“அது செம்ம காரம், கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க…” என்றவன் துவையலை எடுத்து சென்று கண்ணாடி ஜாரில் போட்டு ப்ரிட்ஜில் வைத்துவிட்டு கையில் நல்லெண்ணையுடன் வந்தான்.
“இதை விட்டுக்கோங்க…” என அவரின் உணவின் மேல் எண்ணெயை விட ஒன்றும் பேசாமல் வாங்கிக்கொண்டார்.
“போதுமா?…” என்றதற்கும் தலையசைப்பு கூட இல்லை அன்னக்கிளியிடம்.
“அதான் நீங்க சொன்னா போல சொல்லிட்டேன்ல ம்மா. நீங்க இருங்க. என்னோட வாங்க. சேர்ந்தே போகலாம். எதுக்கு நீங்க தனியா? ஒரு நாள்ல என்னாகிடும்?…” என மீண்டும் துவங்கினான் அர்னவ்.
அன்னக்கிளி உண்டு முடிக்கும் வரை அமைதியாக இருக்க நினைத்து தாயின் இந்த சேட்டையில் பேச்சை துவங்க,
“இங்க பார் சபரி. நான் சொன்னது தான். முன்னாடியே வர நினைச்சு முடியலைன்னு போன வாரம் தான் வர முடிஞ்சது…” என்றார் கறாராக அன்னக்கிளி.
“ஓகே, ஒருநாள் என்னோட சேர்ந்து வரதால என்னாகிரும்?…”
“கல்யாணம் முடிஞ்ச பின்னாடி ரெண்டுபேரும் சேர்ந்து வரீங்க. வீட்டுல போட்டது போட்டபடி இருக்கு. நான் போய் தான் எல்லாம் கவனிக்கனும்…”
“அதெல்லாம் அப்பா அத்தையை வச்சு பார்த்துப்பாங்க…”
“உன் அத்தை தானே? வந்தோமா உதவி பண்ணுனோமான்னு இல்லாம அதெப்ப வாங்கினீங்க? இதை காமிக்கவே இல்லை? எனக்கும் ஏன் சொல்லலைன்னு உயிரை எடுப்பா. இதுக்கே உங்கப்பா டென்ஷனாகி என்னை இந்தபக்கம் கொஞ்சநாள் விடமாட்டார்…”
அன்னக்கிளி தன் அத்தை பற்றி சொல்லியவிதத்தில் பக்கென்று சிரித்துவிட்டான் அர்னவ்.
“ஊர் உலகத்துல என் தங்கச்சிக்கு ஏன் வாங்கலைன்னு கேட்கற அண்ணன்களை கூட சமாளிச்சிடலாம். அவ கண்ணுல படறமாதிரி ஏன் வச்சன்னு கேட்டு உங்கப்பா என்னை பன்ற டார்ச்சர் இருக்கே. யப்பா…” என்றவர் தலையை உலுக்கிக்கொண்டார்.
“ஓகே, நான் வரேன்ல. சேர்ந்து கிளீன் பண்ணுவோம்…”
“ரொம்ப நல்லது. ஒருநாள் தூசி தட்டறேன்னு ஒம்பது நாள் அச்சு புச்சுன்னு தும்மிட்டு நிப்ப. விசேஷத்துக்கு வந்த பிள்ளைக்கிட்ட இப்படித்தான் வேலை வாங்குவியான்னு உங்கப்பா என்னை பிடிச்சு வாங்கறதுக்கா?…” அதற்கும் இடக்கு பேசினார்.
“வள்ளல். நான் பார்க்கும் போதே நாலு தட்டு தட்டிட்டு நாப்பதுதடவை துடைச்ச மாதிரி கை வலி பிச்சிக்கிச்சுன்னு ஸீன் போடுவா. அவளை எல்லாம் என் கண்ணுமுன்னாடி வேலை வாங்கினா தான் உண்டு…” என்றவர் தண்ணீரை குடித்துவிட்டு பிளேட்டுடன் உள்ளே சென்றார்.
என்ன முயன்றும் அர்னவ்வின் பேச்சு தாயிடம் செல்லுபடியாகவில்லை என்பதை மிகவும் சோர்வுடன் ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயம் அவனுக்கு.
உள்ளே சென்றவர் இருவருக்கும் டீயை போட்டு எடுத்து வந்து மகனிடம் நீட்ட வாங்காமல் அவரை அழுத்தமாய் பார்த்தான்.
“இதெல்லாம் காரணமே இல்லைன்னாலும் நீ முல்லையோட தனியா தான் வர போற. சொல்லிட்டேன்…” என்றார் அன்னக்கிளி முடிவாய்.
“ப்ச்…” என்ற சலிப்பு தான் அவனிடம்.
இன்னுமே தயக்கம், தன்னுடைய செயல். அதனை நினைக்கையில் சட்டென கண்கள் இறுக்கமாய் மூடி திறக்க இதழ்கள் இரண்டும் அழுத்தம் கொண்டு முட்டி மோதி உள் மடங்கியது.
