மூன்று மாதங்களுக்கு முன்பு ஜனனியும் , மதுவும் ஆபீஸ் செல்வதற்க்காக தங்களின் வீட்டிலிருந்து கிளம்பி கிளேட்டன் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றனர்.
அவர்கள் வீட்டிலிருந்து ஸ்டேஷன் நான்கு தெரு தள்ளி இருக்கிறது. நடந்துதான் செல்வார்கள்.
காலை நேரமாதலால் குளிர் காற்று அதிகமாக இருந்தது. மது நல்ல ஹெவி வெயிட் ஜீனும், ஷார்ட் டாப்பும் அணிந்திருந்தாள்.அதற்கு மேல் முட்டி வரை உள்ள கம்பளியால் ஆன ஓவர் கோட் வித் ஹூடியுடன் அணிந்திருந்தாள்.
ஹூடியை நன்றாக இழுத்து முகத்தை மூடியிருந்தாள். கண்ணும், மூக்கும் மட்டும்தான் வெளியே தெரிந்தது. கையை கோட் பாக்கெட்டில் விட்டிருந்தாள்.
ஜனனிதான் அவளை பார்த்து சிரித்து கொண்டே “இங்க வந்து மூணு மாசமாக போகுது. இன்னும் உனக்கு குளிர் பழக மாட்டேங்குது, இத்தனை டிரஸ் போட்டு கவர் பண்ணியும் உனக்கு தாங்க முடியலையா” என்று கேட்டு கொண்டிருந்தாள்.
“என்னா …து எனக்கு குளிர் பழகலையா, உனக்கு மட்டும் குளிரலையா என்ன, தைரியமிருந்தா அந்த மேல இருக்க ஜெர்கினை கழட்டு பாப்போம்” என்று வேக வேகமா மூச்சை விட்டு பேசிக்கொண்டிருந்தாள்.
“ஏய், நான் ஜெர்கின் போட்ருந்தாலும் உன்ன மாதிரியா முகமூடி கொள்ளைக்காரி மாதிரி நடந்து வர்றேன்”
“நீ ஒரு வருஷமா இங்க இருக்கறதால பழகிட்ட. அடுத்த வருஷம் இந்நேரமேல்லாம் நான் கோட் போடாம இதே ரோட்ல நடக்கிறேன். இது உன்னோட வுட்பீ சந்தோஷ் மேல சத்தியம்”
“ம் இந்த கிளைமேட்டுக்கு எப்படி இழுத்து போத்தி தூங்கலாம். எங்கயாவது தூங்க விட்ரின்களா ரெண்டு பேரும். நைட் பன்னெண்டு மணி வரை அப்படி என்னத்த பேசுவீங்க. நைட்டுதான் அப்படினு பார்த்தா விடியக்காலை ஏழு மணியிலருந்து டொய்ன், டொய்னு மெசேஜ் சவுண்ட். ரெண்டு மாசமா இந்த பச்சப்புள்ளைய தூங்க விடறீங்களா ரெண்டு பேரும். கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி பேசினா, அப்புறம் லைஃப் முழுக்க என்ன பேசுவீங்க”
“ஏண்டி காலையில ஏழு மணி உனக்கு விடியக்காலையா, ஒரு குட் மார்னிங் மெஸ்ஸேஜ்தான அனுப்புறார். அது பொறுக்கலையா உனக்கு. சரி அது இருக்கட்டும் , அடுத்த வருஷம் இங்க இருக்கபோற மாதிரி சபதமெல்லாம் போடற, ஆன்சைட்லயே இருந்துடலாம்னு முடிவு பண்ணிட்டியா”
“என்னது இங்கவா போம்மா , நமக்கெல்லாம் இங்க வந்து யாருமில்லாம அனாதை மாதிரி இருக்கதெல்லாம் செட் ஆகாது. அம்மா, அப்பாவோட சொந்த பந்தங்களோட கூடி வாழனும்” என்ற மது தொடர்ந்து புலம்பினாள்.
