அதிகாலை கண்விழித்தவன் அருகே சூடான மூச்சுக்காற்று வந்து மோதியது.
மெல்லிய முணங்கலும் நடுக்கமுமாய் அர்னவ்வை ஒண்டியபடி அரற்றிக்கொண்டிருந்தாள் முல்லை.
“முல்லை என்ன பண்ணுது?…” என நன்றாக விழித்து கேட்கும் பொழுதே அந்த அதிகபட்ச உஷ்ணத்தை உணர்ந்தான் அர்னவ்.
“இப்படி காய்ச்சல் கொதிக்குதே?…” என தொட்டு பார்த்துவிட்டு அவளை எழுப்ப கண்களை திறக்கமுடியவில்லை முல்லையால்.
அவளுக்கு போர்வையை நன்றாக போர்த்திவிட்டு எழுந்தவன் விளக்கை போட்டு வந்து பார்க்க முல்லையின் முகமெல்லாம் காய்ச்சலில் சினந்திருந்தது.
“இப்படி காய்ச்சல் ஹை டெம்பரேச்சர் இருக்கும் போல?…” என்றபடி பரிசோதித்து பார்த்தவன் உடனே வெந்நீரை வைத்து வந்து மாத்திரையை எடுத்துக்கொண்டு அவளை எழுப்பினான்.
“முல்லை முழிச்சுக்கோ. இங்க பார். எழுந்து உட்கார். டேப்லெட் போடலாம்…” என எழுப்ப முகம் சுருக்கி இன்னும் சுருண்டாள்.
“டேப்லெட் போட்டா தான் காய்ச்சல் விடும். எழுந்திரு முல்லை…” என எழுப்பி சாய்த்து அமர வைத்தான்.
விழிகளெல்லாம் ரத்தமாய் சிவந்திருந்தது. மாத்திரையை கொடுத்து தண்ணீரை தந்தவன் அவள் போடும் வரை பார்த்திருந்துவிட்டு நெற்றியை மெதுவாய் பிடித்துவிட்டான்.
“போதும், நான் படுக்கறேன்…” என முல்லை சாய போக,
“கொஞ்சம் நேரம் உட்கார். நைட்டும் சாப்பிடலை. நான் குடிக்க பால் கொண்டுவரேன்…”
“ப்ளீஸ், எதுவும் வேண்டாம். நான் தூங்கனும்…”
“நல்லா தூங்கலாம். இப்பதான் டேப்லெட் போட்டிருக்க? கொஞ்ச நேரம் உட்கார். நானும் உனக்கு காய்ச்சல்ன்ற பதட்டத்துல எம்ப்டி ஸ்டமக்ல டேப்லெட் குடுத்துட்டேன்…” என சொல்லிக்கொண்டே கீழே செல்ல அமர்ந்தவாக்கில் கண்ணை மூடிக்கொண்டாள் முல்லை.
மீண்டும் அர்னவ் வரும்பொழுது அவன் எழுப்பாமலே விழித்து நன்றாக அமர்ந்திருக்க பாலை நீட்டியவன் தனக்கானதை மேஜையில் வைத்துவிட்டு என்னவோ தேடினான்.
“நீங்க குடிக்கலையா?…” முல்லை அவனிடம் கேட்டுக்கொண்டே பாலை கொஞ்சம் கொஞ்சமாய் அருந்த,
“வரேன். நீ குடிச்சு முடி…” என்று தலையை கோதியபடி இடுப்பில் கைவைத்து நின்றவன் ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டான்.
“என்ன தேடறீங்க? சொன்னா ஹெல்ப் பண்ணுவேன்ல…”
“ஒன்னும் வேண்டாம். உனக்கு வாய்ஸ் எப்படி இருக்கு பார். ஒரு காய்ச்சலுக்கு தாங்கலை நீ. பேசாம குடிச்சிட்டு படுத்து தூங்கு…” என்றவன்,
“உடனே படுத்திடாத. ஃப்யூ மினிட்ஸ் போகட்டும்…” என்று மீண்டும் அந்த அறையை சுற்றி வந்தான்.
