அத்தியாயம் 6 :
பார்த்திபனும் மதுமிதாவும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். மிதமான குளிர் இருந்தது.பார்த்தி மதுவிடம் எதுவும் கேட்கவில்லை. அதுவே மதுவிற்கு சங்கடத்தை கொடுத்தது. ஆகையால் அவளே அண்ணா என்று ஆரம்பித்தாள்.
பார்த்தியும் அமைதியாக “என்ன மது”என்றான்.
“ஹேரி யார்னு நீங்க கேக்கவே இல்லியே”
“என்னட்ட சொல்லணும்னு இருந்தா நீயே சொல்வனுதான் வெயிட் பண்றேன் மது “
“ஆனாலும் நீங்க ரொம்ப அழுத்தம் ண்ணா “
“சரி சொல்லு யாரு அவர். நீ கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் பேசற அளவுக்கு எத்தனை நாள் பழக்கம்”
அண்ணா கோட்ட எடுத்து மாட்டிட்டாரே, லா பாய்ண்டா பேசுவாரே, ஆரம்பத்துலயே கண்ண கட்டுதே’ என்று மது மனதில் புலம்பி கொண்டிருக்கும் போதே, “நீ ஒழுங்கா மனசுல கவுண்டர் குடுக்காம வெளியே வாய திறந்து பதில் சொல்லு மது”
“அது ரெண்டு மணிநேரமெல்லாம் ஆகலண்ணா. நம்ம ஊர் கல்ச்சர் பத்தி பேசி தெரிஞ்சிட்டு இருந்தார்”
“எனக்கு ஒரு பத்து நிமிஷம் டைம் வாங்கி குடுங்க மதுகிட்ட பேசறதுக்குனு, உங்கட்ட கேட்டதுக்கு முடியாதுனு மறுத்தீங்க. அவ ரெண்டு மணிநேரமா இந்த ஊர்க்காரன் ஒருத்தன்ட பேசி சிரிச்சிட்ருக்கானு , அந்த பிரபஞ்சன் என்ன வழியிலேயே பாத்து கேட்டுட்டு போனான்.
பத்த வச்சிட்டயே பரட்ட என்று நினைத்த மது”அவன் கேட்டானா நீங்க சும்மாவா விட்டீங்க” என்று கோபமாக கேட்டாள்
“நா அவனுக்கு பதில் சொல்லிட்டேன். நீ இப்ப எனக்கு பதில் சொல்லு”
“சும்மா ட்ரைன்ல பக்கத்துல உக்காந்துருந்தாண்ணா , அப்டியே பேச ஆரம்பிச்சவன், நம்ம ஊர் பழக்க வழக்கம் பத்தி கேட்டுட்டே பின்னாடி வந்துட்டான். எப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பேச முடியாதுனு சொல்றது”
“சரி அவன்ட உன்னோட போன் நம்பர், அட்ரஸ் , உன் ஆபீஸ் அட்ரஸ் எதுவும் குடுத்தியா”
“இல்லண்ணா அவன் அதெல்லாம் எதுவும் கேக்கவே இல்ல”
“ஒ பரவால்லயே உள்நோக்கம் எதுவும் இல்லாமதான் பேசியிருப்பார் போல. இருந்தாலும் மறுபடி எங்காவது பார்த்தா நீ பாக்காத மாதிரி வந்துரு மது. தேவையில்லாம எந்த பிரச்சனையிலும் போய் வான்டெடா சிக்காத”
“சரிண்ணா ” (ஐயோ அண்ணா, இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே, இவன் நம்ம ஊரு பசங்க மாதிரி போன் நம்பர் , அட்ரஸ் கேக்கலண்ணா. டேட்டிங் வர்றியான்னு கேட்டுட்டாண்ணா கேட்டுட்டான் என்று மது மனதுக்குள் அங்கலாய்த்து கொண்டிருந்தாள் )
“என்ன மது அமைதியா வர்ற”
“ஒண்ணுல்லண்ணா ,
அம்மா ஈவினிங் பேசும்போது உங்கள கேட்டாங்க”
“நா கால் பண்ணி பேசிக்கிறேன் மது”
அதற்குள் மதுவின் அப்பார்ட்மெண்ட் வந்துவிட்டதால் “சரிண்ணா நீங்க கிளம்புங்க.நா போய்க்கிறேன் “என்றாள்.
