“ம்ஹூம் பேச்சுக்கு ஏழாம் மாசம்ன்னு சொன்னாலும் இந்த மாசத்தோட என்ட் இது. இன்னும் ஒருமாசம் இங்க இருப்ப நீ. ஒன்பதாம் மாசம் நான் கூட்டிட்டு போய்டுவேன். எப்ப வேணா டெலிவரி இருக்கும். நான் உன்னோட இருக்கனும். லீவ் எல்லாம் இப்பவே நான் வேஸ்ட் பண்ண முடியாது முல்லை…”
ஒவ்வொன்றும் அவன் திட்டமிட்டு வைத்திருக்க வீட்டினருக்காக பேச நினைத்தவளால் பேச முடியவில்லை.
“அதுவும் டாக்டர்ஸ்க்கு லீவ் எல்லாம் ரொம்ப கஷ்டம். அத்தனை சீக்கிரம் கிடைக்காது. கிடைச்சாலும் எமர்ஜென்ஸின்னு கூப்பிடும் போது போகாம இருக்க முடியாது….” என்றான் தன் நிலையை கூறி.
இருவருக்குமே உறக்கமில்லை. மாலை வரை பேசிக்கொண்டே இருந்தவன் நேரம் பார்த்து எழுந்துவிட்டான்.
முல்லையும் அவனும் வெளியே வர உஷா அவர்களுக்கு டீ போட்டு தயாராக வைத்திருந்தாள்.
உறங்காததில் தலை வேறு பாரமாய் இருக்க, பழக்கதோஷத்தில் முல்லையும் டீயை எடுக்க,
“என்ன பன்ற முல்லை? நீ டீ எடுத்துக்க கூடாது தானே?…” என்றவன் அதட்டலில் அவள் திருதிருக்க,
“பால் கொண்டுவாங்க…” என்றான் அர்னவ் உஷாவிடம்.
உஷாவும் இது தேவையா உனக்கு என பார்த்துவிட்டு பாலை எடுத்துக்கொண்டு வந்தாள்.
கௌஷிக்கும் இருக்க அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த அர்னவ் நேரத்தை பார்த்துவிட்டு பெருமூச்சுடன் எழுந்துகொண்டான்.
“எட்டு மணிக்கு பஸ். கிளம்பறேன்…” என்றவன் உள்ளே சென்று தன்னுடைய பேக்கை எடுத்து வந்தவன் கையில் முல்லையின் மருந்துகள் அடங்கியிருந்த பாக்ஸ்.
“இதுல டேப்லெட்ஸ் இருக்கு. ரிப்போர்ட்ஸ் எல்லாம் முல்லைக்கிட்டையே இருக்கு. இங்க எமர்ஜென்ஸிக்கு போறப்போ மறக்காம கொண்டு போங்க. எனக்கு கால் பண்ணினா நானே அவங்கட்ட பேசறேன்…” என்றான்.
“நான் பார்த்துக்கறேன் ங்க…” என முல்லை சொல்ல,
“ஈவ்னிங் டீ குடிக்க போனியே? அப்படியா முல்லை?…” என அவளிடம் கேட்க ஞானம் மேவாயில் கை வைத்துவிட்டார்.
இப்படி சின்ன விஷயத்தில் கூட இத்தனை கண்டிப்பு காட்டுகிறாரே, அமைதி, நறுக்கென்று நான்கு பேச்சு என நினைத்திருந்தவர் கூடுதலாக சரியான கறார் பேர்வழி என்றும் நினைத்துக்கொண்டார் மருமகனை.
“பால்ஸ் பெய்ன் வந்தாலும் அவாய்ட் பண்ண வேண்டாம். எதுக்கும் டாக்டர்கிட்ட உடனே போய் பாருங்க. எனக்கும் இன்பார்ம் பண்ணிடுங்க…” என்று அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவரையும் தலையால் தண்ணீர் குடிக்க வைத்தான்.
கணவனின் அக்கறையும், மருத்துவனின் அறிவுரையும் என்று குடும்பமே கலங்கி நின்றது அவன் சொல்லிக்கொண்டிருந்த ஒவ்வொன்றிற்கும்.
“இதென்ன இம்புட்டு சொல்றாரு? இத்தன வருஷ பேச்சையும் ஒத்த நாளுல கொட்டிக்கிட்டிருக்காரே? இங்க என்ன யாருக்குமே புள்ளை பொறக்கலையா?…” என ஆதங்கத்தில் ஞானம் முணுமுணுத்தேவிட்டார்.
