“ஒரு டாக்டரா இருந்துட்டு இதை கூட யோசிக்கமாட்டீங்களா? வெய்ட் போடறதும், குறையறதும் எல்லாம் நம்ம கையிலையா இருக்கு? நான் என்னவோ வேணும்னு எதுவும் எடுத்துக்காம இருந்த மாதிரி இல்ல நீங்க பேசறீங்க? இதுல எங்க வீட்டையும் குறை சொல்றீங்க?…”
“ஆமா நம்ம கையில தான் இருக்கு. தெரியாமலா டாக்டர்ஸ் இவ்வளோ சாப்பிடுங்க. இதை எல்லாம் எடுத்துக்கோங்கன்னு எதுக்கு ரெபர் பன்றாங்க? விளையாட்டுக்கா? இல்லை பொழுது போகாமலா? டெலிவரியை தாங்கறதுக்கான பலம் உன் உடம்புக்கு தேவைன்னு தானே?…” என்ற அர்னவ்,
“நான் சொன்னதை நீ ஏன் ராங் மீனிங்ல எடுத்துக்கற? அப்படியே இருந்தாலும் நான் சொல்றது தப்பா எனக்கு படலை முல்லை…” என்றதும் அவளுக்கிருந்த அத்தனை பொறுமையும் கரைந்துவிட்டிருந்தது.
“ஆமா நீங்க தான். எவ்வளோ தான் நானும் சரி சரின்னே போக? சொல்லுங்க. உங்களுக்கு பார்க்கவா, பிறந்தவீட்டு பக்கம் பார்க்கவா? ரெண்டுபேருக்கு நடுவுல மாட்டிக்கிட்டு என்னோட அவஸ்தை…” என்றவள் முகத்தை துடைத்துக்கொண்டு,
“எவ்வளோ விட்டுகுடுத்தாங்க எங்க வீட்டுல. கொஞ்சமாச்சும் ஒரு இடத்திலையாச்சும் நீங்க இறங்கி போனீங்களா? மரியாதை குடுக்கறது, அன்பா பேசறதெல்லாம் இதுல சேர்த்தியில்லை. அவங்களுக்கான உரிமைகளை கூட நீங்க தானே தடுத்தீங்க?…”
“முல்லை நீ பேசறது எல்லாம்…” என இடையிட்ட அர்னவ்வை கையமர்த்தி நிறுத்தியவள்,
“ப்ளீஸ், நான் முடிச்சிடறேன். கல்யாணம் நடந்தது எப்படியும் இருந்தாலும் அதுக்கப்பறம் அஞ்சு மாசம் நான் ஒருத்தி இருந்தது உங்களுக்கா ஞாபகம் இருந்துச்சா? ஒவ்வொருதடவையும் நாந்தானே உங்க மனைவின்னு ஒருத்தி இருக்கேன்னு முன்னாடி வந்து நிக்கிற மாதிரி லெட்டர் போட்டேன்…”
“தீபாவளிக்கு வந்தீங்க. ரெண்டு நாள் நிம்மதியா இருந்தோமா? கிடையவே கிடையாதே? என்னை பெத்தவங்களுக்கும், கூட பொறந்தவங்களுக்கும் எனக்கு எல்லாம் வழக்கப்படி முறையா பெருமையா செய்யனும்னு எவ்வளோ ஆசை கனவுகள் இருக்கும்?…”
“ஆனா அதுக்கு எங்கையாச்சும் இடம் குடுத்தீங்களா நீங்க? கோவிச்சுக்கிட்டு கூட்டிட்டு போனவர் அப்படியே வீதியில இறக்கிவிட்டு போயாச்சு. அந்ததடவை தீபாவளி சீர்ன்னு ரெடி பண்ணி பாபநாசத்துக்கு கொண்டுவந்து தரனும்னு எதிர்பார்ப்போட இருந்தாங்க. ஆனா உங்களுக்கு உங்க கோபம் தான் பெருசு…”
“அதுக்கப்பறமும் பெங்களூர்க்கு சீர் குடுக்க வந்து அதுவும் உங்க தோது பார்த்து தான் வந்து குடுத்துட்டு போனாங்க. எந்த ஒரு முறையும் முறையா செய்ய முடியாம எவ்வளோ தவிச்சு போயிருப்பாங்க? சொந்தபந்தங்களோட எல்லாமே செய்யனும்னு நினைக்கிறது தப்பா?…”
“ஊரு ஊருன்னு யாருக்காகவோ பார்க்காதீங்கன்னு சொல்லமுடியாது உங்களால. அந்த ஊருக்கு மத்தியில தான் எல்லாரும் இருக்கோம். ஏன் உங்களுக்கு பொண்ணு பார்க்கும் போது அந்த ஊர்க்காரங்ககிட்ட விசாரிச்சு தானே நல்ல குடும்பமா, பொண்ணை கட்டலாமா வேண்டாமான்னு முடிவுக்கு வரீங்க? அப்ப மட்டும் அந்த சமுதாயம் வேணுமா?….”