“ஓகே மது பை “என்று கிளம்பிய பார்த்திக்கு மதுவை முதன் முதலில் சந்தித்த நாள் மனதில் ஓடியது.
இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு ஞாயிற்று கிழமை டேண்டிநாங் (dandenong) ஷிவா விஷ்ணு கோவிலுக்கு சென்றிருந்தான்.
மதியம் கிளம்பும்போது வெயில் இருந்தது.அதனால் ஜாக்கெட் போடாமல் கிளம்பிவிட்டான்.
சாமியை மட்டும் கும்பிட்டுவிட்டு சீக்கிரம் திரும்பியிருந்தால் பரவாயில்லை. எப்போதும் அவன் ரெஸ்டாரண்ட் சாப்பாட்டையே சாப்பிடுவதால் இங்கு கோயிலுக்கு வரும்போது மட்டும் , இங்கு இருக்கும் ரெஸ்டாரண்டில் சாப்பிடுவான். அன்றும் சாப்பிட்டுவிட்டு திரும்ப ஐந்து ஆகிவிட்டது.
திரும்பும்போது மதியம் இருந்த வெயில் இல்லை. குளிர் காற்று வீச ஆரம்பித்துவிட்டது. கோயிலில் இருந்து பஸ் ஏறி டேண்டிநாங் ட்ரெயின் ஸ்டேஷன் வந்து ட்ரெயின் ஏறி கிளேட்டன் ஸ்டேஷன் வரவேண்டும்.
ரெஸ்டாரண்டில் இருந்து வெளியில் வரும்போதே குளிர் தாங்கமுடியவில்லை. எப்படியோ சமாளித்துவிடலாம் என்று கிளம்பிவிட்டான். ஆனால் நடந்து பஸ் ஸ்டாண்ட் வருவதற்குள்ளாகவே மிகவும் சிரமப்பட்டுவிட்டான்.
இதில் பஸ் ஸ்டாண்டில் இரண்டு பெண்கள் நின்றிருந்தார்கள். இந்திய பெண்கள்.இருவருக்குள்ளும் ஏதோ வாதம் நடந்து கொண்டிருந்தது. பிறகு அந்த பெண்களில் ஒருத்தி பார்த்தியின் அருகில் வந்து ஆங்கிலத்தில் “ஹாய் ப்ரோ,உங்களுக்கு ரொம்ப குளிருது தான.நா காலையில் இங்கு மார்க்கெட்டில் ஷாப்பிங் பண்ணிவிட்டு வந்ததால் என்னிடம் புது ஜாக்கெட் உள்ளது.இதை நீங்கள் போட்டு கொள்ளுங்கள் ” என்று சொன்னாள்.
அந்த பெண்ணின் முகத்தை பார்த்த பார்த்தி ஜாக்கெட் வாங்கி அணிந்து கொண்டான். யூனிசெஃக்ஸ் ஜாக்கெட்தான். அளவு சிறியதாக இருந்தாலும் போட முடிந்தது. போட்டு முடித்தவடன் தமிழில் “ரொம்ப நன்றி, உன் பெயர் என்ன ” என்று கேட்டான்.
“ப்ரோ நீங்க தமிழா, நான் மதுமிதா, இது என் பிரென்ட் ஜனனி” என்று ஜனனியையும் அருகில் கூப்பிட்டு அறிமுக படுத்தினாள்.
“அது என்ன ப்ரோ. ஒழுங்கா அண்ணான்னு கூப்பிடு, தெரியாத ஊர்ல வந்து முன்னபின்ன தெரியாத பையன்கிட்ட உதவியே செய்ய போனாலும், இப்படித்தான் வந்து அனாவசியமா பேசறதா. கொஞ்சம் கூட முன் யோசனையே கிடையாதா. உன் பிரென்ட் உன்ன போகக்கூடாது அமைதியா இருன்னு சொன்னாள்ல , அமைதியா இருந்தா என்ன”
அதற்குள் ஜனனியும் “சாரிண்ணா. உங்களுக்கு குடுக்க கூடாதுனு சொல்லல” என்றாள்.
“இல்லம்மா பரவால்ல, உன்ன மாதிரிதான் பொண்ணுங்க பொறுப்பா இருக்கணும்” என்றான்.
அவனை ஆச்சரியமாக பார்த்த மது, “அண்ணா அப்படியே மீனாட்சி 2.0 பார்த்த மாதிரி இருக்கு” என்றாள்.