“அப்பனா….” என்றவள் பேசும் முன் சட்டென பாத்ரூம் சென்றான்.
“அங்கயே கழட்டி வச்சிருக்கேன். மறந்திட்டேன் பாரு…” என எடுத்து வந்து துடைத்துவிட்டு மேஜையில் வைத்தான்.
“பாலை குடிச்சிட்டியா?…” என கேட்டவன் அவளின் நெற்றியில் கைவைத்து பார்த்து டெம்பரேச்சர் செக் செய்து,
“தூங்கினா சரியாகிடும்…” என சிரித்தபடி அவள் எதிரே தனக்கு பாலை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.
மெல்லிய குரலில் என்னவோ கிண்டலாய் முணுமுணுத்த முல்லையின் குரல் அவனுக்கு எட்டாமல் போக அவள் முகபாவனையை கண்டுகொண்டான் அர்னவ்.
“ஓய் என்னவாம், என்னவோ பேசற? என்னை தானே?…” என கேட்க,
“சொல்லமாட்டேன்…” என்றவள்,
“இல்லை இல்லை. உங்களை இல்லை…” என்றாள் வேகமாய் மறுத்து.
“ம்ஹூம் நம்பமாட்டேன். என்ன சொன்ன?…” என்று தன் தம்ளரை ஓரமாய் வைத்துவிட்டு நெருங்கினான்.
“நிஜமா உங்களை இல்லை…” என்றவள் முகமே கலங்கி விட அத்தனை மிரட்சி.
கொஞ்சமும் யோசிக்காமல் துடுக்காய் என்ன நினைத்துவிட்டோம்? என தன்னையே திட்டிக்கொண்டவள் முகத்தின் அப்பட்டமான அதிர்வில் அர்னவ் அழுத்தமாய் பார்த்தான்.
அதன் பின் கேள்வி கேட்கவே இல்லை. ஆனால் அவளிடம் பார்வை மட்டும் சொல்லித்தான் ஆகவேண்டும் என்பதை போல.
“சொன்னா கோவமா சண்டை போடுவீங்களே?…”
“அப்படி கோவப்படற அளவுக்கு நினைச்சிருக்கியோ?…” என்றவனின் கேள்வியில் தன்னைப்போல முல்லையின் பார்வை அவன் வைத்துவிட்டு வந்த கண்ணாடியின் மீது பதிய அர்னவ்வும் அதனை கவனித்தான்.
“இல்ல கல்யாணத்தப்பவே இந்த கண்ணாடியால எவ்வளோ பிரச்சனை. இப்ப மட்டும்….” என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் முகத்தை போர்வையால் மூடிக்கொள்ள அடுத்த நொடி புரிந்துகொண்ட அர்னவ்வின் முகம் சிரிப்பில் ததும்பியது.
“தெரியாம நினைச்சுட்டேன். தெரியாம பேசிட்டேன்…” என மூடிய போர்வையில் இருந்து அவள் அவனிடம் இறைஞ்சுதலாய் பேச பேச இன்னுமே புன்னகை தான் அர்னவ்விற்கு.
அவன் எதுவும் சொல்லாமல் மௌனமாக அமர்ந்திருக்க மெல்ல போர்வையை விலக்கி என்ன செய்கிறான் என முகத்தை பார்த்தாள்.
“கோவமா?…” முல்லை கேட்க,
“இதுக்கேன் இவ்வளோ டென்ஷன் உனக்கு? என்கிட்ட கேட்டிருக்கலாமே?…” என இலகுவாய் அவன் சொல்ல நம்பமுடியாமல் பார்த்தாள் அவனை.
