“உடம்புக்கு பரவாயில்லையா முல்லை?…” என்றாள்.
“காய்ச்சல் இல்லை அண்ணி. லேசா தானே இருந்துச்சு. கோல்ட் தான். சரியாகிரும்…” என்றவள்,
“என்ன ஹாஸ்பிட்டலுக்கு?…” என்றாள் முல்லை.
“உன் அம்மாவுக்கு தான். நானும் பத்து நாளா சொல்லிட்டிருக்கேன். உன் அண்ணனுக்கு நேரமில்லை. வாங்க நாம போகலாம்ன்னா ஒண்ணுமில்லைன்னு ஒப்பேத்திக்கிட்டே இருக்காங்க. அதான் இப்ப கிளம்புங்கன்னுட்டேன்…”
“அதான் என்னன்னு சொல்லுங்க அண்ணி…” முல்லை கேட்கவும் தலையில் தட்டிக்கொண்ட உஷா,
“ஜீரண கோளாறு தான். அதனால சரியா சாப்பிடறதே இல்லை. சாப்பாட்டை குறைக்கறாங்க. அளவுதான் குறைஞ்சதுன்னா இன்னைக்கு சாப்பாடே வேண்டாம். நைட்டுக்கு பால் மட்டும் போதுமாம். இதுல அப்பப்ப விரதம் வேற?…”
“ஓஹ்…” என்றாள் முல்லை.
“இந்த வயசுல அவங்க சாப்பிடற சாப்பாடும், நிம்மதியும் தான் உடம்புக்கும், மனசுக்குமான தெம்பை தருது. இதுல பாதி நேரம் உங்கப்பாவை நினைச்சு அழுகை. மீதி நேரம் உன்னை நினைச்சு கவலை…” என்றதும் முல்லை முகம் லேசாய் மாறியது.
“தலைதீபாவளிக்கு அழைக்கிறதை பத்தி உன் மாமியார்கிட்ட அத்தையும் உன் அண்ணனும் பேசிருக்காங்க. கல்யாணம் முடிஞ்ச கையோட கிளம்பி போனவர். இதுக்கும் வரலைன்னா அக்கம்பக்கம் எல்லாம் என்ன பேசுவாங்களோன்னு தவிச்சு போய் இருக்காங்க…”
முல்லைமலர் மௌனமாக இருக்க உஷாவிற்கும் வருத்தம் தான். ஆனால் காட்டிக்கொள்ள முடியாதே.
தன்னால் அவள் வருந்துவதை விரும்பாதவள் கனிவுடன் அவளை பார்த்தாள் அலைபேசி திரையில்.
“உன்கிட்ட ஏதாவது பேசினாங்களா இதை பத்தி?…” உஷா கேட்டதும் திடுக்கிட்டவள்,
“இல்லை அண்ணி…” என்றாள்.
“ஓகே, இன்னும் நாள் இருக்கே? பார்த்துக்கலாம்…” என்ற உஷா,
“சரி, அத்தை வராங்க. நாங்க கிளம்பறோம்…”
“போய்ட்டு வந்து என்னனு சொல்லுங்க அண்ணி…”
“சரி, நீ இதை யோசிக்காம உன்னை பார்த்துக்கோ…” என்று போனை வைத்துவிட்டாள்.
“போலாம் உஷா…” என வந்த ஞானத்துடன் உஷாவும் கதவை பூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
கிளம்பும் முன் ஞானத்தின் வழக்கமான செயலாக கணவனின் படத்தின் முன் நின்று வணங்கிவிட்டு வாசலுக்கு செல்ல பெருமூச்சுடன் அதனை கவனித்தபடி துணை சென்றாள் உஷா.
நமச்சிவாயம், ஞானம் தம்பதிகளின் பிள்ளைகள் கௌஷிக், முல்லைமலர். ரயில்வே துறையில் அதிகாரியாக இருந்தவர் நமச்சிவாயம்.
ஐந்து வருடங்களுக்கு முன் பணியில் இருக்கும் பொழுதே திடீரென மாரடைப்பில் உயிர் நீத்திருக்க அந்த பணியானது கௌஷிக்கிற்கு வழங்கப்பட்டது.
ஏற்கனவே வேறு ஒரு சாதாரண வேலையில் இருந்தவன் அரசாங்க வேலை கிடைக்கவும் அதற்கு மாறிக்கொண்டான்.
சின்னஞ்சிறு குடும்பம். குடும்ப தலைவனாக பொறுப்பான மகன். அவனுக்கு ஏற்ற குணமான மருமகள்.
தாயையும், தங்கையையும் குறையின்றி கண்ணில் வைத்து பார்த்துக்கொள்பவன்.