“அந்த மீனாட்சி 1.0 யாரு”
“வேற யாரு என்ன பெத்த தாய் மீனாட்சிதான்”
“அதுசரி.எந்த ஊர் நீ”
“தஞ்சாவூர்ண்ணா “
“ஹே நானும் தஞ்சாவூர் தான்.”
“அண்ணா நா பாபநாசம், ஆனா அம்மாதான் தஞ்சாவூர் ஹை ஸ்கூல்ல வேல பார்த்தாங்க”
“எங்க அம்மாவும் அதே ஸ்கூல்லதான் வேலைபாக்கிறாங்க “என்று பேசிகொண்டவர்கள் அம்மாக்களை அழைத்து பேசி அவர்களும் தோழிகளானதால் இவர்களும் நெருங்கி விட்டார்கள்.
அதிலும் மீனாட்சி மதுவை பற்றி சொல்லி அவளை பார்த்து கொள்ள கூறியதால் அன்றிலிருந்து மதுவை பார்த்துக்கொள்ளும் கடினமான பணியும் பார்த்திபனிடம் சேர்ந்துவிட்டது .
பார்த்திபன் தஞ்சாவூரை சேர்ந்தவன். தந்தை ராஜேந்திரன். தாய் சாவித்திரி. ஒரு அக்கா மற்றும் ஒரு தங்கை என்று இரு பெண்களுடன் பிறந்தவன்.
பார்த்திபன் அப்பா ராஜேந்திரன் அவனுக்கு பன்னிரண்டு வயதாகும்போது ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். தாய் சாவித்ரி கவொர்ன்மெண்ட் ஸ்கூலில் ஆசிரியையாக இருந்ததால் பிள்ளைகளை தனி ஆளாகவே நல்ல படியாக வளர்த்துவிட்டார்.
ராஜேந்திரன் ஒரு உணவகம் நடத்தி வந்தார். அவர் இறந்தபிறகு சாவித்திரி அதை விற்றுவிட்டார். ராஜேந்திரன் விபத்தில் இறந்ததால் அதற்கு ஒரு இழப்பீட்டு தொகை வந்தது. அந்த தொகையையும், ஹோட்டல் விற்ற பணத்தையும் பெண்கள் பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்தார்.
பார்த்திபன் சிறுவயதில் தந்தையுடன் உணவகம் சென்று அவர் சமைத்ததை பார்த்து அவனுக்கும் சமையலில் ஈடுபாடு வந்துவிட்டது.
அதனால் பள்ளிப்படிப்பு முடிந்ததும் கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் எடுத்து படித்தான் .அவனுக்கு தஞ்சாவூரில் ஒரு பெரிய உணவகம் நடத்த வேண்டும் என்று ஆசை, அவன் தந்தையை போல.
தாய் தந்தை சேமிப்பை இரு சகோதரிகளுக்கே வைத்து விட்டான். அக்கா வானதியை திருமணம் செய்து கொடுத்துவிட்டான். அவளுக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரு குழந்தைகள் உண்டு. அவளின் கணவன் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவன்.இப்பொழுது சவுதியில் வேலையில் இருக்கிறான். அவன் அக்கா, மாமனார் மாமியாரோடு கும்பகோணத்தில் இருக்கிறாள்.
தங்கை பூங்குழலி,M.Sc,M.Phil முடித்துவிட்டு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து கொண்டிருக்கிறாள். இருபத்தைந்து வயதாகிறது. கடந்த ஒரு வருடமாக வரன் பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றும் சரியாக அமையவில்லை.
பார்த்திபன் பெரிய உணவகம் நடத்த பணம் சேர்க்கவே பாரினில் வேலை பார்த்து வருகிறான். சிறுவயதில் இருந்தே பொறுப்பானவன். தந்தையும் இல்லாமல் மூன்று பெண்களோடு இருந்ததால், அவனுக்கு விவேகம் அதிகம். இப்பொழுது கூடுதலாக மதுவின் பொறுப்பும் சேர்ந்துவிட்டது.
மெல்பெர்ன் டூரக். வசதியானவர்கள் வசிக்கும் அந்த ஏரியாவில் உள்ள ஒரு பங்களாவின் உள்ளேயே அமைந்துள்ள பாரில் ஜான் விஸ்கியை அருந்தி கொண்டே ஹேரியை வித்தியாசமாக பார்த்து கொண்டிருந்தான்.
ஆம் பின்னே, இரவு பத்து மணிக்கு தயிர் சாப்பிடுபவனை அப்படித்தானே பார்ப்பான்.
