“ஆத்மி நல்லா தூங்கறா, தூக்கவேண்டாம். இருக்கட்டும். நானுமே முல்லையை எழுப்பலை. கொஞ்ச நேரமாகட்டுமே…” என்று இன்னொரு ஒற்றை சோபாவில் அமர்ந்துகொண்டவன் மனைவியின் முகம் பார்த்தான்.
“குளிக்க வச்சீங்களா?…” என்று அன்னக்கிளியிடம் கேட்க,
“இடுப்புக்கு தான் வெந்நீர் ஊத்தினோம் ப்பா. ஆனா மேலெல்லாம் அசதியா இருக்குன்னு முல்லை தான் கேட்டா…” எங்கே மகன் எதுவும் சொல்வானோ என்று அன்னக்கிளி சொல்ல அர்னவ் தலையை மட்டும் ஆட்டினான்.
கஸ்தூரி மஞ்சள் பூசி மணக்க குளித்துவிட்டு சாம்பராணி புகையில் இருந்திருப்பாள் என வாசனையே காண்பித்தது அர்னவ்விற்கு.
முல்லைக்கு இத்தனை சீக்கிரம் என்ன உறக்கம் என இப்போது புரிந்து போனது அவனுக்கு.
“ம்மா, இனிமே இந்த டைம்ல குளிக்க வைக்க வேண்டாம். கொஞ்சம் சீக்கிரமே வெந்நீர் விடுங்க. கிளைமேட் வேற சொல்லிக்கும்படி இல்லை. அதான்…”
“சரிப்பா…” என்று அன்னக்கிளி சொல்லிவிட்டு ஞானத்தை கூப்பிட சென்றார்.
இருவருமாக பேசியபடி உள்ளே வர அப்போது தான் அவரும் இன்னும் உண்ணவில்லை என்பதே தெரிந்தது அர்னவ்விற்கு.
“ஏன் அத்தை நேரத்துக்கு சாப்பிட வேண்டாமா? இனிமே லேட் பண்ணாம சீக்கிரம் சாப்பிடுங்க…” என அழைத்து சொல்லிவிட,
“சரிங்க தம்பி…” அவ்வளோ தான். அன்னக்கிளியுடன் ஓடியேவிட்டார் ஞானம்.
மேலும் அரைமணி நேரம் கடந்திருக்க மாத்திரை வேறு போடவேண்டுமே என அர்னவ் எழுப்ப நினைத்து முல்லையின் கையை தொட்டதுமே அசைந்து நிமிர்ந்தாள் முல்லை.
“வந்துட்டீங்களா?….” என அவனை பார்த்து கேட்க,
“நீ பார்க்கலையா முல்லை? அப்பவே வந்துட்டேன்…” என்றவன் நீரை கொடுத்து மாத்திரைகளை நீட்ட,
“இப்பதான் சாப்பிட்டேன். கொஞ்ச நேரம்…” என சொல்ல அர்னவ்விடம் பதிலில்லை.
கண்ணை நன்றாக தேய்த்துவிட்டு உறக்கத்தை விரட்டியவள் கணவனை பார்க்க அவன் மாத்திரையை நீட்டியபடியே அமர்ந்திருந்தான்.
“ப்ச், படுத்தறீங்க நீங்க. நைட்டும் தூங்க முடியலை. தூக்கம் வர நேரம் தூங்க விடலை…” என சொல்லி முணங்கிக்கொண்டே மாத்திரையை போட்டவள் வேகமாய் எழுந்த நொடி சுருக்கென்ற வலி.
“ம்மா…” என அலறலுடன் அமர்ந்துவிட அர்னவ் பிடித்துக்கொண்டான்.
“என்ன பன்ற முல்லை? மெதுவா எழுந்துக்கனும்னு எத்தனைதடவை சொல்லிருக்கேன் உன்கிட்ட?…” என்று அதட்டவும் கண்ணில் நீர் நிறைந்துவிட்டது.
“இல்ல பாத்ரூம் போகனும். அதான் எழுந்துட்டேன்…” என்றவள் முகம் அசூயையை காண்பிக்க,
“ஓகே வா…” என்று அவளின் கை பிடித்து எழுப்பினான்.
“நானே எழுந்துக்கறேன் இருங்க….” என்று மெல்ல எழுந்தவள் கால்கள் நடுங்கியது.
உதட்டை மடித்து கடித்துக்கொண்டவள் கண்கள் மீண்டும் கலங்க ஒருவிதமாய் நடந்தாள் முல்லை.
“என்னாச்சு முல்லை, என்ன பண்ணுது?…” என்றான் அவளின் முகமாருதல்களை கவனித்து.
“ரொம்ப நேரமா வாஷ்ரூம் போகாம கன்ட்ரோல் பண்ணிட்டேன் போல?…” என்றவள் பாத்ரூம் செல்ல அர்னவ்வும் உடன் சென்றான்.
“நான் போய்ட்டு வரேன்…” என்ற பொழுதே வலி அதிகமாக,
“வலிக்குதுங்க…” என்றபடி அவளின் முதுகையும் கையையும் பிடித்து நெருக்கியதும் கண்டுகொண்டான் அர்னவ்.
இது பிள்ளை வலி என்று புரிந்ததும் முல்லையை அப்படியே கைகளில் ஏந்தியவன் வெளியே செல்ல,
“பாத்ரூம் போகனும்ங்க…” என்றாள் வலியை அடக்கிக்கொண்டே.
“ஹாஸ்பிட்டல் போய்டுவோம் முல்லை. ஆனா கன்ட்ரோல் பண்ணாதம்மா…” என்றபடி வெளியே தூக்கி வர அன்னக்கிளியும், ஞானமும் ஓடி வந்தனர்.