அவன் பார்த்து தங்கைக்கு நடத்தியிருக்கவேண்டிய திருமணம். யாரும் பாராமல், எதிர்பாராமல் நடந்திருக்க அதன் தாக்கம் இன்றளவும் குறையாமல் அவர்கள் சொந்தங்கள், சுற்றப்புறத்தினர் எல்லாம் பார்த்துக்கொண்டனர்.
முதலில் கஷ்டமாக இருப்பினும், பின் பழகி போக பேசிக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டனர்.
அடுத்ததாக தலைதீபாவளிக்கு பேச்சின் அடுத்தகட்ட அலை துவங்கி இருக்க போனில் பேசுபவர்கள், நேரில் பேசுபவர்களின் வாய்க்கு தீனியாகி இருந்தது அர்னவ், முல்லைமலர் வருவதை பற்றிய விஷயம்.
“என்ன ஞானம்? உன் மவளோட, மருமவனும் வருவாப்லையா இல்லையா? படிப்புன்னு காரணம் காட்டி என்னவோ சப்பக்கட்டு கட்டுதாப்புல இருக்கே?…” என்ற கேலிகள் இப்போது அதிகமாகி இருக்க,
“ஏன் வராம? அதெல்லாம் கண்டிப்பா வருவாங்க…” என்னும் பொழுதே ஞானத்தின் குரல் நம்பிக்கை இன்றி காணப்படும்.
“உங்களை யார் அவங்க பேசறாங்கன்னு பதில் பேச சொன்னது?…” என்று உஷாவிடம் நன்றாக வாங்கிக்கட்டி கொள்வார்.
“அவங்க கேட்கறப்ப என்னன்னும்மா சொல்லுவேன் நான்?…” அப்பாவியாய் ஞானம் கண் கலங்கினால் அதற்கும் பொறுக்கமாட்டாள் உஷா.
“என் மருமகன் வேலை எப்படியோ? அதை பார்த்துட்டு தான் முடிவு பண்ணனும்ன்னு சொல்லனும். இல்லைன்னா இதெதுக்கு உங்களுக்குன்னு கேட்கனும்…” என்று சத்தம் போட்டாலும் பின் சமாதானமும் அவளே செய்யவேண்டியதிருக்கும்.
அவன் வருவான் என்பதில் துளியும் நம்பிக்கை இல்லை. அவன் வராமல் முல்லையை மட்டும் கூட்டிக்கொண்டு வைத்துக்கொள்ள முடியாது.
புருஷன் வரவில்லையா என்றால் அதற்கு ஒரு பேச்சு எழும்பும் என்பதால் உஷா இன்னொரு யோசனையில் இருந்தாள்.
“அவர் வராரான்னு பார்ப்போம். வரக்கூடிய சூழ்நிலை இல்லைன்னா பேசாம எல்லாரும் ஒரு ட்ரிப் ஏற்பாடு செஞ்சு எங்கையாவது நாலஞ்சு நாள் போய்ட்டு வருவோம். நாமளும் சேர்ந்து போய் ரொம்ப வருஷமாச்சே. பாப்பா மொட்டை அப்போ வெளியூர் போனது…”
உஷாவின் யோசனையில் கௌஷிக்கும் சம்மதித்திருக்க தன்னுடைய லீவையும் அதில் பார்த்துக்கொள்வதாக இருந்தான்.
திருமணம் முடிந்த அன்று இங்கே வந்ததோடு சரி. அதன் பின்னர் ஊர் விசேஷம் என்ற அழைப்பிற்கும் வரவில்லை.
தாலி பெருக்கவேண்டும் என்றதற்கும் வரவில்லை. அன்னக்கிளியிடம் தனக்கு நேரமில்லை என்று சொல்லிவிட்டான்.
எல்லாவற்றிற்கும் மேல் இதனை ஏற்றுக்கொள்ள தனக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் சொல்லியிருந்தான்.
இப்போதும் கௌஷிக் நேரடியாக அர்னவ்விற்கு அழைத்து விஷயத்தை சொல்லியிருக்க,
“முயற்சி பன்றேன்…” என்றிருந்தான் அர்னவ்.
“நான் வேணும்ன்னா பெங்களூர் வந்து உங்களை நேர்ல இன்வைட் பண்ணட்டுமா?…” ஒருவேளை சங்கடத்துடன் மறுக்கிறானோ என கௌஷிக் நினைத்து கேட்க,
“ப்ளீஸ், இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாம். நான் கண்டிப்பா வர முயற்சி பன்றேன்…” என்று சொல்லியவன் ‘இதற்கு மேல் என்னை வற்புறுத்தாதே’ என்பதை போன்ற குரலில் கூறி இருக்க கௌஷிக் மனதிலும் நம்பிக்கை இல்லை.
வந்தால் நல்லது. இல்லை என்றால் தங்கையை அழைத்துக்கொண்டு எங்காவது வெளியூர் செல்வது என்ற முடிவில் இருந்தவன் மனதில் இன்னொரு முடிவும் இருந்தது.