“என்னத்தன்னு சொல்லுவேன்டா? இவங்க வாழ்க்கை எப்படி போகுமோன்றதை விட இங்க இருக்கற மனுஷங்க குத்தி காமிச்சே வாழ்க்கையை வாழ விடாம பண்ணிருவாங்களோன்னு பயமா இருக்குடா…” என்றார் ஞானம்.
“அதுக்கு என்ன செய்யலாம்? இந்த ஊரை விட்டு வேற ஊருக்கு போய்டுவோமா?..” உஷா காட்டமாய் கேட்க மௌனமாகி போனார் ஞானம்.
“சில விஷயங்கள் மாறாது. அப்படியே தான் இருக்கும். மத்தவங்க வாய் புளிச்சதுன்னு பேசறதுக்கு எல்லாம் நாம பயந்து ஓட முடியாது. பேசினா நமக்கு வாயில்ல? திருப்பி குடுக்கறத விட்டுட்டு கண்ண கசக்கறீங்க…” என்றாள்.
“விடு உஷா. அம்மா பயமும் சரின்ற மாதிரி பார்த்த தானே, வந்ததும் வாசல்ல வந்து பேசறதை…”
“குலைக்கிறது குலைக்கத்தான் செய்யும். பதிலுக்கு குலைக்காம நல்லா கடிச்சு விட்டுடனும். உக்கார்ந்து அழுதா சரியா போச்சா?…” என்று முறைத்தவள்,
“முதல்ல நாளைக்கு தீபாவளிக்கு பட்டாசு இன்னும் வரலை. உங்க ப்ரெண்ட் கிட்ட போன் பண்ணி என்னாச்சுன்னு கேளுங்க…” என்றாள்.
“பேசிட்டேன், இன்னும் ஒருமணி நேரத்துல பார்சல் வந்திடுமாம்…”
“நாளைக்கு ரத்தத்துக்கு சொல்லியாச்சா? அவன் பாட்டுக்கு மறந்துட்டேன்னு வேற யாருக்கும் குடுத்துட்டு நிக்காம. குடல் சின்ன ஆடா பார்த்து போட சொல்லுங்க. அப்பறம்…”
“உஷா, கொஞ்சம் வாயை மூடேன். காலையில இருந்து பாட்டா படிக்கிற. மனப்பாடமே ஆகிடுச்சு. அப்பறம் உங்க வீட்டுக்கு சொல்லிட்டியா? எப்ப வராங்க?…” என்றான்.
“தங்கச்சியும் அப்பாம்மாவும் தானே? காலையில வீட்டுல சாமி கும்பிட்டு கிளம்பி வருவாங்க. நல்ல நாள் அதுவுமா அங்கயும் சாமி கும்பிடுவாங்க தானே?…”
“ஹ்ம்ம், சரி சரி…” என்றான் கௌஷிக்.
“வேற யாருக்கும் இவங்க வரதை பத்தி சொல்லலை. என்ன பேசுவாங்களோ?…” மீண்டும் ஞானம் தொடங்கி வைத்தார்.
“நீங்களும் தான் சும்மா இருங்களேன் ம்மா. அவக்கிட்ட பேச்சு வாங்கனும் உங்களுக்கு. அதான் அத்தை, மாமா, பூங்கொடி எல்லாம் வராங்களே? சொந்தம்ன்னு இப்போதைக்கு நமக்கு நிம்மதி அவங்கக்கிட்ட தான்…” என்றான் கௌஷிக்.
“அம்மாவும், புள்ளையும் மெல்ல பேசறீங்களா? வந்த மனுஷன் வந்த வேகத்துலயே பெரிய கும்பிடா போட்டு கிளம்பிடாம…” என இருவருக்கும் உஷாவிடம் அதட்டு.
உடனே இருவரும் அமைதியாகிவிட ஆத்மிகா வாயில் கை வைத்து க்ளுக்கென்று சிரித்துவிட்டாள்.