“கண்ணு தெரியாம எப்படி நேத்து உன்கிட்ட…” என அவன் ஆரம்பித்த வாக்கியங்களை முடிக்கவிடாமல் வாயை மூடிவிட்டாள் முல்லை.
“கையை எடு முல்லை…” என விழிகள் மின்ன அர்னவ் சொல்ல,
“ம்ஹூம், தெரியாம பேசிட்டேன். எந்த விளக்கமும் வேண்டாம்…” என்றவள் முகத்தில் எங்கே பேசிவிடுவானோ என்று வெட்கத்தையும் மீறிய கூச்சம் அவளை புரட்டியது.
“வேணா, வேணா…” என கையை எடுத்துவிட்டு படுத்துக்கொள்ள,
“உன்னோட இந்த கண்ணுக்கு கீழே குட்டி குட்டியா சின்னதா பரு வருது பார். இனிமே தான் பெருசாகும். ஆனா என் கண்ணுக்கு இதுவே நல்லா தெரியுது. அப்போ…” என்றவனின் முகத்தை போர்வையால் மூடி இறுக்கிவிட்டாள் கையோடு.
“தெரியாம பேசிட்டேன்னு சொல்றேன்ல. இப்ப எதுக்கு இந்த விளக்கம்? நான் தூங்கனும்…” என மிரட்டலாய் சொல்லியவள் கண்ணை மூடிக்கொண்டே கையை தளர்த்தினாள்.
அதற்கு மேல் அவளை வம்பு செய்யாமல் அர்னவ்வும் அருகில் படுத்துக்கொண்டாலும் உறக்கம் வரவில்லை.
வெகுநேரம் போனில் செலவழித்தவன் கண்கள் எரியவும் தான் மீண்டும் போர்வைக்குள் நுழைந்தான்.
அவனின் கரங்கள் மனைவியின் காய்ச்சலின் வீரியத்தை பரிசோதிக்க இப்போது மட்டுப்பட்டிருந்தது.
ஆனாலும் உடல் சூடு இன்னும் முழுதாய் தணியவில்லை. அர்னவ்வின் கைகள் நெற்றி கழுத்தை தொட்டதும் இழுத்து தன்னை சுற்றி போட்டு இன்னும் ஆழ்ந்த உறக்கத்திற்குள் நுழைந்தாள் முல்லை.
அவனும் கண்ணயர நன்றாக விடிந்திருந்தது. அர்னவ்வின் போன் சப்தமிட உறக்கம் களைந்து எழுந்தவன் அதனை எடுத்தான்.
அன்னக்கிளி தான் அழைத்திருந்தார் மகனுக்கு. நேரத்தை பார்க்க ஒன்பதாகி இருந்தது.
“ஷிட்…” என்றபடி எழுந்தவன் அழைப்பை ஏற்று,
“ம்மா…” என்றதும்,
“முழிச்சாச்சா சபரி?…” என்றார் அன்னக்கிளி.
“ஹ்ம்ம், இப்பத்தான்ம்மா…” என பதில் சொல்லிக்கொண்டே ஜன்னல் பக்கம் சென்று நிற்க மழையின் வேகம் குறைந்து தூறல் மட்டும் விடவில்லை.
