“பாரு எப்படி பொண்டாட்டிக்கு சொல்லி குடுக்கான்னு…” என கலைவாணனின் தங்கை நக்கலாக அன்னக்கிளியை அழைத்து சொல்ல,
“உன் அண்ணன் உன்னை கூட்டிட்டு வர சொன்னார் மாலதி. வாயேன்…” என்றார் அன்னக்கிளி.
“பேசிட்டு வரேன் மதினி. இப்ப என்ன? பேசினா தான தெரியும் உங்க மருமகளுக்கு சொந்தபந்தம் யாருன்னு. பாருங்க எப்படி முழிக்குதுன்னு…” என சொல்லிக்கொண்டே மாலதி நகர்ந்துவிட்டாள்.
“நிம்மதியா சாப்பிட கூட விடமாட்டாளுங்க…” என அன்னக்கிளி நொடித்துக்கொள்ள அவர்கள் குடும்பத்தின் வாண்டுகள் வந்து சூழ்ந்துகொண்டனர் அர்னவ், முல்லையை.
“சித்தப்பா இவங்க தான் சித்தியா?…” என்று ஒருவன் கேட்க,
“ஆமா…” என்றான் அர்னவ் புன்னகையுடன்.
“மாமா, எனக்கு இவங்க அத்தை தானே?…”
“ஆமாடா…”
“அப்ப எங்களை யார்ன்னு சொல்லுங்க. அத்தைக்கு சொல்லுங்க…” என்ற சிறுவனிடம் புன்னகைத்தவன் முல்லைக்கு அவர்களை அறிமுகம் செய்து வைத்தான் அர்னவ்.
“இனிமே நீங்க லீவ்க்கு வந்தா அத்தையோட தான் வருவீங்களா?…” இன்னொரு பெண் குழந்தை கேட்க அர்னவ் முல்லையை திரும்பி பார்த்தான்.
அப்பட்டமான எதிர்பார்ப்பு அவளின் முகத்தில் கணவன் என்ன பதில் சொல்ல போகிறான் என்று.
“ஹ்ம்ம், உன் அத்தை வந்தா வரலாம்…” என்று சொல்ல உள்ளுக்குள் சட்டென்று ஒரு பனிமலை சிதறல் முல்லைக்கு.
“அப்போ நீங்க வரப்ப எல்லாம் நாம பால்ஸ் போகலாம். ஜாலி ஜாலி…” என்றொரு குழந்தை சொல்ல,
“போகலாம் போகலாம்…” என அர்னவ்வும் சிரித்தான் அவர்கள் குதூகலத்தில்.
“நாங்க இன்னைக்கு இங்க தான் இருப்போம். போனவாட்டி அம்மா இங்க எங்களை வரவே கூடாதுன்னு சொல்லிட்டாங்க இங்க சண்டைன்னு…” என்று மாலதியின் மகன் சொல்ல அர்னவ் அமைதியானான்.
“நாளைக்கு வெளில கூட்டிட்டு போங்க அத்தான்…” என்றான் மாலதியின் இன்னொரு மகன்.
“பார்க்கலாம்டா. நீங்க போய் விளையாடுங்க…” என்ற அர்னவ் முல்லை சாப்பிட்டு முடித்திருந்ததை பார்த்து தானும் எழுந்துகொண்டான்.
“ரொம்ப நல்ல பசங்க. நான்னா ரொம்ப இஷ்டம். சட்டுன்னு ஒட்டிப்பாங்க…” என்றான் அவளிடம்.
“ஓகே, உள்ள போகலாம் வா…” என முன்னே நடந்தான் அர்னவ்.
இன்னும் சிலர் உண்டுகொண்டிருந்தனர். அவர்களை தாண்டி அன்னக்கிளியை தேடி உள்ளே செல்ல அங்கே கேட்ட பேச்சுக்குரலில் இருவருமே ஸ்தம்பித்து நின்றுவிட்டனர்.
“அஞ்சு மாசம் சாந்தி முகூர்த்தத்தை தள்ளி போட்டதே தப்பு. இப்பவாச்சும் நடத்திரு அன்னம். இன்னைக்கு நாளும் நல்ல நாள் தான்…” என ஒரு பெண் சொல்ல,
“இதையெல்லாம் இவ்வளோ நாள் தள்ளி போட்டதே தப்புக்கா…” என இன்னொருவர் சொல்ல,
“நான் சபரிட்ட பேசிக்கறேன்….” என்றார் அன்னக்கிளி.
“ரெண்டுபேரும் என்ன சின்ன பிள்ளைகளா? சொன்னா புரியாம இருக்க? பார்த்தா ஒத்துமையா இருக்கறது மாதிரி தான் தெரியுது. சரின்னு தான் சொல்லுவாங்க…” என்ற பேச்சில் அர்னவ் ‘அப்படியா?’ என்பதை போல முல்லையை பார்த்தான்.
திகைத்த பார்வையுடன் அவள் விழிகள் விரிந்திருக்க தொண்டைக்குழி ஏறி இறங்கியது. அர்னவ் பேசும் முன் அன்னக்கிளி அங்கே வந்துவிட்டார்.
“சபரி ரெண்டுபேரும் கொஞ்ச நேரம் மாடில போய் இருங்க. நான் வரேன்…” என சொல்லிவிட்டு வேகமாய் கலைவாணனை பார்க்க செல்ல இதை தான் பேச போகிறார் என்று தெரிந்தது.
“வா…” என்றவன் அவளுடன் அந்த மர படிக்கட்டுகளில் ஏறினான்.
இருவரும் மாடி அறைக்கு வர அது அன்று முல்லை தங்கியிருந்த அறை இல்லை. அர்னவ்வின் அறை.
உள்ளே நுழைந்ததுமே அதனை கண்டுகொண்டாள் முல்லைமலர். முன்னே நடந்தவள் மீண்டும் பின்னே செல்ல முயன்று திரும்பியவள் அவன் நெஞ்சில் மோதி நின்றாள் பெண்.
அவன் முகம் பார்த்தவளுக்கு அவனை, இதுவரை அவளுடன் இருந்ததை வைத்து, இப்போது இந்த பார்வையை வைத்து எதையும் கண்டுகொள்ளமுடியவில்லை.
அவளின் திகைத்த பார்வைக்கு பதிலாக அவனின் மெல்லிய புன்னகை அவளிடம் கை கோர்த்தது.