அத்தியாயம் 15:
விநாயகரை வணங்கிவிட்டு சிவா விஷ்ணு சன்னதிக்குள் உள்ளே சென்றார்கள். எப்பொழுதும் அர்ச்சனை எல்லாம் செய்யமாட்டாள் மது.
இன்று ஹேரி முதல் முறையாக வந்திருப்பதால் அவன் பெயரில் செய்யலாம் என்று உள்ளேயே அர்ச்சனை தட்டு வாங்கி கொண்டவள், ஹேரியிடம் அவன் பிறந்த தேதி, மாதம், வருடம் கேட்டு கூகிளில் அவன் நட்சத்திரத்தை தெரிந்து கொண்டாள்.
மேஷ ராசி, பரணி நட்சத்திரம் என்று காட்டியது. பெருமாள் சன்னதிக்கு சென்றவள் அங்கிருந்த அர்ச்சகரிடம் ஹேரியின் பெயர் நட்சத்திரம் கூறினாள். அர்ச்சகர் பழக்கமானவர்தான் மதுவிற்கு.
“என்ன மது. யார் இந்த பிள்ளை. பார்த்தா பெரிய இடமா தெரியுது. நம்ம கோயிலுக்கு வந்துருக்காரே”
ஹேரியை சந்தேகமாக திரும்பி பார்த்த மது ” என்ன பெரிய இடம். பையன் ஹைட்டா பெருசா இருக்கதுனால பெரிய இடம்னு சொல்றிங்களா மாமா. அதெல்லாம் ஒன்னுல்ல . நம்ம பையன்தான். கோயில் எப்படி இருக்கும், பார்க்கணும்னார். அதான் கூட்டிட்டு வந்தேன்.” என்றாள்.
“உனக்கு எல்லாத்துலயும் விளையாட்டுதான் மது” என்று சொல்லிக்கொண்டே அர்ச்சனை செய்து கொண்டு வந்தார். மது பெருமாளை பற்றி விளக்கி கொண்டே தீபத்தை கண்ணில் ஒற்றி கொள்ள சொன்னாள்.
பிறகு ஐயப்பன், ஆஞ்சநேயர், முருகன், சிவன் அம்பாள், நவ கிரகம் என்று எல்லா சன்னதிகளையும் பற்றி ஹேரிக்கு விளக்கி கொண்டே பிரகாரம் சுற்றி வந்தாள்.
கோயிலின் உள்ளேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தார்கள். பிறகு வெளியே வந்து பக்கத்திலேயே இருக்கும் இந்தியன் க்ராசரியில் மது வீட்டில் இல்லாத சில மளிகை பொருட்கள், ஸ்னாக்ஸ் எல்லாம் வாங்கி கொண்டாள். பிறகு மணியை பார்த்தால் பன்னிரண்டு . அங்கேயே க்ராசரியோடு ரெஸ்டாரண்டும் இருக்கும்.
ஹேரியிடம் பசிக்குதா என்று கேட்டாள். அவன் இல்லையென்றதால் வீட்டிற்கே சென்று சமைத்து சாப்பிடலாம் என்று முடிவெடுத்து கிளம்பி விட்டார்கள்.
திரும்பவும் காரில் ஏறி வீட்டிற்கு சென்று ரெப்ஃபிரஷ் செய்து கொண்டு கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக அமர்ந்தார்கள். ஹேரி மட்டும் மொபைலை எடுத்து கொண்டு போய் பால்கனியில் நின்று ஜானிடம் பேசினான்.
மது எழுந்து சமைக்க போனாள். ஹேரி பின்னோடு வந்து ” நா எதுவும் உதவி பண்ணவா ஹனி” என்று கேட்டான்.
“காய்கறியெல்லாம் கட் பண்ண தெரியுமா”
“ம் அதெல்லாம் பண்ணுவேன்”
சரி என்று காய்கறி கட் பண்ண சொல்லி, காய்கறியும் கத்தியும் கொடுத்தாள். பொதுவாகவே மதுவுக்கு சமையல் செய்து அடுத்தவர்களுக்கு சாப்பிட கொடுப்பது மிகவும் பிடிக்க ஆரம்பித்து விட்டது இங்கு வந்த பிறகு.
யு ட்யூப் பார்த்து புதிதாக ரெசிபி செய்தால் சத்யனிடம் தான் டெஸ்ட் செய்ய கொடுப்பாள்.