“எனக்கு என்ன உன்ன மாதிரி இங்கயா மாப்ள பாக்க போறாங்க. தஞ்சாவூர், திருச்சின்னு எங்க பக்கம்தான் பாக்க போறாங்க. பேசாம அப்பாட்ட சொல்லி வீட்டோட மாப்பிளையா பாக்க சொல்ல வேண்டியதுதான். நா ஒரே பொண்ணு. எனக்காக இல்லனாலும் செல்லதுரை சேத்து வச்சிருக்க சொத்துக்காகவே எவனாவது வர மாட்டானா. என்ன ஒன்னு தாய் மீனாட்சியோட அராஜகத்துலயே தொடர்ந்து காலம் தள்ளனும்.” இப்படி சொன்ன மதுவை ஜனனி திரும்பி பார்த்தாள்.
“ஏன்டி உன்ன பாக்கிறவன் வீட்டோட மாப்பிள்ளையா என்ன, உனக்காகவே வீடு, வாசல், சொத்தெல்லாம் விட்டு விட்டு உன் பின்னாலாயே வந்துட மாட்டானா. எனக்கே உன்ன பார்த்தா பொறாமையா இருக்கும் . ஆண்டவன் ஒரே ஆள்கிட்ட அழகு, அறிவு, குணம்னு எல்லாத்தையும் சேத்து குடுத்துருக்கானேனு. தெரியுமா”
இப்படி சொன்னவளை திரும்பி வித்தியாசமாக பார்த்தாள் மது.
ஜனனியும் நல்ல அழகியே. ஸிரோ சைஸ் உடல்வாகு, கோதுமை நிறம், அடர்ந்த கூந்தலை தோள்வரை வெட்டி விட்டிருப்பாள். சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவள்.
அப்பா சென்ட்ரல் கவர்ன்மென்ட் எம்ப்ளாயி. அம்மா ஸ்டேட் கவர்ன்மென்ட் எம்ப்ளயி. ஒரே அண்ணன். திருமணம் ஆகிவிட்டது. ஒரு குழந்தையும் உண்டு. அண்ணன், அண்ணி இருவருமே டாக்டர்ஸ்.
வீட்டில் மாப்பிள்ளை பார்த்ததில் அமைந்த வரன்தான் சந்தோஷ். மது அவளையே பார்க்கவும்,
ஜனனி”என்னடி” என்றாள்.
அதற்கு மது “இல்ல உனக்கு என்ன குறைச்சல். ரொம்ப அழகு. எனக்கு தெரிஞ்சி நல்ல பொண்ணுதான், என்ன அறிவுதான் கொஞ்சூண்டு கம்மி, அதுக்கு ஈடாதான் நல்ல அறிவான மாப்பிள்ளையா வீட்ல பாத்துட்டாங்களே. அப்புறம் என்ன. இதுல என்ன பாத்து பொறாமையா இருக்குன்றியே, அதான் என்ன கலாய்க்குறியான்னு பார்த்தேன். இதுல தாய் மீனாட்சி வேற உன்ன பத்தி அப்படி புகழ்றாங்க .என்ன அறிவு, அடக்கமான பொண்ணு, அவளை பார்த்து கத்துக்கன்னு டெய்லி ஒரு தடவ என்னட்ட சொல்றாங்க”
“நா அழகுதான், அது எனக்கு தெரியும், ஆனா நீ பேரழகி மது , அது உனக்குதான் தெரிய மாட்டேங்குது”
“அப்படித்தான் இருக்கனும் ஜனனி செல்லம். டோன்ட் ஒர்ரி பீ ஹேப்பி” என்று ஜனனியின் கழுத்தை கட்டிக்கொண்டே அழைத்து போனாள் மது.
இவர்கள் இடது புறமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு வலது புறமாக மொனாஷ் யூனிவர்சிட்டி இருந்தது.
அப்பொழுது எதிர்புறத்தில் இருந்து வந்த கார் யூனிவெர்சிட்டிக்குள் திரும்பியது. கார் ஓட்டியவன் இவர்களையே பார்த்து கொண்டு சென்றான்.
