“பழசை பேச வேண்டாமே? அதை மறந்திடுங்க….” தவிப்புடன் முல்லை இறைஞ்சுதலாய்.
“பழசை மறக்கனும்ன்னா நீயுமே என் ஞாபகத்துல இருக்கமாட்டியே?…”
அவன் என்னவோ அவள் சொல்லியதற்கான பதிலாய் இதை சொல்ல மழுக்கென்று கண்ணீர் பொங்கி வழிந்துவிட்டது முல்லைக்கு.
“ஹேய் என்ன முல்லை?…” என கேட்டவன் அவள் கண்ணீரை துடைக்கும் முன் தானே துடைத்தாள்.
“நான் அந்த மீனிங்ல சொல்லலை. உன்னோட என் உறவு ஆரம்பிச்சதே அங்க தான். எப்படி மறக்க முடியும்? மறந்தா உன்னையும் சேர்த்து தானேன்னு சொன்னேன்…” என கடிந்தவன்,
“இதுக்கு போய் அழறியே?…” என்று அவளின் விழிகளில் வழிந்துகொண்டிருந்த நீரை துடைத்துவிட்டான்.
“இருக்கட்டும்…” முல்லை விலகி எழ பார்க்க,
“எது இருக்கட்டும்? கண்ணீரா?…” என அவளின் கை பிடித்து அமர்த்தினான்.
“உன்கிட்ட ஒன்னு கேட்கனுமே…” என பேச்சை மாற்ற,
“என்ன அது?…”
“அதென்ன உன்னோட லெட்டர்ல மத்த எழுத்துக்களுக்கும், என் பேருக்கும் மட்டும் உன்னோட ஹேன்ட் ரைட்டிங் வித்தியாசமா இருக்கு?…” என்றதும் கண்ணீர் நின்று லேசாய் வெட்கமும், புன்னகையும் பூக்க,
“அது தெரியலை…”
“ஹ்ம்ம், தெரிஞ்சுக்கலாம் சீக்கிரமே…” என்றவன்,
“முல்லை சில விஷயங்கள் ஆரம்பிக்கன்னு ஒரு எல்லை இருக்கும். அந்த எல்லைக்குள் நாம ரெண்டுபேருமே இன்னும் வரலைன்னு நினைக்கேன்…”
“புரியலை…”
“சொல்றேன், முதலாவது நம்மோட புரிதல். செகென்ட்ரி உன்னோட படிப்பு. இது ரெண்டும் கொஞ்சம் கவர் பண்ணிட்டோம்ன்னா குடும்பம்ன்ற பாடம் தன்னை போல நம்மளை எடுத்துக்கும்…” என்றதும் தலையாட்டினாள்.
“இவ்வளோ நாள் வெய்ட் பண்ணிட்டோம். இன்னும் கொஞ்ச நாள் தானே?…” என்றான்.
“ஓகே…” முல்லை அதற்கும் சரி என்றாள்.
“டூ பி ப்ராங்க், வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிற வரை ஒன்னும் தெரியாது. அதுக்கப்பறம் நீ என் கூடவே இருக்கனும்னு தோணும். நிறைய தேடும். அது நம்ம ரெண்டுபேரையும் டிஸ்டர்ப் பண்ணும்…” என்றான் அர்னவ்.
அப்போதும் அதற்கும் அவள் சரி என்றே சொல்ல அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் விரல்களை பற்றிக்கொண்டான்.
“ஈஸியா சொல்லிடலாம் படிக்க வச்சுட்டு யாரும் குடும்பத்தையும் பார்க்கறதில்லையான்னு. இருக்காங்க தான். ஆனா நான் அப்படி இல்லைன்னு இந்த ஒருநாள்ல புரிஞ்சிருச்சு எனக்கு…” என சொல்ல அவனை புரியாமல் பார்த்தாள்.
“நீ தப்பா நினைச்சிட்டாலும் ஓகே. நேத்து நான் வந்ததுக்கும், இப்ப இங்க என்னோட மைண்ட் செட்டுக்கும் நிறைய வித்தியாசம். உன்னை பார்க்கற வரை, உன்னோட ட்ராவல் பன்ற வரை இருந்த அர்னவ் வேற…” என்றவன்,
“இப்போ ஹ்ம்ம்…” என சொல்லிக்கொண்டே அவளின் உள்ளங்கையை வருடியவன் தன் முகத்திற்கருகே கொண்டுசெல்ல என்ன செய்கிறான் என விழிவிரித்து பார்த்தவளுக்கு அவனின் மீசையின் உராய்வில் மூச்சு நின்றது.