அவனும் எதையும் தாங்கும் இதயம், எது கொடுத்தாலும் சாப்பிட்டு விட்டு நன்றாக இருக்கு என்றுதான் சொல்வான். அதற்கு பிறகுதான் பார்த்திக்கே கொடுப்பாள்.
அவன் செஃப் வேறா. சாப்பிட்டு விட்டு குறை நிறைகளை சொல்வான். எல்லாருக்கும் வீட்டில் சமைத்து பேக் பண்ணி கொண்டு போய்தான் கொடுப்பாள். இன்றுதான் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட அவளுக்கு ஆள் மாட்டியிருக்கிறது.
அதுவும் அவளுக்கு பிடித்த ஹேரிக்கு சமைப்பதால் விருந்து மாதிரி செய்யலாம் என்று சாம்பார், ரசம், உருளை வறுவல், முட்டைகோஸ் பொரியல், மாங்காய் பச்சடி, சேமியா பாயசம், அப்பளம் செய்யலாம் என்று முடிவெடுத்து சமைத்து முடிக்க 2 மணி ஆகி விட்டது.
பசி வந்துவிட்டதால் சாப்பிட அமர்ந்தார்கள். ஹேரிக்கு ஸ்பூன்,போர்க் கொடுத்தாள். அவள் கையாலயே சாப்பிட அமர்ந்தாள்.
ஹேரி “நீ ஏன் ஸ்பூன் எடுத்துக்கல ஹனி” என்றான்.
“நமக்கெல்லாம் கையால நல்லா வழிச்சு ரசிச்சு சாப்பிடணும். உங்க ஊருக்கெல்லாம் வந்து வேற வழியில்லாம அப்பப்ப ஸ்பூன்ல சாப்பிடறோம். ஆனா வீட்லயெல்லாம் கைல சாப்டாதான் திருப்தியா சாப்பிட்ட மாதிரி இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே பரிமாறினாள் மது.
அவள் பேசுவதை ரசித்து பார்த்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தான். ஹேரிக்கு எல்லாம் புதுமையாக இருந்தது. அவனுக்கு ஒவவொன்றையும் விளக்கி எப்படி முறையாக சாம்பார், ரசம், பாயசம், மோர் என்று சாப்பிட வேண்டுமென்று பார்த்து பார்த்து சொல்லி அவனை சாப்பிட வைத்தாள். அவனும் நன்றாக சாப்பிட்டான்.
“ஆனா ஹனி இன்னும் ரெண்டு வேளை உன் வீட்ல சாப்பிட்டேன்னா நா அவ்ளோதான். என்ன இவ்ளோ அயிட்டம் செஞ்சு வச்சிருக்க. எப்போதுமே நீங்க இப்படித்தான் சாப்பிடுவீங்களா”
“எப்போதும் இப்படி சமைக்க நேரம் இருக்காது. ஒரு மெயின் டிஷ், ஒரு சைடு டிஷ் இப்படித்தான் நேரம் இருக்கும். ஆனா எங்க ஊர்லயெல்லாம் விரத நாள், பண்டிகை நாள், திருவிழா அப்பயெல்லாம் இப்படித்தான் விருந்து சமைப்பார்கள். நான் சமைக்கிறதெல்லாம் கம்மி. எங்க அம்மா சூப்பரா சமைப்பாங்க. எங்க வீட்லயெல்லாம் விஷேஷம், கெஸ்ட் வர்றாங்கன்னா எங்க அம்மால்லாம் இன்னும் நிறைய அயிட்டம் பன்னுவாங்க .மூணு பொரியல், ரெண்டு வறுவல், பஜ்ஜி, வடை, ரெண்டு பாயசம் இப்படி பண்ணுவாங்க. எங்க அப்பத்தா அதுவே பத்தலன்னு எங்க அம்மாவை போட்டு வறுத்தெடுக்கும்”
“அப்பத்தாவா. அப்படின்னா யார்”
“எங்க அப்பாவோட அம்மா. போன வருஷம் எங்க அம்மாட்ட சண்டை போட்டுட்டு அமெரிக்கால இருக்க பொண்ணு வீட்ல போய் உக்காந்திருக்கு கிழவி. வித விதமா ஸ்டேட்டஸ் வைக்குது வாட்சப்ல. நான்னா ரொம்ப பிடிக்கும் அதுக்கு. அப்பப்ப என்னட்ட மட்டும் வீடியோ கால் பேசும். ஆனா எங்க அம்மா, அப்பாட்ட மட்டும் பேசுறது இல்ல கோவத்துல”
பேசிக்கொண்டே இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டார்கள். ஹேரி சிறிது நேரம் லேப்டாப்பில் வேலை பார்க்க சென்று விட்டான். நிறைய போன் கால் பேசினான். மது எல்லாவற்றையும் எடுத்து வைத்து , பாத்திரமெல்லாம் விளக்கி போட்டு விட்டு சோபாவில் வந்து அமர்ந்தாள், கையில் ஆளுக்கொரு பாயச கிண்ணத்தோடு.