“என்கிட்ட ஏதாவது கேட்கனுமா அத்தை?…” என்று ஞானத்தின் மெல்லிய சத்தத்தில் அர்னவ் திரும்பி கேட்டுவிட திடுக்கிட்டு திரும்பியவர்,
“இல்லைங்கய்யா இல்லை…” என்று அப்படியே அடங்கி போனார் ஞானம்.
“ஹ்ம்ம், கேட்டுக்கோங்க மதினி, இம்புட்டு பக்குவம் சொல்ற மனுஷன்கிட்ட உங்க சம்சாரத்த விட்டுட்டு போங்கன்னு சொல்ல முடியுமா?…” உஷாவின் தாய் கேலி பேச,
“ம்க்கும், நான் எம்மவளை தான சொன்னேன்? அவருக்கு பொண்டாட்டினா எனக்கு மக இல்லாம போகுமா?…” என அவர்களுக்குள் வழக்காட மீண்டும் அர்னவ் அவர்களை பார்த்தான்.
அவர்கள் என்னவோ தன்னிடம் சொல்ல வருகிறார்கள் போலும் என நினைத்தவன்,
“என்னன்னு கேளுங்க. இல்லை ஏதாவது சொல்லனுமா? எதுவானாலும் சொல்லுங்க…” என்றான் தன்மையாக.
“சரி கிளம்பறேன்…” என்றவனுக்கு கிளம்ப மட்டும் மனதே இல்லை.
“இதோட எத்தனை தடவை சொல்லிட்டீங்க நீங்க…” முல்லை கிண்டலாக சொல்ல மற்றவர்களை வைத்துக்கொண்டு வேறு எதுவும் பேச முடியாமல் மனைவியை பரிதவிப்புடன் பார்த்துக்கொண்டு நின்றான்.
“என்னங்க, பைக்கை எடுங்க. இந்தாங்க சாவி. ஆத்மி நீயும் மாமாவை பஸ்க்கு அனுப்ப போறியா?…” என்ற உஷா தன் தாய்க்கும் கண்ணை காட்ட,
“ஆமாமா, வாங்க வாசலுக்கு போவோம்…” ஞானத்தை இழுத்துக்கொண்டு செல்ல வீடே காலியானது அவர்கள் இருவரை தவிர்த்து.
அடுத்த நொடி அர்னவ்வின் அணைப்பிற்குள் முல்லை பொதிந்திருக்க அத்தனை மென்மையுடன் அணைத்திருந்தவன் முத்தங்கள் மட்டும் முல்லையின் முகத்தில் துளி வன்மையுடன் புதைந்தது.
“இருந்துப்பியாடா முல்லை?…” என்றவன் கேள்வியில் அதுவரை தலைதூக்காத தவிப்பு முல்லையை மொத்தமாய் தாக்க கணவனை சுற்றியிருந்த அவள் கரங்கள் இறுகியது.
“கூட ரெண்டுநாள் இருங்களேன்…” என்றவளின் குரல் கூட அவனை எட்டவில்லை.
“பத்திரம்டா, நடக்கும் போது உக்காரும் போது ரொம்ப கவனம். நல்லா சாப்பிடனும். புரியுதா?…” என்று பேசிக்கொண்டே இருந்தவன் விழிகள் கடிகாரத்தையும் தொட்டு தொட்டு மீண்டது.
“சீக்கிரம் வரேன். இடையில வீக் லீவ்ல வரேன்…” என்று சொல்லியவன் அவளை விடுவித்து கிளம்பினான்.
வாசல் வரை அவனின் கை பிடித்து வெளியே வந்தவள் தன் அண்ணன் தயாராக பைக்கை திருப்பி இருக்கவும் அதில் சென்று ஏறிகொண்டான் அர்னவ்.
“டேக் கேர்…” என்று சொல்லி செல்ல அத்தனைபேரும் தங்களுக்குள் முணுமுணுத்தனர்.
“என்ன ஞானம் உம்மவளை விட்டு போவமாட்டாம போறாரு உன் மருமவன். நல்லாத்தான் பொழைக்காக. இப்பத்தான் உனக்கும் நிம்மதி…” என பக்கத்திருப்போர் சொல்ல,
“ஆமாமா, பார்த்தாச்சுல. எல்லாருக்கும் ராவுக்கு கண்ணடைஞ்சிருமே…” என்ற உஷா,
“உள்ள வாங்க எல்லாரும்…” என்று சொல்லி திருஷ்டி சுற்றி போட்டாள்.
எட்டாம் மாதம் ஒரு செக்கப் இருக்க அருகிருக்கும் மருத்துவமனை சென்றிருக்க அர்னவ் இடைப்பட்ட நாளில் ஒருநாள் வந்துவிட்டான்.