“நைட் நல்ல மழையாமே? கீதா சொன்னா…”
“ஆமாம்மா, நான் இங்க வந்ததுல இருந்தே மழை தான். இன்னும் விடலை. இப்பவும் தூறிட்டே இருக்கு…” எனவும்,
“சரிப்பா. நைட் வனிதாவை ஊருக்கு அனுப்பி வச்சாச்சு. உனக்கும் முல்லைக்கும் டிபன் அவ அனுப்பிடறேன்னு போன் பண்ணினா…”
“அப்பறம் மதியம் விருந்துக்கு வரீங்களான்னு கேட்டா. உன்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன். உன் வசதிப்படி பார்த்துக்கோ. அவளே சொன்னா நேத்து தான் வந்திருக்கான். ரெஸ்ட் எடுக்கட்டும். வரானான்னு மட்டும் கேளு. வற்புறுத்த வேண்டாம்ன்னு…”
“ம்மா, முல்லைக்கு கொஞ்சம் காய்ச்சல். அதான் யோசிக்கறேன்…”
“என்னாச்சு சபரி? என்ன திடீர்ன்னு?…”
“ட்ரெஸ் எடுக்கறேன்னு மழையில நனைஞ்சுட்டா. அதான்…”
“அவ்வளவு தானே? ரொம்ப காய்ச்சலா? நான் கிளம்பி வரவா?…” என்றதும்,
“ம்மா நான் பார்த்துப்பேன். நீங்க அங்க இருந்து அத்தையை பாருங்க. இல்லைன்னா இப்படி விட்டுட்டு போய்ட்டாங்கன்னு உங்களை தான் பேசுவாங்க…” என்று சொல்ல அன்னக்கிளிக்கு சிரிப்பு பொங்கியது.
“சரி சரி பதறாத. நான் ஒன்னும் வரலை…” என சிரித்தவர்,
“ரொம்ப காய்ச்சல்ன்னா ஹாஸ்பிட்டல் போய்ட்டு வாங்க…”
“ம்மா…”
“சரிப்பா நீயே பார்த்துப்ப. சரி தானே?…”
“ஆமா, புரிஞ்சா சரி…” என்றவன்,
“என்னவாம்? எப்படி இருக்காங்க அத்தை? எப்படி விழுந்தாங்க?…” என கேட்டபடி கீழே சென்றான்.
“அதை ஏன் கேட்கற? உன் அத்தைக்கும், மாமாவுக்கும் சண்டை போல. அவர்கிட்ட என்னவோ கேட்டுட்டே கீழே இறங்கிருக்கா. கால் தடுமாறி விழுந்து கால்ல மட்டும் அடி இல்லை, கைல முட்டில, வாய்லன்னு நல்லா பேத்துவிட்டிருக்கு அந்த படிக்கட்டு…”
“அவ்வளவுக்கா அடி?…” என அர்னவ் கேட்டதும்,
“நான் கூட கால்ல மட்டும் தான்னு நினைச்சேன். இங்க வந்து பார்த்தா தான் தெரியுது. உன் மாமா வேற அவக்கிட்ட நீ கொஞ்சமா பேசனும். நல்லா வாயை ஆண்டவனா பார்த்து உடைச்சு விட்டான் பாருன்னு பேசிட்டிருக்கார்…”
“அத்தை சும்மாவா விட்டாங்க மாமாவ?…” என சிரிப்புடன் அர்னவ் கேட்க,
“பதில் சொல்ல முடிஞ்சா உன் மாமா ஏன் பேச போறாரு? இவளுக்கு பதில் பேச முடியலைன்னு தான் இம்புட்டு பேச்சும். முறைச்சிட்டே இருந்தா ஒன்னும் சொல்ல முடியலையேன்னு. அதுக்கும் அந்த மனுஷன் என்னடான்னா ரொம்ப மூச்சுவிடாத வாய்ல போட்டிருக்க பிளாஸ்திரி பறக்க போகுதுன்னு வேற நக்கல்…”
“மாமாவுக்கு பின்னாடி இருக்கு…” என சொல்லி அப்படி ஒரு சிரிப்பு அர்னவ்.
“சரி சரி உங்கப்பா வேற இப்படி சொல்லி சிரிக்கேன்னு என்னையே முறைச்சிட்டு இருக்கார்…”
“பாசமாக்கும்? இருக்கட்டும்…”
“சரி சரி, நான் வனிதாக்கிட்ட சொல்லிடறேன். கொஞ்ச நேரத்துல சூடா குடுத்தனுப்புவா…”
“ம்மா…” என்ற சத்தத்தை அன்னக்கிளி பொருட்படுத்தவே இல்லை.