அர்னவ்வின் பார்வை ‘நீ தான் சொன்னதா?’ என அழுத்தமாய் முல்லையின் மேல் படிய ‘போச்சு’ என கெஞ்சலாய் பார்த்தாள்.
“அது மட்டுமா? புள்ளையை பதற வைக்கிறான். என்னமோ க்ரஷ்ல இருந்தமாதிரி ஹஸ்ல இல்லையாம். எப்படி இருக்கான் பாருங்க?…” என மூச்சை இழுத்துவிட்டவர்,
“நான் இருக்கறவரை சரி. நானும் கிளம்பிட்டா தனியா என்ன பண்ணும் என் மருமக. கல்யாணம் பண்ணிகிட்டா மட்டும் போதுமா? பொண்டாட்டி என்ன நினைக்கான்னு யோசிக்கனும்ல. இனியாச்சும் யோசிக்கட்டும்…” என்று சொல்ல,
“நல்லா மாட்டிவிடறீங்க த்தை. இப்படி பண்ணிட்டீங்களே?…” முல்லை அவரிடம் முணங்க,
“என்ன சொல்லனுமோ என்கிட்ட சொல்லு. அதென்ன அம்மாவுக்கு ட்ரெய்னிங் குடுத்து பேச கூட்டிட்டு வந்திருக்க?…” என முல்லையிடம் அவன் கேட்டதுமே,
“இதுக்கு தான் என் மருமக வேற டாக்டரை பார்க்கனும்னு சொன்னா. நான் தான் கைராசிக்காரன்னு இங்க நல்லபேர்ன்னு சொல்லி சமாதானம் செஞ்சு அவளை கூட்டிட்டு வந்தேன்….” என்றுவேறு வத்தி வைத்துவிட்டார்.
“ஓஹ்…” என்றபடி தன்னிருக்கையில் பின்னால் சாய்ந்து லேசாய் சுழன்றுகொண்டிருந்தவன்,
“அவ்வளோ தானா? இன்னும் இருக்கா?….” என கேட்டான் மீசையை விரலால் நீவியபடி.
“அவ்வளோ தான். வேற ஒன்னும் சொல்லலை….” என்றவள் அன்னக்கிளியிடம்,
“எதுவும் சொல்லாதீங்க ப்ளீஸ்…” என்றாள் அவர் பக்கமாய் சாய்ந்து அவருக்கு மட்டும் கேட்கும் வகையில்.
“சொல்றவிதமா சொன்னா தானே சில மரமண்டைகளுக்கு புரியும். அதுவும் மாசமாருக்க பொண்ணு நீ. பதட்டமில்லாம இருக்கனும்ல…” என்றார் அதையும் சத்தமாக.
“இப்ப இருக்கறத விடவா? போதும்த்தை. பேசாம உங்களோட பாபநாசம் வரட்டுமா?….” என கேட்டுவிட்டவள்,
“சொல்லிடாதீங்க….” என அன்னக்கிளியின் வாயை பொத்திவிட்டாள் கைகளால்.
அவர்கள் இருவரையும் கவனித்தபடி இருந்தவன் இதனை கண்டு இமை தாழ்த்தி விழி மூடி லேசாய் சிரித்துக்கொண்டான்.
அவனின் புன்னகையை கண்டு அன்னக்கிளி எப்படி என மருமகளிடம் கேட்க முல்லையின் முகம் பெரிதாய் தெளிவில்லை.
‘இவங்ககிட்ட எல்லாம் பச்சை பிள்ளை தான். என்கிட்ட தான் இல்லாத அலும்பு’ என புலம்பிக்கொண்டே அவனை பார்க்க புனிதாவும் வந்துவிட்டாள்.
“உங்க டீடெய்ல்ஸ் சொல்லுங்க…” என எழுத ஆரம்பிக்க தயாராய் பேனாவை எடுக்க,
“இங்க குடுங்க புனிதா…” என்று கை நீட்டினான் அர்னவ்.
