அத்தியாயம் 1:
பகலும் இரவும் சந்திக்கும் பொன்மாலைப்பொழுது.அது டிசம்பர் மாதத்தின் தொடக்க நாட்கள்.குளிர் கொஞ்சம் குறைந்திருந்தது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கியிருந்தால் ஊரே ஒளிமயமாக இருந்தது.வண்ண விளக்குகளும், அலங்காரங்களும் நிறைந்திருந்தது.
அனைத்து கட்டிடங்களிலும் ,சிறிய கடைகள் முதல் பெரிய மால்கள் வரை கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்பட்டிருந்தது.அந்த நகரத்தின் ஓரிரு தெருக்களில் மேலே நட்சத்திரங்களையும்,கிறிஸ்துமஸ் மணியையும் கட்டி தொங்க விட்டிருந்தார்கள்.
இது அனைத்தையும் ரசித்து பார்த்து கொண்டே,நம் மதுமிதா மிக மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள். ஏனென்றால் அவள் இந்த ஊருக்கு வந்து ஆறு மாதங்களே ஆகப்போகிறது.
அவளுக்கு இதுதான் முதல் கிறிஸ்துமஸ் இந்த ஊரில். அது ஆஸ்திரேலியா கண்டத்தின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்பெர்ன் மாநகரம்.
ஜூலை மாதம் அவள் இந்த ஊருக்கு வந்தபோது மிக அதிகமான தாங்க முடியாத குளிர்.சூரிய வெளிச்சத்தை பார்ப்பதே சிரமம்.அதுவும் சிங்கார சென்னையின் அதிகமான வெப்பநிலையிலிருந்து,இங்கு வந்த பொழுது இந்த ஊரின் குளிரை தாக்கு பிடிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டாள்.
பிறகு மெல்ல மெல்ல பழகிக்கொண்டால் இந்த குளிருக்கு.தற்போது டிசம்பர் தொடங்கிவிட்டதால் சிறிது வெயில் காணப்படுகிறது.
நம் மதுவை பற்றி சொல்லவேண்டுமென்றால் மிகவும் அழகான பெண்.பாலில் குங்குமப்பூவை கலந்தால் வரும் நிறமும்,இடுப்பை தாண்டிய சுருள் முடியுமாக மிக அழகு.
தமிழ் பெண்களுக்கே உரித்தான பெரிய அழகிய கருவிழிகளும்,சிறிய எடுப்பான நாசியும் கொண்டிருந்தாள்.லிப்ஸ்டிக் இல்லாமலே பிங்க் நிற உதடுகள்.வலது கன்னத்தில் உதட்டிற்கு அருகே கருமையான சிறிய மச்சம்.உயரம் ஐந்து அடி நான்கு அங்குலம்.
என்ன ஒன்று சிறிது பூசிய உடல்வாகுடன் பப்ளியாக இருப்பாள்.ஆனால் அவள் அழகு என்றெல்லாம் அவளுக்கு எண்ணம் கிடையாது. அந்த அளவுக்கெல்லாம் சிந்தித்தது கிடையாது.
மிகவும் மேலோட்டமான பெண். கலகலப்பானவள்.ஆனால் வாழ்க்கையை மிகவும் அனுபவித்து ரசித்து வாழ்பவள்.
இன்ஜினியரிங் CS தஞ்சாவூரில் முடித்துவிட்டு,கேம்பசில் செலக்டாகி, சென்னையில் இரண்டு வருடங்கள் IT கம்பெனியில் வேலையில் இருந்தாள்.ஆன்சைட் ஆப்பர்ச்சுனிடியில் இப்பொழுது ஆஸ்திரேலியா வந்திருக்கிறாள்.
இருபத்து நான்கு வயது ஆகப்போகிறது.அவள் அன்னை அவளை இங்கு அனுப்ப சம்மதிக்கவே இல்லை.மதுவிற்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிக்கவே அவள் அம்மாவிற்கு விருப்பம்.
