போனை வைத்துவிடவும் வேறு வழியின்றி குக்கரில் முல்லைக்கு கஞ்சியை மட்டும் வைத்துவிட்டு கீதாவுக்காக காத்திருந்தவன் கீழே இருந்த அறையிலேயே குளித்துவிட்டான்.
கால்மணி நேரத்தில் கீதாவும் டிபன் கேரியருடன் வந்துவிட அவளிடம் சொல்லிவிட்டு கதவை அடைத்துவிட்டு மேலே சென்றான்.
முல்லை உறங்கிக்கொண்டிருப்பாள் என நினைக்க தான் வரும் முன்பே எழுந்து குளித்திருந்தாள்.
“என்ன பண்ணி வச்சிருக்க முல்லை?…” என அதட்டினான் அர்னவ்.
அதிகாலை காய்ச்சலில் கொதித்ததென்ன? இன்னும் மழையும் கூட விட்டபாடில்லை.
இவளானால் இப்படி குளித்துவிட்டு வந்திருக்கிறாளே என முறைத்துக்கொண்டே மேஜையில் உணவை எடுத்து வைத்தான்.
“திரும்ப காய்ச்சல் வந்தா என்ன பண்ணுவ? மழை இன்னும் ஊத்துது முல்லை…” என்றதற்கும் பதிலில்லை.
காலையில் கூட அத்தனை பேசியவள் இப்போது தன்னை நிமிர்ந்தும் பார்க்காமல், யோசனையுடன் அமைதியாக வேறு இருக்க இப்போது தான் வெட்கமோ என்ற எண்ணம் தோன்றவும் அவனிதழில் சிறுநகை மிளிர்ந்தது.
“ஓகே, வா சாப்பிடலாம்…” என அழைக்க ம்ஹூம், அங்கேயே தான் அமர்ந்திருந்தாள்.
என்னவோ பெரும் யோசனையில் உள்ளதை அவள் மோதிரத்தை சுழற்றுவதிலேயே புரிந்துபோக கஞ்சியை கிண்ணத்தில் ஊற்றியவன் அவளுடன் கொண்டு வைத்தான்.
“என்ன அவ்வளவு டீப் திங்கிங் முல்லை?…” என அவள் முகம் நிமிர்த்த முகத்தில் ஏக கலவரம்.
“என்னாச்சு?…” என்றான்.
அன்றொருநாளில் மட்டும் அவளிடம் எத்தனை முறை இதனை கேட்டுள்ளோம் என அவனுக்கவனே வேறு யோசித்துக்கொள்ள,
“ஒன்னுமில்லையே…” என சொல்லிவிட்டு மௌனமானவள் மீண்டும் அர்னவின் முகம் பார்த்தாள்.
‘இவங்க வேற ஒருக்கா கேட்டதுக்கு மறுக்கா கேட்கமாட்டாங்க’ என்ற நினைப்புடன் இதை எப்படி கேட்பது என யோசித்தாள்.
“என்னன்னு சொன்னா தான் எனக்கு புரியும்?…” என்றவன் மனது வேறு விதமாய் யோசிக்க,
“திட்டாம இருங்க. நீங்க எப்படி டாக்டரானீங்க? டாக்டர்ன்னா சாஃப்ட்டா தானே இருப்பாங்க. உங்களுக்கு எவ்வளோ கோவம் வருது. அதுவும் என் காய்ச்சல் ஒன்னும் மழையால இல்லை. உங்களால தான்…” என வேகமாய் சொல்லிவிட்டவள் நாக்கை கடிக்க,
“என்னாலையா?…” என்றவனுக்கு அவளின் முகபாவனையும், கோவமும் ரசனையை தந்தது.
“ஹ்ம்ம், தென்?…” என கேட்டவன் அவளின் விழிகளில் துளிர்த்துவிட்ட கண்ணீரை சுண்டினான்.
“என்னன்னு ஏதாவது சொன்னா தான் புரியும்…” என அமைதியாக கேட்டு,
“என்னால ஒன்னொன்னுக்கும் பதில் வாங்கிட்டு இருக்கமுடியாதும்மா. முழுசா சொல்லனும்ன்னா சொல்லு. இல்லையா யூர் விஷ்…” என சொல்லிவிட்டு தனக்கு உணவை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தான்.
“எனக்கு மட்டும் கஞ்சியா?…”
“ஹ்ம்ம்…”
“காய்ச்சல் இப்ப குறைஞ்சிருச்சு. நானும் நீங்க சாப்பிடறதை சாப்பிடட்டுமா?…” என சொல்ல அர்னவ்வின் முகத்தில் இலகு தன்மை.
“உன் விருப்பம் தான். உனக்கு ஓகேனா சாப்பிடலாம்…” என அவளுக்கு எடுக்க போக,
“நானே வச்சுப்பேன். நீங்க உட்காருங்க…” என்று எழுந்து செல்ல அவளையே ஆராய்ந்தது அர்னவ்வின் விழிகள்.
என்னவோ சஞ்சலம், எதற்கென யோசித்தவன் மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல்.
மீண்டும் முல்லை வந்து அமரும் வரை பார்த்திருந்தவன் அவள் பாதியளவாவது உண்டு முடிக்கும் வரை அமைதி காத்துவிட்டு,
“உன்னோட லாஸ்ட் செமஸ்ட்டர் எப்போ முல்லை?…” என கேட்கவும்,
“மே மாசத்துல இருக்கும்…” என்றாள்.