“என்னப்பா சபரி வலி கண்டிருச்சா?…” என்றதும்,
“ஆமாம்மா, டக்குன்னு கிளம்பி வாங்க. நான் காரை ஸ்டார்ட் பன்றேன்…” என்று வெளியே சென்றான்.
அப்போது தான் உஷா மகளை உறங்க வைக்க உள்ளே சென்றிருக்க அவளை அழைத்து வீட்டை பூட்டிக்கொள்ளும்படி சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
வாசலில் அதற்குள் அர்னவ் ஹார்ன் அடிக்க ஓடிவந்து அமர்ந்ததும் காரை எடுக்க இரவு நேரம் சாலை நெரிசலில் அத்தனை டென்ஷன் அர்னவ்விற்கு.
முல்லை வேறு வலியில் துடித்துக்கொண்டிருக்க மனது ஒருநிலையில் இல்லை அவனுக்கு.
ஆழ்ந்த மூச்செடுப்புக்களில் தன்னை நிதானப்படுத்த முயன்றான் அர்னவ். இதற்கிடையில் மருத்துவமனைக்கு அழைத்து விவரம் சொல்லி எல்லாவற்றையும் தயார் நிலையில் வைக்க கேட்டுக்கொண்டான்.
ஒருவழியாக மருத்துவமனை சென்று சேர புனிதா, லக்ஷ்மி என அனைவருமே காத்திருந்தனர் அவர்களுக்காக.
உடனடியாக முல்லை அனுமதிக்கப்பட அர்னவ் தன்னறைக்கு சென்று உடைமாற்றி வந்துவிட்டான் அந்த நேரமே.
எப்போதும் இருப்பதை விட அவன் முகத்தில் பரபரப்பும், கலக்கமும் மிதமிஞ்சியே இருந்தது.
“சபரி…” என்று வந்த தாயின் தோளை தட்டிக்கொடுத்தவன் படபடக்கும் நெஞ்சத்துடன் உள்ளே நுழைந்தான்.
“பெய்ன் அதிகமாகிருக்கு டாக்டர்…” என்று சொல்லிய லக்ஷ்மிக்கு தலையசைத்தவன் மனைவியின் அருகே வந்தான்.
“முல்லை….” என்றதும் கண்ணீருடன் அவனின் முகம் பார்த்தவள் முகம் வலியில் சுருங்கியது.
“காம்டவுன், எல்லாம் சரியாகிடும். இப்ப பேபியை பார்த்திடலாம்…” என்றபடி அவளை ஆற்றுப்படுத்தி தனியே சென்றான்.
“பேபி பொசிஷன் நார்மல் இல்லை டாக்டர். தொப்புள்கொடி கழுத்தை சுத்தியிருக்கு…” அவனுடன் வந்த லக்ஷ்மி சொல்ல,
“ஹ்ம்ம்…” என்றுமட்டுமே சொல்லியவன் மறைவிலிருந்து வெளியே வந்தான்.
லக்ஷ்மி சொல்லியது முல்லைக்கும் கேட்டிருக்கும் என்பது முகத்தில் தெரிந்த பதற்றத்திலும், பயத்திலுமே அவனுக்கு புலப்பட,
“என் குழந்தை…” என்று அரற்றியவள் அர்னவ்வின் கையை பிடித்தாள்.
“நத்திங்டா முல்லை…” என மெல்லிய புன்னகையுடன் முல்லையின் கன்னத்தில் லேசாய் தட்டியவன்,
“நீ கோஆப்ரேட் பண்ணு. நார்மல்க்கும் சான்ஸ் இருக்கு…” என்னும் பொழுதே முல்லையின் ரத்த அழுத்தம் கூட ஆரம்பிக்க,
“முல்லை, இங்க பாரு. ரிலாக்ஸ். முல்லை. நான் சொல்றதை கேளும்மா. முல்லை லிசன்….” என்று அவன் கன்னத்தை தட்ட தட்ட மயக்கத்திற்கு சென்றாள் முல்லை.
“புனிதா சி.செஷன் ரெடி பண்ணுங்க. இமீடியட்லி…” என சொல்லிவிட்டு முல்லையை பரிசோதித்தான்.
பதட்டத்தில் வந்த மயக்கம் தான் என்றதும் ஆசுவாசமடைந்தவன் அதற்கான ஏற்பாடுகளை கவனித்துவிட்டு லக்ஷ்மி நீட்டிய படிவத்தில் கையெழுத்தையும் போட்டுவிட்டான்.
வெளியே தாயிடமும், மாமியாரிடமும் சொல்லவேண்டுமே. அவர்களிடம் பேச வந்தவன் பேசும் முன்,
“முல்லை எப்படி இருக்காப்பா?…” என அன்னக்கிளி கேட்க,
“என் பொண்ணு எப்படி இருக்கா?…” என்றார் ஞானம்.
“முல்லை நல்லா இருக்கா. எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா நார்மல் டெலிவரி இல்லை…” என்றவன் முகத்தை பார்த்த அன்னக்கிளி,
“ஏன் ப்பா? வலி வந்திருக்கே?…” என்றார்.
“வலி வந்திருக்கு. ஆனா நார்மல் பண்ண வாய்ப்பில்லைம்மா. உங்ககிட்ட சொல்ல தான் வந்தேன். ஆப்பரேஷன் பண்ணனும்…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
அன்னக்கிளி உடனே உஷாவிற்கு அழைத்து சொல்ல அதற்கு முன்பே உஷா விஷயத்தை கௌஷிக்கிற்கு அழைத்து சொல்லியிருக்க அவன் புறப்பட்டிருந்தான் திண்டுக்கலில் இருந்து.