“ஊர்ல அந்த ரெண்டுநாள் கொஞ்சம் நெர்வஸா இருந்துச்சு. புது இடம், சூழ்நிலை. பழக டைம் வேணும் இல்லையா? இங்க இப்ப நீங்க இருக்கிற மாதிரி அங்க எனக்கு…” என்றாள் முல்லை.
“ஓகே…” என்று புன்னகைத்து முல்லையின் அறைக்குள் சென்றான் அர்னவ்.
முல்லை உஷாவிற்கு உதவியாக பாத்திரங்களை எடுத்து வைத்து கழுவ உதவினாள்.
“நீ அங்க போய் என்னன்னு பாரு முல்லை. அப்பறமா வந்து செய்யலாம்…” உஷா அனுப்ப,
“ஒத்தையில செய்வீங்களா? சரி இருங்கண்ணி, நான் போய் அவங்களை பார்த்துட்டு வரேன்…” என சொல்லி முல்லை தன் அறைக்குள் வர மேஜை அருகிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் அர்னவ்.
கதவை திறந்துகொண்டு முல்லை வரவும் கையிலிருந்த மொபைலில் இருந்து நிமிர்ந்து பார்த்தான்.
“நீங்க தூங்கலையா?…” அவனிடம் கேட்க,
“தூங்கனும். மெசேஜ் பார்த்திட்டிருக்கேன்…”
“ஓகே, நீங்க படுத்து தூங்குங்க. அண்ணி தனியா வேலை பார்த்திட்டு இருக்காங்க…”
“ஹ்ம்ம்…”
“நான் ஹெல்ப் பண்ணிட்டு வரேன்…”
“ஓகே, போய்ட்டு வா. இதை சொல்லனுமா?…”
“தனியா இருப்பீங்கன்னு அனுப்பி வச்சாங்க அண்ணி…”
“பரவாயில்லை, யாரும் என்னை தூக்கிட்டு போய்ட மாட்டாங்க. பத்திரமா இருந்துப்பேன்…” அர்னவ் புன்சிரிப்புடன் சொல்ல,
உறங்கினால் பரவாயில்லை என்று தோன்ற அலுப்புடன் எழுந்துகொண்டவன் கண்ணாடியை மேஜை மீது வைத்துவிட்டு திரும்ப எத்தனித்தவான் பார்வை மீண்டும் மேஜை மேல் பதிந்தது.
அந்த மேஜையின் மறுபக்கம் இருந்த புத்தக அலமாரியில் முழுவதும் கல்லூரி புத்தகங்களும், முல்லையின் பொருட்களும் இருக்க அதில் அவனை ஈர்த்த அந்த டப்பாவை கையில் எடுத்தான்.
பார்த்தவன் விழிகள் இடுங்க முகமும் அதனை கண்டுகொண்டதில் லேசாய் சிவந்தது.
திருமணத்தன்று அவன் வைத்திருந்த கண் கண்ணாடி. அதிலும் உடைந்த கண்ணாடி.
‘இதை இன்னும் இங்கே வைத்திருக்கிறாளா?’ என யோசித்தவன் திருமணம் முடிந்து இங்கே வருகையில் அதை மறந்துவிட்டு சென்றது ஞாபகம் வர அன்றைய வார்த்தைகள் நடு மண்டையில் ஆணியடித்ததை போல் இறங்கியது.
“கூட்டத்துல புகையில கண் எரிச்சல்ன்னா கவனிக்காம யாருக்கு வேணா இவன் தாலி கட்டுவானா? அப்ப ராத்திரிக்கு பக்கத்துல எவ இருக்கான்னு பார்க்காம கூட…” என எத்தனை பெரிய பேச்சு.
மணிமாறன் வார்த்தையை இரைத்த நொடி அவன் மீது தான் பாய்ந்ததும் கண்முன்னே எழும்பி நின்றது.
இப்போதும் அந்த வார்த்தைகள் சுரீரென தாக்கியது அர்னவ்வை.