இன்று ஹேரி வருத்தமாக இருந்ததால் அவனுக்கு கம்பெனி கொடுப்போம் என்று தான் ஜான் அவன் வீட்டிற்கு போகாமல் ஹேரியின் வீட்டிலேயே தங்கினான்.
அவன் என்னடாவென்றால் வந்ததிலிருந்து எதுவும் பேசாமல் கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருந்தான். இப்படியே விட்டால் சரியாக இருக்காது என்று “என்னாச்சு ஹேரி உனக்கு” என்று கேட்டான்.
“ஏன்”
“இந்த நேரத்தில் தயிர் சாப்பிடுற”
“அது ஸ்பைசி புட் சாப்பிட்டுவிட்டேன்.அதான் வயிறு கொஞ்சம் எரியிற மாதிரி இருந்தது”
“ஓ, நீதான் நல்ல காரம் சாப்பிடுவியே”
“நானும் அப்படி நினைச்சுதான் சாப்பிட்டேன். ஆனா அது பேரே கார சட்னியாம். பாக்க அழகா இருந்தது. ஆனா செம்ம காரம். சவுத் இண்டியன் டிஷ் “
“இண்டியன் புட்டா ? எதுக்கு இன்னைக்கு அதை சாப்பிட்ட. மொதல்ல கிளேட்டனுக்கு எதுக்கு போன”
“ஒரு பொண்ணுகிட்ட டேட்டிங் கேக்க போனேன். அவ சாப்பிட்டதால் நானும் சாப்பிட்டேன்”
“வாட்.டேட்டிங்கா . இந்தியன் கேர்ளா .”
“ம்”
“வெரி இன்டெரெஸ்ட்டிங். தேங்க் காட், இத்தன வருஷம் கழிச்சு உனக்கு ஒரு பொண்ண பிடிச்சிருக்கே. நா கூட காலம் பூரா உனக்கு நான்தான் கம்பனி குடுக்குமோனு நினைச்சி பயந்துட்ருந்தேன். ஏற்கனவே பாதிநாள் உன்கூடதான் இருக்கேனு அமெலியா சொல்லிட்டுருக்கா. என்னைக்கு பிரேக்கப் பண்ண போறாளோ”
“அப்ப நீ முதல்ல அவளை பிரேக்கப் பண்ணிடு”
இப்படி சொல்லிய ஹெரியை ஜான் முறைத்தான்.
அமெலியா ஜானின் கேர்ள் பிரண்ட். அவளை ஹேரிக்கு சுத்தமாக பிடிக்காது.ஏனென்றால் ஜானோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்துகொண்டே ஹேரியிடம் டேட்டிங் கேட்டாள். அதை ஜானிடம் கூறினால், அவன் எனக்கு தெரியும், என்னிடம் கேட்டுவிட்டுதான் உன்னிடம் கேட்டாள் என்றான். இருந்தாலும் ஹேரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளை பற்றி பேசினாலே கடுப்பாகி விடுவான் .
“டேய் இப்ப உன்னோட டேட்டிங் பத்தி சொல்லு. என்னைக்கு பிக்ஸ் பண்ணிருக்க”என்று ஜான் கேட்டான்.
அதற்கு ஹேரி “அவ டேட்டிங் வரமுடியாதுனு சொல்லிட்டா”என்றான்.
“வாட்?உன்ன ஒரு பொண்ணு மறுத்துட்டாளா. அவளுக்கு என்ன பைத்தியமா.ஏன் மறுத்தா “
“என்ன ஜே . உன் பிரென்ட் உனக்கு பெருசுனா எல்லாருக்கும் அப்படியா. அவளுக்கு என்ன பிடிக்காம இருந்துருக்கலாம்”
“டேய். நீ வேற ரீசன் சொல்லு. கண்ணு இருக்க எந்த பொண்ணுக்கும் உன்ன பிடிக்காம போகாது”
“அப்படிங்கரியா” என்று கேட்டவனை ஜான் யோசனையோடு பார்த்தான்.
பிறகு ஹேரியை பார்த்து, “இன்னைக்கு நீ என்னைவிட்டு போனபிறகு நடந்தத முழுசா சொல்லு” என்றான்.
ஹேரியும் மதுவை சந்தித்தது முதல் நடந்தவற்றை கூறினான்.
அதை கேட்டவுடன் ஜான் உருண்டு பிரண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான்.