ஆறு கிலோமீட்டர் தூரம் என்னவோ அறுபது கிலோமீட்டர் போல் பிரம்மையை காண்பித்தது அந்த போக்குவரத்து வாகன நெரிசல்கள்.
“பஸ் கிளம்பறதுக்குள்ள போய் சேர்ந்திடுவோமா?…” என்றவர் பார்வை மகனை சந்தேகமாய் பார்த்தது.
“கொஞ்சம் குறுக்க நெடுக்கன்னு வேகமா தான் போயேன் சபரி…” என்றார் பொறுமை இழந்து.
“இருங்கம்மா, இப்ப என்ன பஸ் போனா?…” என்றான் தாயின் படபடப்பில் சிரித்தபடி.
“எனக்கொண்ணும் இல்லை. இப்படியே ஏர்போர்ட் போய் என்னை ப்ளைட்ல அனுப்புன்னு சொல்லுவேன். என்னானாலும் உன்னோட நான் வரமாட்டேன்…” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அன்னக்கிளி சொல்ல,
“வேற வழியில்லைன்னா?…” என கேட்டு இன்னும் அவரை கலவரப்படுத்தினான்.
“அம்மாவுக்கு ஊர் வரை கார்ல காலை தொங்கபோட்டு வரமுடியாது ராசா. என் தங்கமில்ல. அப்பறம் தீபாவளிக்கு தலைக்கு எண்ணெய் வைக்காம என் காலுக்கு வச்சு இழுத்துவிட வேண்டியது தான்…” அழமாட்டாத குறையாக மகனிடம் கெஞ்ச அப்படி ஒரு சிரிப்பு அர்னவ் முகத்தில்.
“உங்கப்பா நான் தான் பாபநாச பாணதீர்த்தத்த பத்தரமாத்து தங்கமா பார்த்துப்பேன்னு முடிவோட இருக்காரே. உன்னோட வந்து இருக்க எனக்கென்ன கசக்கவா செய்யும்?…” என்றார் சலிப்புடன்.
இப்படி இங்குமங்கும் அல்லாட வேண்டியதாக இருக்கிறதே என அத்தனை எரிச்சல் வேறு அவருக்கு.
மெது மெதுவாய் நகர்ந்து வாகனம் மடிவாளா போலீஸ் ஸ்டேஷன் அருகிருக்கும் பிக்கப் பாயிண்ட்டில் வந்து நின்றது.
அன்னக்கிளி கிளம்பவேண்டிய பேருந்தும் வந்துவிட மகனை பார்த்து வாயெல்லாம் பல்லாய் ஒரு புன்னகை.
“ம்மா கிளம்புங்க முதல்ல. இங்கருந்து போறதுல எவ்வளோ சந்தோஷம்? இதுல உங்களுக்கு என்னோட இருக்க ஆசையாம். அப்பா விடலையாம்…” என்றவன் கீழுதட்டை மடித்து ரீல் என்பதை சுற்றி காண்பித்தான் கையால்.
“எல்லாத்தையும் நம்பினா இப்படித்தான்…” என்றவர் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்.
“நாளைக்கு மறக்காம முல்லைக்கிட்ட எப்ப கிளம்பற எப்படின்னு சொல்லிரு சபரி…” எனும் பொழுதே மற்றவர்களும் ஏறி முடித்திருக்க பஸ் நகர ஆரம்பித்தது.
கையை ஆட்டியபடி நின்றவன் பஸ் கண்ணை விட்டு மறையும் வரை நின்றிருந்தான்.
மீண்டும் காருக்கு வரவும் அன்னக்கிளியிடம் இருந்து அழைப்பு வந்துவிட சிரிப்புடன் அதனை உயிர்பித்தவன் காரை கிளப்பினான்.
“சொல்லுங்கம்மா…”
“சபரி சொல்ல மறந்துட்டேன்…”
“அதான் என்னன்னு சொல்லுங்க…” என்று காரை திருப்பினான்.
“ப்ச், ம்மா நான் அங்க போய்ட்டு காண்டேக்ட் பன்றேனே?…” என்றான் அர்னவ்.
“அதெல்லாம் இல்லை. அம்மா கேட்பேன்ல எப்ப கிளம்பறன்னு. நீயும் சொல்லுவ தானே? இனி அவளும் தெரிஞ்சுக்கனுமே? அதோட இனி அவ தான் சபரி உனக்கு எல்லாம். முல்லைக்கும் நீ தான்…” என்றார் மகனிடம்.
அவனுக்கு புரியாததா? அவன் உணராததா? அவள் உணர்த்தாததா? மெல்லிய புன்னகை இதழ்களில்.
ஆனாலும் அந்த தயக்கம், கேலி சிரிப்புகள், கோப குரல்கள், கை கலப்புகள் என எல்லாம் அவனின் தலைக்குள் வலம் வந்தது.
தலையை உலுக்கிக்கொண்டவன் தாயின் பேச்சிற்கு செவி மடுத்துக்கொண்டே தன் வீடு நோக்கி சென்றான்.