அவள் தந்தைதான் மனைவியிடம் மிகவும் போராடி,மகளுக்கு ஆதரவாக இங்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
மதுவின் பெற்றோர் அப்பா செல்லதுரை,அம்மா மீனாட்சி.மதுவிற்கு தாய் மீனாட்சி(வடிவேலு மாடுலேஷனில்).ஒரே பெண்.அப்பா செல்லம்,அனைத்து வீடுகளையும் போல.
மதுவின் சொந்த ஊர் தஞ்சாவூர் அருகில் உள்ள பாபநாசம்.செல்லத்துரை விவசாயம் பார்த்து வருகிறார்.சொந்தமாக அரிசி ஆலை வைத்திருக்கிறார்.
அம்மா தமிழ் ஆசிரியை.சிறு சிறு உடல்நிலை கோளாறு காரணமாக தற்போது VRS வாங்கிவிட்டார்.அவரின் ஒரே கவலை வெளிநாடு சென்றிருக்கும் மகள் எந்த வம்பையும் இழுக்காமல் ஊர் வந்து சேர வேண்டும் என்பதே.
அவரை சொல்லியும் தப்பில்லை.நம் மதுவின் வரலாறு அப்படி.உதவி செய்ய போய் உபத்திரவத்தை இழுத்து விடுவாள்.மது படித்ததெல்லாம் தஞ்சாவூரில்தான்.
சிறு வயதில் இருந்தே நன்றாக படிப்பவள்.ஆனால் இவள் பெயரில்தான் ஏகப்பட்ட கம்ப்ளைண்ட் வரும்.
10 மதிப்பெண் வாங்கிய தோழிக்கு 1 ஐ 9 ஆக்கி 90 ஆக்குவது, பெயில் மார்க் வாங்கிய தோழிகளின் ப்ரோக்ரேஸ் ரிப்போர்ட்டில் அவர்களின் பெற்றோர் கையெழுத்தை போட்டு மாட்டிக்கொள்வது, என்று அம்மணியின் சாகசங்கள் ஏராளம்.
பள்ளியில்தான் அப்படி என்றால் கல்லூரியில்,தோழியின் திருட்டு கல்யாணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டு காவல் நிலையம் வரை பிரச்சனை சென்றது.
செல்லதுரைதான் தெரிந்த அரசியல்வாதிகளை வைத்து பிரச்னையை சமாளித்தது.அவர்தான் மகளுக்கு முழு ஆதரவு.அடுத்தவர்களுக்கு உதவிதானே செய்கிறாள் என் மகள் என்று.
பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல் உதவி செய்து மாட்டிக்கொள்வாள்.அதனால்தான் மீனாட்சி மகளை வெளிநாடு செல்வதற்கு அனுமதி அளிக்க அவ்வளவு யோசித்தாள்.
அதற்கு நம் மது,”1வருடம் பாரின் போயிட்டு வந்த உடனே,நீங்க சொல்ற மாப்பிளையை திருமணம் செய்து கொள்கிறேன்”,என்று சம்மதம் சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறாள்.
இதுதான் நம் மதுவின் கடந்த கால வரலாறு.தற்போது நிகழ்காலத்திற்கு வருவோம்.
மெல்போர்ன் நகரத்தில் இப்போது ஆபீஸ் முடித்து விட்டு சென்ட்ரல் ஸ்டேஷனில் டிரெயின் ஏறி,சிட்டியை விட்டு தள்ளி அவுட்டரில் இருக்கும் தன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள்.
அவளுடன் அவள் ஆபீஸ் சீனியர் ஜனனி தங்கியிருந்தாள்.இவளுக்கு முன்பே அந்த வீட்டில் இருந்தது அவள்தான்.அவளுடன் மது ஜாயின் செய்து கொண்டாள்.