வந்து பார்த்துவிட்டு தானும் மனைவியை கவனித்துவிட்டு தான் சென்றிருந்தான். அன்னக்கிளி அதற்குள் மூன்று முறை வந்து மருமகளை பார்த்திருந்தார்.
பிள்ளை பிறக்கும் தேதியை ஒட்டி தான் வந்துவிடுவதாக அருந்ததியும் சொல்லியிருக்க முல்லையின் குடும்பத்தை தாங்க இன்னொரு குடும்பம்.
மணிமாறனின் வீட்டினருக்கு இதில் அத்தனை பொறாமை. தன் மகள் வாழவேண்டிய வாழ்க்கை என்ற எண்ணம் அவர்களை விட்டு செல்லவில்லை.
இதில் மகள் வேறு திருமணம் என்றாலே வாயை திறக்கவிடுவதில்லை என்ற கோபமும் முல்லையின் குடும்பத்தினரை பார்க்கும் நேரங்களில் எல்லாம் மிக மோசமாகவே வெளிப்படும்.
எல்லாவற்றிற்கும் உட்சமாக அவர் பேசியிருந்ததில் முல்லையின் தாய் ஞானம் உயிர்வரை துடித்து போனார்.
“என் காதுபடவே எம்மவளை கண்ணீர் சிந்த விட்ட உம்மவ சுவமா பெத்துருவாளான்னு கோவில்ல வச்சு கேட்கா அந்த சௌமியா அம்மா. அவளாம் பொம்பளையா உஷா?…” என கேவி கேவி அத்தனை அழுகை.
எங்கே முல்லைக்கு கெட்டுவிடுமோ என உஷாவிற்கு அவ்வளவு பயம். மாமியாரை சமாதானம் செய்தாள் அவள்.
“முல்லைக்கு தெரிஞ்சா மனசு கஷ்டப்படுவா த்தை. எவளோ சொல்லிட்டா பலிச்சிருமா? இங்க நல்லவங்க சொல்லுக்கே அந்த ஆண்டவன் காது குடுக்கறதில்லை. விடுங்கத்தை…” என்று தேற்றினாள்.
“பேசாம மருமகன் சொல்ற மாதிரி அங்கயே போவோம். இங்க ஒன்னு கெடக்க ஒன்னுன்னா? எனக்கு எம்மவ தான் முக்கியம்…” என்று மகளுக்கு தெரியாமல் அத்தனை அழுகை ஞானம்.
கௌஷிக் காதிற்கும் செல்லாமல் மாமியார், மருமகள் மட்டும் இதனை வைத்துக்கொண்டனர்.
அர்னவ் சொல்லியதை போல ஒன்பதாம் மாதம் ஆரம்பிக்க ஒருநாள் இருக்க டான் என்று வந்தவன் மனைவியை அழைத்துக்கொண்டு துணைக்கு ஞானத்தையும், உஷாவையும் கூட்டிக்கொண்டு பெங்களூர் வந்து சேர்ந்தான் அர்னவ்.
“விடாக்கண்டன்…” என்ற முல்லையின் பேச்சுக்களை கூட சிரிப்போடு ஏற்றவன்,
“மெடிக்கல்ல கூட இந்தமாதிரி நேரத்துல புருஷனோட தான் பொண்டாட்டி இருக்கனும்னு இருக்கு முல்லை….” என்று கள்ளப்புன்னகை புரிபவனிடம் தானாகவே நெஞ்சம் சென்று ஒட்டிக்கொள்ளும்.
பெங்களூர் சென்று சேர்ந்த மறுநாளே மருத்துவமனைக்கு அழைத்து சென்றவன் முல்லைக்கு பரிசோதனையை செய்தவன் முகத்தில் அவ்வளவு கோபம்.
“ஹீமோக்ளோபின் இவ்வளோ கம்மிய இருக்கு. என்ன தான் பண்ண ஊர்ல?…” என்று வீட்டிற்கு வந்ததும் ஆரம்பிக்க இருவரின் வாக்குவாதத்தில் முல்லையின் மனத்தாங்கல்கள் எல்லாம் வார்த்தைகளாக வெடித்து சிதறியது அர்னவ்விடம்.
“உங்களுக்கு வேணும்னா என் பொண்டாட்டியை நான் தான் பார்த்தேன்னு சொல்றது கௌரவமா இருக்கலாம். ஆனா அவங்களுக்கான உரிமையை பறிச்சிக்கிட்டு தான் இந்த கௌரவம்…” என கண்ணீருடன் நின்றவளின் பேச்சில் ஸ்தம்பித்து நின்றான் மருத்துவன்.