“ப்ச், சொன்னா கேட்கமாட்டீங்களாம்மா? லேசா தான் தலைவலி. கொஞ்சம் தூங்கினா சரியாகிடும். நீங்க போங்க….” என கோபமும், கெஞ்சலுமாய் அவள் சத்தமிட்டும் சென்றதை போல தெரியவில்லை என்றதும்,
“இப்ப என்னம்மா?…” என கேட்டவள் அந்த ஸ்பரிசத்தில் அப்படியே கண்களை மூடி பின் நொடியில் திரும்பி பார்த்தாள்.
“என்ன தலைவலி முல்லை? ஏன் நைட் தூங்கலையா?…” வந்து நின்றவனோ அக்மார்க் மருத்துவனாக அவள் கை பிடித்து கண்களை கீழிறக்கி பார்த்து என பரிசோதிக்க,
“நீங்க எப்ப, இங்க எப்படி?…” என்றவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல்,
“என்ன தலைவலின்னு கேட்டேன்…” என்றவன்,
“எங்க நாக்கை நீட்டு…” என சொல்லிக்கொண்டே தனது பேக்கை பிரிக்க கடுப்பாகி போனாள் முல்லை.
“ஒன்னும் தேவையில்லை. எல்லாம் உங்களால தான்….” என்றாள் அவன் வந்த சந்தோஷத்தையும் மீறிய தவிப்புடன்.
“என்னாலையா? தலைவலியுமா? நான் இப்ப தானே வந்தேன்?…” என புருவம் உயர்த்தியவன்,
“காய்ச்சல் வந்தாலும் என்னால. தலைவலி வந்தாலும் என்னால. இன்னும் என்னென்ன எல்லாம் வருமோ?…” என கிண்டலடித்தான் அர்னவ்.
“நீங்க இப்படி இருந்தா எனக்கு எல்லாம் தான் வரும்…” என்றவள் பேச்சில் பெருமூச்செறிந்தவன்,
“ஓகே, விளையாடாம உட்கார் நீ. என்னன்னு பார்ப்போம்…” என பரபரத்தான்.
இன்னும் பரீட்சைக்கு சில நாட்களே இருக்க அதுவே சில நாட்கள் நடக்குமே என உள்ளூர ஒரு பதட்டம்.
“என்ன பார்க்க போறீங்க? எனக்கு ஒண்ணுமில்லை….” என முல்லை சொல்ல,
“அப்படித்தான் நானும் நினைக்கறேன். ஆனாலும் ஒரு டவுட். எங்கயும் மிஸ் பண்ணிட்டேனோன்னு…” என சீரியஸாக சொல்ல அவன் பேச்சின் அர்த்தம் புரிந்தவள் அவனின் தோளில் அத்தனை முறை அடித்தாள்.
“ஹேய் முல்லை, கத்திருவேன் நான்…” என அர்னவ் சொல்லியும்,
“பின்ன என்ன பன்றது? கவனமா இருந்தும் எதுவுமோன்னு ஒரு டவுட். அதுவும் நீ இருந்தது அப்படித்தான் தோணவே வச்சிருச்சு என்னை. எக்ஸாம் வேற வருதா?…” என சொல்லவும் அவன் கைகளுக்குள் இருந்து திமிறினாள் முல்லை.
“ரொம்ப அலட்டிக்காத முல்லை. பாப்பா இருந்தா?…” என்று கேட்டு அவளை இன்னும் வெறுப்பேற்றினான்.
“ஏன் இத்தனை நாள் பேசினீங்க தானே? நான் இங்க அம்மா வீட்டுக்கு வரேன்னு சொல்லவும் தானே கோபம். அதான என்னோட பேசலை…” என சற்றே குரலை உயர்த்திவிட அவளின் வாயை கைகொண்டு மூடினான் அர்னவ்.
“மெதுவா பேசு முல்லை. உன் அம்மா வெளில இருக்காங்க….” என்றவன்,
“இதான் இங்க வச்சு எதுவும் பேச கூடாதுன்னு நினைக்கறேன். சின்ன சத்தம்ன்னாலும் வெளில கேட்குது…” என சொல்ல அவனின் கையை எடுத்துவிட்டாள்.
“சரி மெதுவா கேட்கறேன். சொல்லுங்க….”
“என்ன சொல்ல?…”
“என்னை ஏன் அவாய்ட் பண்ணுனீங்க? இங்க வரேன்னு சொன்னது கோவம். அதானே?…” என்றதும்,
“அவாய்ட் பண்ணினேனா?…” என தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் அர்னவ்.