“இந்த நண்டு கூட கேலி பண்ணுது…” என புலம்பியபடி உஷா அடுக்களைக்குள் செல்ல,
“சமையல் தான் முடிஞ்சதே? வந்து உக்காரு உஷா…” என்றார் ஞானம்.
“இட்லிக்கு அரிசி ஊற போடனும்ல த்தை. இப்ப போட்டா தான் சாயங்காலம் ஆட்ட சரியா இருக்கும்…” என்று உள்ளே சென்றுவிட கௌஷிக் மகளுக்கு உணவை எடுத்து வைத்து ஊட்டினான்.
அறைக்குள் நுழைந்திருந்த அர்னவ்விற்கு அப்போது தான் மூச்சு சீராகவே வந்தது.
அத்தனை சங்கடம், அவ்வளவு தயக்கம். ஒருவித அவஸ்தையிலே தான் அமர்ந்திருந்தான் வெளியே.
எத்தனை முயன்றும் இலகுவாக இருக்க முடியவில்லை அவனால். மீண்டும் மீண்டும் பழையவையே ஞாபகம் வர கையெல்லாம் இறுகியது.
முகத்தை இரு கைகளாலும் அழுத்தமாய் தேய்த்தவன் விரல்களால் தலையை கோதியபடி அந்த அறையை பார்த்தான்.
தன் வீட்டை போல பெரிய அறை தான். ஆனால் கீழே மட்டுமே வீடு. அன்றும் இங்கே தான் இந்த மேஜையின் முன்னே நாற்காலியில் விடிய விடிய உறக்கமின்றி அமர்ந்திருந்தான்.
பொட்டு தூக்கமும் இல்லை, பசி இல்லை. தண்ணீர் கூட அருந்தவில்லை. கிளம்பும் வரை அமர்ந்த இடத்தில் அமர்ந்தவன் தான்.
அன்றைய எண்ணங்கள் நிச்சயம் நல்லவிதத்தில் இல்லை. அதிலும் நடந்ததை ஏற்றுகொள்ளும்படியான நிர்பந்த நிகழ்வு.
யார் என தெரியாத முன்பின் அறிந்திராத ஒரு பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்திருக்கிறான்.
தன்னுடைய நிலையை விட மோசம் அப்பெண்ணின் நிலை என்று அவளின் நலன் கொண்டு அவள் பக்கமாக நின்று சிந்தித்து அவளிடம் பேசியவை என ஒவ்வொன்றாய் நியாபகத்தில் அலைமோதியது.
அன்றும் எத்தனை தெளிவுடன் பேசினாள். இன்றும் அவளின் பேச்சுக்கள் அவனை புருவம் உயர்த்த செய்தது.
நேரில் இந்த இரண்டு நாட்கள் தான் பேச்சுக்கள் என்றாலும் தன்னுடைய ஊரில் அளவாய், சில நேரம் கொஞ்சம் முறைத்து இப்படி இருந்ததே தவிர்த்து இவ்வளவு நக்கலாக, கிண்டலாக என பேசி பார்க்கவில்லை.
வாசலில் அந்த பாட்டிகளுக்கு அவள் சொன்ன பதிலில் மனது அவள் புறம் திசை திரும்பியது புன்முறுவலுடன்.
இப்போதும் அவனின் பார்வை அவளிடத்தில் வட்டமிட்டது. கொஞ்சம் இலகுவாய் சாய்ந்து அமர்ந்தான் அர்னவ்.
“உங்களுக்கு ட்ரெஸ்? நீங்க மாத்திக்கலாமே?…” முல்லை கேட்க அவளை பார்த்தவன் முகத்தில் ஒரு சுவாரஸியம்.
“வெளில என்னவோ பேசினியே? என்ன சொன்ன?…” என்றான் அவளிடம்.
“என்ன என்ன பேசினேன்? இல்லையே?…” என்றாள் தன்னுடைய பேக்கை எடுத்து திறந்து.