முல்லைக்கு பாபநாசத்தில் வைத்து வளைப்பூட்டு விழா நடத்தி திண்டுக்கலுக்கு அழைத்து சென்ற மறுநாளே அர்னவ் அங்கே வந்து சேர்ந்திருந்தான்.
வந்தவன் மனைவியை பார்த்துவிட்டு அவளிடம் சொல்லிக்கொண்டு செல்ல வந்திருக்கிறான் என முல்லையின் வீட்டினர் நினைத்திருக்க அப்படி அல்ல விஷயம்.
கௌஷிக் மட்டுமன்றி, உஷா, ஞானம், உஷாவின் பெற்றோர் என்று அத்தனைபேரின் முகத்திலும் சங்கடம்.
“இப்படி சொன்னா என்ன மாப்பிள்ளை?…” சங்கடத்துடன் கௌஷிக் கேட்க,
“நான் க்ளியரா தானே சொன்னேன்?…” என எதிர்கேள்வியாக அர்னவ்.
வீட்டு மருமகனிடம் இதனை எப்படி மறுக்கவென்று தெரியாமல் பாவமாய் இருந்தனர். முல்லைக்கு பொறுமை இதோ அதோவென்று போக்குக்காட்டியது.
‘பன்றதெல்லாம் பண்ணிட்டு எப்படி கையை கட்டி உக்கார்ந்திருக்கார் பாரு’ என முல்லை உள்ளுக்குள் பொருமி தீர்த்தாள்.
அத்தனைபேரும் அர்னவ்வின் முடிவை கேட்டு மறுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் கையை பிசைந்துகொண்டு நின்றிருக்க ஒன்றுமறியாதவன் போல மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான் அர்னவ்.
“ரெகுலரா பார்க்கற டாக்டர்னா தான் பேஷண்ட்டோட ஏ டு இசட் தெரிஞ்சி வச்சிருப்பாங்க….” என முல்லையை பார்த்துக்கொண்டே அவன் சொல்லிய விதம் மற்றவர்களுக்கு சாதாரணமாய் தோன்ற முல்லை பார்வையால் மிரட்டினாள் அவனை.
தோளை குலுக்கிவிட்டு ‘விஷயத்தை சொல்லிவிட்டேன்’ என்பதை போல எழுந்து நின்றவன்,
“நான் ரூம்ல இருக்கேன். இன்னைக்கே நைட் நான் கிளம்பனும்…” என சொல்லி முல்லையின் அறைக்குள் சென்றுவிட்டான்.
“என்ன முல்லை?….” என ஞானம் அழுதுவிடுவார் போல கேட்க மகளால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
“நான் பேசறேன்ம்மா…” என சொல்லிவிட்டு அறைக்குள் செல்ல போக,
“இந்தா நில்லு முல்லை…” என்று அவளை நிறுத்திய உஷாவின் தாய்,
“என்ன மதினி இது? விடுங்க இந்த விஷயத்தை பெருசு பண்ணாதீங்க….” என்று ஞானத்திடம் சொல்லியவர்,
“இங்க பாருங்க மாப்பிள்ளை, முல்லை வீட்டுக்காரர் டாக்டர். அவருக்கு தெரியாததா? அதுவும் இன்னைக்கேவா கூட்டிட்டு போறேன்னு சொன்னார் அவர்? ஒம்பதாம் மாசம் வந்து கூப்பிட்டுக்கறேன்னு சொல்றார். அவ்வளோ தானே?…” என்றார் கௌஷிக்கிடம்.