‘உனக்கு கொழுப்பு தான். எவ்வளோ தைரியமா அவனை கோபப்படுத்தற நீ? என்னாக போகுதோ?’ என கையை பிசைந்துகொண்டே கணவனை பார்த்தாள்.
ஆனாலும் ஒரு தைரியம். தன் மேல் என்ன தவறு என்று தான் முறைப்பையும் கைவிடாமல் பார்த்து நின்றாள்.
மூச்சு வாங்க இன்னும் குளிக்காமல் கூட கலைந்த ஓவியமாய் தன் முன்னே நைட்டியில் நின்றவளை பார்த்தவனின் முகத்தில் ஆயாசம் குறைந்து புன்முறுவல் வந்தது.
“ஓகே, இங்க வா. பொறுமையா பேசலாம்…” என கை பிடித்து தன்னருகே அமர்த்திக்கொண்டான்.
“ஒரு சர்ப்ரைஸ் ப்ளான்ல வந்தேன். இவ்வளோ கோபப்படற?…” என அவளின் இடையில் கைகொடுத்து தன்னோடு இன்னும் இறுக்கிக்கொள்ள,
“இன்னும் குளிக்கலை நான். விடுங்க…” என நகர்ந்தாள்.
“ஹ்ம்ம், பார்த்தேன். கொஞ்சமும் ஹைஜீன் இல்லை. எழுந்து இவ்வளோ நேரம் குளிக்காம. அழுக்கு பொண்டாட்டி….” என்றவன் இதழ்கள் அவள் கழுத்தில் தஞ்சமடைய,
“அப்படி ஒன்னும் தொடவேண்டாம்…” என தள்ளிவிட்டாள்.
“ஓகே ஓகே. இப்ப நேரமில்லை. நீ குளிச்சிட்டு கிளம்பு…” என்றதும்,
“எங்க கிளம்ப? பாபநாசமா?…”
“ம்ஹூம். போனா தெரிஞ்சிரும். வா…”
“எல்லாமே உங்க இஷ்டமா? அன்னைக்கும் அப்படித்தான் என்னை அழ அழ பெங்களூர் கூட்டிட்டு போனீங்க. முதல் தடவை வரேனே, சந்தோஷமா வரட்டும்ன்னு எல்லாரும் அங்க இருக்காங்கன்னு சொன்னீங்களா? இல்லவே இல்லை. இப்பவும் இப்படி தான். ஏன் எங்கன்னு சொன்னா என்ன?…”
அத்தனை சண்டை போட்டாள் முல்லைமலர். அவளிடம் இவ்வளவு கோபத்தையும், பேச்சையும் எதிர்பார்க்காதவன் முகத்தில் பாவமாய் ஒரு பாவனை.
“சொன்னா தான் வருவியா? ஓகே சொல்றேன். ஹனிமூன் போகலாம்ன்னு ப்ளான் பண்ணினேன். உனக்கும் ரெண்டுவாரம் லீவ். உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணின மாதிரியும் இருக்கும். நீ இங்க வந்த மாதிரியும் இருக்கும்….”
“அதுக்கு என்னோட பேசமாட்டீங்களா நீங்க? எவ்வளோ யோசிச்சேன் தெரியுமா? என்ன காரணம், எதுவும் புரியாம, என்ன கோபம்ன்னு தெரியாம…” மீண்டும் கண்ணீர் இறங்கிவிட்டது விழிகளில் இருந்து.
“இத்தனைதடவை உங்களோட பெங்களூர் வந்திருக்கேன். ஒருதடவையாச்சும் பொண்டாட்டி வந்திருக்கான்னு லீவ் போட்டிருப்பீங்களா நீங்க? உங்களுக்கு உங்க வேலை தங்கம். ஆனா ஆசைக்கு நான் என் அம்மா வீட்டுக்கு வர கூடாதா?…” என்றவள்,
“அதுவும் இன்னும் ஒன்றரை மாசத்துல எக்ஸாம் முடிஞ்சுடும். என்னை உங்களோட கூட்டிட்டு போய்டுவீங்க. நினைச்சப்போ எல்லாம் வந்து இங்க இருக்க முடியுமா? சும்மாவே நான் தனியா வந்திருக்கறதுக்கு எங்கம்மா காலையில வரை கேட்டுட்டே இருந்தாங்க….” என முடித்தாள்.
