முல்லை மலர் திருச்சி வந்து முழுதாய் மூன்று மாதங்கள் நிறைந்திருந்தது.
படிப்பின் இறுதியாண்டு. இத்தனை வருட படிப்பிற்கான மொத்த பலனும் அந்த பரிட்சையில் தான்.
படிப்பில் கவனம் இருந்தாலும் மனதின் பெரும்பான்மையை அர்னவ் ஆக்கிரமித்திருந்தான்.
மடல்கள் தீரவில்லை. அவன் அவளுக்கென அனுப்புவதும் இன்றுவரை ஓயவில்லை.
“இப்ப நீங்க ஆரம்பிச்சிட்டீங்க. இன்னும் எதுக்கு லெட்டர்ஸ்?…” என கூட கேட்டுவிட்டாள்.
“நீ ஆரம்பிச்சி வச்சது தான். ஆனா எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு முல்லை. இதெல்லாம் இத்தனைவருஷம் நான் அனுபவிக்காமலே இருந்திருக்கேன். சில விஷயங்கள் பிடிச்சு செய்யும் போது நம்மையறியாமலே அது நம்மை அதுக்குள்ளே இழுத்துக்கும். அதுமாதிரி தான் இந்த மடல் விடு தூது…”
“பிரிஸ்க்ரிப்ஷன்ல அன்பே ஆருயிரேன்னு எழுதாதவரைக்கும் சந்தோஷம்…” என்ற கிண்டல்களுக்கு சரியான பதிலையும் வாங்கிக்கொள்வாள்.
அடுத்த மாதம் இறுதியாண்டு பரீட்சைகள் ஆரம்பம் என்றிருக்க கல்லூரியில் படிக்கவென்று இருவார விடுமுறை இருப்பதாய் சொல்லியிருக்க அர்னவ்விடம் சொல்லிவிட்டு திண்டுக்கல் சென்றிருந்தாள் முல்லை.
வந்ததில் இருந்து கணவனிடமிருந்து எவ்வித அழைப்புகளும் வரவில்லை. உஷாவும், ஞானமும் கூட கேட்டு பார்த்துவிட்டு விட்டுவிட்டனர்.
தானும் அழைத்து பார்த்தவள் அவன் எடுக்கவில்லை என்றதும் அன்னக்கிளியிடம் பேச்சுவாக்கில் அவரோடு அர்னவ் பேசினானா என கேட்க அவரும் ஆமாம் சொல்ல அத்தனை கோபம் முல்லைக்கு.
அத்தனை வருத்தமுமாக இருந்தது அன்னக்கிளி சொல்லிய நிமிடம். பெரிதாய் காட்டிக்கொள்ளாமல் வைத்துவிட்டாள் முல்லை.
“படிக்கறேன்னு வந்துட்டு அதை தவிர எல்லாம் பண்ணிட்டிருக்க நீ…” என ஞானம் கூட சத்தம் போட்டுவிட்டார்.
“ம்மா அதெல்லாம் படிச்சு முடிச்சாச்சு. இது சும்மா ஒரு ரிலாக்ஸ் பன்றதுக்காக தான்…” என அவள் சாமாளிக்க,
“ஒன்னும் பிரச்சனை இல்லையே முல்லை?…” என்றார் அவளருகே அமர்ந்து அடங்கிய குரலில்.
“என்னம்மா?…” அலுப்புடன் அவள் கேட்க,
“உன் மூஞ்சியே சரியில்லையே? புருஷன்கிட்ட எதுவும் சண்டை போட்டியா?…” என்றார் ஞானம்.
உஷாவுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது மாமியாரின் இந்த ரகசிய கேள்வியில்.
“நான் ஏன் சண்டை போடறேன்?…” முல்லை எரிச்சலாக சொல்ல,
“இருக்காது தான். இப்பத்தான் நல்லா இருந்தீங்க. என் கண்ணே பட்டுருச்சு போல? போன மாசம் கூட நீ ஊருக்கு போய்ட்டு வந்த. ரெண்டுமூணு நாள் லீவுக்கே உன்னை பெங்களூர் கூட்டிட்டு போவார். இந்ததடவை போகலையே? அதான் கேட்டேன்…” ஞானம் கூற,
“பார்த்தியா முல்லை? விவரமா எப்படி கால்குலேட் பண்ணி கேட்கறாங்கன்னு. இதான் அம்மா…” என உஷா சொல்ல முல்லை செய்வதறியாமல் பார்த்தாள்.