ஜனனிதான் கேட்டாள் “யாரு இவன்,நம்ம ஊர் மாதிரிதான் தெரியுது,நம்மள சைட் அடிச்சிட்டு போறானா”
அதற்கு மது “ம்க்கும் சைட் அடிச்சிட்டாலும்…நம்ம மூக்கு மட்டும்தான் தெரியுது, இதுல எங்க இருந்து சைட் அடிக்கிறது. நார்த் இண்டியனா இருப்பானு நினைக்கிறேன். பாக்க மைதா மாவு மாதிரியே இருக்கான், ஆனா பாக்க நல்லாதான் இருக்கானு ” சொல்லிட்டு இருக்கும் போதே ‘
பின்னாடி இருந்து எஸ்க்கியூஸ்மி என்று ஒரு குரல் கேட்டது.
அந்த மைதா மாவுதான்,”ஹாய் ஐயம் பிரபஞ்சன் “என்றான்.
மதுவும், ஜனனியும் பேச வாயை திறக்குமுன்னே “நீங்க மதுமிதா,கரெக்ட் ” என்று கேட்டான்.
மதுவும்,ஜனனியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
ஜனனிதான் “நீங்க தமிழா,எங்களை எப்படி தெரியும்” என்று கேட்டாள் .
அதற்கு அவன் “தமிழ்தான். உங்கள சரியா தெரியாது, அவங்களை நல்லா தெரியும்” என்றான்.
அப்படி சொன்னவுடன் ஜனனிக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. ஆனால் அவன் அதற்காகவெல்லாம் காத்திருக்கவில்லை. தொடர்ந்து அவனே பேசினான்.
“நான் இங்க மொனாஷ் யூனிவெர்சிட்டில தான் M E முடிச்சிட்டு லெக்ச்சரரா இருக்கேன். இங்கயே Ph .D யும் பண்றேன். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஆஸ்திரேலியாதான். எங்க அம்மா,அப்பா இங்க வேல பார்க்க வந்தவங்க இங்கயே செட்டில் ஆயிட்டாங்க. நான் இங்கயே பொறந்ததனால இந்த ஊர் சிட்டிசன்”
என்று பெருமையாக முடித்துவிட்டு மதுவின் முகத்தை பார்த்தான்.
மது “அதுக்கு நான் என்ன செய்யணும் “என்று கேட்டாள்.
“இல்ல உங்கள ஒரு மாசமா இந்த ரோட்ல பாத்துட்டுருக்கேன். உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு . உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கானு சொல்லுங்க, உங்க வீட்ல எங்க அம்மா,அப்பாவை விட்டு பொண்ணு கேட்க சொல்றேன்” என்றான்.
மது உடனே பிடிக்கலன்னு சொல்லத்தான் வாயெடுத்தாள் .
அவள் சொல்ல போவதை தெரிந்து கொண்டே அவளுக்கு முன் ஜனனி “இல்லங்க, இன்னைக்குத்தான் உங்கள அவ பார்த்துருக்காளே, அதுக்குள்ள எப்படி பிடிச்சிருக்கா, பிடிக்கலையானு சொல்ல முடியும்” என்று கேட்டாள்.
“சரி அப்ப யோசிச்சிட்டு சொல்லுங்க நாளைக்கு இதே நேரம் பாக்கலாம்” என்று மதுவின் முகத்தை பார்த்தான்.
மதுவும் ஜனனியின் முகத்தை பார்த்துவிட்டு,”சரி” என்று அவனை பார்த்து தலையசைத்தாள்.
“அதுக்காக இவன மாதிரி ஆள்டயெல்லாம் உக்காந்து பஞ்சாயத்து பேசிட்டுருக்க சொல்றியா “
“ஒண்ணும் இல்ல, இன்னைக்கு சொல்ல வேண்டியதையே நாளைக்கு பொறுமையா சொல்லப்போறோம் அவ்ளோதான்”
“என்ன மானே, தேனே, பொன்மானேயெல்லாம் போட்டு , உன்னை எனக்கு பிடிக்கலனு சொல்ல போறோமா “
“ஆமா. வா இப்ப லேட்டாயிட்டு ஆபீஸ் போவோம் ” என்று மதுவை அன்று சமாதானபடுத்தி அழைத்து சென்று விட்டாள் ஜனனி.
