“முன்னெச்சரிக்கையா இருக்கறது தப்பில்லையே முல்லை. தண்ணீர் ஓட்டத்துல எதுவும் வரலாம். வெளிச்சம்ன்னா நமக்கு தெரியும். இங்க இந்த லைட் வெளிச்சத்துல என்னன்னு தெரியும்? அதான் பகல்ல வான்னு சொன்னேன்…”
புன்சிரிப்புடன் அவளின் படபடப்பை பார்த்தபடி சொல்லியவன் மீண்டும் நீரின் பக்கம் திரும்பினான்.
“நான் அன்னைக்கு வந்தப்போ இங்க ஆறு ஓடும்ன்னே தெரியாது. பார்க்கவும் இல்லை…” என்றாள் லேசாய் முன்னே நகர்ந்து உள்ளங்கையில் நீரை அள்ளி அதிலேயே ஊற்றியபடி.
“என்னைக்கு?…” வேறு சிந்தனையில் இருந்தவன் அவளிடம் கேட்கவும் தயக்கமாய் அவனை பார்த்தவள்,
“அதான் நான் இங்க முதல்தடவை வந்தப்போ…” என்றாள்.
“ஹ்ம்ம், சூழ்நிலை அப்படி…” மூச்சை ஆழமாய் இழுத்துவிட்டவன்,
“உன்கிட்ட பேசனும் முல்லை. சில விஷயங்கள் தெளிவு படுத்திக்கனும்…” பூடகமாய் அவன் பேச முல்லை யோசித்தாள்.
அவனின் முக உணர்வுகளை அவதானிக்கும் அளவிற்கு வெளிச்சமிருக்க அதில் விழிகளை செலுத்தியவள் பக்கம் நன்றாக திரும்பி அமர்ந்தவன் கைளை கோர்த்துக்கொண்டான்.
“என்னன்னு சொல்லுங்க…” முல்லை கேட்கவும்,
“இன்னைக்கு நமக்கு சடங்குக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க…” என்றான் அர்னவ்.
“இல்லைன்னு சொல்ற அவசியமில்லைன்னு தோணிச்சு. இருந்தாலும் இது நம்ம சம்பந்தப்பட்டது. பேசிடனும் தானே?…” என்றான் அவளிடம்.
இன்னும் சாதாரணமான பேச்சுக்கே இங்கே பஞ்சமாயிருக்க இப்போது எடுத்ததுமே தாம்பத்தியம் பற்றிய பேச்சுக்கள் அவளை சங்கோஜப்படுத்தியது.
“ஓகே, லெட்ஸ் ஸீ…” என்றவன்,
“என்னை பத்தி ஏதாவது தெரியுமா முல்லை?…” என்றான் மனைவியிடம்.
“ஹ்ம்ம், தெரியுமே…” உடனடி பதிலில் இன்னும் சிரித்துக்கொண்டான்.
“ஆனா எனக்கு உன்னை பத்தி எதுவும் பெருசா தெரியாது…” என்றவனிடம் அவள் ஏதோ சொல்ல முயல,
“கல்யாணத்தப்போ அதுவும் கல்யாணம் முடிஞ்சு தானே என்னை பார்த்திருக்க. நானுமே. இப்ப நினைச்சாலும் பெரிய ஷாக். எதுவும் தெரியாம முன்னப்பின்ன பார்த்திருக்காம ஒரு கல்யாணம்…” அர்னவின் பேச்சில் முல்லையின் முகம் மாறியது.
“இப்பவும் எனக்கு என்ன ஆச்சர்யம்ன்னா நான் வேண்டாம்ன்னு சொல்லியும் எந்த நம்பிக்கையில நீ அக்ஸப்ட் பண்ணிக்கிட்ட? இப்பவும் யோசிப்பேன்…” என புன்முறுவலுடன் சொல்ல இமைகளை தாழ்த்திக்கொண்டாள் முல்லை.
“அதுக்கப்பறம் நாம தெரிஞ்சிக்கிட்டது என்னோட பேரன்ட்ஸ் என்னைபத்தி உன்கிட்ட சொன்னது, உன்னை பத்தி நான் உன்கிட்ட இருந்து தெரிஞ்சிக்கிட்டது…” என கூற,
“என்கிட்டே இருந்தா?…” விழியுயர்த்தினாள் முல்லை.
“ஹ்ம்ம், உனக்கு என்னை பிடிக்கும்ன்றதும் எனக்கு தெரியும்…” என அர்னவ் சொல்லவும் நாணம் சுமந்த பார்வையுடன் நிமிர்ந்தாள் முல்லை.
“அதுக்குன்னு எதுவுமே தெரியலைன்னு இல்லை. உனக்கு என்ன புடிக்கும்ன்றது கூட நீ எனக்கு அனுப்பும் லெட்டர்ல தான் ரிப்பீட்டடா வர விஷயத்தை வச்சி புரிஞ்சுப்பேன். வாழ்க்கைக்கு அது எப்படி போதும்?…” என்றான் கேள்வியாய் அவளிடம்.
என்னதான் சொல்ல வருகிறானோ என முல்லை அவனின் முகத்தையே அளவிட்டபடி இருந்தாள்.
“ஓகே நீ சொல்லு, என்னை பத்தி என்ன தெரியும்?…” என்று கேட்க அன்னக்கிளி மூலமாய் அவளுக்கு தெரிந்த விஷயங்கள் எல்லாம் மடமடவென்று ஒப்பித்தாள்.
“வாவ்…” அவன் ஆச்சர்யபாவம் காண்பிக்க,
“உங்களுக்கு சபரிவாசன்னு தான் முதல்ல பேர் செலெக்ட் பண்ணியிருந்தாங்களாம். ஆனா அந்த லெட்டர்ல பேர் ஆரம்பிக்க கூடாதுன்னு சொன்னதால வேற பேர் பார்க்கும் போது அருந்ததி அண்ணி தான் அர்னவ்…”
“ஹ்ம்ம், சொல்லு. என் பேர் அதானே? ஏன் தயங்கற?…” என்றான் அவள் அர்னவ் என இழுத்ததும்.
“அண்ணி தான் அர்னவ்ன்னு பேர் வைக்க சொல்லி பிடிவாதமா இருக்கவும் சேர்த்து வச்சாங்களாம். இப்படி ஓரளவு எனக்கும் தெரியும்…” என்றவள் வார்த்தையில், ‘இது போதாதா?’ என்னும் பொருள் ஒளிந்திருக்க அவனுக்கும் புரிந்தது.
“நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்க. நைஸ்…” என சொல்லிக்கொண்டவன்,
“இந்த லைஃப் எப்படி எல்லாம் விளையாட்டு காட்டுது இல்லையா?…” என்றான்.