அதன் பின் அனைவரும் உண்டுவிட்டு உறங்க செல்ல முல்லை அவனுக்கான உணவை எடுத்து வந்து மேஜையில் வைத்தாள்.
உஷா சொல்லியே அனுப்பியிருந்தாள் எப்போது எழுந்தாலும் சாப்பிட வைத்துவிடு என்று.
இரவு உணவிற்கு எழுப்ப சொல்லி ஞானம் சொல்ல கௌஷிக் சத்தம் போட்டுவிட்டான்.
“அவர் எப்ப வராரோ வரட்டும். போனதடவை எப்படி இருந்தார். இப்பவாச்சும் உரிமையா தூங்கராறேன்னு நான் சந்தோஷமா இருந்தா நீங்க எழுப்பவா சொல்றீங்க? சும்மா இருங்கம்மா….” என்று சொல்லிவிட்டான்.
“அதுக்குன்னு சாப்பிடாம கூடவா தூங்க?…” ஞானம் கவலையாய் கேட்க முல்லை பதில் சொல்லும் முன்,
“முதல்ல அவரோட இடத்துல இருந்தும் நாம யோசிக்கனும் ம்மா. சாப்பிடலைன்னா பரவாயில்லை. மனுஷனுக்கு நிம்மதியான தூக்கம் முக்கியம். நல்ல உறக்கம் இருந்தாலே பாதி டென்ஷன் குறையும்…” என்றவன்,
“குழம்பு சூடு பண்ணி ஹாட்கேஸ்ல போட்டுட்டேன். கார சட்னி இருக்கு தேங்காய் போடாம. அதனால கெட்டு போகாது. இட்லியோட சாப்பிடுவாங்க…” உஷா சொல்லி அனுப்பியிருந்தாள்.
அறையில் அந்த மெல்லிய வெளிச்சத்திலேயே மேஜையில் வைத்துவிட்டு குளியலறை சென்று வந்து மொபைலை சார்ஜில் போட்டுவிட்டு வந்து படுத்தாள் முல்லை.
அவன் வீட்டிலும் உறங்கினான் என்றால் அசையாமல் அதே இடத்தில் படுத்திருப்பவன்.
இப்போதும் படுத்த இடத்திலேயே இருக்க அவனை பார்த்தபடியே ஓரத்தில் படுத்தவளும் கண்ணை மூடினாள்.
எத்தனை முயன்றும் உடலின் அசதியிலும், மனதின் களைப்பிலும் உறக்கம் கூட வரவில்லை.
லேசாய் அசைந்து புரண்டு படுத்தவள் கண்கள் எரிய ஆரம்பித்திருந்தது நள்ளிரவானதும்.
அர்னவ்வின் வீட்டில் கூட நன்றாக உறங்கிவிட்டாள். ஆனால் இங்கே தனது வீட்டில் அதுவரை இருந்த இலகுத்தன்மை முற்றிலும் குறைந்திருந்தது.
“காலையில மூணு மணிக்கு அலாரம் வச்சு எழுந்துக்கோ முல்லை. எண்ணெய் வச்சு குளிக்கனும்ல. உங்களுக்கு அந்த சடங்கு கூட கல்யாணம் முடிஞ்சு நடக்கலை…” என்று உஷா சொல்லியிருந்தாள்.
“அதெல்லாம் வேண்டாம், அஞ்சு மணிக்கு எழுந்துக்கோ. அவரையும் போட்டு அந்நேரம் எழுப்பிடாத. மெதுவாவே எழுந்து வாங்க…” என்றான் கௌஷிக்.
“சரி உங்கண்ணன் சொன்னமாதிரியே எந்திச்சாலும் சரி. குளிச்சிட்டு கோவிலுக்கு போகனும்…” என உஷா சொல்லவுமே முல்லையின் மனநிலை மாறியது.
அந்த கோவிலுக்கு தான் செல்லவேண்டும். திருமணம் நடந்த அதே கோவில். எப்போதும் வழக்கமாக செல்லும் கோவில்.