சென்னையிலேயே அவள் மதுவிற்கு பழக்கம்.ஆகையால் அவளுடனே தங்கிக்கொண்டாள்.இந்த ஊரின் நடைமுறைகளை மதுவிற்கு கற்றுக்கொடுத்ததும் ஜனனியே.
தற்போது ஜனனி,தனது திருமணத்திற்காக இரண்டு மாதங்கள் விடுப்பில் சென்றுள்ளாள்.அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையும்,ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வேலை பார்க்கிறார். ஜனனியும் திருமணம் முடித்து சிட்னிகே சென்று விடுவதாக முடிவெடுத்திருக்கிறாள்.
அதனால் மது இப்போது வீட்டில் தனியாகத்தான் இருக்கிறாள்.அவளுக்கும் அதுவே பிடித்திருப்பதால் வேறு யாரையும் ரூம் மெட்டாக சேர்க்கவில்லை.
மது டிரைனில் ஏறி தான் அணிந்திருந்த ஓவர்கோட்டை நீக்கிவிட்டு ,காலியாக இருந்த சீட்டில் அமர்ந்தாள்.டிரைனில் சுமாரான கூட்டம் இருந்தது.
ஆனால் போக போக கூட்டம் அதிகமாகி விடும்.தினமும் இதே நேரத்தில் வீடு திரும்புவதால் தெரியும்.
தினசரி வழக்கமாக டிரைன் கிளம்பியவுடன் சுற்றி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.கலவையான நாட்டை சேர்ந்த மனிதர்கள் கம்பார்ட்மெண்டில் இருந்தனர்.ஆனால் ஒரே ஒரு ஒற்றுமை,எல்லா தலைகளும் மொபைலுக்குள் இருந்தது.
நம் மதுவிற்கு டிரைனில் ஏறினால் மொபைல் பார்க்கவோ,பேசவோ பிடிக்காது.இயற்கையையும் ,விதவிதமான மனிதர்களையும் வேடிக்கை பார்க்க வேண்டும்.
அவளுடைய ஒரே பொழுபோக்கு வடிவேலு காமெடிதான்.டல்லாக இருக்கும்போது வடிவேலு காமெடி பார்த்தால் போதும் எனர்ஜி ஆகி விடுவாள்.
இப்பொழுது டிரைனில் வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.ஒவ்வொரு ஸ்டேஷன் வரும்போதும் கூட்டம் ஏற ஆரம்பித்தது.மதுவின் கம்பார்ட்மெண்டில் எல்லா சீட்களும் நிறைந்து விட்டது.
அப்போது வந்த ஸ்டேஷனில் ஒரு கர்ப்பிணி பெண் ஏறினாள்.அந்த ஊர் பெண்.பெரிய வயிறாக இருந்தது.அந்த பெண்ணுக்கு சீட் இல்லாததால் மது எழுந்து அவளுக்கு உட்கார இடம் கொடுத்தாள்.நன்றி சொல்லிவிட்டு அந்த பெண்ணும் அமர்ந்தாள்.
அந்த பெண் அமர்ந்த இருக்கையின் அருகிலேயே நிறைய பள்ளி பிள்ளைகள் நின்றுருந்தார்கள்.நான்கு பையன்களும்,3 பெண்களும் இருந்தார்கள்.டீனேஜ் பிள்ளைகள்.இரு சவுத் இந்தியன் மாணவிகள் இருந்தார்கள்.சுற்றி கவனிக்காமல் ஆரவாரமாக அரட்டை அடித்து கொண்டிருந்தார்கள்.
மற்ற பயணிகள் வழக்கம் போல மொபைலில் லயித்து இருந்தார்கள்.லாஸ்டில் ஒரு சீட் இருந்தது.மது அங்கு போகாமல் அங்கேயே நின்றிருந்தாள்.
அப்போது ‘இவ தான் என் தாய் மீனாட்சி ‘னு தலைவர் வைகை புயல் வாய்ஸில் மொபைல் இசைத்தது.நம் மதுவினுடைய மொபைல்தான்.அவள் அம்மா மீனாட்சிதான் அழைத்திருந்தார்.
