அடுத்த வாரம் தான் விடுமுறை எடுத்து வருவதாக இருக்க அன்றும் விடுமுறையில் இருந்தவன் கிளம்பிவிட்டான்.
ஆப்பரேஷன் தியேட்டரில் அர்னவ் அடுத்த சில மணித்துளிகளில் முல்லையின் அரும்பை கையிலேந்திய தருணம் பொக்கிஷங்களின் உறைவிடம்.
“வெல்கம் பேபி…” என்றான் அர்னவ் தன் மகவை உச்சி முகர்ந்து.
“கங்க்ராட்ஸ் டாக்டர். உங்களுக்கு பொண்ணு பிறந்திருக்கா…” என லக்ஷ்மி சொல்ல,
கையிலிருந்த குழந்தை கண்ணை சிமிட்டி சிமிட்டி திறக்க முயல சிரிப்புடன் பார்த்திருந்தவன்,
“ஓகே பேபி, அப்பா வேலையை முடிச்சிட்டு அம்மாவை எழுப்பிட்டு வருவேனாம்…” என்று கொஞ்சிவிட்டு பிள்ளையை புனிதாவின் கையில் தந்தான்.
அகமெங்கும் புன்னகை நிறைய மனைவியின் முகம் பார்த்துவிட்டு வேலையில் கவனமானான்.
அந்த அறையிலிருந்து வெளியே வந்தவன் குழந்தையை தாயிடம் காண்பிக்க பாட்டிகள் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை.
“பொண்ணு அப்படியே அவ அம்மாவை உரிச்சு வச்சிருக்கா…” என்று மாறி மாறி கொஞ்சிக்கொள்ள,
“போதும் முதல்ல குழந்தையை குடுங்க…” என்று வாங்கிகொண்டு உள்ளே செல்ல போக,
“சபரி முல்லை?…” அன்னக்கிளி நிறுத்தினார்.
“மயக்கமா இருக்காம்மா. ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடுவோம். பண்ணவும் வந்து பாருங்க…” என்றவன்,
“அப்பாவுக்கு சொல்லியாச்சா?…” என்றான்.
“அப்பவே சொல்லிட்டேன். கிளம்பி வந்திட்டிருக்காங்க. பஸ் இருந்துச்சாம் ரெடியா. நான் போன் போடவும் ட்ராவல்ஸ்க்கு போன் போட்டு சொல்லி வெய்ட் பண்ண சொல்லி கிளம்பிட்டாங்களாம். கூட வனிதாவும் வரா…” என்றார்.
“ஹ்ம்ம், ஓகே…” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டான் அர்னவ்.
முல்லை அறைக்கு மாற்றப்படவும் அன்னக்கிளியும், ஞானமும் வந்து பார்க்க இன்னும் மயக்கம் தெளியவில்லை முல்லைக்கு.
அருந்ததியும் வந்து சேர்ந்திருக்க உஷாவை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்தனர் நள்ளிரவில்.
குழந்தையை மாற்றி மாற்றி பார்த்து கொஞ்சிக்கொண்டிருக்க அர்னவ் ஆசுவாசமாய் வந்தமர்ந்தான் இரண்டு மணிக்கு மேல்.
கண்கள் எல்லாம் சிவந்து போய் முகத்தில் அத்தனை சோர்வு கொட்டிக்கிடந்தது.
கண்ணாடியை கழற்றிவிட்டு சில நொடிகள் கண்ணை மூடி அண்ணார்ந்து பார்த்து சாய்ந்திருந்தவன் கையில் குழந்தையை கொண்டுவந்து வைத்தாள் அருந்ததி.
“ஹேய்…” என்றபடி நன்றாக அமர்ந்து மகளை பிடித்துக்கொண்டான் அர்னவ்.
“பிள்ளையை பார்க்காம என்னடா கனவு கண்டுட்டு இருக்க?…” என்று கிண்டல் பேச சிரித்தபடி கண்ணாடியை போட்டுக்கொண்டவன் மகளை வாகாய் பிடித்துக்கொண்டான்.
“அப்பாட்ட வந்துட்டீங்களா குட்டிம்மா, அப்பா சொல்லுங்க…” என்று சொல்லி சிரிக்க அன்னக்கிளிக்கு சிரிப்பு தாங்கவில்லை.
“இவனை சரிக்கட்ட விரட்ட ஒரு ஆள் வந்தாச்சு வசமா…” என்று சொல்ல,
“என் பொண்ணு என்னை விரட்டுவாளா? பார்ப்போம்…” என்று அர்னவ்வும் சொல்ல ஞானம் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.
“இனி லீவ் எடுத்துக்கலாமே அர்னவ்?…” என அருந்ததி கேட்க,
“ஹ்ம்ம், இல்லைக்கா. இப்ப வேண்டாம். இந்த ஒன்வீக் முல்லை ஹாஸ்பிட்டல்ல தானே இருப்பா. நானும் பார்த்துப்பேன். டிஸ்சார்ஜ் பண்ணிட்டு லீவ் போட்டுக்கறேன்…” என்றான்.
“நல்லா கால்குலேட் பன்றடா…” என்றவன் பதிலுக்கு புன்னகை மட்டுமே தந்தான்.
முல்லை கண் விழிக்கையில் மூன்றுமணியாகி இருந்தது. அர்னவ்வே பார்த்துவிட்டு பிள்ளையை தூக்கி தந்து சகலமும் அவனாகவே இருந்தான்.
மற்றவர்கள் வெளியில் சென்று அமர அர்னவ்வும் முல்லையும் மாத்திரம் குழந்தையுடன்.
முகத்தில் கண்ணீரும், சிரிப்பும், சிறு கலக்கமும், விலகாத பயமுமாய் அர்னவ்வை ஏறிட்டவள்,
“ஏன் என்கிட்டே சொல்லலை? இதை மனசுல வச்சிட்டு தான் இத்தனை நாள் இருந்தீங்களா?…” என்று தேம்ப,
“ஆமா, கொஞ்சம் பயம் தான். ஒருமாதிரி உதறல்…” என சொல்லி சிரித்தான்.
“பெரிய டாக்டர்….” கிண்டல் பேசினாள் முல்லை.
“அதிருக்கட்டும், இந்த மாலை சுத்தி பிறந்ததை வீட்டுல சொல்லவேண்டாம் முல்லை…”
“ஏன்? என்னாச்சு?…”
“என்ன என்னாச்சு? குழந்தைங்களோட பொசிஷன் மாறும் போது இந்தமாதிரி நடக்கறது தான். ஆனா மாலை சுத்தி பிறந்தா தாய்மாமனுக்கு ஆகாதுன்னு ஒரு வழக்கு இருக்கே? தெரிஞ்சா சங்கடப்படுவாங்க. கூடவே என்ன நடக்கும்ன்னு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உனக்கு. அதான்…” என்றதும் சரி என்றுவிட்டாள் முல்லை.
“ஹ்ம்ம், அப்பறம் பேபிக்கு என்ன பேர் வைக்கலாம்? ஏதாவது யோசனை?…”