“ஹ்ம்ம், கொஞ்சம்…” மெதுவாய் அவள் சொல்ல மென்மையாய் புன்னகைத்தார் வனிதா.
“இன்னைக்கே நாள் நல்லா இருக்குன்னு சொல்றாங்க முல்லை. உன் வீட்டுக்கும் பேசியாச்சு. அவங்களும் சந்தோஷமா சரின்னு சொல்லிட்டாங்க….” என்று கூற தலையசைத்தபடி இருந்தாள் முல்லை.
“உன் அண்ணி கூட வரேன்னு சொன்னாங்க. அக்கா தான் எதுக்கு அலைச்சல், இன்னும் ரெண்டு நாள்ல அங்க வருவாங்களேன்னு சொல்லிட்டாங்க. உனக்கு சங்கடமா இருந்தா சொல்லு, வர சொல்லிடலாம்…” என்றார்.
“இல்லை அதெல்லாம் வேண்டாம் த்தை…”
“இருக்கட்டும் முல்லை. இந்தமாதிரி நேரத்துல உன் வீட்டாளுங்க இருக்கனும்னு தோணும் தான். இதெல்லாம் சகஜம். அப்பறம் கேட்கவே இல்லை பாரு…” என்றவர்,
“உனக்கு சம்மதம் தானே?…” என்றதும் என்ன பதில் சொல்வதென திருதிருவென்று முழித்தாள் முல்லை.
“வந்த இடத்துல இப்படின்னு நினைக்காம உனக்கு என்ன தோணுதுன்னு சொல்லு…” வனிதா கேட்க என்ன சொல்ல முடியும்?
இங்கே கிளம்பி வரும் பொழுது அர்னவ்வுடன் வருகிறோம், அவனுடன் இருக்க போகிறோம், அவனோடு பொழுதை கழிக்க போகிறோம் என்பது மட்டுமே அவளின் சிந்தனையில் இருந்தது.
அதனை தாண்டி இங்கே இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என நினைக்கவே இல்லை.
இதுவே திருமணம் இலகுவாய் மற்றவர்களுக்கு போலிருந்தால் முழுமனதுடன் அன்றே நிகழ்ந்திருக்க கூடிய ஒன்று.
இன்றுமட்டும் முழுமனதில்லையா என்றால் யோசிக்க முடியவில்லை. பதிலும் சொல்லவில்லை.
“சித்தி…” என்ற சத்தத்தில் இருவரும் நிமிர,
“அம்மா கூப்பிட்டாங்க உங்களை…” என்றான் வனிதாவிடம்.
“சரி நீங்க பேசிட்டு இருங்க…” என்ற வனிதா எழுந்து சென்றதும் அர்னவ் மொபைலுடன் அவளருகே வந்து கீழே அமர்ந்து சுவற்றில் சாய்ந்துகொண்டான்.
“உன் மொபைல். கார்லயே இருந்துச்சு…” என்று நீட்ட வாங்கிக்கொண்டாள் முல்லை.
“உன் அண்ணி பேசனும்னு சொன்னாங்க. கால் பண்ணிருந்திருப்பாங்க போல…” என சொல்ல மீண்டும் முல்லையின் எண்ணிற்கு அழைப்பு.
“அண்ணி தான்…” என்றாள் அர்னவிடம்.
“ஹ்ம்ம், பேசு…” என சொல்லியவன் இன்னும் வசதியாய் காலை நீட்டி அமர்ந்துகொண்டான்.
போனை அட்டன் செய்து காதில் வைத்தவள் பார்வை அவன் தன்னை கவனிக்கிறானா என்பதில் இருக்க ஆம் அவன் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.
அவளின் விரல்களை, கை, வளையல், ஜிமிக்கி, மேல் காதில் சின்னதாய் குத்தியிருந்த ஒற்றை பச்சை கல் பதித்த தோடு, அதில் ஒற்றை முத்து போல தொங்கும் சிறு தங்ககுண்டு என ஒவ்வொன்றையும் கவனித்தான்.