“அப்பறம் நீ எந்த நேரம் கிளம்பினாலும் அம்மாவுக்கும் கால் பண்ணிடு….”
“அவ்வளோ தானே? பேசாம தூங்குங்க. நாளைக்கு ஹாஸ்பிட்டல் போய்ட்டு கூப்பிடறேன்…” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.
வீடு சென்று சேரும் வரை மனதெல்லாம் யோசனைகள். மீண்டும் திண்டுக்கலுக்கு செல்லவேண்டுமா?
நினைக்கும் பொழுதே சீன பெருஞ்சுவராய் அவனின் மனதின் எண்ண அலைகள் மேலெழும்பி அவனை தடை செய்தது.
ஆனால் வேறு வழி இருக்கவில்லையே அவனுக்கும். இல்லை என வீம்புக்கு மறுத்தாலும் முல்லையின் வாசம் அவன் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய ஆரம்பித்திருந்தது.
வீடு வந்தவன் மறுநாள் திருச்சி செல்வதற்கு தனக்கு தெரிந்த ட்ரைவரை வர சொல்லியிருந்தான்.
அங்கே சென்றதும் குளித்து கிளம்ப என்று ஹோட்டலில் ரூம் ஒன்றையும் புக் செய்துவிட்டான்.
மறுநாள் மாலை கிளம்பும் நேரத்தை முல்லைக்கு குறுஞ்செய்தியாய் அனுப்பி வைக்க பார்த்தவள் முகத்தில் ஆயிரம் மின்னல்கள்.
“வெல்கம்…” என்று மட்டும் பதில் செய்தி அனுப்பினாள்.
‘போனில் அழைத்து சொல்லமாட்டானா இவன்?’ என்ற எதிர்பார்ப்பு எதுவுமே இல்லை அவளிடம்.
அவன் இப்படி தான் தன்னிடம் இருக்கவேண்டும் என்றும் எதையும் நினைத்ததில்லை முல்லைமலர்.
அர்னவ் தன்னிடம் பேசிய அன்றே வீட்டிற்கு அழைத்து சொல்லியிருக்க ஞானத்திற்கு சந்தோஷத்தில் நிலைகொள்ளவில்லை.
“முல்லை இப்பத்தான் என் மனசே குளிர்ந்துச்சு. நல்லபடியா போய்ட்டு வாம்மா…” என்றவர்,
“நாளைக்கே அண்ணன்கிட்ட உனக்கு அங்க மாமியார் வீட்டுல கட்டறதுக்கு சேலை குடுத்து விடறேன்…” என்றவர் சொல்லியதை போலவே செய்தார்.
“எதுக்கும்மா? அதுவும் இங்கயும் என்கிட்டே சேரி இருக்கே?…” முல்லை மறுக்க உஷா வாங்கிக்கொண்டாள்.
“கல்யாணமாகி அஞ்சு மாசமானாலும் நீ இப்பவும் புது பொண்ணு தான் முல்லை. ஞாபகம் இருக்கட்டும். ஒழுங்கா அத்தை சொல்றதை கேளு…” என்றவள்,
“இங்க பாரு முல்லை, கல்யாணம் எப்படி நடந்துச்சுன்னு இங்க எல்லாருக்கும் தெரியும். அதோட அதுக்கப்பறம் ரெண்டுபேரும் சேர்ந்து இல்லைன்னு எம்புட்டு பேச்சு பேசறாங்க…”
“ஆமாம்மா, அதுக்கு நகையெல்லாம்….”
“இல்லைடாம்மா, நீ உன் புருஷன் வீட்டுக்கு போட்டுட்டு போறது எம்புட்டு மதிப்போ அதுமாதிரி தான் புருஷனோட இங்க வரப்ப இருக்கறதும். அது உனக்கு செஞ்சது தானே?…” என்றவர்,
“சூதானமா வச்சுக்கோ. அவர் கூப்பிட வரப்போ சேலை கட்டிக்க…” என சொல்ல சொல்ல சிரிப்போடு கேட்டுக்கொண்டாள்.
அவர்களின் பேச்சிலேயே எத்தனை சந்தோஷம் என்று அவளால் உணர முடிந்தது.
மறுநாள் மாலை கௌஷிக் வந்தான். அவளுக்கான பார்சலை தந்தவனிடமும் அத்தனை மலர்ச்சி.
“தீபாவளிக்கு முதல் நாளே வந்திருவீங்களா?…” என தங்கையிடம் கேட்க அவள் விழித்தாள்.
“சரி சரி, அங்க போய்ட்டு சொல்லு. இதுல உனக்கு ட்ரெஸ் கூடவே தான் முல்லை இருக்கு. அங்க அக்கம்பக்கத்துல வெளிலன்னு போற மாதிரி இருக்கலாம்…” என்று தந்துவிட்டு சென்றான்.
அன்று காலை எழும் பொழுதே அர்னவ் கூட அதே ஊரில் இருக்கிறான் என எண்ண அந்த எண்ணமே இனிமையை கூட்டியது.