“மதினி, நீங்களும் செத்த சும்மாதான் இருங்களேன். முல்லைக்கு கேட்டா எம்புட்டு சங்கட்டம்? பாவம் மாசமாருக்க புள்ளை. மனசு கலங்கலாமா?…” என்று ஞானத்தை சமாதானம் செய்தார்.
“முல்லை இங்க வந்து உட்கார்…” என்ற கௌஷிக் தானும் தங்கையின் அருகில் அமர்ந்துகொண்டான்.
“ப்ச், இதெல்லாம் நினைச்சு நீ ஒன்னும் வருத்தப்படாத முல்லை. உன் மேல இருக்கற பிரியத்துல தான் அவர் இந்த மாதிரி சொல்றார். அதோட எத்தனை பிரசவம் பார்த்தவர், உனக்கு பார்க்கனும்னு ஆசை இருக்கும் தானே? அவர் பிள்ளையை அவர் முதல்ல தூக்கனும்னு. என்னவோ ஒன்னு…”
தங்கையின் மனதை அமைதிப்படுத்த முயன்றான் கௌஷிக். ஞானம் மகளின் அருகிலேயே வரவில்லை. உஷா வரவிடவில்லை.
கண்களால் மிரட்டி வைத்தாள் மாமியாரை அங்கிருந்து நகரவிடாமலும், அழ விடாமலும்.
“எவ்வளோ நேரம் பேசுவீங்க? அண்ணே வேற நைட்டுக்கு கிளம்பனும்னு சொல்லியிருந்தாங்க. முல்லையை அனுப்புங்க. அவங்களோட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கட்டும்…” என்ற உஷா,
“இங்காரு முல்லை இத்தனை நாள் ரெண்டுபேருமா ஊர்ல இருந்தீங்க. இப்ப அவங்க மட்டும் தனியா கிளம்பறாங்க. எதையாச்சும் பேசி சண்டை போடாத. அங்க போய் மனுஷன் நிம்மதியில்லாம இருக்கனுமா?…” என்று சொல்ல முல்லை அமைதியாக இருந்தாள்.
“ஆத்தா முல்லை, உனக்கு இங்க ஆளும்பேருமா இருக்கோம். அங்க அவர் மட்டும் தான். அதுவும் அவர் வேலைக்கு மனநிம்மதி எவ்வளோ முக்கியம். அதனால எதுவும் பேசாத. இப்ப என்ன? உன் பேர சொல்லி நாங்களும் பெங்களூர பார்த்துக்க போறோம்…” என்ற உஷாவின் தாய்,
“உங்க பேரனோ பேத்தியோ பெரிய டவுனுல பொறக்குதுன்னு பெருமையா சொல்லிக்கத்தான மதினி. இதுக்கு போய் உக்கார்ந்து புலம்பிக்கிட்டு?…” என்று தன்னால் முடிந்தளவு அங்கே சூழ்நிலையை இலகுவாக்கினார்கள் உஷாவும் அவளின் அம்மாவும்.
“அத்தையும், உஷாவும் சொல்றது தான் சரி முல்லை. இப்போதைக்கு எதுவும் சொல்லவேண்டாம். இருக்கட்டும். இப்ப என்ன? இங்க பார்த்தா தானா? எங்கனாலும் உன் பிள்ளைக்கு நான் தான் தாய்மாமன். பொம்பளைப்பிள்ளையா பெத்து குடு. உன் புருஷன் மாதிரியே ஒருத்தருக்கு கட்டி வச்சு பைசல் பண்ணிருவோம்…”
கௌஷிக் சிரித்துக்கொண்டே சொல்லவும் முல்லையின் முகம் தெளிவானது கொஞ்சமே.
“புருஷனை பழி வாங்கிருவோம்ன்னு சொல்லவும் சிரிப்பை பாரு..” என்று தலையில் தட்டிய கௌஷிக்,
“எல்லாம் உன் அண்ணிய பார்த்து கத்துக்கிட்டதா?…” என்று வேறு கிண்டல் பேசினான்.
“ம்க்கும், கத்து குடுத்துட்டாலும். உள்ள பெரிய டீச்சரே இருக்கார். வேணும்னா சொல்லுங்க அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் பக்கம் பக்கமா பாடம் நடத்த வைச்சிடலாம்…” என உஷா கிண்டலடிக்க,
“எம்புள்ளைங்க இப்படி உக்கார்ந்து, சிரிச்சு பேசி எம்புட்டு நாளாச்சு இந்த வீட்டுல?…” என்று மீண்டும் ஆரம்பித்துவிட,
“உஷா வாரா மதினி…” என்றவரின் பேச்சில் சட்டென முகத்தை துடைத்து சாதாரணம் போல் ஞானம் பார்க்க பக்கென்று சிரித்துவிட்டாள் முல்லை தாயின் இந்த பாவனையில்.
“சரி, உள்ள போ. கொஞ்ச நேரம் படுத்து எந்தி. இல்ல பேசிக்கிட்டிரு…” என அவளை அனுப்பி வைக்க முல்லை தன்னறைக்குள் நுழைந்தாள்.
அர்னவ் அந்த மேஜையில் இருக்க அவனின் கையில் அந்த உடைந்த கண்ணாடி இருந்தது.
‘இந்த பழசை இவர் மறக்கவே மாட்டாரா?’ என்னும் ஆயாசத்துடன் கதவை அடைத்துவிட்டு வந்தாள்.
“இந்த கண்ணாடி உன்கிட்ட எப்படின்னு கேட்க நினைச்சேன். சொல்லவே இல்லை நீயும்?…” அர்னவ்வே பேச,
“இப்போ இது எதுக்கு உங்களுக்கு?…” என்றவள் அதை வாங்கி அந்த பெட்டிக்குள் வைத்து பூட்டினாள்.