மறுநாள் அதே நேரம் யூனிவர்சிட்டி வாசலிலேயே காத்திருந்தான் பிரபஞ்சன்.
தூரத்தில் வரும் போதே அவனை பார்த்து விட்டு மதுதான் சொன்னாள் “ஆள் பாக்க நல்லாருக்கான், ஆனா அவனோட ஆட்டிட்டியூட் பார்த்தியா ஜனனி, லெக்ச்சரரா இருந்து என்ன யூஸ் . நான் நினைக்கிறேன், இவன் வாய்தான் இவனுக்கு எதிரி, அத சொல்லிடுவோமா, வேற பொண்ணுங்ககிட்ட ப்ரொபோஸ் பண்ணும்போதாவது ஒழுங்கா பேசட்டும்” என்றாள் .
“அம்மா தாயே , அவனுக்கு அவன் வாய் பிரச்சனையோ இல்லையோ, உனக்கு உன் வாய்தான் கண்டிப்பா பிரச்சனை. தயவு செஞ்சு வேற எதுவும் அனாவசியமா பேசாம, ஒழுங்கா பேசி இன்னையோட அவன கட் பண்ணிட்டு வா” என்றாள் ஜனனி.
“ஒரு சமூக சேவை செய்யலாம்னா விடமாட்டீயே ” என்று சொல்லிக்கொண்டே அவனிடம் பேசப்போனாள் மது.
ஜனனி அவர்களை விட்டு சிறிது தூரம் நகர்ந்து சென்று நின்று கொண்டிருந்தாள்.
மது அருகில் சென்றவுடனேயே பிரபஞ்சன் மிகவும் ஆவலாக , “என்ன முடிவு செய்திருக்கிறீர்கள் மதுமிதா” என்று கேட்டான்.
“இல்லங்க சாரி, எங்க வீட்ல ஆஸ்திரேலியா மாப்பிளைக்கெல்லாம் பொண்ணு கொடுக்க மாட்டாங்க. நா ஒரே பொண்ணு. அவங்க பக்கத்திலதான் வச்சுக்கணும்னு ஆசைப்படுவாங்க. நீங்க இங்கவே செட்டில் ஆகணும்னு விரும்பற பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றாள் மது.
அவள் மறுப்பாள் என்று பிரபஞ்சன் எதிர் பார்க்கவில்லை போலும். அதிர்ச்சியில் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை அவன்.
சரியென்று மதுவும் கிளம்ப போனாள் . உடனே அவன், “நான் வேணுனா எங்க அம்மா,அப்பாவை விட்டு உங்க பேரெண்ட்ஸை கன்வின்ஸ் பண்ண சொல்லவா ” என்றான்.
அதற்கு மது “இல்லங்க,எனக்குமே இந்தியால இருக்கணும்னு தான் ஆசை. இங்க ஜஸ்ட் ஒன் இயர்காக தான் வந்துருக்கேன். வேற எதுவும் இல்லனா நா கிளம்பறேன்” என்றாள்.
அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான். எதையோ யோசித்து கொண்டிருந்தான் போலும். மதுவும் அவனிடம் வரேன் என்று தலையாட்டிட்டு கிளம்பிவிட்டாள்.
அந்நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரம் வரை மதுவும், ஜனனியும் அவனை வழியில் எங்கும் பார்க்கவில்லை.
அதனால் இருவரும், சரி புரிந்து கொண்டுவிட்டான் போலும் என்று நிம்மதியாக அவர்கள் வேலையை பார்த்தனர்.
