அர்னவ்வின் காரை பார்த்ததுமே மணிமாறன் முதலில் கூர்ந்து அவன் தானா என கவனித்து அதன் பின் தன் பைக்கை காரின் மேல் ஏற்ற வருவதை போல வந்து ஒடித்து திருப்பினான்.
அவன் முகத்தில் அன்று போல இன்னும் குறையாத கோபக்கனல் கொழுந்துவிட்டு எரிந்தது.
அவனின் இந்த வம்பிழுக்கும் செய்கையில் முணுக்கென்று அர்னவ்விற்கு பற்றிக்கொள்ள,
“இவனுக்கு வாங்கினது பத்தாது போல?…” என அர்னவ் முணுமுணுத்தான்.
“ப்ளீஸ், எந்த பிரச்சனையும் வேண்டாமே?…” என்றாள் முல்லைமலர் பதட்டத்துடன்.
அவளிடம் அழுத்தமாய் ஒருபார்வையை பதித்தவன் ஒன்றும் சொல்லாமல் காரை அவளின் வீட்டின் முன்பு கொண்டு நிறுத்தினான்.
முதல்நாள் கிளம்பும் முன்பே அன்னக்கிளி அத்தனை படித்து சொல்லியிருந்தார் மகனுக்கு.
“இந்த பிரச்சனை நம்ம ஆரம்பிச்சது. நம்மோட கவனக்குறைவு. அவங்க கோபம் நியாயமா இருந்தாலும் அந்த பையன் பேச்சு தப்பு தான் சபரி. நீங்க போறப்போ அங்க யாராச்சும் ஏதாவது பேசினா…”
“ம்மா அன்னைக்குமே நான் மன்னிப்பு கேட்க தான் செஞ்சேன். அங்க வார்த்தையை விட்டதால தான் பிரச்சனையே நடந்துச்சு. பேசாதவரைக்கும் நானும் பொறுமையா போவேன்…” நிதானமாகவே அர்னவ் சொல்ல,
“புரியுதுப்பா. அந்த பொண்ணோட தம்பி பேசினது தப்பு தான். கோபத்துல பேசிட்டான். முடிஞ்சதை விடு. அங்க தான் போய் வர போறோம். முல்லையோட சொந்தம் நமக்கும் வேண்டப்பட்டவங்க தான்…”
“இதுக்கு தான் அங்க போகவே தோணலை…” அர்னவ் யோசனையுடன் சொல்ல,
“அதுக்காக உன் பொண்டாட்டி அவ பக்க சொந்தத்தை, அவ ஊரை விட்டுடுவாளா?…” அன்னக்கிளி கோபமாய்.
“அன்னம், நீ அமைதியா இரு…” என்ற கலைவாணன்,
“சபரி இனி அடுத்த தலைமுறைக்கு வளரக்கூடிய உறவுகள் அவங்களாம். நடந்த பிரச்சனையை மனசுல வச்சுட்டு யாரும் எதையும் கொண்டுபோக போறதில்லை. யாராச்சும் பிரச்சனை பண்ணினா ஒதுங்கி தான் போயேன். நாம குறைஞ்சிட போறதில்லை…” என்றார் அவர்.
“புரியுது ப்பா…” அர்னவ்வும் ஒப்புக்கொள்ள,
“நம்ம அமைதியை நம்ம தான் தக்க வச்சுக்கனும். இன்னொருத்தன் சீண்டற அளவுக்கு நீ பலவீனமானவனா என்ன? அந்த வாய்ப்பை குடுக்காத…”
“ஹ்ம்ம்…” என்றான் மகன்.
“நீ பதிலுக்கு பேசி அவங்களுக்கு எதுவும் கிடைச்சிடாது. நீ ரியாக்ட் பண்ணாததே அவங்களுக்கான பதிலடியா இருக்கும்…”
மகனுக்கு எடுத்து சொல்ல தலையசைத்தான் அர்னவ். அவனுடைய உட்சபட்ச கோபம் என்பது சில நேரங்களில் மட்டுமே.
அதிலும் கைகலப்பு அடிதடி வரை சென்றது அவனது திருமணத்தில் தான். இப்போது நினைத்தாலும் கொஞ்சம் அவமானமாகவே இருக்கும்.
மணிமாறன் வயதிற்கு தான் தன் தரம் தாழ்த்தி சண்டை இடுவதா என யோசித்தபடி காரை ஓரம் கட்டினான் அர்னவ் முல்லையின் வீட்டு சுவற்றை ஒட்டி.
“வாங்க மாப்பிள்ளை. வாடா முல்லை…” என ஓடி வந்தான் கௌஷிக்.
தன் அண்ணன் வரவுமே முல்லையின் முகத்தில் கலக்கம் குறைந்து புன்னகை மலர்ந்தது.
அர்னவால் அப்படி சட்டென பேசிவிட முடியாமல் தடுமாற்றமாய் இதழ்களில் ஒட்டவைத்த புன்னகையுடன் தலையசைத்தான்.
“உள்ள வாங்க…” என கௌஷிக் அவர்களை அழைத்து செல்ல வாசலில் உஷா ஆரத்தியுடன் வாசலில் நின்றிருந்தாள்.
ஞானமும், உஷாவும் வரவேற்க ஆத்மிகாவை கையில் வைத்தபடி கௌஷிக் தள்ளி நின்றான்.
மொத்த தெருவும் கூடிவிட பொருட்காட்சியை காண்பதை போல அத்தனை பேரும் சலசலத்தபடி பேச ஓரிருவர் வாசலுக்கே வந்துவிட்டனர்.