“நிஜமாவே இந்த ஆங்கிள்ல நான் யோசிக்கலை முல்லை. இப்ப என்னை பத்தி மட்டுமே தான் நினைச்சேன்…” என்றவன்,
“சொல்லப்போனா நீ லீவ்ன்னு கிளம்ப போற அன்னைக்கு நான் உனக்கு பஸ்ல பெங்களூர் வர டிக்கெட் புக் பண்ணியிருந்தேன் முல்லை. அதுக்கப்பறம் தான் நீ இங்க வரதா சொல்லவும் ஓகே சொன்னேன்…”
“அதான் கோவமா?…” என்று முல்லை கேட்க,
“ப்ச்,அதெல்லாம் இல்லை. லீவ் ஏன் போடலைன்னு கேட்டியே? நான் வொர்க் பன்றது ப்ரைவேட் ஹாஸ்பிட்டல். நினைச்ச நேரம் போட முடியுமா? லீவ் சேவ் பண்ணினா இந்த மாதிரி நேரம் யூஸ் பண்ணிக்கலாம். அதான் லீவ் அதிகமா போடலை…”
“இந்த மாதிரி நேரமா?…”
“ஹ்ம்ம், ஒரு சின்ன ட்ரிப் போகலாம்ன்னு ப்ளான் பண்ணி இவ்வளோ தூரம் சொதப்பிருச்சு….” என தலையை கலைத்து கோதிக்கொண்டான்.
“ட்ரிப்பா? எங்க? இப்பவும் சொல்லலை நீங்க…” என முல்லை முறுக்கிக்கொண்டு நிற்க,
“இங்க பக்கத்துல தான் போறோம். உனக்கு கால் பண்ணினா கண்டிப்பா உன்னை அங்க வர சொல்லிருவேனோன்னு ஒரு திங்கிங். அதான் ஒரு ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு வந்தேன்…” என சொல்லி,
“ஓகே, மிச்சத்தை போற வழில பேசிப்போம் முல்லை. கிளம்பேன். கார் வெய்ட்டிங்ல இருக்கு….” என்ற அவளை அவசரப்படுத்தினான்.
முல்லையும் கிளம்பி வர உஷா வீடு வந்து சேர்ந்திருந்தாள் முல்லை வெளியே வரும் பொழுது.
“இன்னைக்கு இங்க தங்கிட்டு போகலாமே?…” என ஞானமும், உஷாவும் சொல்ல,
“கொடைக்கானல் தான் போறோம்…” என்று சொல்ல முல்லை வியப்பாய் பார்த்தாள்.
“லாஸ்ட்டா தீபாவளிக்கு வந்தப்பவே அங்க போக புக் பண்ணிருந்தேன். ஆனா ப்ளான் சேஞ்ச்சாகிருச்சு…” என்று சொல்ல ‘இதுவுமா?’ என்று பார்த்தாள் முல்லை.
கிளம்பும் வழியில் தாயும் அண்ணியும் சொல்லியதையே தானுமே கூறினாள் அவனிடம்.
“ஒருநாள் இருந்திருக்கலாம் தானே? ஏன் இப்படி பன்றீங்க?…” என முல்லை கேட்டதும்,
“அதான் சொன்னேனே? உன் ரூம்ல. ப்ச், சைலன்ட் முல்லை…” என சொல்லி முணுமுணுப்பாய் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் சாதாரணமாக சொல்லியவன் குரலில் முகத்தில் அத்தனை விஷமம்.
கப்பென்று வாயை மூடிக்கொண்ட முல்லை அவன் புறம் திரும்பவே இல்லை அதன் பின்பு.
அடுத்த இரண்டு நாட்கள் கொடைக்கானலில் தான் அவர்கள் வாசம். அதன் பின் திண்டுக்கல் வந்து அங்கிருந்து பெங்களூர் அழைத்து சென்றுவிட்டான் முல்லையை.
“ஸ்டடி ஹாலிடேய்ஸ்ல ஹனிமூன் போறது நாமளா அதான் இருப்போம்…” என அவ்வப்போது சொல்லி அவனிடம் முல்லை வம்பு செய்துகொண்டே தான் இருந்தாள்.
இரு வாரங்கள் ஓடியது தெரியாமல் நாட்கள் நகர்ந்திருக்க பரீட்சையும் துவங்கியிருந்தது.
இறுதி பரீட்சைக்கு முதல்நாள் அர்னவ் திருச்சி வந்திருக்க வந்தவன் வந்த கையோடு அவள் பரீட்சை முடித்ததும் தன்னுடனே அழைத்து சென்றிருந்தான்.
அருந்ததியின் மூலம் முல்லை வாயிலிருந்தே புகைப்பட கதையும் வெளிப்பட்டிருக்க ‘இதை எப்படி மறந்தோம்? இதை வைத்தா அத்தனை கோபம் கொண்டோம்?’ என தன்னையே திட்டிக்கொண்டான் அர்னவ்.