உஷாவிடம் கூட அதனை காண்பித்துகொள்ளவில்லை. இது அர்னவ், முல்லைமலர் இருவரையும் வைத்துக்கொண்டு நேரில் பேசவேண்டிய ஒன்று.
இருவரின் எதிர்காலத்தை பற்றி பேசியே ஆகவேண்டிய கட்டாயம் என்பதை போலிருந்தான் கௌஷிக்.
இதோ அதோவென நாட்களும் கடந்திருக்க தீபாவளி அடுத்த வாரத்தில் என்று வந்து நின்றது.
தங்கைக்கும், தங்கை கணவனுக்கும் உடைகளும் எடுத்தாகிவிட இன்னும் அர்னவ்விடமிருந்து வருகிறேன் என்பதான தகவல் எதுவும் இல்லை.
சோர்ந்து தான் போனது குடும்பத்தினரின் மனது. அன்னக்கிளி அத்தனை சொல்லியிருந்தார் எப்படியும் மகன் வந்துவிடுவான் என்று.
அவரும் என்ன செய்வார்? பாவம் என்று தோன்ற மனவுளைச்சலை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அந்த குடும்பம்.
“உஷா நாளைக்கு முல்லைக்கிட்ட பேசிடு நீ. நாம போய் அவளை கூட்டிட்டு அங்கருந்தே ட்ரிப்க்கு போகலாம்ன்னு…” என இறுக்கத்துடன் சொல்ல,
“சரிங்க…” என்றுவிட்டாள் கணவனின் மனநிலை அறிந்து.
மறுநாள் முல்லையிடம் உஷா பேச கண்ணீர் பொங்கினாலும் முயன்று உள் இழுத்துக்கொண்டாள் முல்லைமலர்.
“உனக்கொன்னும் வருத்தம் இல்லையேடா?…” உஷா கேட்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணி…” என்றவள்,
“அத்தை கூட பேசினாங்க காலையில. அவங்க வந்து என்னை பாபநாசம் கூட்டிட்டு போறதா நம்ம வீட்டுக்கு வந்து பேசறேன்னு…”
“அது முறையில்லையே முல்லை. அவங்களுக்கு ஆதங்கம். அதான் அப்படி சொல்லியிருப்பாங்க. சரி விடு. எல்லாம் மாறும், சரியாகும்னு நம்புவோம்…” என சொல்லி வேறு பேச்சை மாற்றி என முல்லையை கொஞ்சம் இயல்பாக்கிய பின்னர் தான் உஷா போனை வைத்தாள்.
அன்று அந்த ஒருநொடி மட்டும் நேராமல் இருந்திருந்தால் இத்தகைய வருத்தமும், துன்பமும் தன் குடும்பத்திற்கில்லை.
தாலி ஏறிய அந்த நொடி இருந்த அதிர்ச்சி எல்லாம் அன்று மட்டுமே. ஏன் இப்படி? எதற்கு? என்று எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை தான்.
இதில் அவள் தவறும் எதுவுமில்லை. ஆனால் நடந்துவிட்டதை மாற்ற முயல அவளும் விரும்பவில்லை.
இன்றும் எழுந்ததில் இருந்தே மனதில் அத்தனை பாரம். ஒரு பெருமூச்சுடன் அன்றைய நாளை கடக்க முயன்றவளுக்கு அதன் கனம் தாங்க இயலவில்லை தான்.
பாதி வகுப்பில் முடியவில்லை என சொல்லிக்கொண்டு விடுதிக்கு வந்துவிட்டால் தனியாக.
என்ன முயன்று மனதில் எழுந்து நிற்கும் அவன் பிம்பத்தின் மேல் கோபம் கொள்ளவும் முடியவில்லை.
அடிநெஞ்சில் இருந்து கிளம்பிய மெல்லிய விசும்பலையும் நீரை குடித்து அடக்கினாள்.
மனதை திசை திருப்ப முயன்று தோற்றவள் படுத்து கண்களை இறுக்கமாய் மூட அலைபேசியில் அழைப்பு.
அதனை ஏற்கவே சுத்தமாய் மனதில் தெம்பும் இல்லை. யாரின் பேச்சையும் கேட்க விருப்பமும் இல்லை.
மீண்டும் அழைப்பு வர வீட்டில் தான் என எண்ணி மொபைலை எடுத்தவள் விழிகள் சட்டென விரிந்துகொண்டது.
அழைத்திருந்தவன் அர்னவ் சபரிவாசன். இது அவனிடமிருந்து வரும் அழைப்பில் இரண்டாவதா மூன்றாவதா என்னும் கேள்விக்கான விடையை மூளை குறுக்கும் நெடுக்குமாய் ஓடி யோசிக்க விரல்கள் அதனை தீண்டவும் அச்சப்பட்டு நின்றது.
‘வரவில்லை, வரமுடியாது’ என சொல்லத்தான் இந்த அழைப்பா என எண்ணியவளுக்கு அதனை கேட்கவேண்டுமோ என்னும்விதமாக செவிப்புலன்கள் எல்லாம் சட்டென கனமாகிவிட்ட பிரம்மை.
அழைப்பு நின்றுவிட பதறி போனாள். அவனின் குரலையாவது கேட்டிருக்கலாமோ? என்ன பேசியிருப்பான்?
வரவில்லை என்று சொல்லியிருந்தால் கூட இரு நொடி பேச்சுக்களை வளர்த்திருக்கலாம் என நினைத்தவள் தானே அழைக்கவும் தயங்கினாள்.
அவளின் தவிப்புகளும், எதிர்பார்ப்பும் அரூபமாய் அவனை சென்றடைந்த நொடி மீண்டும் அழைத்துவிட்டான் அவள் கணவன்.
ஒருநொடி கூட தாமதிக்காமல் முதல் அழைப்பை சட்டென ஏற்று காதில் வைத்தவள் இதழ்கள் பூட்டிக்கொண்டது அவளறியாமல்.
கடிதத்தில் கோர்த்தனுப்பும் எழுத்தின் மூலம் அத்தனை பேசுபவள் இப்படி இவனிடம் உணர்வும், உயிருமான தனது வாய்மொழி சொற்களை அவன் செவிகளுக்குள் வழியனுப்ப முடியாது தடுமாறினாள்.