“புதுமாப்பிள்ளைக்கு இப்பத்தான் மாமியார் வர கண்டுச்சாக்கும்?…” என்றொருவர் சொல்ல,
“எங்க முகத்த நிமிந்து காமிக்க சொல்லேன் ஞானம் உன் மருமவப்பிள்ளையை. கல்யாணத்தப்ப பாத்தது. மொவத்தையே மறந்துட்டோம்…” இன்னொருவர் சொல்லி சிரிக்கவும்,
“தலதீவாளி புதுமணமக்கள்ன்னு எங்க போட்டோவோட நாளைக்கு எங்கண்ணனை ஊரெல்லாம் போஸ்டர் அடிக்க சொல்றேன் அப்பத்தா. உன் வீட்டு சுவத்துலையே வச்சு நல்லா பாரு. யார் வேண்டாம்ன்னா?…” முல்லை சட்டென குனிந்து அந்த வயதானவரிடம் நக்கலாக பேசினாள்.
சுத்தமாய் அவளது பதிலை அர்னவ் எதிர்பார்க்கவில்லை. அவள் பக்கம் அவன் திரும்பவும் நல்ல பிள்ளையாய் நேராக நின்றாள் முல்லை.
இதில் அவனை கண்டு புன்னகைக்க வேறு செய்ய சுற்றி இருப்பவர்களை கருத்தில் கொண்டு அவன் தான் முகத்தை திருப்பிக்கொண்டான்.
“உள்ள வாங்க…” ஞானம் சொல்லவும் உஷா எடுத்த ஆராத்தியை வெளியே வாசலுக்கு ஊற்ற நகர,
முன்வாசலில் காலனியை கழற்றிக்கொண்டு நின்ற அர்னவ்வின் காதுகள் கூர்மையானது முல்லை இதற்கு எதுவும் பேசுகிறாளா என.
“கிழவிக்கு ஆசை தான். போட்டுட்டா போகுது. முதல்ல உனக்கு மாப்பிள்ளையை பார்ப்போம். அடுத்த தீவாளி உனக்கு தல தீவாளி தான் கிழவி. ஆடி கூட சீராட்டிடுவோம்த்தா…” என்று சொல்லிவிட்டு உள்ளே வர இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் அர்னவ்.
“பார்த்து குனிஞ்சுக்கோங்க…” வேகமாய் அவனுடன் வந்தவள் நிலைவாசலை காண்பித்து அவன் தலையை இடித்துவிடாமல் கையை வைத்து தடுத்தாள் அவனின் நெற்றிக்கு மேல்.
“தேங்க்ஸ்…” என்றவன் குனிந்து உள்ளே சென்றதும் அந்த வீட்டை பார்வையால் வலம் வந்தான்.
“முல்லை மாப்பிள்ளையை உக்கார சொல்லுடி…” ஞானம் மெதுவாய் சத்தம் கொடுத்துவிட்டு,
“இந்த தண்ணியை குடு…” என்று நீட்டினார் மகளிடம்.
“நீங்க வாங்கம்மா…” என்றவள் தண்ணீரை வாங்கி அர்னவ்விடம் நீட்டினாள்.
மருமகனின் நலம் விசாரிக்கவேண்டுமே என ஞானமும் முன்னால் வந்து நின்றவர்,
“எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை?…” என மெல்லிய குரலில் கேட்க,
“நல்லாயிருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?…” என்றான் அவன்.
“நல்லாருக்கேன் மாப்பிள்ளை…” என்றாலும் ஞானத்திற்கு அவனின் இந்த முகத்தை விட அன்று கோபத்தில் கொந்தளித்த முகமே ஞாபகத்தில் வந்து நின்றது.
அதற்கு மேல் பேசாமல் ஒதுங்கி நின்றுகொண்டார் ஞானம். மகளை அருகில் அழைத்து நலம் விசாரித்தார்.
ஐந்து மாதம் கழித்து பார்க்கிறார். அதிலும் திருமணம் முடிந்து அந்த களேபரத்துடன் கிளம்பிய பெண்.
“மெலிஞ்சிட்ட முல்லை. சரியா சாப்பிடறதில்லையா?…” மகளிடம் குறைந்த சத்தத்தில் கேட்க,
“நல்லா தான் இருக்கேன்ம்மா. சாப்பிடறேனே? அப்படியே தான் இருக்கேன்…” என்றாள் முல்லைமலர்.
சட்டென அர்னவ்வின் பார்வை மனைவியை ஆராய்ந்தது. அவனின் ஞாபகத்தில் அவள் திருமணத்தன்று இருந்ததற்கும் இப்போதைக்குமான வித்தியாசங்களை அணிவகுத்தது.
‘எஸ், மெலிஞ்சு தான் இருக்கா. கண்ணமெல்லாம் கூட ஒட்டியிருக்கே?’ என தோன்றியது முல்லையின் கணவனுக்கு.
“என்னை தான் டெய்லி வீடியோ கால்ல பார்க்கீங்க தானே?…” என்று பேசிக்கொண்டிருந்தாள் முல்லை.
உஷாவும், கௌஷிக்கும் உள்ளே வர உஷாவின் முகம் கோபத்தில் கடுகடுவென்று இருந்தது.
வெளியே நின்று கிண்டல் பேசியவர்களை வாட்டிவிட்டு தான் உள்ளே வந்திருந்தாள் அவள்.