அப்போது தான் சட்டென ஞாபகம் வர தனது ஞாபகத்தில் அவன் வைத்திருந்த அவளின் அந்த புகைப்படத்தை நினைவு மீட்டு பார்த்தான்.
அன்று அபிநயம் பிடித்தபடி நின்றிருந்த புகைப்படத்தில் அவள் அணிந்திருந்த அதே புடவை இன்று அணிந்திருப்பது.
“ஹ்ம்ம் எஸ்…” என சொல்லிக்கொண்டவன் விரல்கள் மீசையை நீவ போனில் தலையசைத்து பேசிக்கொண்டிருந்தவள் இதழ்கள் மேல் வியர்வை துளிகள் இன்னும் அவனை ஈர்த்தது.
“சரிங்க அண்ணி…” என அனைத்திற்கும் அவள் சரி, என தலையசைப்பதும், மெல்லிய புன்னகையும், பின் அமைதியும் என அவளின் பாவனைகளை உள்வாங்கிக்கொண்டிருந்தான் அர்னவ்.
பேசி முடித்து மொபைலை வைத்தவளுக்கு அங்கிருந்து எழுந்து செல்வதா, இல்லை இங்கேயே இருப்பதா என்றிருந்தது.
“நான் உள்ள போகட்டுமா?…” முல்லை தவிப்பை அடக்கிய குரலில் வினவவும் புன்னகைத்தவன்,
“ஹ்ம்ம் போ…”
விட்டால் போதும் என்பதை போல வேகமாய் எழுந்தவளுக்கு சம்மணமிட்டு அமர்ந்திருந்ததில் கால்கள் மரத்திருக்க எழுந்தவள் தடுமாறி மீண்டும் அமர்ந்துகொண்டாள்.
“ப்ச், இந்த கால் வேற…” என்று சொல்லிவிட்டு மீண்டும் எழ,
“கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போ. உடனே எழுந்தா திரும்பி விழுவ முல்லை…” இருவரை தாண்டி வெளியே போகாதவண்ணம் அவனின் குரல் கிசுகிசுப்பாய்.
“அதெல்லாம் சரியாகிடும்…” என்றவள் எழுந்து காலை உதறிக்கொண்டு அர்னவ்வின் அறைக்கு சென்றவள் உள்ளே நுழையும் முன் அவனை திரும்பி பார்க்க என்னவென்று புருவம் உயர்த்தினான் அவன்.
“ஒண்ணுமில்லையே…” என சொல்லியவள் வேகமாய் சென்றுவிட சின்ன சிரிப்பை உதிர்த்தவன் இன்னும் வாகாய் அமர்ந்துகொண்டான்.
கீழே இரவு விசேஷம் பற்றி பேசவும் எதற்கும் மறுக்காமல் சரி என்று வந்துவிட்டான்.
எதையும் யோசிக்க முடியவில்லை. அவன் நினைத்தது ஒன்று. நடந்ததும், நடப்பதும் ஒன்று.
விலகி இருந்தவரை இல்லாதது அருகாமையில் பெரிதாய் தெரிய தலையை கோதிக்கொண்டவன் அரைமணிநேரம் கழித்தே அறைக்குள் வர முல்லை உறங்கி இருந்தாள்.
மூங்கில் நாற்காலியில் காலை மடித்து வைத்து கைகளை கட்டிக்கொண்டு ஒருக்களித்து சாய்ந்து உறங்கியிருக்க இது அன்று அவளின் இல்லத்தில் அவன் அமர்ந்திருந்ததை தான் ஞாபகப்படுத்தியது.
அன்று உறக்கமில்லாமல் அவன் தனித்து இருந்தது இப்போது ஞாபகம் வர இங்கே முல்லை ஆழ்ந்த உறக்கத்தில்.