“இவ மறந்தாலும் மறந்திடுவா. அதான் உங்ககிட்ட சொல்றேன்…” என்று பல்லை கடித்துக்கொண்டு அர்னவ் புனிதாவின் முன்பே சொல்லவுமே முல்லைக்கு முணுக்கென்று கோபம் வந்தது.
அங்கே வைத்து ஒன்றும் பேசமுடியவில்லை என்பதால் அடக்கிக்கொண்டு இருந்தாள் முல்லை.
அன்னக்கிளியும் பெரிதாய் எதுவும் கேட்டுக்கொள்ளாமல் கிளம்பிவிட்டார் மருமகளுடன்.
வீட்டுக்கு வரவுமே ஞானமும், உஷாவும் கேட்க அவர்களிடமும் இதனை அன்னக்கிளி சொல்ல,
“ரத்தம் கம்மியா இருக்கா?…” என அவர் திகைத்து பார்க்க,
“ஆமா, அதுக்கு தான் ஊசி போட்டிருக்கான். ஒத்தனம் குடுக்க சொன்னான், மறந்துட்டேன் பாருங்க….” என அன்னக்கிளி வெந்நீர் வைக்க உள்ளே செல்ல உஷா பின்னே சென்றாள்.
“என்னாச்சும்மா வேற எதுவும் பிரச்சனை இல்லையே? முல்லையோட முகமே சரியில்லை….” உஷா கேட்க,
“எனக்கு தெரியலை உஷா. இந்த பையன் எதுவும் சொல்லமாட்டேன்றான். வேற டாக்டரா இருந்தா கேட்டு தெரிஞ்சுக்கலாம். இல்லை அவங்களே இப்படின்னு வெளிப்படையா சொல்லிருவாங்க. இவனே பார்க்கறதால வாயை திறப்பேனான்னு இருக்கானே?…”
அன்னக்கிளி புலம்பிக்கொண்டே வெந்நீரை வைத்து எடுத்து வந்தார் ஒரு குட்டி டவலுடன்.
“உள்ள வா முல்லை….” என்றழைக்க,
“என்கிட்ட குடுங்கம்மா நான் வச்சுவிடறேன்…” என்று உஷா வாங்கிக்கொண்டாள்.
“நானும் இருக்கேன். வா…” என்றதும் ஞானத்தை சமையலை பார்க்க சொல்லிவிட்டு உஷாவும், அன்னக்கிளியும் சென்றனர்.
“நேரத்துக்கு மருந்து, மாத்திரை, ஆகாரம் எல்லாம் சரியா தான் குடுக்கோம். இவ தான் சில நேரம் அடம்பிடிச்சு முடியலைன்னு சரியா சாப்பிடாம இருந்தா. இப்ப ரத்தமில்லை….” என்ற புலம்பலுடன் ஞானம் கிட்சனில் இருக்க இவர்கள் வரை கேட்டது அவரின் பேச்சு.
“ஆரம்பிச்சிட்டாங்க உங்கம்மா. ஆவுனா புலம்பறது தான். புலம்பினா மட்டும் எல்லாம் சரியா போயிரும் போல?….” என சொல்லி வெந்நீரில் டவலை அமிழ்த்தி பிழிந்து முல்லைக்கு ஒற்றி எடுத்தனர்.
“இப்ப ஓகே தானே?…” என கேட்டுவிட்டு அவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வெளியே வந்தனர் இருவரும்.
மாலை அர்னவ் வரும் பொழுது வெளியே வீட்டின் கேட் வரை முல்லை மெதுவாய் நடந்துகொண்டிருந்தாள்.
தலையில் ஸ்கார்ப், குளிருக்கு இதமாய் ஸ்வெட்டர் என பார்க்க பொம்மை போலிருந்தாள் முல்லை.
அவளை பார்த்தபடியே காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் முல்லைக்கு முறைப்பை கொடுத்துவிட்டு உள்ளே சென்றான்.
“நான் போய் டீ வைக்கறேன் அண்ணனுக்கு…” என்று உஷா சொல்ல,
“அவன் குளிச்சு முடிச்சு வர நேரமாகும். பொறு அஞ்சு நிமிஷம் போகட்டும்…” என அன்னக்கிளி நிறுத்திவிட ஞானம் அவரிடம் வந்தார்.
“இங்க பக்கத்துல கோவிலுக்கு போயிட்டு வருவோமா மதினி? மனசுக்கு சரியில்ல….” என சொல்ல,
“அப்ப நானும் வரேன். அவங்களுக்கும் கொஞ்சம் தனியா இருந்தமாதிரி இருக்கும்….” என்ற உஷா,
“முல்லை, நீ பார்த்துப்ப தானே? டீ வச்சிட்டு போறேன். அண்ணனுக்கு குடுத்திடு…” என்றாள்.
“இல்லைண்ணி, நானே வைக்கறேன். நீங்க கிளம்புங்க…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
அவர்கள் பிள்ளையுடன் கோவிலுக்கு கிளம்பவும் தலையில் கட்டியிருந்த ஸ்கார்ப்பை மட்டும் கழற்றிவிட்டு அர்னவ்விற்கு டீயை போட்டு எடுத்து சென்றாள் முல்லை.
