“தூங்குங்கன்னேன். வேற என்ன சொல்லட்டும்?…” என்றவள்,
“கொஞ்சம் கொஞ்சமா தானே எல்லாம் சரியாகும். எடுத்ததுமே எல்லாமே நம்ம விருப்பப்படியா இருக்கும்…” என்றாள் முல்லை.
“எவ்வளோ புரியுது உனக்கு அவங்களை?…” உஷா சொல்ல சிரித்துக்கொண்டாள் முல்லை.
“அப்பறம் அண்ணி, வர வழில மணிமாறன் அண்ணாவை பார்த்தோம்…” என சொல்ல உஷா திடுக்கிட்டு பார்த்தாள்.
“ஒன்னும் பிரச்சனை இல்லை தானே?…” என பதறி கேட்க,
“ம்ஹூம், இல்லை. ஆனா கார்ல பைக்கை விடற மாதிரி வந்துட்டு முறைச்சிட்டே போனாங்க…”
“அவன் அடங்கவேமாட்டான். இன்னும் உங்கண்ணனை போற வர வழியெல்லாம் வம்பிழுத்துட்டு சுத்தறான். பொடிப்பையன்ட்ட என்ன உரண்டைன்னு உங்கண்ணனும் பொறுமையா போறாங்க…”
“ஹ்ம்ம், பதில் பேசினா அதான் சாக்குன்னு இன்னும் பிரச்சனையை பெரிசு பண்ண தான் பார்ப்பாங்க. நானும் பயந்துட்டேன் இவங்க கோபத்தை பார்த்து. எங்க கார்ல இருந்து இறங்கிருவாங்களோன்னு…”
“நல்லதுன்னு நினைச்சுக்கோ. அவனுக்கு உன் புருஷனும், நீயும் இங்க வரவே கூடாதுன்னு எண்ணம். ஊருக்குள்ள திரும்பி வரட்டும். அன்னைக்கு இருக்கு சேதின்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சான்….” உஷா கடுப்பாய் சொல்ல முல்லை மௌனமானாள்.
“இத்தனை நாள் நீங்க வரலைன்னதும் அவ்வளோ எகத்தாளம். என்னவோ அவனுக்கு பயந்து வரலைன்னு நினைப்பு வேற. மறுவீடு வந்தப்ப அவன் ஹாஸ்பிட்டல்ல இருந்ததால உன் வீட்டுக்காரர் தப்பிச்சாராம். ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு சுத்துறான்…”
“ப்ச்…” அலுப்புடன் முல்லை கண்ணை மூடி திறக்க,
“விடு, இப்ப கண்டிப்பா என்னடா பிரச்சனை பண்ணுவோம்ன்னு தான் நிப்பான். பார்த்துட்டே இரு. அப்ப இருக்கு அவனுக்கு. இந்தவாட்டி எதுவும் பேசட்டும், நாக்கை ஒட்ட நறுக்கிடறேன்…” என்ற உஷா முல்லையின் சோர்ந்த முகத்தை கண்டு,
“உனக்காக, உன் மனசுக்காகவே எல்லாம் சரியாகும் பார். நீ ஒன்னும் நினைக்காத. இந்தா…” என்று டீயை ஊற்றி அவளுக்கு தர வாங்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
“இன்னுமா அண்ணாவும், பாப்பாவும் எழுந்துக்கலை?…” ஞானத்தின் அருகே வந்து முல்லை அமர,
“உங்கண்ணனுக்கு எப்பவாச்சும் தான் இப்படி லீவ். பாப்பாவும் சேர்ந்து தூங்கறா இல்லையா?…” என பேசிக்கொண்டிருக்க இஞ்சி பூண்டுடன் வந்தாள் உஷா.
“உரிச்சு அரைச்சு வச்சிட்டா நாளைக்கு சட்டு சட்டுன்னு எல்லா வேலையும் முடிச்சிட்டு உக்காரலாம் பாரு…” என்றபடி அவற்றை தோல் உரிக்க பேசிக்கொண்டே நேரம் சென்றதே தெரியவில்லை.
கௌஷிக் எழுந்து வர அடுத்து குழந்தையுடன் விளையாட்டு என இரவு உணவு நேரமும் வந்துவிட்டது.
அதற்குள் கணவனை இருமுறை வந்து பார்த்துவிட்டே தான் சென்றாள் முல்லை.
அப்படி ஒரு அயர்ந்த உறக்கத்தில் இருந்தான் அர்னவ். எழுப்புவோமா வேண்டாமா என்ற யோசனை வேறு முல்லைக்கு.
ஏற்கனவே அவனும் சொல்லியிருக்க சத்தம் காட்டாமல் அறையில் விடிவிளக்கை மட்டும் போட்டுவிட்டு செல்ல நேரம் பத்தை எட்டியது.
“இன்னுமே எழுந்துக்கலையே முல்லை…” உஷா கேட்க,
“அத்தைட்ட போன்ல பேசும் போதும் சொன்னேன். லீவ்ன்னா இப்படி தூங்குவாங்கலாம். ரெண்டுநாளா இருந்தாலும் தூங்காம முழிச்சிருப்பாங்கலாம். இது ஒண்ணுமில்லை. அவங்களா எழுந்துக்கட்டும்ன்னு சொல்லிட்டாங்க…”
“சரித்தான், உன் பாடு திண்டாட்டம் தான் முல்லை….” என சிரித்தாள் உஷா.