“நல்லா ஆழ்ந்து தூங்கும் போது தான் பேபி வளர்ச்சி இன்னும் நல்லா இருக்குமாம்…”
“அவ்வளோ தானா?…” என கேட்டவன் லேசாய் முறைக்க,
“இப்போதைக்கு இது தான் ஞாபகம் இருக்கு. விடுங்க என்னை…” என்றாள் தன் கன்னத்தை பிடித்திருந்த அவன் கையை விலக்கியபடி.
“உன்னை நேரத்துக்கு சாப்பிடுன்னு சொன்னேன் தான். இன்னேரமே தூங்குன்னு சொல்லலையே?…” என்றவன்,
“அப்போ நான் சொன்னதை சரியா காதுல வாங்கவே இல்லை. அதானே?…” என்றவன் மிரட்ட,
“எல்லாம் வாங்கியாச்சு. இன்னும் வாங்க என்ன இருக்கு?…” சலிப்பாய் சொன்னவளிடமிருந்து தன் பிடியை தளர்த்தினான் அர்னவ்.
“சரி போ. போய் தூங்கு…” என விடுவித்தவன் அறையைவிட்டு வெளியேற முல்லையின் முகத்தில் பதட்டத்துடன் கூடிய அயர்ச்சி.
‘சின்னதாய் கோவிக்க கூட முடியவில்லை இவனிடம்’ என்று தோன்ற மனது பாரமானது.
தன் மீதே அத்தனை கோபம் முல்லைக்கு. முன்பெல்லாம் அவன் இயல்பாய் தன்னிடம் பேசமாட்டானா என ஏங்கிய நாட்கள் எத்தனை?
கணவனாக அவன் அருகாமையை தேடியதெல்லாம் இப்போது எங்கே என்று தோன்ற கட்டிலில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.
அவனிடம் எதிர்பார்த்தது தன் மீதான உரிமையை தானே? இரண்டு வார்த்தை கூடுதலாய் பேசிவிடமாட்டானா என தவித்து காத்திருந்தது போய் இப்போது அவன் செய்வதை கண்டு எரிச்சல் கொள்வது என்னவகையான மனநிலை.
தனக்கு பிடிக்காமல் போனால் அவன் செய்வது சரியில்லை என்றாகிவிடுமா? தன்னுடைய எண்ணங்களின் பார்வையை மாற்றி பார்க்க முயன்றாள்.
தன் எதிர்பார்ப்புகளுக்குள் அவன் அடங்கவேண்டும் என்ற எண்ணம் தலைதூக்குகிறதோ என்றளவிற்கு மனது படுத்தியது அவளை.
தன்னிடம் கலந்துகொள்ளாமல் அவனாக செய்யும் இந்த சில விஷயங்கள் இப்படியான தோற்றத்தை தருகிறது என முழுதாகவும் நினைக்க முடியவில்லை.
ஆனால் ஒன்றுமட்டும் புரிந்தது. இதே எண்ணத்துடன் பார்த்தோமானால் பிரச்சனை பெரிதாக கூடும் என்று தன்னை சமாதானம் செய்ய முயன்றாள்.
“என்கிட்ட சொல்லியிருந்தா நானே செஞ்சிருப்பேனே?…” என மெல்லிய குரலில் சொல்லி எடுத்துக்கொண்டாள்.
“இப்ப நான் இருக்கேன். உன்னை பார்த்துக்கனும் தானே? ஸோ செய்யறேன். இதுல என்ன இருக்கு? நான் இல்லாதப்போ நீ தானே செய்ய போற முல்லை?…” என இலகுவாய் அவளருகே அமர்ந்துகொண்டான்.
அர்னவ்வின் முகத்தை ஆராய்ச்சியாய் பார்த்தவள் தன் மீது கோபமோ என யோசித்தாள்.
“என்ன இவன் என்ன இவ்வளவு அராஜகம் பன்றானேன்னு யோசிக்கிறியா?…” என்றதும் தம்ளரை அருகிலிருந்த டீப்பாயில் வைத்தவள்,
“சத்தியமா அப்படி யோசிக்கலை. அது காலையில ஏதோ ஒரு கோவம். வாய் தவறி அத்தைட்ட சொல்லிட்டேன். அவங்க உங்ககிட்ட சொல்லுவாங்கன்னு நான் நினைக்கலை. ப்ளீஸ்…” என அவனின் கையை பிடித்துக்கொள்ள,
“எதுக்கு இவ்வளோ பதட்டம் முல்லை? நீ சொன்னாலும் தப்பில்லை. ஆனா என்கிட்ட பேசு, என்கிட்ட சண்டை போடு. ஓகே…” என அவளின் கையை தட்டிக்கொடுத்தான்.
“நான் அதை யோசிக்கலை. நீ அக்காட்ட பேசிட்டிருந்ததை தான் நினைச்சிட்டிருந்தேன்…” என கண்ணை தேய்த்துவிட்டுக்கொண்டான் அர்னவ்.
“பேசினதை கேட்டீங்களா நீங்க?….”
“ஹ்ம்ம், நான் வரப்போ ரொம்ப இன்ட்ரெஸ்ட்டா டாப்பிக் போய்ட்டிருந்தது. நான் பேசினா இன்னும் அக்கா நிறுத்தாம பேசுவாங்க. அதான் உள்ள வரலை…” என்றவன் லேசாய் சிரித்துக்கொண்டான்.