அர்னவ்வின் மனநிலை, அவன் கோபம், சங்கடம் என ஒவ்வொன்றாய் அவளை கலங்கடித்திருக்க நாளை என்ன நடக்குமோ என்னும் பயத்திலேயே உறக்கம் எட்டவில்லை அவள் கண்களை.
எழுந்து சென்று மொபைலில் நேரத்தை பார்க்க மணி ஒன்றரையை எட்டியிருந்தது.
“நேரம் போகவே மாட்டுது. தூக்கமும் வரமாட்டுது. ப்ச்…” என்று மீண்டும் புரண்டு திரும்பியவள் இடையில் சட்டென்று அவன் கரம்.
ஒருநொடி ஸ்தம்பித்தவள் ஆடவில்லை, அசையவில்லை. மூச்சுவிடாமல் அப்படியே அதிர்வுடன் இருக்க அவன் கைகள் முல்லையின் இடையில் இறுக்கி அவளை நெருக்கமாய் இழுத்துக்கொண்டது அவன் பக்கம்.
“அச்சோ…” என்ற மெல்லிய அலறலில் இடையிலிருந்த தன் கரத்தை நகர்த்தி அவள் இதழ்களுக்கு திரையிட்டான் அர்னவ்.
“சத்தம் போடாத முல்லை…” என மிதமான அதட்டல் வேறு.
“இல்ல இல்ல பேசலை. பேசலை…” என்றாள் அவன் கைகளுக்குள் இதழசைத்து.
“என்ன?…” தனது கையை விடுத்தவன் அவளை நெருங்கி என்ன என்று கேட்க,
“இல்லை, பேசலைன்னு சொன்னேன்…” என்றாள் மீண்டும்.
“ஹ்ம்ம், நீ தூங்கலையா?…”
“தூக்கம் வரலை. அதான்…” என்றவள்,
“முழிச்சாச்சு தானே நீங்க?…” என கேட்டாள்.
“ஹ்ம்ம், கொஞ்சம்…” அர்னவ் மெதுவாய் சொல்ல அவன் மூச்சுக்காற்று கழுத்தோரம் வெப்பமூட்டியது முல்லைக்கு.
“அப்போ சாப்பிடலாமே?…”
“ப்ச், எனக்கு நீ என்ன பேசறனே கேட்கலை. என் பக்கம் திரும்பு முல்லை…” என்றான் அர்னவ்.
புதிதாய் இந்த நெருக்கம், அவனின் பேச்சும், மூச்சும், சற்றும் முன் இருந்த சஞ்சலம் என்று முல்லையை நிலைகுலைய செய்துகொண்டிருந்தது.
அவன் என்ன சொல்கிறான் என்றும்கூட மூளையில் பெரிதாய் பதியவில்லை அவளுக்கு.
கேட்டதற்கு தன்னை போல பதில் கொடுத்தாலும் தன்னிடையில் பதிந்திருக்கும் அவனின் கரத்தின் அழுத்தத்தில் தன்னை கொஞ்சமும் அசைக்காமல் அலுங்காமல் இருந்தாள்.
“உன்கிட்ட தான் சொன்னேன் முல்லை. திரும்பு. என்னவோ சொன்னியே?…”
“சத்தமா சொல்லவா?…”
“ம்ஹூம், வெளில கேட்கும். திரும்பி மெதுவா சொல்லு…” என்றான் அர்னவ்.
அவனின் வார்த்தைகளின் பின்னணியில் மெல்லிய புன்னகை ஒட்டியிருப்பதை போல இழையோடிய ரகசியத்தில் குழம்பி அவன் பக்கமாய் திரும்ப முயன்றாள்.
“என்னாச்சு?…” அர்னவ் கேட்க தன் அசைவில் அவன் கைகள் தன் மீது உராய கூச்சத்தில் அப்படியே இருந்தாள்.
“உன்னை தான் முல்லை…”
“கையை எடுங்க, திரும்ப முடியலை…”
“இது தான் பிரச்சனையா?…” என்றவன் தானே தன் பக்கம் முல்லையை திருப்பி சுழற்ற அவள் அவனின் முகத்தின் நேரே திரும்பினாள்.
