“ஹாங், பயமா? அதெல்லாம் இல்லையே…” என்று பார்த்தவள் பார்வை ஆமாம் என்று காட்டிக்கொடுக்க தலையையும் ஆட்டிவிட்டாள்.
“இப்ப யாரும் வந்து எதுவும் கேட்கமாட்டாங்க. ரிலாக்ஸ்…” என்றான் மீண்டும்.
இவன் தான் பேசாமலே பேசுகிறானே என்ற ஆச்சர்யபாவம் சட்டென்று அவள் முகத்தில் ஒட்டிக்கொள்ள உயர்ந்த புருவங்களில் தன் விழிகளை நிறுத்தியவன் கொஞ்சம் கொஞ்சமாய் அவள் முகத்தை அளவிட்டான்.
தானாகவே அவளை இத்தனை கவனித்து பார்ப்போம் என சுத்தமாய் நினைக்கவே இல்லை.
தூரத்தில் இருந்தவரை அவளின் நினைவுகள் மனைவி என்ற அடையாளத்துடன் காண்பிக்கப்படும் தானே தவிர ஆசையோ, ஆர்வமோ இருந்ததில்லை.
அவ்வப்போது அவள் அனுப்பும் புகைப்படங்களில் அவளின் முகவடிவை கவனிக்க ஆரம்பிப்பவன் அதற்குள் லயிப்பதற்குள் தெளிந்துவிடுவான்.
அதுவே அவளிடமிருந்து ஒரு விலகல் தன்மையில் வைத்திருக்க வெகுவாய் உதவியிருக்க இன்று அப்படி அவனை தள்ளியிருக்க அவனின் உரிமை விடவில்லை.
அருகாமை கொடுக்கும் இந்த புதிதாய் ஊற்றெடுக்கும் ஆனந்தத்தை அளவில்லாமல் அனுபவித்தான் அர்னவ் சபரிவாசன்.
இவள் என் மனைவி, இவள் என்னுடையவள் என்ற எண்ணம் ஆழ பதிந்திருந்தாலும் இப்போது ஆர்வமும் பற்றிக்கொண்டது.
அவனின் பார்வை தன்னிடமே இருக்க திரும்புவதா, நகர்வதா, அவனின் பார்வையிலிருந்து மறைவதா என முல்லையின் மனது நொடிக்கு நொடி தாளம் தப்பியது.
“டாக்டர்…” மெல்லிய சத்தத்தில் கலையாத பாவனையுடன்,
“அர்னவ் சபரிவாசன். கால் மீ அர்னவ். இல்லைன்னா அத்தான்னு சொல்லலாம். இங்க ஹஸ்பன்டை அப்படித்தான் கூப்பிடுவாங்க…” என்றான் அவன்.
“என்ன?…” திகைத்து முல்லை பார்க்கவும் கீழே என்னவோ படாரென்று சத்தம்.
பாத்திரத்தை தூக்கி கொண்டுவந்து போட்டதை போல பெரிதாய் மாடிக்கு வரை கேட்டது.
சட்டென தெளிந்து ஜன்னலுக்கு சென்று கீழே எட்டி பார்த்தவன் ‘ஊஃப்’ என மூச்சை உள்ளிழுத்தபடி மீண்டும் முல்லையின் அருகே வந்தான்.
“என்ன சொன்னேன்?…” என கேட்க,
“உங்க பேர் சொல்லி கூப்பிட சொன்னீங்க…” என்றாள் முல்லை.
“ஓஹ், அதான். டாக்டர்ன்னு சொல்ல நீ ஒன்னும் என் பேஷன்ட் கிடையாது. சோ புரியுதா?…” என சொல்ல தலையாட்டினாள்.
“இவ்வளோ சைலன்ட்டா நீ? லெட்டர்ல அவ்வளோ கதை சொல்லுவ. இப்ப சொல்ல எந்த கதையும் இல்லையா?…” என்றான் சின்ன சிரிப்போடு.
“அதெல்லாம் இல்லை. சும்மா தான்…”
“ஹ்ம்ம், வாஷ் ரூம் யூஸ் பன்றியா முல்லை?…” என அர்னவ் கட்டிலில் அமர்ந்து கேட்க தலையை மட்டுமே ஆட்டினாள்.
“அது தான் பாத்ரூம். யூஸ் பண்ணிக்கோ…” என்று சொல்ல வந்ததில் இருந்தே கேட்க யோசித்து சங்கோஜத்துடன் இருந்தவள் அவன் சொல்லவும் இன்னும் நின்றாள்.
“நான் நம்ம லக்கேஜை எடுத்துட்டு வரேன். நீ இங்கயே இரு…” என கிளம்பி செல்ல அதன் பின்னரே உள்ளே சென்று தன் தேவைகளை முடித்துக்கொண்டு முகம் அலம்பிவிட்டு வெளியே வந்தாள்.
மிதமான வெயிலும், குளிர்ந்த நீரும் அத்தனை இதத்தை தர உண்டது வேறு அவளை அசத்தியது.
கட்டிலில் அமர போனவள் பின் தயங்கி அங்கிருந்த மூங்கில் இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
பார்வைகள் அவனின் அறையை இப்போது சுதந்திரமாய் அளவிட்டது. அவனின் சில புகைப்படங்கள் சிறியது முதல் இப்போது வரை எடுத்திருக்க இறுதியாய் அவள் பார்த்த இரு புகைப்படம் பார்த்ததும் எழுந்துவிட்டாள்.
மெதுவாய் அதன் அருகே சென்றவள் விழிகள் முதலில் தனியாய் பட்டு வேஷ்டி சட்டையில் புன்னகையுடன் சிரித்திருந்த புகைப்படத்தில் படிந்தது.
திருமணத்தன்று திருமணத்திற்கு சற்று நிமிடம் முன் எடுத்த புகைப்படம் அது என பார்த்ததும் கண்டுகொள்ள முடிந்தது.
அது சௌமியாவின் வீட்டின் அருகே தான் எடுக்கப்பட்டிருந்தது. முகத்தில் புன்னகையும் முன்நெற்றியில் தவழும் முடியும் அவனின் கண்ணாடியும் என பார்க்க அழகாய் கவர்ந்தது.
அடுத்ததாய் அந்த புகைப்படம். நெஞ்சை பலமாய் உலுக்கவே செய்தது முல்லையை.
கைகள் தானாக தன் நெஞ்சில் உறவாடும் மாங்கல்யத்தை பற்றிக்கொள்ள விழிகள் அதிலேயே நிலைத்திருந்தது.
கசங்கிய முகமும், கழுத்தில் மாலை இன்றி இருவரும் அருகருகே. அர்னவ்வின் இறுகிய தோற்றத்துடன், தனது அழுது வடிந்த கோலம் வேறு.
திண்டுக்கலில் தனது வீட்டில் வைத்து அது எடுக்கப்பட்டிருந்தது. அதை கூட அவள் உணரவில்லையே அன்று.
அர்னவ் வந்ததையோ, தன்னருகே நிற்பதையோ எதையும் கவனிக்கும் நிலையிலில்லாதவள் கைகள் அந்த புகைப்படத்தை கழற்றி பார்க்க முயல முடியவில்லை.