“என்ன சிரிப்பு? நான் சொன்னது அவ்வளோ காமெடியா இருந்துச்சா என்ன?…”
“ம்ஹூம், சிரிப்பு உன்னை நினைச்சு இல்லை. என்னை நினைச்சு. இந்த ஒரு சின்ன விஷயத்தை எவ்வளோ பெருசா யோசிச்சு என்ன பண்ணி வச்சிருக்கேன் நான். அதான் நினைக்கவும் சிரிப்பு வந்திருச்சு…”
“அதான் நடுரோட்டுல நிப்பாட்டிட்டு போனீங்களே? நான் பேச வரதை கூட கேட்காம. அன்னைக்கு நான் எவ்வளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?…” என்றவள் பேச்சின் ஆதங்கத்தில் அவள் முகத்தை தாங்கிக்கொண்டான்.
“நிஜமா ஸாரி முல்லை. அவசரப்பட்டு என்னவோ பண்ணிட்டேன். நிறைய விஷயங்கள் நம்ம லைஃப்ல என் கைமீறி நடந்தது. நம்ம மேரேஜ்ல ஆரம்பிச்சு அடுத்தடுத்து எல்லாமே. யாரையுமே நான் குற்றம் சொல்லமாட்டேன். இந்த ஸ்டேன்ட்ல இருந்து நான் மாற போறதும் இல்லை…”
“திரும்பவும் ஏன் முதல்ல இருந்து?…” முல்லை கலக்கமாய் பார்க்க,
“நான் இதுல கோபமா எதுவுமே சொல்லலை முல்லை. தப்பு என் பக்கம். ஒத்துக்கனும் நான். அதான் சொல்றேன். அதோட அன்னைக்கு நடந்ததும் எனக்கு நல்லா தெரிஞ்சும் மணிமாறனோட அந்த பேச்சு என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ணிருச்சு. அதுவே மைண்ட்ல இருந்திருக்கும் போல? போட்டோ, பென் பார்த்ததும் உஷ்ணப்பட்டுட்டேன்…”
அவனின் பேச்சில் இன்னுமே அது அவனை எவ்வளவு அலைகழிக்கிறது என முல்லைக்கு புரிந்தது.
காலத்திற்கும் ஆறாத வடு தானே அவன் வாங்கிய வார்த்தைகளும், அனுபவப்பட்டதும். ஏன் அது தனக்கும் தானே? என தோன்றியது.
“இப்ப நினைக்கும் போது என்னை நானே அடிச்சுக்கனும். அவன் தான் உளர்றான்னா நானும் அந்த மீனிங்ல எடுத்துக்கிட்டு உன்கிட்ட ராங்கா ரியாக்ட் பண்ணினது தப்பு தானே? இதெல்லாம் என்னை ரொம்ப கில்ட்டியா பீல் பண்ண வைக்குது. இப்பவும் கூட…”
“அச்சோ ப்ளீஸ், இந்த விஷயம் பேச பேச எனக்கு அப்படியே படபடன்னு வருது. விடுங்களேன்…” என்றாள் முல்லை.
“ப்ச், மெதுவா குடிக்கனும் முல்லை. தண்ணி குடிச்சாலும் நெஞ்சடைக்கிற மாதிரி குடிக்க கூடாது. என்ன நீ? இது நீ இப்ப இருக்கறதை வச்சு சொல்லலை. நிஜமாவே நாம எல்லாருமே அப்படித்தான் குடிக்கனும். புரியுதா?…” என பாடம் ஆரம்பித்துவிட இருமியதில் கண்ணில் நீர் கட்டிவிட்டது.
“முகத்தை துடைச்சுக்கோ…” என டவலை நீட்டினான்.
“ஹ்ம்ம், ஓகே தான் நான்…” என்றவள்,
“உங்க பேஷண்ட்ஸ் எல்லாருக்கும் இப்படித்தானா? அட்வைஸ் எல்லாம் பலமா இருக்கு…” என கிண்டலாய் பேசி சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள்.
“உனக்கு உன் அம்மா வீட்டுக்கு போகனுமா முல்லை?….” என அர்னவ் இன்னும் அதே இடத்தில் நிற்க என்ன பதில் சொல்வதென தடுமாறி பார்த்தாள் அவனை.
“ஹ்ம்ம், நான் உன்னை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்துட்டேன்…”
“அச்சோ அப்படி சொல்லலை நான். பிடிக்காம ஒன்னும் வரலையே?…”
“பிடிச்சும் வரலை நீ…” என்றவன் நகர்ந்து சென்று கட்டிலின் நடுவில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
“ஆனா நான் வேணும்னு தான் கூட்டிட்டு வந்தேன். ஒரு அசெம்ஷன் தான். அதான் என் கூட வச்சுக்கனும்னு தோணுச்சு. ஒருவேளை உன் அம்மா வீட்டுல வச்சு இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா ட்ராவல் பண்ணாத, அது இதுன்னு ஆளுக்கு ஒன்னு சொல்லுவாங்க….” என்றதும் முல்லை விழி விரித்து பார்த்தாள் அர்னவ்வை.
“என்ன லுக்கு? நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னது தான். சேர்ந்த பின்னாடி பிரிஞ்செல்லாம் இருக்க முடியாது. அதான் கூட்டிட்டு வந்துட்டேன். தப்பா தெரியலை. அதே நேரம் நீ என்னை நினைக்கிறன்னு கேட்காதது என்னோட மிஸ்டேக்…”
“வீட்டுல அப்பா நல்லவிதமா இருந்தாலும் கண்டிப்பு அதிகமா இருக்கும். அண்ணாவும் அப்படித்தான். பெரும்பாலும் எங்க ஊர்ல நான் பார்த்தவங்க எல்லாம் கொஞ்சம் அடாவடி, பேச்சுன்னு எல்லாம் கரடுமுரடா தான் பார்த்திருக்கேன்…”