“இப்ப சொல்லு…” என்றான் அர்னவ்.
இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சம் அவன் முகத்தை நன்றாகவே காண்பித்தது. அதிலும் ஜன்னல் வழியே நிலவொளி வேறு.
“என்ன சொல்லனும்?…”
“மறந்திட்டியா என்ன?…” கேலியாய் சிரித்தான் அர்னவ்.
“இல்லையே…” என்றவள் சட்டென என்ன என யோசித்து,
“ஹாங், நீங்க நைட் சாப்பிடலையே. சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். நீங்க எப்ப எழுந்தாலும் சாப்பிட்டு படுக்க சொன்னாங்க…”
“யார்?…”
“அண்ணனும் அண்ணியும் தான்…”
“பசிக்கலை. எனக்கு வேண்டாம்…”
“ஏன்? நைட் டின்னர் சாப்பிடலையே?…” என்றவள்,
“எங்க வீட்டு சாப்பாடு பிடிக்கலையா உங்களுக்கு?…” என கேட்டாள்.
அவனிடமும் ஒருநொடி மௌனம் தான். ‘ஏன் வேற கோவிலே இல்லையா?’ என தோன்றினாலும் அதற்காக இவர்கள் வழக்கத்தை ஏன் மாற்றவேண்டும் என்று தோன்றியது.
“போகலாம். அதுக்கென்ன?…” இலகுவாய் சொல்லிவிட முல்லைக்கு தான் இன்னுமே பயம் பிடித்தது.
“அதான் தூங்கலையா நீ?…”
“ஹ்ம்ம், அப்படி இல்லை. ஆனா அதுவும் தான்…”
“சரி தூங்கு. நாளைக்கு பேசலாம்…” என்றான் அர்னவ் சமாதானமாய்.
“நீங்க சாப்பிட?…”
“வேண்டாம்ன்னு சொன்னேனே. தண்ணி மட்டும் குடு…” என எழுந்தமர்ந்தான்.
முல்லை மேஜையில் இருந்த தண்ணீரை அவனுக்கு தர அவன் குடித்ததும் வாங்கி மீண்டும் மேஜையில் வைத்துவிட்டு வந்து படுக்க முல்லையை தன் கை வளைவிற்குள் கொண்டுவந்துவிட்டான் அர்னவ்.
வேண்டாம் என மறுக்கவும் முடியாமல், அவன் கைகளுக்குள் உறங்கவும் முடியாமல் அவள் தவிப்புடன் உறங்க முடியாமல் இருக்க,
“தூங்கிரு முல்லை. அவ்வளோ தான்…” அர்னவ் குரலில் இருந்ததென்ன என்று கண்டுகொள்ளும் அளவிற்கு அவளின் புலன்கள் எல்லாம் விழிப்பின்றி கிடந்தது.
கண்ணை மூடினாலும் உறங்கமுடியாமல் வெகுநேரத்தின் பின்னரே மெல்ல கண்ணயர்ந்தாள்.
உறங்கும் முன் அத்தனை வேண்டுதல்கள் மறுநாள் எந்தவித சங்கடமும், பிரச்சனையும் இன்றி வெளியே சென்று வரவேண்டும் என்று.
அவளின் வேண்டுதல்கள் எல்லாம் கொஞ்சமும் செவி சாய்க்கப்படாமலே போனது.
மறுநாள் கோவிலுக்கு செல்ல அங்கே மணிமாறன் மட்டுமல்லாது சௌமியாவையும் சேர்த்தே பார்க்க நேர முல்லையின் கண்கள் இருட்டிக்கொண்டு வந்துவிட்டது அந்த நிமிடம்.
அதே கோவில், உற்றார் உறவினர்கள். மனைவியுடன் அர்னவ். அவனுக்கெதிரே அந்த ஊருக்கு திருமணம் என அவன் வர காரணமாய் இருந்த சௌமியா.
முல்லையின் மனமோ மிக மோசமான நாளாக அதை உணர்ந்தது. அந்தளவிற்கு மனது துவண்டு போனது.