அவளின் பக்கத்தில் சிறிது இடைவெளி விட்டு வந்து அமர்ந்த ஹேரி “டயர்டா இருக்கியா ஹனி” என்றான்.
“அதெல்லாம் இல்ல. இந்தா, பாயசம் சாப்பிடலைல்ல. இப்ப சாப்பிடு. டெஸெர்ட். இப்படித்தான் வேலையெல்லாம் முடிச்சுட்டு ரிலாக்ஸ்சா சாப்பிடணும்” என்று அவனுக்கும் கொடுத்து விட்டு அவளும் சாப்பிட்டாள் .
“டயர்டா இல்லைனா, கார்ல போகும்போது சொன்னில்ல அந்த டான்ஸ் ஆடி காட்டு”
“பரத நாட்டியமா ? அப்படின்னா என்ன டான்ஸ்ன்னு உனக்கு தெரியுமா”
“ம் தெரிஞ்சிகிட்டேன். இப்பதான் சில விடியோஸ்லாம் லேப்டாப்ல பாத்தேன்”
“அடப்பாவி நீயும் ஏதோ முக்கியமா வேல பாக்றேன்னு நினைச்சா இந்த ஆராய்ச்சிதான் பண்ணிட்ருந்தியா”
“எஸ் பேபி. ப்ளீஸ் ஆடி காட்டேன்”
மதுவும் யோசித்தாள். ஜனனி சென்றதிலிருந்து அவளும் ஆடவேயில்லை. நேரமும் இல்லை. சரி இப்போது ஆடுவோம் என்று முடிவெடுத்தவள், வீட்டிற்கு வந்து கழட்டி போட்ட துப்பட்டாவை எடுத்து டான்ஸ் ஆடுவதற்கு ஏதுவாக சுற்றி கட்டி கொண்டவள், மொபைலில் பாடலை ஒலிக்கவிட்டு ஆட ஆரம்பித்தாள்.
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தித்தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா …
என்ற திருமணம் என்னும் நிக்காஹ் பட பாடலுக்கு ஆட ஆரம்பித்தாள். டான்ஸ் ஆட ஆரம்பித்தால் மது சுற்றி நடப்பதை, உலகத்தை மறந்துவிடுவாள். சுற்றியுள்ள உலகமும் மற்றதை மறந்துவிட்டு மதுவின் ஆடலில் லயித்து விடும் . இப்பொழுதும் அப்படிதான் மதுவும், ஹேரியும் வேறு உலகில் இருந்தார்கள்.
பரத நாட்டியம் முதலில், இடையில் ஃபோக், கடைசியில் திரும்பவும் பரதத்தில் வந்து முடித்தாள். முழு பாடலுக்கும் ஆடியும் மது டையர்டே ஆகவில்லை. ஏனென்றால் நாட்டியத்தை அவ்வளவு ரசித்து ஆடுவாள். இப்போதும் அவ்வாறே ஆடிவிட்டு ஹேரியை பார்த்தால் அவன், அவளுடைய ஆடலில் இருந்து இன்னும் வெளி வரவில்லை.
அவன் முகத்திற்கு நேராக சொடக்கு போட்டு அவனை கலைத்தாள். கலைந்தவன் மதுவை பார்த்து அவளை பாய்ந்து அணைக்க வந்தான். இதை அவன் ரியாக்சனை வைத்தே எதிர்பார்த்திருந்த மது ஓடிப்போய் சோபாவில் ஏறி நின்று கொண்டு, “ஏய். அப்படியே நில்லு. பிச்சிடுவேன். காலைலேயே என்ன தொட கூடாதுன்னு சொன்னேன்ல” என்றாள்.
