“நான் அன்னைக்கு பேசினதால தான் இப்படி இங்க விட்டிருக்கீங்களா?…” என விசும்பிக்கொண்டே கேட்க,
“ப்ச், என்ன இது? இப்ப ஏன் அழற? கண்ணை துடை முதல்ல…” என்று அதட்டினான்.
“பாப்பா உங்களை ரொம்ப மிஸ் பன்றா…” விசும்பிக்கொண்டே முகத்தை துடைத்துவிட்டு சொல்ல அர்னவ் முகத்தில் சிறு புன்னகை.
“ப்ச், சரி. நானும் தான். மிஸ் பன்றேன் ரொம்பவே தேடறேன். போதுமா?…” என்று சொல்ல அப்போதும் அவன் அமைதியாக இருக்க,
“நான் இவ்வளோ பேசறேன். கேட்டுட்டே இருக்கீங்க….” என்றாள் இப்போது கோபமாய்.
“வேற என்ன செய்ய சொல்ற முல்லை?…” என அவன் வாயை திறக்க,
“என்னையும் பாப்பாவையும் கூட்டிட்டு போங்க…” என்று சொல்லிவிட மீண்டும் சிரித்தான்.
“நானா தான் சொல்றேன். இப்பவும் முடியாதுன்னா…” என்றவள் திருதிருவென்று முழித்தாள்.
“முடியாதுன்னா அங்கயே இருந்திருவியா?…” என கிண்டலுடன் கேட்க,
“அதுக்கா என்னை கல்யாணம் பண்ணுனீங்க?…” என்று மல்லுக்கு நின்றாள் முல்லை.
“ஹேய் முல்லை…” அவளின் கோபத்தில் அர்னவ் சிரிக்க,
“உங்களுக்கு எங்களை தேடவே இல்லை. எங்களை நினைக்கவே இல்லை….” என ஒருபாடு பேச,
“சரி, சரி, சரி அம்மாக்கிட்ட பேசறேன்…” என்றான் அர்னவ்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லையே…” என்ற கேள்விக்கு,
“அதை அங்க இருந்து கேட்டா எல்லாம் சொல்லமுடியாது. இங்க வரவும் சொல்றேன்…” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.
அடுத்த சில நிமிடங்களில் அன்னக்கிளி அந்த வாரமே அழைத்து செல்வதை பற்றி பேச ஞானம் தான் திகைத்து போயிருந்தார்.
“என்னத்தை, மூணாம் மாசம் அனுப்பறது முறை தானே?…” என்று உஷா கேட்க,
“அதுக்கில்ல. முல்லை பச்ச உடம்புக்காரி. மருமகன் வேற அவ மேல பிரியமா இருக்காரு. இப்பதான் பிள்ளை பிறந்திருக்கு…” என்று ஏதேதோ சொல்லி மழுப்பிக்கொண்டே இருக்க,
“எல்லாம் புரியுது அத்தை. நான் பக்குவமா முல்லைக்கிட்ட சொல்லிடறேன்…” என்று சொல்ல விஷயம் முல்லையிடமிருந்து அர்னவ்விற்கு வந்தது.
“சும்மா இருந்தவனை உசுப்பிவிட்டுட்டு இப்ப இப்படி பேசினா என்ன அர்த்தம் முல்லை?…” என்றவன்,
“அடுத்து பேபி வேணுமா, எப்போ, எப்படின்னு எனக்கு தெரியும். இன்னும் நல்லா சொல்லிருவேன். போன்லன்னு பேசாம இருக்கேன். நான் அம்மாட்ட பேசிட்டேன். நீ ரெடியா இரு. டாட்…” என்று முடித்துவிட்டான் அர்னவ்.
“அதான இவரை நிமிர்த்த முடியுமா? கோபமும், இவரும் வேறையாக்கும்?…” என்று அங்கலாய்த்து கொண்டாள் முல்லை.
ஒருவழியாக அந்த வாரத்தில் நல்லநாள் அடுத்த நான்காம் நாளே இருக்க அன்று அனுப்புவதாக முடிவாகி அழைக்க வந்தும்விட்டனர்.
தாய்மாமனின் சீர்வரிசையுடன் முல்லையும், முல்லையின் அரும்பும் அர்னவ்வுடன் அவர்கள் கூட்டில் தஞ்சமடைந்தது.
சில வருடங்களுக்கு பின்…
பாபநாசத்தில் அர்னவ்வின் வீட்டிற்கு வந்திருந்தனர். வனிதாவின் மகள் கீதாவிற்கு திருமணம் என்று குடும்பத்துடன் கலந்துகொள்ள வந்திருந்தனர்.
“எவ்வளோ நேரம் குளிப்பீங்க? போதும், சளி பிடிக்க போகுது…” என்று மடியில் டவலை வைத்துக்கொண்டு படித்துறையில் முல்லை அமர்ந்திருந்தாள்.
ஆற்றில் அர்னவ்வும், நான்கு வயது ஆசை மகள் அரும்பும் குளித்துக்கொண்டிருக்க முல்லைக்கு மாலை நேரம் இதென்ன விளையாட்டு என்று அத்தனை கோபம்.