புனிதாவும் ஒன்றும் புரியாமல் அவனிடம் நீட்ட முல்லையை பார்த்துவிட்டு அவனே அதனை நிரப்ப தொடங்கினான். எழுதி முடித்ததும்,
“டெஸ்ட்க்கு அழைச்சிட்டு போங்க…” என சொல்லி அந்த பைலை தர வாங்கியவள்,
“உங்களுக்கு சொந்தமா டாக்டர்?….” என கேட்டதும்,
“ஹ்ம்ம், இவங்க என்னோட மிஸஸ். பக்கத்துல இருக்கறது என்னோட அம்மா…” என்று சொல்லி தலையசைத்தவன்,
“இதை குடுத்துட்டு வந்து அடுத்த பேஷண்டை அனுப்புங்க….” என்றான்.
“டாக்டர்,,,, மேம்….” புனிதா தடுமாறி நிற்க,
“கவனம் வேலையில இருக்கனும் புனிதா. அனுப்பிட்டு வாங்க…” என சொல்லவும்,
“வாங்க மேம்….” என்று சொல்லி முன்னே நடக்க,
“இங்க கூட எப்படி இருக்கான் பாரு? இப்ப வர போய் தானே தெரியுது…” என புலம்பிக்கொண்டே அன்னக்கிளி முன்னே செல்ல முல்லையோ அவனை கண்டுகொள்ளாமல் எழுந்தாள்.
“பார்த்து போ முல்லை…” என அவன் சொல்ல,
“எங்களுக்கு தெரியும்….” உதட்டை சுழித்துவிட்டு கதவு வரை சென்றவள்,
“எங்க வீட்டுக்கு சொல்லனும்…” என்றாள் மீண்டும் அவன் முன்னே வந்து.
“கேட்கலை. என்ன சொன்ன?…” வேண்டுமென்றே அவன் வம்பு செய்ய,
“ப்ச், இந்த விஷயத்தை எங்க வீட்டுக்கு சொல்லனும். போன் பண்ண போறேன்…” என்றும் சொல்ல,
“டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் வரட்டும். ஈவ்னிங் சொல்லிக்கலாம்….” என்றவன் மீது அத்தனை கோபம் வந்தது.
“ஏன் இப்படி பன்றீங்க? கொஞ்சம் முன்னாடி தானே கண்பார்ம்ன்னு சொன்னீங்க…”
“ஆமா, இல்லைன்னு சொல்லலையே. இன்னும் ஸ்ட்ராங்கா கன்பார்ம் பண்ணிக்க வேண்டாமா?….” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
“இதெல்லாம் அநியாயம். அப்பறம் என்ன டாக்டர் நீங்க?…” என கேட்டுவிட்டவள் பதறி அங்கிருந்து வேகமாய் செல்ல,
“மெதுவா போ முல்லை…” என்றான் சப்தமாக.
பரிசோதனை இடத்தில் புனிதா முல்லையை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு வந்துவிட அத்தனைபேரும் நலம் விசாரித்து தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள்.
அடுத்த இரண்டு பேஷண்ட்களையும் பார்த்து அனுப்பிவிட்டு முல்லை இருக்குமிடம் வந்தவன்,
“நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. ட்யூட்டி முடிஞ்சதும் நான் வரேன். அப்படியே ரிப்போர்ட்ஸ் நானே வாங்கிட்டு வந்திடுவேன்….” என அன்னக்கிளியிடம் சொல்லியவன் முல்லையை பார்க்க,
“அதெல்லாம் வேண்டாம். எல்லாரும் இருந்து தானே வாங்கிட்டு போறாங்க…” என முல்லை பிடிவாதம் பிடித்தாள்.
“கிளம்புன்னு சொல்றான்ல. போவோம். அதான் நமக்கு வாங்கிட்டு வர ஆள் இருக்கே. என்னத்துக்கு நீ காத்துக்கிடக்க?…” என்ற அன்னக்கிளி,
“வரோம் டாக்டர்….” என சொல்ல,
“நீங்களே அவளுக்கு கொம்பு சீவுங்க. வீட்டுக்கு வந்து பேசிக்கறேன்…” என அர்னவ் தாழ்ந்த குரலில்.