இன்னொரு கையின் விரல்களை உள்ளங்கைக்குள் மடித்து இறுக்கமாய் மூடிக்கொண்டவள் விழிகளையும் மூடி என்ன செய்ய போகிறானோ என காத்திருக்க மீசையின் குறுகுறுப்பை தவிர வேறொன்றுமில்லை.
ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்த்தவள் தன்னையே கள்ளப்புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவனின் பார்வையில் கையை உருவிக்கொண்டாள் பட்டென்று.
“இல்லை நான் அப்படி எல்லாம் சொல்லலை….” வேகமாய் மறுத்தவள்,
“அவங்கட்ட கேட்கனும் தானே?…”
“என்கிட்டயும் கேட்கலாம். நாம தானே போக போறோம்….” என்று சொல்லி,
“அதே ஊர், அதே கோவில், அதே ஜனங்க, அதே…” என பல்லை கடித்தபடி அவன் சொல்லிக்கொண்டே வர முல்லையின் முகம் ‘முதலில் இருந்தா? என கலவரமாகியது.
“நான் மட்டும் அன்னைக்கு அங்க வரலைன்னா ஒன்னும் பிரச்சனையாகி இருந்திருக்காதுல?…” என்றாள் யோசிக்காமல்.
“ஏன் இப்ப இதுல என்ன குறைஞ்சிருச்சு?…” பட்டென்று அர்னவ் பேசவும் முல்லை கப்சிப்.
‘எப்ப கோவம் வரும், எப்ப சாந்தமாவாருனே தெரியலை. என்னவோ போடி முல்லை. இதை கண்டுபிடிக்கவே உனக்கு வயசாகிரும்’ என நினைத்தபடி அவனை பார்க்க,
“மைன்ட் வாய்ஸா?…” என்றான் அர்னவ்.
“ஆமா…” என்றவள்,
“அச்சோ இல்லை இல்லை. அதெல்லாம் எதுவும் நினைக்கலை…” என சொல்லி மாட்டிக்கொள்ள அர்னவின் முகத்தில் புன்னகை மீண்டது.
“கொஞ்சமே கொஞ்சம் கோவம் வரும். மத்தபடி ஓகே பெர்சனாலிட்டி தான்…” என்று அவன் சொல்ல,
“ஓகேலாம் இல்லை. சூப்பர் பெர்சனாலிட்டி நீங்க…” என்றாள் முல்லை தன்னை மறந்து.
“வாட்? கம் அகைன் முல்லை?…” அவள் சொல்லியதை கேட்க,
“இல்ல நல்லவங்கன்னு சொன்னேன்…” என சமாளித்தாள்.
“முதல்ல சொன்னதே கேட்டுடுச்சு…” என்றான் அர்னவ்.
அவன் சொல்லவும் முல்லை தன் முகத்தை எங்கே ஒளித்துக்கொள்வது என்பதை போல முழங்காலில் முகத்தை புதைக்க அர்னவ் முகத்தில் ரசனை கூடியது.
“ஓகே, ரிலாக்ஸ். எனக்கு கொஞ்சம் கோவம் வரும். மத்தபடி ஓகேன்னு சொன்னேன், அது புரிஞ்சதா?…” என்றதும் மீண்டும் முல்லை தங்கள் திருமண நாளுக்கே சென்று வந்தாள்.
‘இந்தாளா டாக்டர், பல்லை உடைக்கிற மாதிரி அடிச்சுட்டான். இவனை எல்லாம் பார்த்தா எங்க டாக்டர் மாதிரி தெரியுது? மனுஷனா இவன்? செய்யிறதையும் செஞ்சிட்டு சரியான முரடன்’ என்றவர்களின் பேச்சும், அதற்கும் அர்னவ் இறங்கி அடித்ததும் ஞாபகம் வர ஒருநொடி உடல் தூக்கி போட்டது.
“ப்ளாஷ்பேக்கா?…” என்று அவளின் தோளில் தட்டியவன்,
“யாரா இருந்தாலும் மரியாதை இல்லாம பேசினா அதான். என்னை அடிக்க வந்தாங்க. நான் அடிச்சேன். தட்ஸ் இட். இதுல என் தப்பு எதுவுமில்லை…” என்றான் இலகுவாக.
முல்லை அப்போதும் அமைதியாக இருக்க அவளின் உணர்வுகள் புரிந்தது அவனுக்கு.
“ஓகே, அவங்களை பத்தி பேசி ஏன் டைம் ஸ்பாயில் பண்ணனும்?….” என்றவன்,
“நாளை மறுநாள் மார்னிங் கிளம்பிருவோம் முல்லை. உன் அண்ணன்கிட்ட சொல்லனும்னா சொல்லிடு…”