“ஜனவரி இப்போ. அதுவும் பாதி முடிஞ்சது. இடையில மூணு மாசம் தான். சப்போஸ் எதுவும்னாலும் கூட நீ கஷ்டப்படறமாதிரி இருக்காது…” என பளிச்சென்று சொல்லவும் அடுத்த வாய் வைக்கவிருந்தவள் திகைத்து அப்படியே அமர்ந்துவிட்டாள்.
இதனை யோசித்து தானே இவ்வளவு நேரம் தடுமாறியது. எப்படி தன் நாடி பிடித்து கூறிவிட்டான் என வியந்தவள் நிமிரவே இல்லை.
“தப்பில்லை முல்லை. இதை எல்லாம் யோசிக்கத்தான் செய்யனும். ஸோ ஃபீல் ஃப்ரீ. ஓகே…” என்று அவளின் கன்னம் தட்டினான்.
“நான்…” என வார்த்தைகளை தேடியபடி தட்டிலிருந்த உணவை அளக்க,
“சில விஷயங்கள் தயக்கமா தான் இருக்கும். இன்னுமே நாம அவ்வளவு நெருங்கிட்டோமா என்ன? பிசிக்கலா வேற. ஆனா மெண்டலி நம்மோட அண்டர்ஸ்டேண்டிங் இன்னுமே முக்கியம். அதுக்கு நாம சும்மா இப்படியே இருந்தா எல்லாம் புரிஞ்சிடாது…”
“ஹ்ம்ம்…” என்றவள்,
“எனக்கு புரியுது. பேசனும், சரியோ தப்போ சண்டையும் போடனும். ஆனா அந்த சண்டைன்னு யோசிச்சாலே உங்க கோபம் தான் எனக்கு முன்னாடி நிக்குது. அதுதான் எதுவும் சொல்லவே யோசிக்கறேன்…” முல்லை கூறவும் ஆமோதித்தவன் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்தான்.
“எப்பவாவது வரது தான் அப்படி கோபம். எனக்கே என்னை நினைச்சு அசிங்கமா இருக்கும் முல்லை. என்னடா நீ படிச்சு கிழிச்சன்னு என்னை நானே கேட்டிருக்கேன் நம்ம கல்யாணத்துக்கு பின்னாடி. அவ்வளோ கேர்லெஸ் ஃபெல்லோ நீ என்ன ஒரு டாக்டர்ன்னு திட்டாத நாளில்லை….”
“அதுவும் ஒவ்வொரு நாளும் அந்த நினைப்பு உன்னை யோசிக்கவே விடலை எனக்கு. உண்மையை சொல்லனும்ன்னா உன்னோட லெட்டர்ஸ் எனக்கு வரலைன்னா கண்டிப்பா வருஷமாகியிருந்தாலும் நான் அப்படியே தான் இருந்திருப்பேன்…” என்றான்.
“அதான் தெரிஞ்சதே. கல்யானமானப்பவே டிவோர்ஸ் கேட்ட ஆள் தானே நீங்க….” முல்லை நொடிக்க,
“அது அப்போ. அந்த நிமிஷம் உன்னையும் யோசிக்கனும். நான் பண்ணின தப்புக்கு உன்னை ஏன் பலி தரனும்ன்னு தோணுச்சு? ஆனா உனக்கு என்னை புடிக்கும்ன்னு அப்ப எனக்கு தெரியாதே?…” என்றான் சிரிப்புடன்.
சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு மீண்டும் மாத்திரையையும் உண்டு உறங்கி எழுந்தாள் முல்லை.
அடுத்த இரண்டு நாட்களில் முல்லை கல்லூரிக்கும், அர்னவ் வேலைக்கும் கிளம்பவேண்டும்.
கிளம்பும் நாளன்று தான் அன்னக்கிளி அங்கே வர அவர்களுடன் நேரம் செலவழித்து தான் கிளம்பினார்கள்.
அருந்ததி போன் செய்து அத்தனை கிண்டல் தம்பியை. அர்னவ் புன்னகையுடன் வாங்கிக்கொண்டான்.
சொல்லியபடி முல்லையை அழைத்துக்கொண்டு திருச்சி வந்தவன் அன்று மாலை வரை அவளுடனே இருந்துவிட்டு விடுதியில் விட்டு அதன் பின்னர் தான் பெங்களூர் கிளம்பினான்.
இதில் முல்லையின் குடும்பத்தினருக்கு அத்தனை சந்தோஷம். முல்லையின் பேச்சும், சிரிப்பும், அர்னவ் கிளம்பி வந்து அவளுடன் இருந்ததும் என்று அனைவருக்குமே அவர்களின் வாழ்க்கை விளங்கியது.
அதன் பின்னான நாட்கள் எத்தனை கொடுமை என அர்னவ் உணர்ந்தான். முல்லையிடம் காட்டிக்கொள்ளவில்லை.
முன்பை விட இன்னுமே அதிகமாக பேசிக்கொண்டார்கள். தாம்பத்தியத்தின் புரிதல் தானாய் அவர்களை கையிலெடுத்துக்கொண்டது.
விளக்கப்படாமலே விளங்கிக்கொள்ளும் உன்னதம் அவர்கள் உறவில் மிளிர்ந்தது.