பக்கத்தில் இருந்த இந்திய மாணவிகள் இருவருக்கும் மதுவோட ரிங் டோன கேட்டுவிட்டு ஒரே சிரிப்பு.தமிழ் தெரியும் போலிருக்கிறது.மது அவர்களை பார்த்து ஒரு அழகான அசட்டு சிரிப்பு சிரிச்சுட்டு மொபைல் கால் கட் பண்ணிவிட்டாள்.
இப்பொழுது அவள் அம்மாவிடம் பேசும் அளவுக்கு அவளுக்கு தெம்பு இல்லை.நன்றாக பசியெடுக்க ஆரம்பித்துவிட்டது.
மாலை சிற்றுண்டி எதுவும் எடுக்கவில்லை.மதியம் சாப்பிட்டது தான்.சாம்பார் சாதமும்,உருளை கிழங்கு வறுவலும் .மதியம் அவளே சமைத்து எடுத்து போயிருந்தாள் அலுவலகத்திற்கு.
ஆஸ்திரேலியா வந்து சமைக்க பழகிவிட்டாள்.வேறு வழியில்லாமல்தான்.வஞ்சனையில்லாமல் சாப்பிடுபவள் எவ்வளவு நாள் இந்த ஊர் பீட்ஷா,பிரட்டை சாப்பிடுவது.
அதுவுமில்லாமல் ஜனனி சமைக்கும்போது,இவள் மட்டும் எப்படி உட்கார்ந்து சாப்பிடுவது.ஜனனிக்கு உதவ ஆரம்பித்து,அப்படியே சமைக்கவும் பழகி விட்டாள்.நன்றாகவே சமைக்கிறாள்.
வெளிநாடு வந்ததில் நடந்த ஒரே நல்ல விஷயம் இதுதான் என்று அவள் அம்மா சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அவள் வீடு இருக்கும் கிளேட்டனில் இந்திய உணவகமிருந்தது.சமைக்க கடுப்பாக இருக்கும்போது அங்கு சாப்பிடுவாள்.
அப்போது வந்த ஸ்டேஷனில் ஸ்கூல் பிள்ளைகள் இறங்கிவிட்டார்கள்.அதற்கு பிறகுதான் நம்ம மது அந்த கடைசி இருக்கையில் போய் உட்கார்ந்தாள்.நல்ல வேளை சீட் அதுவரை காலியாகதான் இருந்தது.
அப்ப திடிர்னு பக்கத்துலேந்து ஒரு ஹாய் கேட்டது.தன்னிச்சையாக மதுவும் ஹாய் சொல்லிவிட்டுதான் திரும்பி பார்த்தாள்.
பார்த்த உடனே நம்ம மது மனசுக்குள்ள தோணுன கவுன்ட்டர் இதுதான்,’செம்ம ஹாட் மச்சி’.
திரும்பவும்,”ஹாய் ஐயம் ஹேரி.யு லுக் சோ டயர்ட்.ஹேவ் சம் ட்ரின்க்”,என்று ஒரு பாட்டிலை கொடுத்தான்,அங்கு அமர்ந்திருந்த ஒருவன். நம்ம பாஷயில ஒரு வெள்ளக்காரன்.
அவன் ஹேரி ரிச்சர்ட்.முப்பது வயது. 6 அடி உயரம்.உயரத்திற்கேற்ற உடல் வாகு.செம்ம மேன்லி அண்ட் செம்ம ஹேண்ட்ஸம்.நீல நிற கண்கள்.ஆழ்ந்த அமைதியான முகம்.அடர்த்தியான முடியை ஜெல் போட்டு மேலே தூக்கி வாரியிருந்தான்.
லைட் ஆலிவ் க்ரீன் கலரில் கார்கோ பேண்டும்,ஹாஃப் வொயிட்டில் டி – ஷர்ட்டும் அணிந்திருந்தான்.
(வருவாள்…)