“தெரிஞ்சுக்கனும். சொல்லு…” என அவளின் கையை பிடித்தான்.
“அன்னைக்கு சண்டைல அத்தைக்கிட்ட இருந்துச்சாம். அருந்ததி அண்ணி பிள்ளைங்க கொண்டுவந்து என்கிட்ட குடுத்தாங்க வச்சிருக்க சொல்லி. நான் அப்படியே வச்சிக்கிட்டேன்…”
“ஓஹ்…” என்றவன் மீண்டும் அவள் வைத்த இடத்தை பார்க்க,
“ப்ச், இப்ப ஏன் பழசையே நினைச்சிட்டு இருக்கீங்க?…”
“நீ கூட தான் அதை தூக்கி போடாம வச்சிருக்க. நான் கேட்டேனா?…” என்றவன்,
“அதை போட்டுடேன். இப்ப யூஸ் பன்றதை வேணா தரேன். வச்சுக்கோ….” என்று சொல்ல,
“எதுவுமே நாம நினைக்காதப்போ கிடைச்சா தான் பெருசா தெரியும். எனக்கும் அப்படித்தான். நான் கேட்காமலே, நான் நினைக்காமலே கிடைச்சது. கண்ணாடி மட்டுமில்லை…” என்றாள் ஆழ்ந்த குரலில்.
“ஹ்ம்ம்…” என்றவன்,
“நான் நைட் கிளம்பிருவேன். நீ மேனேஜ் பண்ணிடுவியா முல்லை…”
“இது நான் பிறந்து வளர்ந்த வீடுங்க…” என்றாள் ஆற்றமாட்டாமல்.
என்னதான் வெளியே வீட்டினர் சொல்லியே அனுப்பியிருந்தாலும் அவனிடம் பேச, கேட்க நிறைய இருந்தது.
“எனக்கும் தான், பலவருஷமா நான் இருந்த வீடு தான். ஆனா இப்ப நீயில்லாம போனா இருக்க கஷ்டம்…” என்றான் வெளிப்படையாக.
இப்படி தன்னை எண்ணி உருகுபவனிடம் அவன் செய்பவையை சொல்லி கோபிக்கவும் முடியாமல், பிறந்த வீட்டிற்கு பேசவும் முடியாமல் இருபுறமும் இருதலைகொள்ளி எறும்பென தவித்தாள்.
“பார்க்கலாம். மேனேஜ் பண்ணி தானே ஆகனும்?…” என்று சொல்லிக்கொண்டிருந்தவன் முகத்தையே அத்தனை தீவிரமாக பார்த்தாள் முல்லை.
“என்ன லுக்? எதுவும் கேட்கனுமா?…” என்றவனுக்கு ஆமாம் என தலையாட்டியவள்,
“நீங்க தான் கல்யாணத்தன்னைக்கு என்கிட்ட டிவோர்ஸ் கேட்டவரான்னு யோசிச்சிட்டிருக்கேன்…” என்றாள் சட்டென.
கேட்கவேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் எதிர்பாராமல் அவளறியாமலே அது வந்து விழுந்திருக்க அவள் உள்ளம் திடுக்கிட்டது.
“ஏன்? இப்படி இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா அப்பவே நான் கேட்டதுக்கு சம்மதிச்சு என்கிட்ட இருந்து தப்பிச்சிருக்கலாம்ன்னு தோணுதா முல்லை?…” என்றவன் தன் சட்டை பட்டன்களை கழற்றினான்.
அவன் பேச்சில் தீயாய் அவனை முறைத்தபடி இரு கைகளையும் வயிற்றில் தாங்கிக்கொண்டு நின்றவளை கண்டு கண் சிமிட்டியவன்,
“பட் யூ டூ லேட் மிஸஸ்.அர்னவ். நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை…” என்று பாட,
“ஆமாமா…” என்று உதட்டை சுழித்துக்கொண்டாள்.
“சண்டை மூட்ல இருக்கியா?…” என கேட்டு தன்னருகே அமர வைத்தவன் அவளின் காலை தூக்கி மடியில் வைத்து பாதங்களை பார்த்தான்.
“ஹ்ம்ம், நீர் கோர்க்குதே உனக்கு?…” என்றவன் அவள் எவ்வளவு நேரம் நடப்பதில் இருந்து, படுத்து உறங்குவது வரை சொல்லித்தர முல்லைக்கு கிறுகிறுத்தது.
“இந்த நேரம் மூட் ஸ்விங் எப்படி இருக்கும்ன்னு எனக்கு தெரியும். மனசுக்குள்ள போட்டு அழுத்தினா தான் ப்ராப்ளம். வெளில சொல்லிடறதுல ப்ராப்ளம் இல்லை முல்லை…” என்றான் அதற்கும் பொறுமையுடன்.
“நீங்க இதுல மட்டும் கொஞ்சம் நல்ல டாக்டர் தான்…” என்று சொல்லிக்கொண்டவள் வயிற்றில் குனிந்து முத்தமிட்டவன்,
“கொஞ்சம் நாள் மிஸ் பண்ணுவேன்…” என சொல்லும் பொழுதே தொண்டை கரகரத்தது அர்னவ்விற்கு.
“இங்க வா…” என அவளை தன் மீது சாய்த்துக்கொள்ள,
“ரெண்டு நாள் இருக்கலாமே நீங்க? லீவ் போடறீங்களா?…” என்றாள் அவனின் தவிப்பை கண்டு தாளமாட்டாமல்.