“நல்லவங்களோ கெட்டவங்களோ அவங்க மத்தியில தான் இருக்கோம். அவங்களோட தான் இனி காலத்துக்கும் வாழனும். எங்கண்ணன், அண்ணனுக்கப்பறம் அவங்க வாரிசுன்னு இப்படி அங்க தான் இருக்கனும். எல்லார்கிட்டயும் பிடிக்குதோ பிடிக்காட்டியோ பேசனும், பழகனும், போய் வரனும் எல்லாம் இருக்கு…”
“இப்படி அந்த ஊருக்குள்ள இருந்திட்டு ஒத்த சொல்லு என்ன உம்மவன் உன் மகளுக்கு இதை செய்யலையான்னு கேட்டா எங்கம்மாவுக்கு எப்படி இருக்கும்? இதுவே உங்கக்காவுக்கு எதையும் செய்யாம செய்யவிடாம உங்கக்கா வீட்டுக்காரர் பார்த்துக்கிட்டா அப்பவும் உங்க உரிமையை நீங்க விட்டு தருவீங்களா?…”
“படோபமா செய்யறது மட்டும் பெருமை கிடையாது, அவங்களால முடிஞ்ச கடமையை நிறைவா செய்யறது கூட பெருமை தான். எங்க வீட்டுல என்ன செய்ய முடிஞ்சது எனக்கு? சின்ன விஷயத்தை கூட விட்டு குடுக்காம இருக்கீங்க நீங்க. இப்ப என்னன்னா அவங்க என்ன பார்த்தாங்கன்னு கேட்கறீங்க?…”
“என்னதான் தங்கமா நீங்க தாங்கினாலும் எங்கம்மாவுக்கு இங்க இருக்கறது முள்ளு மேல உக்கார்ந்திருக்கற மாதிரி தான் இருக்கும். அந்தகாலத்து மனுஷி. அவங்க ரத்தத்திலையே சில விஷயங்கள் ஊறியிருக்கும். அதை மாத்தவெல்லாம் முடியாது. உங்களுக்கு இது சாதாரணம். அவங்களுக்கு அப்படி இல்லை…”
“ஒரு வார்த்தை நீங்க நான் என் பொண்டாட்டியை கூட்டிட்டு போறேன்னு சொல்லவும் மறுக்காம சரிங்கன்னு அனுப்பறாங்களே ஏன்னு யோசிச்சிருப்பீங்களா நீங்க? நம்ம வாழ்க்கை ஆரம்பிச்ச விதம். பிரிஞ்சிருந்தது, உங்களோட பாராமுகம். இப்பவாச்சும் நல்லா இருக்காங்க. நம்மளால சங்கடம் வந்திர கூடாதுன்னு எல்லாத்தையும் அவங்க பொறுத்து போறாங்க…”
“ஊர்க்காரங்க பேச்சும், ஏச்சும் இப்பவும் இருக்கத்தான் செய்யுது. அதுக்கு சுருக்குன்னு பதில் குடுத்தாலும் மனசை தைக்காம இருக்குமா அந்த சொல்லால? எப்பவாச்சும் இதை காமிச்சிருப்பாங்களா எங்க வீட்டுல?…”
“இதுவே நாம பார்த்து கட்டிவச்சு சீர்வரிசையோட அனுப்பி வச்சு இருந்தா இன்னும் தைரியமா கேட்டிருக்கலாமேன்னு எவ்வளோ புழுங்கிருப்பாங்க. என்னை கூட வச்சு பார்த்துக்கனும்னு ஆசைப்படறது நீங்க என்னை நல்லா பார்த்துக்கமாட்டீங்கன்னு இல்லை. அவங்களோட ஆசை, தன் மகளை பார்த்துக்கனும்னு…”
“எப்படி பேசிட்டீங்க நீங்க? என் தப்பு தான். நான்தான் சரியா சாப்பிடலை. என்னால முடியலை. எனக்கு முடியலைன்னு கொஞ்சம் சலுகையா விட்டாங்க. அதுல இப்படி நடந்திருச்சு. எனக்கு நம்ம பிள்ளை மேல அக்கறை இல்லாம இல்லை…” என்றவள்,
“ஆனா ஒன்னு இந்த பிள்ளை பொம்பளை பிள்ளையா பிறந்து உங்களை மாதிரியே ஒருத்தருக்கு கட்டிவச்சு அன்னைக்கு தெரியும் உங்களுக்கு. இப்படி கொதிச்சு கொந்தளிச்சு ஒன்னும் நீங்க எனக்கு டெலிவரி பார்க்கவே வேண்டாம். நான் வேற டாக்டர்க்கிட்ட காமிச்சுக்கறேன்…”
முல்லை மனதில் இருந்தவற்றை எல்லாம் மொத்தமாய் கொட்டி கவிழ்த்துவிட்டு மூச்சுவாங்க நின்றிருக்க முகமெல்லாம் வியர்த்திருந்தது.
அவள் ஆசுவாசம் கொள்ள நேரம் கொடுப்பதை போல அமைதியாக பார்த்திருந்தவன்,
“முடிஞ்சதா….” என்றபடி சாவகாசமாக இருக்கையில் சென்று அமர்ந்தான்.
