மென்மையான இவனுக்கு எத்தனை முகங்கள்? யோசனைகள் அவளை சூழ்ந்திருக்க அர்னவ்வின் அழைப்பு சுத்தமாய் எட்டவில்லை.
கண்கள் அவன் மீது இருந்தாலும் கவனம் அவன் மேல் இல்லவே இல்லை முல்லைக்கு.
தன்னை மனைவி என்னும் ஸ்தானத்தில் கவனிக்கிறானா இல்லையா என்பதே பெரிய கேள்வியாக இருந்தது.
தான் கோவிலுக்கு அழைத்து செல்லவில்லை என்றதனால் தான் கூட்டி சென்றான். அவனுக்காய் தோன்றவில்லையே என உள்ளே சுருக்கென தைத்தது.
“முல்லை…” கையில் சுரீரென்ற வலி.
அவள் கையை கிள்ளியிருக்கிறான் என்று புரிய இன்னும் திகைப்பாய் அவனை பார்த்தாள்.
“கூப்பிட கூப்பிட உன்கிட்ட ரியாக்ஷனே இல்லை. அதான் வலிக்க கிள்ளிட்டேன்…” என்ற அர்னவ்,
“இங்க எந்த ஹோட்டல் நல்லா இருக்கும்?…” என கேட்டான்.
“நீங்க இன்னும் சாப்பிடலையா?…” என்றதற்கு இல்லை என்று தலையசைக்க தனக்கு தெரிந்த ஒரு ஹோட்டலை சொன்னாள்.
“நீ என்ன சாப்பிடற?…” உள்ளே சென்று அமர்ந்தவன் கேட்டதும்,
“இல்லை பசிக்கலை எனக்கு…”
“மார்னிங் என்ன சாப்பிட்ட?…” என்றான் அர்னவ் மீண்டும்.
அவள் எங்கே உண்ண? கணவன் வரும் சந்தோஷத்தில் சுத்தமாய் பசியில்லை. அத்தனை ஆர்வத்துடன் அவனுக்காக காத்திருந்தவளுக்கு பசி ஒரு பொருட்டே இல்லை.
அவளின் முகத்தை வைத்தே கண்டுகொண்டவன் அவளுக்கும் சேர்த்து ஆடர் செய்தான்.
“ஆனியன் ஊத்தப்பம் தானே உன் பேவரெட்…” என்றும் சொல்ல தலையசைத்தாள்.
“உன் லெட்டர்ல தெரிஞ்சது…” என்றதும் லேசாய் வெட்கம் அவள் முகத்தில்.
“நல்ல ஹேண்ட் ரைட்டிங்…” அடுத்ததாய் ஒரு பாராட்டு.
சுத்தமாய் நம்ப முடியவில்லை மீண்டும் மீண்டும் அவளை குளிர்வித்துக்கொண்டே தான் இருந்தான் அர்னவ்.
ஆனாலும் உள்ளே திடுக் திடுக் என்று தான் இருந்தது. கோடையும், மார்கழியும் ஒருங்கே அமைந்ததை போலொருவன் அவள் கணவன்.
இத்தனை நாட்கள் சாதாரண பேச்சுக்கே பஞ்சம் என்பதை போலிருந்து இன்றோ இத்தனை என்றால் அதனை முழுதாய் அனுபவிக்க முடியாமல் திண்டாடினாள் பெண்.
உணவு வரும்முன் அர்னவ்வின் மொபைலுக்கு அழைப்பு வர அவன் பேசுவதையே தலை சாய்த்து கவனித்து வந்தாள்.
பேசும் பொழுது அவன் விரல்கள் மேஜையில் சிந்திருந்த தண்ணீரில் கோலமிட அதன் பாதையில் அவன் விழிகளும் பயணித்தது.
அணிந்திருந்த கண்ணாடியின் பின்னால் இமைகளில் பட்டையான புருவம் அவ்வபோது சுருங்கி விரிய இவள் அவதானித்தபடியே தான் இருந்தாள்.
இடையிடையே அவன் நிமிர்ந்து இவளின் கவனிப்பை கவனிப்பதும் போனில் பேசுவதுமாக இருக்க உணவும் வந்துவிட்டது.
“சாப்பிடு…” என சத்தமின்றி அவளிடம் வாயசைத்தவன் தான் பேசிக்கொண்டு மட்டும் இருந்தான்.
முடிக்கும் வரை அவளும் காத்திருக்க பேசி முடித்து மொபைலை வைத்தவன் ஒன்றும் சொல்லாமல் முல்லைக்கு கையசைத்துவிட்டு உண்ண அவளும் சாப்பிட்டதும் கிளம்பிவிட்டனர்.
இதற்கே ஒருமணி நேரம் கடந்திருக்க அன்னக்கிளியிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது மகனுக்கு.
“ம்மா…” என்றதும்,
“இங்க பக்கத்துல வந்தாச்சா? இன்னும் ஒரு அரைமணி நேரத்துல வந்திருவியா சபரி?…” என ஆவலுடன் கேட்டார்.
“ம்மா இன்னும் திருச்சியை தாண்டலை நாங்க. இப்பத்தான் சிட்டியை விட்டு வெளிலையே வந்திருக்கோம்…”