“இருக்கட்டும் அத்தை, ஆனா பொண்ணுக்கு தலைபிரசவம் தாய் வீட்டுல தானே நடக்கனும்…” அவன் பேச,
“இல்லைன்னு சொல்லலை. ஆனா அது நாமளா ஏற்படுத்திக்கிட வழக்கம் தானே? சட்டம் இல்லையே. சும்மா அந்த புள்ளையையும் போட்டு சங்கடப்படுத்தறீங்க…” என பொதுவாய் சொல்ல,
“அம்மா சொல்றதும் சரிதாங்க. பொண்ணை நல்லா பார்த்துக்கமாட்டோம்ன்னா தானே நாம கஷ்டப்படனும், வருந்தனும். அவர் பார்த்துக்கறேன்னு சொல்றார். அதுவும் என்னைவிட யாரா பார்த்துக்கமுடியும்ன்ற மாதிரி கவனிக்கிறது நமக்கு சந்தோஷம் தானே? நம்ம முல்லை நல்லா இருக்கறது தான் முக்கியம்…”
உஷாவும் கௌஷிக், ஞானத்தை சமாதானம் செய்து வைத்தாள். எங்கே அவர்கள் பேச்சை கேட்டு முல்லை கணவனிடம் சண்டை என கிளம்பிவிட்டால்?
இப்போதிருக்கும் அவள் உடல்நிலை, அதைவிட மனநிலையும் முக்கியமாகிற்றே?
இந்த நேரம் தங்கள் வருத்தங்கள் என்று எதையும் காண்பித்து முல்லை அர்னவ்வோடு பிணக்கு என்றால் அது அதைவிட பெரும்கஷ்டம்.
உஷாவின் பார்வையில் கௌஷிக் தங்கையை பார்க்க அவள் விழிகள் கலங்கி இருந்தது.
“ப்ச்…” என தலையை பிடித்துக்கொண்டவன் தன்னை நிதானப்படுத்தினான்.
உள்ளுக்குள் ஆயிரம் பொறுமல். மாப்பிள்ளை செய்வது தங்கை மேல் உள்ள அன்பினால் என்றாலும் தொடர்ந்து இதையே செய்ய என்னவோ தங்களால் முடியாது என்பதை போலொரு தோற்றத்தை உள்ளுக்குள் எங்கோ உருவாக்கியிருந்தது.
“கல்யாணம் தான் என்னவோ அவசரகதில லக்கி ப்ரைஸ் மாதிரி முடிஞ்சு போச்சு. அடுத்தடுத்து பெருசா ஒன்னும் நடக்கலையேப்பா? பெருசா இங்க வந்துபோய் கூட உங்க பொண்ணு இருக்கமாட்டிக்கே?…” என நக்கலாக கேட்டுவிட்டனர் ஆளாளுக்கு.
அவர்களுக்காக இல்லை என்றாலும் தங்களுக்கே அப்படி தானே தோன்றிவிட்டது.
தங்களுடன் முல்லையின் உறவு பின்வரும் காலத்தில் எப்படியோ என நினைத்தான் கௌஷிக்.
இதுவே தாங்கள் பார்த்து நடத்தியிருந்த திருமணமாக இருந்திருந்தால் இன்னும் அழுத்தி பேசியிருந்திருப்போமோ என்றளவில் யோசனைகள் சென்றிருந்தது அவனுக்கு.
நினைத்ததை வெளியில் சொன்னாலோ, இல்லை முல்லையிடமே ஆற்றாமையில் பேசிவிட்டாலோ அது உறவுக்குள் மனதளவில் விரிசலாகி போகும் என உள்ளுக்குள் போட்டு அடக்கிக்கொண்டான்.
அவன் சொல்லவில்லை என்றாலும் முல்லைக்கு புரியாததில்லையே. கணவனுக்கும், பிறந்த வீட்டினருக்கும் இடையில் சிக்கி தவித்தது அவள் தான்.
இருவருமே அவள் மீதான அன்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சத்தான் செய்தனர். ஆனால் இது வெறும் அன்பை கொண்டு மட்டுமே நிறைக்க கூடிய நிகழ்வு அல்லவே.