“என்ன முல்லை, நான் கேட்டது சரித்தானா?…” என்ற ஞானம்,
“ஒருவேளை மருமகன் உன்னை ஊருக்கு அவங்களோட கூப்பிட்டு நீ தான் இங்க நம்ம வீட்டுக்கு வரனும்னு சொல்லி சண்டையா? நீ அப்படி எதுவும் சொன்னியா? அதுல அவருக்கு கோவமா?…” என வரிசையாய் அவராக யூகம் செய்து கேட்க முல்லைக்கு தலையே சுற்றியது.
தனக்கு தெரிந்தால் தானே இதற்கான பதிலை சொல்ல முடியும். அவன் ஏன் பேசக்கூட இல்லை என்று புரியாமல் குழம்பி இருக்க இந்த நேரத்தில் இவர் வேறா என ஆயாசமாக இருந்தது முல்லைக்கு.
“அத்தை விடுங்களேன், அவளே டல்லா இருக்கா. சண்டையாவே இருந்தாலும் அவ பார்த்துப்பா. நீங்க சும்மா நொச்சு பண்ணாதீங்க…” என்று உஷா சொல்லவும் ஞானம் அமைதியாகி போனார்.
“சரி நீங்க கோவில் வரை போகனும்னு சொன்னீங்களே? கிளம்புங்க…” என மாமியாரை கிளப்பிவிட்டவள்,
“ஓகே தானே?…” உஷா கேட்க,
“இவ்வளோ நேரம் என்னை கதற விட்டுட்டு கடைசில காப்பாத்தி ஓகே வான்னு வேற கேள்வியா? போங்கண்ணி…” என்று உஷாவிடம் சலித்துக்கொண்டாள் முல்லை.
“இதையெல்லாம் ஒரு ட்ரெயினிங்கா வச்சுக்கோ முல்லை. சண்டையே போட்டாலும் ஆளாளுக்கு ஆயிரம் தடவை கேட்பாங்க. சளைக்காம பதில் பேசனும். ஆனா சொல்லவேண்டியதை தான் சொல்லனும்…”
“இங்க அதெல்லாம் எதுவுமே இல்லை அண்ணி. என்னன்னு தெரியலை. எனக்கே எதாச்சும் தெரிஞ்சா தானே சொல்ல?…” என்றாள் தலையை பிடித்துக்கொண்டு.
“சரி விடு. நானும் ஆத்மியை ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுட்டு வரேன். ப்ரீகேஜி போறதுக்கு இந்தம்மாவுக்கு எத்தனை சுமக்க வேண்டியதா இருக்கு?…” என மகளை கிளப்பிக்கொண்டு வெளியேறினாள் உஷா.
“முல்லை கதவை சாத்திக்கோ. படிக்கனும்ன்னா படி. இல்லைன்னா கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரி. நான் இவளை விட்டுட்டு மதியத்துக்கு அப்படியே சமைக்க காய்கறி வாங்கிட்டு வரேன்…” என்று குழந்தையுடன் வெளியேறினாள்.
முல்லை சோர்வுடன் ஹாலிலேயே ஞானம் விரித்து வைத்திருந்த பாயில் படுத்துவிட்டாள்.
இந்த இடைப்பட்ட நாட்களில் எப்போதும் பெங்களூர் கிளம்புவதாக இருந்தால் முதலிலேயே அர்னவ் சொல்லிவிடுவான் வந்து அழைத்து செல்வதாக.
தான் வர முடியவில்லையென்றால் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்துவிடுவான். இந்த முறை அப்படி எதுவுமே சொல்லவில்லை.
போதாததிற்கு தான் வேறு இந்த விடுமுறை வருவதாக சொல்லி இந்த முறை இருநாட்கள் திண்டுக்கலில் இருந்து வரட்டுமா என்று கேட்டிருக்க சரி என தான் சொல்லியிருந்தான் அர்னவ்.
படுத்திருந்தவள் படக்கென்று எழுந்தமர்ந்தாள். ஒருவேளை அதனால் தான் கோபமோ?
அவன் அழைப்பதற்குள் தானாக இந்த முடிவிற்கு வந்ததனால் உண்டான கோபமோ? என யோசிக்க அதுவே இன்னும் கோபத்தை தந்தது.
இத்தனை இடைப்பட்ட நாட்களில் ஒருமுறை மட்டுமே முல்லை திண்டுக்கல் வந்திருக்க மற்ற நேரமெல்லாம் அர்னவ்வுடன் அவனோடு தான்.