முதலில் அவள் சோபாவில் ஏறி நிற்பதை பார்த்து அதிர்ந்த ஹேரி , பின்பு அவள் கூறியதை கேட்டு பலமாக சிரிக்க ஆரம்பித்து விட்டான்.
“ஹா ஹா பேபி , உன்னோட செம்ம காமெடி.முதல்ல இறங்கு” என்றவனை சந்தேகமாக பார்த்துக்கொண்டே “நீ முதல்ல உணர்ச்சிவசத்தை அடக்கு, சென்டிமென்ட கட்டுப்படுத்து ” என்று கூறிக்கொண்டே இறங்கி, சோபாவில் அமர்ந்த மதுவின் பக்கத்தில் அமர்ந்த ஹேரி
“என்ன ஹனி, இப்படி ஆடற. சான்சே இல்ல தெரியுமா. மொழி புரியாத எனக்கே உன் டான்ஸ் மூலமா பாட்டு புரியுது ஹனி. உன் கண் பேசுது, கை பேசுது, மொத்தத்தில உடம்பே பேசுது” என்று உணர்ச்சி வசப்பட்டு கூறினான்.தொடர்ந்து
“இவ்ளோ சூப்பரா ஆடறே . அப்புறம் ஏன் டான்ச உன் ப்ரோஃபஸனா எடுக்கல ஹனி. எடுத்திருந்தின்னா இந்நேரம் எவ்ளோ பெரிய ஆளா இருந்திருப்ப தெரியுமா”
“டான்ச தொழிலாவா. நா கோயில் ஸ்டேஜ் ஏறி டான்ஸ் ஆட மட்டும்தான் அப்பா அல்லோவ் பண்ணுவாங்க. என் டான்ச பாத்துட்டு சில பேர் ஸ்டேஜ் ப்ரொக்ராம்கு வந்து கேப்பாங்க. அப்பா ஒத்துக்கவே மாட்டாங்க”
“ஏன் பேபி”
“அது அப்படிதான். எங்கள மாதிரி குடும்பங்கள்ல சில ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் வச்சிருப்பாங்க “
“உனக்கு இதுல வருத்தம் இல்லியா”
“ச்ச ச்ச என்ன வருத்தம். என்ன பொறுத்த வரை டான்ஸ் ஆடணும், எனக்கு ரொம்ப பிடிக்குது அப்படிங்கிறதுக்காக. அத எங்க ஆடுனா என்ன. எனக்கு ஆசையா இருந்தா இதே மாதிரி வீட்லயே ஆடுவேன். யாரு என்ன தடுக்க போறா. மத்த படி டான்ஸ் ஆடி ஃபேமஸ் ஆகணும்னு எனக்கும் ஆசையெல்லாம் இல்ல. அப்படியே இருந்தாலும் எங்க அப்பாக்கு பிடிக்கலைன்னா அத செய்ய மாட்டேன். ஏன்னா எங்க அப்பா ரொம்ப ஸ்வீட். அம்மாதான் ரொம்ப ஸ்ட்ரிக்ட். எப்பவுமே அம்மாகிட்ட எனக்காக அப்பாத்தான் சப்போர்ட்டுக்கு போவாங்க. அவங்கள நா ஏன் கஷ்டப்படுத்தனும்” என்று நீளமாக பேசிவிட்டு பாயச கிண்ணத்தை எடுத்து இரண்டு ஸ்பூன் சாப்பிட்டிருப்பாள்.
பிறகுதான் கவனித்தாள் அவள் சாப்பிடுவது ஹேரி சாப்பிட்டு பாதி வைத்திருந்த கிண்ணம் என்று. உடனேயே உதட்டை சுழித்து ஹேரியிடம் “ஐயையே எச்சி” என்றாள் தமிழில்.
அவள் ரியாக்சனை வைத்தே அவள் சொல்வதை புரிந்து கொண்ட ஹேரி, அவளின் பாவனையில் மயங்கித்தான் போனான். மயங்கியவன் இது சரி வராது என்று உணர்ந்து எழுந்து சென்று பால்கனியில் நின்றான்.
அவனை பார்த்த மது, இவன் ஏன் டக்குன்னு எழுந்திரிச்சி போய்ட்டான். எச்சின்னு சொன்னதுக்கு கோவம் வந்துட்டா என்று யோசித்து கொண்டே அவனிடம் போய் “ஹே இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி வருத்தப்படற. நீ என் எச்சிய சாப்பிட்ருந்தின்னா பீல் பண்ணுவேல்ல. அதுமாதிரிதான் நானும் பண்ணிட்டேன். பெருசா எடுத்துக்காத விடு” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே உள்ளே சென்றவன் மதுவின் பாயச கிண்ணத்தை எடுத்து வந்து அவள் உதட்டை பார்த்து கொண்டே ரசித்து சாப்பிட்டான்.
