“சரிங்க சித்தி. பேசிட்டிருந்தோம். நேரம் போனதே தெரியலை…” என அர்னவ்.
“சரி, வாங்க…” என்று உள்ளே அழைத்து செல்ல முதலில் சாப்பிட்டு முடித்தனர்.
மாலதியை கண்ணில் காணவே முடியவில்லை. எங்கே என்று அர்னவ் கேட்க,
“அவளோட ப்ரெண்டை பார்க்க போயிருக்கா….”
“குட்டீஸ் சத்தம் கேட்குதே?…” அர்னவ் வெளிவாசலில் பிள்ளைகள் விளையாடுவதை பார்த்தபடி கேட்க,
“பிள்ளைங்களை விட்டுட்டு தான், புருஷன் பொண்டாட்டி ரெண்டுபேரும் போயிருக்காங்க. உனக்கென்ன? முதல்ல சாப்பிடு. நல்ல நேரம் போகுது…” என அதட்ட சிரித்துக்கொண்டே உண்டுவிட்டு எழுந்துகொண்டான்.
“இப்ப ட்ரெஸ் எல்லாம் எதுக்காம்? தேவையாக்கும்? இவங்க வேற…” என முனங்கியபடி அவன் திரும்ப வாயில் கை வைக்காத குறையாய் முல்லை பேவென்று விழித்துக்கொண்டு நின்றாள் அவன் பேசியதை கேட்டு.
அவள் அதிர்ச்சியும், தான் கூறிய அர்த்தமும் அர்னவ்விற்கு புரிய சில நொடிகள் பிடித்தது.
“சுத்தம்…” என லேசாய் இருவிரலால் நெற்றியில் தட்டிக்கொண்டவன்,
“கொஞ்சம் வாயை மூடேன் முல்லை. சாதாரணமா சொன்னதுக்கு எவ்வளோ ஷாக்?…” என்று கேட்டு சிரிக்க முல்லையால் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
“ஆரத்தி எடுத்துக்கோங்க. சாமி கும்பிட வந்தா அதை பன்றதே இல்லை…” என அன்னக்கிளி சொல்ல இருவரும் விழுந்து எழுந்து நெற்றியில் விபூதியை வாங்கிக்கொண்டனர்.
“விட்டா ஓடிருவா இப்பவே…” என சத்தமில்லாமல் சொல்லிக்கொண்டு மாடி ஏறினான் அர்னவ்.
“உனக்கென்னம்மா? நல்லா தான இருந்த? சட்டுன்னு இப்படி வேர்க்குது?…” அன்னக்கிளி மருமகளிடம் கேட்க,
“அக்கா விடுங்க. அதெல்லாம் சரியாகிடும்…” வனிதா அவளை அழைத்துக்கொண்டு வேறு அறைக்கு சென்று உடை மாற்ற சொல்லி அர்னவின் அறையில் கொண்டு விட அங்கே அவன் பட்டு வேஷ்டி சட்டையில் தயாராக நின்றிருந்தான்.
“வா முல்லை…” என சொல்லியவன் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.
“ஒரு அரைமணி நேரமாகும். நீ தூங்கு. பேசிட்டு வரேன்…” என்று சொல்ல தலையசைத்தவள் எங்கே படுக்க என பார்த்து மூஞ்கில் நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.
“முல்லை…” கண்டனத்துடனான அழைப்பு என கேட்டதுமே புரிய,
“சொல்லுங்க…”
“தூங்குன்னு சொன்னேன்…” என்றவன்,
“உனக்கு தூக்கம் வரலையா?…” என்றும் கேட்க,
“தூங்கனும் தான்…” என்று இழுத்தபடி கட்டிலை பார்த்தாள்.
“இங்க தான் தூங்கனும். படுத்துக்கோ. வரேன்…” என்று சொல்ல அதற்கு மேல் மறுக்க முடியாமல் சென்று படுக்க,
“நீங்க என்னையே கவனிச்சா அங்க என்ன பேசுவீங்க?…” பட்டென்று வந்துவிட்டது அவளின் வாயிலிருந்து.
“உன்னையும் கவனிக்கனும் தானே?…” என அவனும் சொல்ல,
“லைன்ல இருக்கறவங்களுக்கு கேட்க போகுது…”
“ம்யூட் பண்ணிட்டேன். நீ போய் ட்ரெஸ் மாத்திக்கோ…”
“ஒன்னும் பிரச்சனை இல்லை. இருக்கட்டும்…” மீண்டும் முல்லை படுக்க போக,
“ஆனா எனக்கு பிரச்சனை. இந்த ரூம், அலங்காரம், பூ வாசம், பழம், ஊதுபத்தி, நீ, உன் லுக் இது எல்லாம்…” என்றவன் சுட்டுவிரலை நீட்டி மொத்தமாய் சுழற்றி காண்பித்து தனது நெற்றியில் வைத்து காண்பித்தான்.
ஊஞ்சலில் அமர்ந்து அவனின் மேக் புக்கில் எதையோ பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தவன் விழிகள் மனைவியை பார்த்ததும் லேசாய் இடுங்கி பின் சிரிப்பில் சுருங்கியது.
சில நிமிடங்கள் மட்டுமே விழித்திருந்தவள் எத்தனை நேரம் பேசினானோ, எப்போது வந்தானோ என எதையும் கவனிக்காமல் உறங்கியிருந்தாள்.
மறுநாள் ஒரு நாள் மட்டுமே பாபநாசம் வாசம். அதற்கு மறுநாள் சொல்லியதை போலவே காலையே உணவை முடித்துக்கொண்டு திண்டுக்கல் கிளம்பிவிட்டனர் இருவரும்.
கிளம்பும் முன் அன்னக்கிளியை தங்களுடன் வருமாறு அத்தனைமுறை அழைத்தாள் முல்லை.
“உன்னை பார்க்க வரப்ப இவன் இதேதான் பண்ணினான். இப்ப நீயா? ரெண்டுபேரும் நல்லா வாங்க போறீங்க. கிளம்புங்க முதல்ல. அங்க போய்ட்டு பேசுங்க…” என்று அனுப்பி வைத்தார் அன்னக்கிளி.
திண்டுக்கல் கிளம்பியதும் தங்கள் திருமணம் நடந்து முடிந்த பின்னான நிகழ்வுகளை மேலோட்டமாய் கேட்டு தெரிந்துகொண்டான் அர்னவ்.
ஊருக்குள் செல்ல செல்ல மற்றவர்களின் பார்வை அவர்கள் மீது அழுத்தமாய் படிந்தது.
அதிலேயே அர்னவ்வின் கைகள் இறுக்கமாய் கார் ஸ்டியரிங்கை முறுக்க முல்லை மனதெல்லாம் பயப்பந்து.
வந்த இடத்தில் எந்தவித பிரச்சனையும் வந்துவிட கூடாதென வேண்டியபடியே வந்தாள்.
தங்கள் வீடிருக்கும் தெருவில் அர்னவ் காரை திருப்ப எதிரே பைக்கில் மணிமாறன் எதிர்பட்டான்.
அவனை பார்த்த நொடி நெஞ்சே நின்றுவிட்டது முல்லைக்கு. சட்டென அர்னவ்வை திரும்பி பார்க்க அவனும் அங்கே தான் பார்த்துக்கொண்டே காரின் வேகத்தை குறைத்திருந்தான்.