ஆனால் ஒரு வாரம் முடிந்து ஜனனியும், மதுவும் கிளேட்டன் ஹவுஸ் ரெஸ்டாரண்டில் ஒரு மாலை நேரத்தில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, அவர்கள் டேபிளில் வந்து அனுமதி கேட்டுக்கொண்டு அமர்ந்தான்.
உன்னிடம் தனியாக பத்து நிமிடம் பேசவேண்டும் என்று மதுவிடம் கேட்டான்.
அதற்கு மது “நாந்தான் உங்களிடம் அன்னைக்கே தெளிவா சொல்லிட்டேனே, இன்னும் என்னிடம் உங்களுக்கு என்ன பேச வேண்டும் ” என்றாள்.
அதற்கு அவன் “இல்ல உனக்கு சரியா புரியல. நா இங்க என்ஜினீரிங்கில் பி.ஹெச் டி பண்றேன். அது சாதாரண விஷயமில்ல. எனக்கு இங்க சொந்தமா மூன்று வீடும், இன்னும் சில ப்ரோபெர்டிஸும் இருக்கு. நீ இப்ப தங்கியிருக்க வீட்டுக்கு ரெண்டே எவ்ளோ கொடுக்குற, யோசிச்சி பாரு. ஆஸ்திரேலியால சொந்த வீடு வச்சிருக்கறது ஒன்னும் அவ்ளோ ஈசியில்ல. உன்ன மாதிரி வேலை பாக்க வந்தவங்கதான் எங்க அம்மா,அப்பா. இங்க PR வாங்குறதுக்கு,சொந்தமா ஒரு வீடு வாங்குறதுக்கு அவ்ளோ கஷ்டபட்டங்களாம். உனக்கு அதெல்லாம் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா ஈஸியா கிடைக்கும் . எப்பேர்ப்பட்ட லைப் நீ வேண்டாம்னு சொல்றன்னு யோசிச்சி பாரு” என்றான்.
அவன் சொல்வதை கேட்டு ஜனனிக்கே கோபம் வந்துவிட்டது. ஆனால் மது அவனிடம் பொறுமையாக “ஓகே எனக்கு நீங்க சொல்றது புரியுது. ஆனா பாருங்க, நீங்க ஒரு பத்து, ஒரு இருபது, இல்ல ஒரு நூறு கோடி சொத்து வச்சிருப்பீங்களா. மதுமிதாவை அவ்ளோ சாதாரணமா நினைச்சிட்டிங்களா . பணம்,சொத்த காட்டினா மயங்கிடுவானு. அதுக்கு இதுக்கெல்லாம் ஆசைப்படற பொண்ணா நீங்க பாக்கணும் பிரபஞ்சன் சார். இனிமே எப்பவும் என்கிட்டே பேச ட்ரை பண்ணாதீங்க. வா ஜனனி போகலாம்” என்று சொல்லி ஜனனியை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டாள் மது.
அதன் பிறகு மறுநாள் காலை ஜனனியும், மதுவும் ஆபீஸ் செல்லும்போது பிரபஞ்சன் அவளிடம் வந்து “நான் சொல்றத நீ தப்பா புரிஞ்சிகிட்ட, எனக்கு ஒரு டென் மினிட்ஸ் டைம் கொடு, நான் உனக்கு புரிய வைக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு அவர்கள் பின்னால் வந்தான். ஆனால் மது நிற்கவேயில்லை.
தொடர்ந்து மூன்று, நான்கு முறை அவளிடம் பேச முயற்சி செய்தான். மது வாய்ப்பு கொடுக்கவே இல்லை.
அந்த பிரபஞ்சன் தான் இப்பொழுது மதுவும், ஹேரியும் பேசி சிரிப்பதை பார்த்து முறைத்து கொண்டிருந்தான்.
முதலில் அவனை பார்த்ததும் சிறிது சங்கடப்பட்ட மதுமிதா பிறகு தலையை சிலுப்பி கொண்டாள். இவன் என்ன என்னை பார்த்து முறைப்பது என்று அலட்சியத்துடன் திரும்பிக்கொண்டாள்.