“ஓகே, இங்க வா. உனக்கு பிபி செக் பண்ணுவோம்…” என்றான் கையில் அதனை எடுத்து வைத்துக்கொண்டே.
“நீங்களா டெலிவரி பார்க்க போறீங்க எனக்கு? நான் தான் வேற டாக்டர் பார்க்க போறேன்னு சொன்னேன்ல. போதும் சாமி. என்னால முடியலை….”
அத்தனை நேரம் பேசியதற்கு துளியளவும் கோபமில்லை என்பது அவன் முகத்திலேயே தெரிய முல்லை கோபம் குறைந்து இப்போது அவனை பாவமாய் பார்த்து நின்றாள்.
“என்ன பார்வை? கிட்ட வான்னு சொல்றேன்ல முல்லை….”
“ஒன்னும் வேண்டாம். நான் தான்….” என்றவள் முடிக்கும் முன்,
“உன்னையே பார்த்துட்டேன். உனக்கு டெலிவரி பார்க்க என்னவாம்? அப்படியெல்லாம் வேற யாரையும் பார்க்க அலோவ் பண்ணமாட்டேன்…” என்றான் புருவம் உயர்த்தி நமுட்டு சிரிப்புடன்.
“மூச், நீங்க டாக்டர். நான் என்ன சொல்றேன். நீங்க என்ன பேசறீங்க?…” என அதட்டினாள் சிவந்த முகத்துடன்.
“உனக்கு புருஷன் தானே?…” அசால்ட்டாக பதில் வர இதற்கு மேல் இவனிடம் என்ன பேச என தன் வயிற்றை பிடித்துக்கொண்டு அறையின் வாசல் பக்கம் நடக்க,
“உன்னை கூப்பிட்டேன் முல்லை. இங்க வா பிபி செக் பண்ணுவோம்…” என்று மீண்டும் அழைத்தான்.
“என்னால அங்க வரை நடந்து வர முடியாது. நீங்க வேணா வாங்க…” என்றவள் கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.
“அதெல்லாம் முடியும். எழுந்து வா. இல்லன்னா நான் வந்து உன்னை இங்க வரை கூட்டிட்டு வரேன். இன்னைக்கு எவ்வளோ நேரம் வெளில நடந்த நீ?…” என கேட்டுக்கொண்டே அவளருகே வந்து நின்றான்.
“அராஜகம் டாக்டர்….” அவன் வரவும் அவனிடம் முறைத்து எழுந்து நிற்க,
“வச்சுக்கோ….” என்று அவளை அழைத்துக்கொண்டு சேரில் அமர வைத்து பிபியை பரிசோதிக்க இன்னும் மூச்சு வாங்கியபடி இருந்தாள் முல்லை.
“இன்னும் டென்ஷன் குறையலையா? காம் டவுன் முல்லை…” என அவளின் முதுகை நீவி விட அமர்ந்தவாக்கிலேயே அவனை கட்டிக்கொண்டாள் முல்லை.
“ரொம்ப பேசிட்டேன்…” என்று விசும்பலுடன் சொல்ல,
“ஓகே, இப்ப என்ன? என்னோட தப்பை நீ சுட்டி காமிச்சிருக்க. உண்மையை சொல்லியிருக்க. இவ்வளோ நாள் சொல்லாம் உனக்குள்ள வச்சு எவ்வளோ ஸ்ட்ரெஸ்?…” என்றான் இலகுவாக.
“கோவமில்லையா உங்களுக்கு?…” என அண்ணார்ந்து பார்த்து கேட்டவள் முகத்தை பற்றியவன்,
“கோவம் தான். இதை முன்னாடியே சொல்லியிருக்கனும் நீ. இந்தமாதிரி நேரத்துல இப்படி உனக்குள்ள அழுத்தமா வச்சுக்கிட்டா உன் ஹெல்த் என்னாகறது?…”
“குழந்தை நல்லபடியா பிறக்கும். அதான் நீங்க இருக்கீங்களே? பார்த்துக்கமாட்டீங்களா?…” என கண் சிமிட்டி சொல்லவும் அவள் கன்னத்தை பிடித்து நிமிண்டியவன்,
“எனக்கு முதல்ல நீ முக்கியம் முல்லை. அதுக்கப்பறம் உனக்குள்ள இருக்கற குழந்தை. புரியுதா?…” என்று சொல்லும் பொழுதே அவன் முகத்தில் அலைப்புருதல்.
“ஒன்னும் பிரச்சனை இல்லையே?…” என்ற முல்லை அவன் முகத்தில் வந்துபோன இந்த நொடிநேர மாற்றத்தில் துணுக்குற்றாள்.
“இதையெல்லாம் யோசிக்காத. பிரச்சனை எதுவும் இல்லை. எல்லாமே பர்பெக்ட்…” என்றவன் அவளை எழுப்பி அணைத்துக்கொண்டான்.
“உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும் முல்லை. இதை எப்பவும் ஞாபகம் வச்சுக்கோ…” என்று சீரியஸாக அர்னவ் சொல்ல,