மதுவிற்கு அவன் பார்வையை பார்த்து வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பித்து விட்டது. சிறிது நேரத்தில் சுதாரித்து கொண்டவள் “ஏய் என் பௌலை குடு. அத நீ சாப்பிட கூடாது தப்பு” என்று கிண்ணத்தை பிடுங்குவதற்குள் சாப்பிட்டு முடித்து விட்டு , கிண்ணத்தை அவள் கையிலேயே கொடுத்து விட்டு “என்ன பேபி தப்பு” என்றான்.
“அது எப்படி நீ என் எச்சிலை சாப்பிடலாம்”
“நீ என் எச்சிலை சாப்டதுக்கு வருத்தப்பட்டில்ல. அதான் உன் எச்சிலை சாப்ட்டு அதை நா டேலி பண்ணிட்டேன்”
சிறிது யோசித்த மது “இதெல்லாம் சரி வராது. நீ எப்ப கிளம்புற”
“ஏன் ஹனி உங்க ஊர்ல வீட்டுக்கு வந்த கெஸ்ட்ட இப்படித்தான் விரட்டுவாங்களா. உங்க டிருவள்ளுவர் விருண்டோம்ப்பல்னு ஒரு அதிகாரமே எழுதியிருக்காராமே”
என்று திருவள்ளுவரையும் விருந்தோம்பலையும் தமிழில் சொல்லியவனை பார்த்து வாயை பிளந்து விட்டாள் மது.
“ஹே நீ இதெல்லாம் எங்க தெரிஞ்சிகிட்ட ” என்றவளை பார்த்து மர்மமாக சிரித்தான் ஹேரி.
காலையிலேயே மது வீட்டிற்கு கிளம்ப சொல்லிய பிறகு சத்யனிடம் கால் செய்து உங்க ஊர்ல கெஸ்ட்ட இப்படித்தான் விரட்டுவாங்களா என்று புலம்பியவனிற்கு திருவள்ளுவர் விருந்தோம்பல் பற்றி பாடம் எடுத்திருந்தான் சத்யன்.
அவளை பார்த்து சிரித்தவனை பார்த்து “அதே திருவள்ளுவர்தான் ஒழுக்கத்தை பத்தியும் எழுதியிருக்கார். வீட்ல பெரியவங்க இல்லாதப்ப உன்னோட இப்படி ஒரே வீட்ல இருக்கிறத ஒழுக்கமில்லன்னு தான் சொல்லுவாங்க. அதனால நீ கிளம்பு ” என்று கோபமாக கூறினாள் .
“ஓகே ஓகே கூல் ஹனி. நா கிளம்பத்தான் போறேன். அதுக்கு முன்னாடி என் போன் நம்பர் நோட் பண்ணிக்கோ” என்று நம்பரை கொடுத்தான்.
பிறகு ரெஸ்ட் ரூம் சென்று வந்தவன் லேப்டாப்பை எடுத்து பேகில் திணித்து கொண்டு, சோபாவில் அமர்ந்திருந்த மதுவிடம் வந்தான்.
மதுவுக்கும் மனதே சரியில்லை. நேற்றிலிருந்து ஆபத்தில் உதவி, அவசரத்திற்கு கூட இருந்தவனை இப்படி விரட்டுகிறோமே என்று.
அவள் முகத்தை பார்த்தே அவள் மனதை புரிந்து கொண்ட ஹேரி “டோன்ட் ஒர்ரி பேபி. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் ” என்றான்.
மதுவும் “தேங்க்ஸ் அண்ட் சாரி கண்ணா” என்றாள்
“கண்ணா?”
மதுவும் சிரித்து கொண்டே “உன் கண் டிஃபரன்ட் கலர்ல இருக்குல்ல. அதான் இந்த பேர்” என்றாள்.
“ஓகே ஐ லைக் இட் . என்ன அவசரம்னாலும் வேணுனாலும் கால் பண்ணு பேபி. உடனே வர்றேன் பை” என்றவன் கிளம்பிவிட்டான்.
(வருவாள் …)