அவனும் குளித்து முடித்து தலையை ஒரு கையால் உலர்த்தியபடி கையில் முல்லையின் ரிப்போர்ட்டை வைத்து பார்த்துக்கொண்டிருந்தான்.
முல்லை வளைகாப்பிற்கு முன் சென்ற பொழுது இருந்ததற்கும், இப்போதிற்குமான வித்தியாசங்களை பார்த்தான்.
ஹீமோக்ளோபின் மட்டுமல்லாது அவளின் உடல் எடையுமே கூட குறைந்திருந்தது.
டென்ஷனை அடக்கியபடி அதனை பார்த்துக்கொண்டிருந்தவன் நெற்றிபொட்டில் அழுத்தமான வலி.
“ப்ச்…” என்ற எரிச்சலுடன் தலையை தேக்க டீயை அவனிடம் நீட்டினாள் முல்லை.
“எடுத்துக்கோங்க…” என்றதும் நிமிர்ந்து பார்த்தவன் மௌனமாய் அதனை குடித்தான்.
அவனின் கையில் இருந்த தனது ரிப்போர்ட்டை பார்த்தவள் எடுத்து பார்த்துவிட்டு,
“ஓஹ், அவ்வளோ தானா?…” என இலகுவாய் சொல்லவும் அர்னவ் நிமிர்ந்து பார்த்தான் அவளை.
“என்ன அவ்வளோ தானாவா? உட்கார் முல்லை….” என்றவன்,
“ஊர்ல ஒழுங்கா சாப்பிட்ட தானே?…” என்று மெதுவாய் கேட்க,
“இதென்ன கேள்விங்க. நல்லா சாப்பிட்டேன். நீங்க சொன்ன மாதிரி தான் ஃபாலோ பண்ணினேன்…” என்றாள்.
“ப்ச், அப்பறம் ஏன் இப்படி? உன்னை நீ கவனிச்சுக்கவே மாட்டியா?…” என்றவன் உயர்ந்துவிட்ட குரலை முயன்று அடக்கினான்.
“ஓகே ஓகே…” என்று பாதி டீயை அப்படியே மேஜையில் வைத்துவிட்டு,
“இங்க பார். குழந்தையை சுமக்கறது நீ தான். உனக்கு தான் இன்னுமே கூடுதல் அக்கறை இருக்கனும். மத்தவங்க குடுக்கனும்னு வெய்ட் பண்ணிட்டு இல்லாம நீயே உனக்கு என்ன வேணுமோ எடுத்து செஞ்சு சாப்பிட்டிருக்கலாமே?…” என்று பொறுமையாய் கேட்க,
“என்ன சொல்ல வரீங்க நீங்க? நான் நல்லா தான் சாப்பிட்டேன். ரெஸ்ட் எடுத்தேன். எனக்கு புரியலை…” என்றாள் அவன் பேச்சின் திசையில் துணுக்குற்று.
“இங்க இருந்தவரை இப்படி ஒரு ப்ராப்ளம் இல்லையே முல்லை. இத்தனைக்கும் இங்க நாம மட்டும் தான். உன்னை நீ நல்லாவே பார்த்திருந்த. இன்பேக்ட் நான் கூட வீட்டுல இல்லை. ஆனா அங்க அத்தனை பேர் இருந்தும்?…” என்றவன் பேச்சின் சாரம்சத்தில் முல்லைக்கு கோபம் கூடியது.
“அத்தனை பேர் இருந்தும் என்னை கவனிக்கலைன்னு சொல்றீங்களா?…” என்றாள் நேரடியாக.
“ஹ்ம்ம், ஆமா. அப்படியே வச்சுக்கோ…” என்றவன்,
“உன்கிட்ட அவ்வளோ சொல்லிட்டு வந்தேன். டெய்லி கேட்கவும் செஞ்சேன். அப்படி இருந்தும்…” என்றவன் கேட்க வருவது அவளுக்கு புரிய,
“எல்லாமே சரிதான். ஆனா இதுக்கு நீங்க எப்படி மத்தவங்க கவனிக்கலைன்னு சொல்லுவீங்க…”
“கவனிச்ச லட்சணம் தான் இந்தா தெரியுதே?….” என்று சட்டென அந்த ரிப்போர்ட்ஸை எடுத்து சுவற்றில் அடித்து காண்பிக்க விக்கித்து பார்த்தாள் முல்லை.
அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து நின்றவள் அதிர்ந்த முகத்தை பார்த்தும் அத்தனை டென்ஷன் அர்னவ்விற்கு.
“இதுக்கு தான் வேண்டாம் வேண்டாம்ன்னு சொன்னேன். கேட்டியா நீ? அங்க தான் இருப்பேன்னு இருந்த. ஓகே, நீயாவது உன்னை பார்த்துக்கலாமேன்னு கேட்டா அதுக்கும் கோபம் வருதே உனக்கு?…”