தான் சென்றாலும் அவன் வேலையில் எல்லாம் அத்தனை கவனம் தான். தனக்காக நேரம் ஒதுக்கி விடுமுறை என போட்டதும் இல்லை.
“இவங்க மட்டும் அவங்க வேலையில கெட்டி. நான் வந்திருந்தாலும் லீவ் போடாம ஹாஸ்பிட்டல் போனாங்க தானே? ஆனா நான் மட்டும் என் ஆசைக்கு ஒருவாட்டி இப்படி வர கூடாதாமா?…” என பொறும ஆரம்பித்திருந்தாள்.
இருவரின் புகைப்படமும் சுவற்றில் பெரிதாக்கி இருக்க அதனை பார்த்தவளுக்கு அவன் கோபம் இதனை கொண்டோ என்று அத்தனை ஆதங்கமாக இருந்தது.
அந்த புகைப்படம் பெங்களூரில் வைத்து இருவருமாக எடுத்துக்கொண்டது. இருவீட்டிற்கும் அதனை தான் கொடுத்திருந்தனர்.
இப்போது அதனை பார்த்துக்கொண்டே சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் மீண்டும் அவனுக்கு அழைப்பதா வேண்டாமா என்று யோசித்தபடியே இருந்தாள்.
இந்த இரு நாட்களில் எத்தனை முறை அழைத்தாகிற்று. திண்டுக்கல் கிளம்பும் அன்று மாலை அழைத்து பேசியதோடு சரி.
“பத்திரமா போய்ட்டு வா முல்லை…” என்று சொல்லியிருந்தான்.
வேறு பேசுவதற்கும் அவனுக்கு நேரமில்லை என்பதை போல அவசரமாக பேசியிருக்க,
“பிஸியா நீங்க?…” என்று கேட்கவும்,
“ஹ்ம்ம், ஆமா, ட்யூட்டி முடிஞ்சது தான். ஆனா இன்னும் அவுட் பேஷண்ட்ஸ் இருக்காங்க. நான் அப்பறம் பேசறேன் முல்லை. பை. டேக் கேர்..” என்று வைத்திருந்தான் அர்னவ்.
அதன் பின்பு திண்டுக்கல் வந்த பின்பும் அழைக்க அழைப்பு சென்றதே தவிர எடுக்கப்படவில்லை.
மறுநாள் முழுதாய் ஒருநாள் கடந்திருக்க இன்றும் எழுந்ததுமே அழைத்துவிட்டாள்.
எடுக்கப்படவில்லை. மருத்துவமனை கிளம்பும் முன்பே எப்போதும் அழைக்கும் நேரம் கூப்பிட எடுக்கவில்லை. குறுஞ்செய்தியும் அனுப்பியாகிற்று.
கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தாலும் கோபத்தில் அதனை கீழிறங்க விடவில்லை.
அன்னக்கிளியிடம் மட்டும் பேசியிருக்கிறானே? தான் யார்? தன்னிடம் என்னவாம் இவனுக்கு? மீண்டும் அலைபேசியை எடுத்து பார்க்க வாட்ஸ்ஆப்பில் ஆன்லைனில் இருப்பதாக காட்டியது.
இதற்கு மேலும் அழைக்கவேண்டாம் என போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டாள்.
மேஜையில் அந்த புகைப்படம். அவனும் அவளும், இன்னும் சிலர். முல்லையின் கைகளில் இப்போது அவனின் பேனாவும்.
அதனை எடுத்து தனது ஹேன்ட் பேக்கில் வைத்தவள் அந்த புகைப்படத்தை பார்த்துக்கொண்டே தலை சாய்ந்திருந்தாள்.
படிக்கவும் தோன்றவில்லை. எதுவும் பேச, பொழுதை கழிக்க என எதிலும் மனம் லயிக்கவில்லை.
இத்தனை மோசமாய் தான் மாறி போயிருப்போம் என நினைத்தும் பார்த்ததில்லை.
எல்லாம் அவனால். அவன் ஒருவனால். தன்னிடம் அத்தனை அலட்சியாமோ என்றளவில் அவளின் எண்ணங்கள் எங்கெங்கோ செல்ல அவளறியாமல் கண்ணில் இருந்து நீர் சுரந்தது.
வாசலில் கேட் திறக்கும் அரவம். உஷாவாக இருக்கும், இல்லை தன் தாயாக இருக்கும் என நினைத்தவள் எழுந்துகொள்ளவும் இல்லை.