இன்னும் திருச்சியை கடந்திருக்கவில்லை. அத்தனை வாகன நெரிசலில் கொஞ்சம் நிறுத்தியும், பின் வேகமாகவும் என சென்றுகொண்டிருந்தான் அர்னவ் சபரிவாசன்.
இத்தனையிலும் அவ்வப்போது முல்லையின் மீது அவன் விழிகள் படர்வதும் விலகுவதுமாக இருக்க அதனை உணர்ந்தவள் வாய் திறக்கவில்லை.
சிக்னலில் காரை நிறுத்தியவன் முன்னே குனிந்து பார்த்துவிட்டு பெருமூச்சுடன் மனைவி புறம் திரும்பினான்.
“நான் வரப்போ ஏன் டல்லா இருந்த?…” என கேட்க புரியவில்லை அவளுக்கு.
எதை கேட்கிறான் என்ற கேள்வியை தேக்கிய பார்வையுடன் அவன் முகம் பார்க்க,
“உன்னை பிக்கப் பண்ண ஹாஸ்டல் வந்தேன் தானே? அப்போ…”
“என்ன டல்லா? நல்லா தான் இருந்தேன்…” என்றாள் அவனுக்கு பதிலாக.
“ம்ஹூம் போன்ல நான் கிளம்பிட்டேன்னு சொன்னப்போ இருந்த வாய்ஸ்க்கும், திரும்ப கீழ வெய்ட் பன்றேன்னு சொன்னப்ப பேசின வாய்ஸ்க்கும் இருந்த டிபரன்ட் எனக்கு புரிஞ்சது. ஏன்?…” என்றான் அர்னவ்.
“இல்லையே…”
“அப்படியா?…” என தலை சாய்த்து அவளிடம் கேட்டவன் விழிகள் அவளுள் ஊடுருவுவதை போலிருந்தது.
முல்லை மெல்ல தன் இமைகளை தாழ்த்திக்கொள்ள மீண்டும் சிக்னலில் இருந்து கார் கிளம்பியது.
அவன் மேலும் ஏதாவது பேசுவான் என்று பார்க்க அடுத்த பத்து நிமிடத்திற்கும் அவன் எதுவும் பேசவில்லை.
சொல்லுவதா வேண்டாமா என்னும் யோசனையில் விரல்கள் படபடக்க மீண்டும் அவன் பக்கம் திரும்பினாள்.
“கல்யாணம் முடிஞ்சு இப்பதான் பார்க்கறோம். சேர்ந்து போயிருக்கலாம்ன்னு ஒரு எண்ணம். நீங்க தனியா போனதா சொல்லவும்…” என நிறுத்தினாள்.
தன் விரல்களை பார்த்துக்கொண்டே அவள் மெல்லிய குரலில் சொல்ல அர்னவ் ஒருநொடி அவளிடம் பார்வையை நீட்டித்து மீண்டும் சாலையில் திரும்பினான்.
“அப்பறம் எனக்கு நீங்க பிரசாதம், பூ எல்லாம் கொண்டுவந்தது. உங்க ப்ரென்ட் கூப்பிட்டு போனதா சொன்னது. இப்ப நான் ஓகே…,, ஓகே தான்…” வேகமாய் அவனிடம் கூற,
“நைஸ்…” என்று முடித்துக்கொண்டான் அர்னவ்.
“நான் எதிர்பார்த்துட்டேன். அதான் சட்டுன்னு ஒரு ஏமாற்றம் மாதிரி…” என அவன் வேறு பேசுவானா என்று பார்த்தாள்.
இத்தனை மாதம் கழித்து முதல்முறை இருவரும் மட்டும் ஒரு பயணம். முல்லை மனது சட்டென கலக்கம் சுமந்தது.
லேசாய் விழிகள் கலங்க எதிர் திசை மங்கலாக தெரிந்தது. மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு இந்த சூழ்நிலையை கனமாக்க வேண்டாம் என நினைத்தவள் பல்லை கடித்து உணர்வுகளை அடக்கினாள்.