அத்தனை சீக்கிரம் அவனிடமிருந்து தன்னை எங்கும் அனுப்பாதவன் ஏழாம் மாதமே வளைகாப்பிற்கு ஒப்புக்கொண்டதும் உள்ளுக்குள் இப்படி ஏதேனும் இருக்கும் என தோன்றியது தான் முல்லைக்கு.
ஆனாலும் இப்போது வீட்டினரின் கலங்கிய தோற்றம் அத்தனை வருத்தியது முல்லையை.
தன்னை பிடித்திருந்த உஷாவின் கையை விலக்கியவள் உள்ளே செல்ல போக உஷா தடுத்தாள்.
“அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும் முல்லை. நீ போய் ஏதாச்சும் பேசிடாத…” என்று சொல்ல,
“இல்லைண்ணி, பேசலை…” என்று சொல்லி செல்ல முயல,
“ம்ஹூம் உன் முகமே சரியில்லை. அவங்கட்ட சண்டை எதுவும் போட்டுடாத முல்லை. சொன்னா கேளு…” என்றாள் உஷா மீண்டுமாக.
“ப்ளீஸ் அண்ணி விடுங்க…” என முல்லை சொல்லிக்கொண்டிருக்க அங்கே ஞானம் மெல்லிய குரலில் விசும்பிக்கொண்டிருந்தார்.
“எம்மவளுக்கு கூட வச்சு பார்த்துக்க கூடவா எனக்கு வக்கத்து போச்சு? இதுக்கு கூட நானே பார்த்துக்கறேன்னு சொல்லிட்டிருக்காரே? இந்த ஊரு முன்னாடி ஒத்த சொல்லுக்கு நாங்க இன்னும் எம்புட்டு நாளைக்கு தான் தலைகுனிஞ்சு போவனுமோ?…” என நொந்த குரலில் பேச முல்லை கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
“ம்மா, பேசாம இருங்க…” என கௌஷிக் அதட்டினான்.
தன்னுடைய மாமியார், மாமனாரை வைத்துக்கொண்டு தாயை ஓரளவுக்கு மேல் கடிய முடியாமல் உஷாவிடம் கண்ணை காட்ட முல்லை அப்படியே நின்றுவிட்டாள் இந்த பேச்சில்.
முதல்நாள் எத்தனை சந்தோசம் மகிழ்ச்சி, எவ்வளவு பெருமையுடன் ஊரின் முன் ‘பார் என் மகள் வாழ்க்கையை’ என்னும் எத்தனை கர்வம்.
அத்தனையும் அர்னவ் வந்து சொல்லியதில் சரிந்து விழுந்திருக்க மருமகன் மொழிந்ததை மறுக்கவும் முடியாமல், அதன் போக்கில் செல்லவும் முடியாமல் தவித்தார் அந்த வயதான பெண்மணி.
“என் மருமகன் பார்த்துப்பான்னு சொல்லுறது மத்ததுக்கு வேணா பெருமையா இருக்கும். இங்க எம்மவனுக்குல தலையிறக்கம். ஊரான் என்ன பேசுவான். கல்யாணம் நடந்ததுதான் அப்படி, மத்ததாச்சும் மொறப்படி நடந்துச்சா?…” என புலம்பிக்கொண்டிருக்க,
“வாய மூடுங்க த்தை. கம்முன்னு இருக்கனும். இப்ப முல்லை முக்கியமா, ஊரான் சொல்றது முக்கியமா? ஏன் இங்க பார்த்தா மட்டும் உங்க மகனுக்கு இங்க முக்குல சிலை வைக்கேன்னு சொன்னாங்களா இந்த ஊர்க்காரனுங்க. சும்மா…” என்று உஷா போட்ட சத்தத்தில் வாயை மூடிக்கொண்டார்.
“இப்ப நீ ஏன் உன் மாமியார்ட்ட எகிறிட்டு வர உஷா? அதுவே ஆத்தமாட்டாம பேசுது. பொறுத்துதேன் சொல்லேன்…” மகளை அதட்டிய உஷாவின் தாய்,