“ம்மா டூ மினிட்ஸ்…” என்று அரும்பு தாயிடம் சொல்ல,
“உதை படுவ ராஸ்கல். வா முதல்ல…” என்று மகளை அதட்டியவள்,
“ப்ளீஸ்ங்க, நேரமாகுது. எல்லாரும் மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்பிருப்பாங்க. தாலி சிலை வச்சு கும்பிடனும். அத்தை சத்தம் போடுவாங்க…” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
“அட இரும்மா…” என அர்னவ் மகளை விட்டு அசையவில்லை.
பிள்ளைக்கு நீச்சல் கற்று தருகிறேன் என அப்போதிருந்தே சொல்லி தர இருவரின் விளையாட்டில் முல்லையும் பாதி நனைந்திருந்தாள்.
“இன்னும் முடியலையா?…” என்று வந்த அன்னக்கிளி,
“முல்லை நீ போய் சேலையை மாத்து. இவங்களை நான் கூட்டிட்டு வரேன்…” என்று சொல்லி முல்லையை அனுப்பியவர் மகனை பார்க்க,
“என்னோட அப்பா…” என அரும்பு அர்னவ்வை கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.
“எம்மாடியம்மா உன் அப்பனை நான் இப்ப என்ன சொல்லிட்டேன்? வாயே திறக்கலை. அதுக்குள்ளே காப்பாத்தற நீ. நீ பிறக்கவும் உங்கம்மா கூட சேர்ந்துட்டு உங்கப்பனை உண்டில்லைன்னு பண்ணுவன்னு பார்த்தா பாவம் என் மருமக…” என்றார் அன்னக்கிளி.
அவர் சொல்ல சொல்ல அர்னவ்வின் முகத்தில் மகளை பார்த்து பூரிப்பும், பெருமிதமும் பொங்கி வழிந்தது.
“போதும்மா, ஏற்கனவே ஆத்துல தண்ணி அதிகமா தான் போகுது. ரொம்ப பொழியாம கிளம்புங்க…” என்றதும் சிரித்துக்கொண்டே மேலே வந்தான்.
“நீ போய் ட்ரெஸ் மாத்து. பாப்பாவுக்கு நான் பட்டு பாவாடை சட்டை எடுத்து வச்சிட்டேன். நானே கிளப்பி கூட்டிட்டு வரேன்…” என்று அவளை வாங்கிக்கொண்டார்.
“பாப்பா, ரூம்ல குளிச்சிட்டு சமத்தா வருவீங்களாம். அப்பா ரெடியாகிட்டு கீழே வந்து உனக்காக வெய்ட் பன்றேன்…” என்று சொல்லி இருவரும் ஹைபை விட்டுக்கொண்டனர்.
அன்னக்கிளி பேத்தியுடன் கீழிருந்த தங்கள் அறையில் கிளம்ப அர்னவ் மாடிக்கு சென்றான்.
“அவங்களுக்கு பிடிச்ச ஒருத்தரை கல்யாணம் பண்ணியிருக்காங்க. இதுல வருத்தப்பட என்ன இருக்கு? அதோட அவங்க ஃபேமிலியோட சேரவே வேண்டாம். இப்படி இருந்தாலே நல்லா இருப்பாங்க…” என அர்னவ் கூற,
“எப்படி எல்லாம் சொல்றீங்க நீங்க?…” என்று முறைத்தாள்.
“நிஜமா தான் சொல்றேன் முல்லை. அந்த பொண்ணே எல்லாம் மறந்து இன்னொருத்தர பிடிச்சு விருப்பப்பட்டு இவங்களை தான் கல்யாணம் செய்வேன்னு தேர்ந்தெடுத்திருக்கு. இவங்க வீட்டுல வெட்டுவேன், குத்துவேன்னு நின்னா?…” என்றான் அர்னவ்.
அதற்கு மேல் அங்கே என்ன வார்த்தையாட? சௌமியாவிற்கு மீண்டும் வாழ்த்து செய்தி அனுப்பியவள் பெங்களூர் வந்தால் வீட்டிற்கு வரும்படி சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
“பர்பெக்ட் மேட்ச்…” என்று தனக்கருகே முல்லையை இழுத்து நிறுத்தியவன் ஒரு செல்பி எடுத்துக்கொண்டான்.
“கிளம்பலாம்…” என்று இருவருமாக கீழே சென்றனர்.
மகள் தயாராக இருக்க அவளை கையில் தூக்கிக்கொண்டவன் மனைவியுடன் குடும்பமாய் வீதியில் இறங்கி நடந்தான்.
அத்தனைபேரும் பார்த்து வியக்கும் வகையிலான வாழ்க்கையில் அவன் திளைத்திருக்க அவனுக்கான முல்லை அவன் கை சேர்ந்ததில் வாழ்வின் சுவைகளை இன்னுமின்னும் மெருகேற்றிக்கொண்டிருந்தான் அர்னவ்.
எதிர்பாராத திருமணமாக இருந்தாலும், ஆரம்பத்தின் அடிப்படையை பரிபூரணமாய் ஏற்றுக்கொண்டவர்கள் வாழ்க்கையில் முல்லையின் வாசம் நிறைந்து மணம் பரப்பியது.
அவனுக்காக பூத்த முல்லை அவனின் கை சேர்ந்தது. இல்லம் பூந்தோட்டம் கொண்டது. உள்ளம் உயிரோட்டமானது. மடலேறிய நேசிப்பின் யாசிப்பு என்றும் நிரந்தரமாய்.