விரல்களின் மீது பார்வையை வைத்திருக்க நடுவிரலில் அணிந்திருந்த தன் மோதிரத்தை திருகியபடி இருந்தவள் கார் நின்றதும் நிமிர்ந்து பார்த்தாள்.
“வா போகலாம்…” என்ற அர்னவ்வின் அழைப்பில் எங்கே என பார்க்க அது ஒரு கோவிலின் வாசல்.
‘நிஜமாகவே தனக்காக அழைத்து வந்தானா?’ என்ற வியப்புடன் நம்ப முடியாமல் அவள் அவன் இறங்குவதை பார்த்தும் அமர்ந்திருக்க சுற்றிக்கொண்டு அவள் புறம் வந்தவன் கண்ணாடியை தட்டினான்.
இறங்கு என்பதை போல கையை அசைத்து அவளை அழைக்க கீழே இறங்கினாள்.
“இதுவும் கோவில் தானே? வா…” என்றவன் பேண்ட் பின் பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்தபடி திரும்ப சந்தோஷத்தில் முகம் பூரித்தது முல்லைக்கு.
“என்ன பூ வேணும்?…” அர்னவ் கேட்க,
“ஹாங்…” என்றாள் இன்னும் நிகழ்வுக்கு வரமுடியாமல் தள்ளாட்டத்துடன்.
“சாமிக்கு என்ன பூ வேணும்?…” என கேட்டவன் நிமிர்ந்து மேலே என்ன கோவில் என போர்டை பார்த்தான்.
“பூ வாங்கிக்க. உனக்கு வேணும்னாலும் சேர்த்து வாங்கு….” என சொல்ல இன்னுமே இன்ப அதிர்ச்சி தான் முல்லைமலருக்கு.
“என் முகத்துலையா இருக்கு? இல்லை நான் சேல் பன்றேனா? முல்லை ஆர் யூ தேர்?…” என்றான் அவளின் முன் கையை அசைத்து.
“ஹ்ம்ம், இருக்கேன்…” என்றவள் சட்டென நாக்கை கடித்து தன் காதை லேசாய் பிடித்துக்கொள்ள பார்த்தவன் விழிகளுக்கு கவிதையாக இருந்தது அந்த பாவனை.
“ஓகே, வா…” என்று சொல்ல அர்ச்சனை கூடையுடன், மாலை ஒன்றையும் வாங்கிக்கொண்டு இருவருமாக உள்ளே சென்றனர்.
உள்ளே சென்றதும் அர்ச்சனை கூடையையும், மாலையையும் நீட்டிவிட்டு இருவரின் ராசி, நட்சத்திரம் எல்லாம் அவள் சொல்ல இன்னும் அவள் முகத்தில் தான் அர்னவ்வின் பார்வை.
“கரெக்ட்டா?…” என அவனிடமும் கேட்டுக்கொள்ள,
“ரைட்…” என்றான் புன்னகையுடன்.
பூஜை முடிந்து பிரசாதம் வர அங்கே ஓரிடத்தில் அமர்ந்தனர் இருவரும். அதில் பழத்தை அவனுக்கு நீட்டிவிட்டு அவளும் சாப்பிட அர்னவ் அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் பார்த்துக்கொண்டே தான் இருந்தான்.
“போதும், போகலாம்…” என எழுந்ததும் தானும் எழுந்து நிற்க அங்கே மேலே கட்டியிருந்த கோவில் மணியை அடிக்க கையை உயர்த்தினாள் முல்லைமலர்.
அவள் உயரத்திற்கு அது சுத்தமாக எட்டவில்லை. இரு முறை முயன்றவள் அர்னவ்வை பார்த்துவிட்டு,
“நீங்க மணி அடிச்சிடுங்க. கோவிலுக்கு வந்தா கண்டிப்பா அடிச்சுக்கனும். அம்மா சொல்லியிருக்காங்க…”