“சபரி, தம்பி அம்மா சொல்றேன் கேளு. இதுதான் நடக்கனும் போல. ப்ராப்தம் வேற என்ன சொல்ல?…”
“ம்மா…”
“எப்படி நடந்தாலும் அதுவும் கல்யாணம் தானே? நீ தான தாலி கட்டின? அதுவும் ரெண்டுபக்க சொந்தங்களும் கூடி நின்னு பார்த்திருக்காங்க. நடந்ததை விடேன்…”
“ம்மா…” பல்லை கடித்தான் அவன்.
“பூவை பூவுக்கும் சொல்லலாம். புய்ப்பம்ன்னும் சொல்லலாம். ரெண்டும் ஒன்னு தானே?…” என்றதும் இறுகிய முகம் சட்டென புன்னகைக்க,
“இது அழகு…” என்று மகனை நெட்டி முறித்து கொஞ்சிக்கொண்டார்.
“ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம, பேசாம இருந்தா எப்படி எல்லாம் சரியாகும்? அதுவும் பக்குவமான நீயே இப்படி விலகினா அவ என்ன செய்வா? நீ தான் சொல்லி புரிய வைக்கனும் சபரி…” தன்மையாய் மகனுக்கு எடுத்து கூறினார்.
எல்லாம் சரியாக தான் தோன்றியது. ஆனாலும் என மனது இழுத்துக்கொள்ள ஆழ்ந்த மூச்செடுப்பில் நிமிர்ந்தவன்,
“ஓகே, வரேன்…” என்றான்.
“வரேன்னா?…”
“வரோம். போதுமா?…”
“இது போதுமே?…” என்றவர்,
“நியாயமா நீ திண்டுக்கல் போய் முல்லையை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வரனும். ஹ்ம்ம், இனிமே நடக்கறதாவது நல்லதா சந்தோஷமா நடக்கட்டும்…”
“ஓகே, பஸ் டைம் வந்திருச்சு…” என்று எழுந்தான்.
“கொஞ்சம் முன்ன தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்த. இப்ப ட்ராபிக்ல நீ ஏன் வர? டாக்சி புடிச்சு நான் போய்க்கமாட்டேனா? இல்லனா ஒரு ஆட்டோ போதுமே?…” அன்னக்கிளி சொல்ல,
“நான் சும்மா தான் இருக்கேன். வந்து தூங்க தானே போறேன்?…” என்று எழுந்தவன் தனது கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டான்.
அன்னக்கிளி தனது பைகளை எல்லாம் எடுத்துக்கொண்டார். மகன் மருமகளுடன் வருவதே பெரிய நிம்மதியாக இருந்தது.
இந்த பயணம் அவர்களின் வாழ்வில் நன்மையை தந்தால் போதும் என ஆயிரம் வேண்டுதல்கள் அவரின் மனதினுள்.
டிஷர்ட், ட்ராக்குடன் வந்தவன் அவரின் கையிலிருந்ததை வாங்கி காரின் பின் சீட்டில் வைத்தான்.
“எப்படி போறதா இருக்க சபரி?…” முன்னிருக்கையில் அமர்ந்தவர் மகனிடம் கேட்க,
“யுனிவர்சிட்டி வழியா தான் ம்மா போறோம். எப்பவும் போற ரூட் தான். பிக்கப் பாய்ன்ட் மடிவாளா தானே?…” என்றான் அர்னவ்.
“தெரியாம கேட்டுட்டேன்…” அன்னக்கிளி முகம் திருப்ப,
“அப்படியா?…” என்றான் நமுட்டு சிரிப்புடன்.
“உனக்கு தெரிஞ்சு வேணும்னு தானே இப்ப நாம போறதை பத்தி சொன்ன?…”
“நீங்க வெறுமனே கேட்டீங்க. அதான் நானும் இதுவோன்னு நினைச்சு…”
“சரி மருமகளை கூட்டிட்டு வர எப்படி போக போற? இப்ப போதுமா? இன்னும் விளக்கமா கேட்கவா?…”
“ம்மா ம்மா…” என சிரித்துக்கொண்டவன்,
“பஸ்ல டிக்கெட் புக் பண்ணலாம்ன்னா எனக்கு செட்டாகாது…”
“ப்ளைட்ல போகலாம் தானே?…” என்றார் அன்னக்கிளி.
“திருச்சி போய் அங்கருந்து ஒன்னொண்ணுக்கும் கார், ஆட்டோன்னு எதிர்பார்த்திட்டு நிக்கனும். டைம் வேஸ்ட்…”
“அப்ப?…”
“கார்ல தான். திருச்சி வரை ட்ரைவர் போட்டுக்கறேன். எனக்கும் ரெஸ்ட் தேவை. திருச்சில இருந்து நான் மேனேஜ் பண்ணிப்பேன்…” என்றான் அர்னவ்.
தான் சொல்லவுமே பயணம் பற்றிய திட்டங்களை மகன் வகுத்துவிட்டான் என புரிந்துகொண்டவருக்கு அத்தனை பூரிப்பு.
அதே வேகம் வாழ்க்கையை துவங்குவதிலும் இருந்தால் பரவாயில்லை என்றும் தோன்றியது.