புன்னகை – 1
வீடு முழுவதும் சாம்பிராணி புகையால் நிறைந்திருக்க பூஜை அறையில் கண்ணை மூடி உதடுகளில் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருந்தார் தெய்வத்தாய்.
‘ஷஷ்டியை நோக்க’ என்று கந்தஷஷ்டி கவசம் டிவியில் ஓடிக்கொண்டிருக்க தெய்வத்தாய் முகத்தில் அப்படி ஒரு தீவிரபாவனை. எப்படியேனும் தன் வேண்டுதல் நிறைவேற வேண்டுமே என்னும் மனமுருகும் பிராத்தனை.
சென்னையின் முக்கியப்பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஐந்தாம் தளத்தில் இருந்தது அவரின் வீடு.
அருமை மகன் வசிக்கும் வீடு. அவனுமே சென்னை வந்து ஆறு மாதங்கள் தான் கடந்திருக்கிறது.
சொந்த ஊர் மதுரை என்றலும் பெரும்பாலும் மகனுடன் தான் வசிப்பிடம். இப்பொழுதும் ஒரு முக்கியமான வேலையாக தான் மகனிடம் வந்திருக்கிறார்.
இரண்டு படுக்கையறை, அளவான வரவேற்பறை, பூஜையறை, ஓபன் கிட்சன் என சிறு வீடு தான் என்றாலும் அவர்களுக்கு போதுமானதாய் இருந்த ஒன்று.
இன்றைய தினம் அவருக்கும் அவரின் மகனுக்கும் மிக முக்கியமான நாளாகும். மனதிற்குள் தெய்வத்திடமும் இறைவனடியில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆன தன் கணவரிடமும் மனமுருகி வேண்டிக்கொண்டு இருந்தார்.
அதற்கு இடைஞ்சலாக உடனே யூட்யூப்பில் பாட்டை மாற்றி சத்தத்தை ஏற்றியிருந்தான் ஜீவன்.
“எனக்கு நீ ஈசியாலாம் வேணாம். பேசி பேசி கரெக்ட் பண்ணுவேன் நான் னா. தொல்ல பண்ணி அலையாம திரியாம கிடைக்கிற காதலே வேணாம் வேணாம்…” என ஜீவாவும் பாட்டோடு சேர்ந்து கத்திக்கொண்டு இருக்க தெய்வாவின் கோபத்திற்கு அளவில்லை.
குளித்துவிட்டு வந்தவன் இன்னும் சரியாக கூட துவட்டாமல் இங்குமங்கும் ஆடிப்பாடிக்கொண்டு இருக்க அவனின் தாயின் முகம் கடுகடுவென்று இருந்தது.
“இவனுக்கு பொண்ணு பார்க்க வந்துட்டு என் நிம்மதி தான் போகுது….” என புலம்பிக்கொண்டு இருந்தார்.
“தாய்க்கிழவி…” என்று எழுந்து பூஜையிலிருந்து வந்தவரின் கன்னத்தை வலிக்க கிள்ளியவன்,
“டிபன் ரெடியா?…” என்றான் மூன்று பேர் அமரும் சோபாவில் அமர்ந்து டீப்பாயில் இருந்த ஹாட்பாக்சை திறந்து பார்த்து.
“ப்ச், என்னடா இது? இப்படி வந்து இருக்கற?….” என இன்னொரு துண்டை எடுத்து வந்து அவனின் தலையை துவட்டிவிட அவன் பாட்டை மாற்றிக்கொண்டு இருந்தான்.
“நான் சொன்னதெல்லாம் புரிஞ்சதா?…”
“ஹ்ம்ம்…”
“என்ன சொன்னேன்?…”
“அதான் சொல்லிட்டியே? திரும்ப திரும்பவெல்லாம் சொல்லமுடியாதும்மா. படுத்தாத…” என்றான் அசட்டையாய்.
“இது உன் வாழ்க்கை. உனக்கு அதை நினைச்சு பயமில்லாம இருக்கலாம். ஆனா எனக்கு இருக்கேடா தம்பி…” என்று வருத்தத்தோடு சொல்ல,
“இன்சுலின் இன்ஜெக்ஷன் போடனும். நீ இப்படி உட்காரு. நான் போய் எடுத்துட்டு வரேன்…” என்று அவன் எழுந்து உள்ளே செல்ல,
“ப்ச், கல்யாணத்தை பத்தி பேசினாலே ஓடறான்…” என முணங்க,
“அதனால தான எல்லாம் பேசி முடிச்சு அடுத்த மாசம் கல்யாணம்னு எனக்கு தகவல் சொல்ல வந்திருக்க. இல்லைன்னா பொண்ணை பாருன்னு கூட்டிட்டு போய்ருப்ப தானே?…” என்று வந்தவன் இன்சுலின் மருந்தை அவருக்கு ஏற்றிவிட்டு,
“வலிக்குதாத்தா?…” என கேட்டு பஞ்சை வைத்து தடவி விட அவனின் தலையை வாஞ்சையாய் தடவிக்கொண்டுத்தவர்,
“நித்தமும் இந்த மருந்த உடம்புல ஏத்துறதுக்கு பதிலா ஒட்டுக்கா ஒரு மருந்த கண்டுபிடிச்சு மாத்தரையா குடுத்தா சுவமா இருக்கும்ல…” என்று தெய்வா சொல்ல,
“உம்மவன் டாக்டருக்குத்தான் படிச்சான். கண்டுபுடிச்ச மருந்த வச்சு வைத்தியம் வேணா பண்ணுவேன். வைத்தியத்துக்கே வைத்தியம் பண்ண எனக்காவாதுத்தா…” என்று கிண்டலாய் பேச,
“மேல படின்னாலும் வேணாம்ங்குற…”
“அது சரி, கல்யாணத்தையும் பண்ணிவச்சு என் புள்ளையோட என்னையும் படிக்கனுப்பினா என் பொண்டாடிக்கு யாரு சோறு போடுவாங்களாம்?…” என பேசியபடி உடை மாற்றிக்கொண்டு வந்தான்.
“பேச்சுல ஒன்னும் குறைச்சல் இல்லை…” எனதெய்வா நொடிக்க,
“எனக்கென்ன குறைச்சல்ன்னு ஊருக்கே தெரிஞ்சுருச்சாம். இதுல உனக்கு தான் தெரியலை. அட போத்தா…” என்று கிண்டல் பேசி சாப்பிட அமர தெய்வா முகம் கலங்கி கண்ணீர் பொங்கிவிட்டது.
“ப்ச், இந்தாம்மா இப்படி நீ அழுதழுது எனக்கு ஆக்கி போட வேண்டாம். மொத ஊருக்கு கிளம்பு…” என்று தாயின் கண்ணீரை பார்க்கமுடியாமல் ஜீவா கத்த,
“ப்ச், சும்மா ரெண்டு சொட்டு தண்ணி கண்ணுல நின்னுட கூடாதே. பொறுக்காது…” என்று தெய்வாவும் அவனை போலவே கத்திவிட்டு அவனுக்கு பரிமாற,
“எனக்கு கை இருக்குது…” என்றான் அவரின் கையை தட்டி விட்டவனாக. அதையெல்லாம் கண்டுகொள்ளாதவர்,
“ஜீவா, பொண்ணு அம்சமா இருக்குதுப்பா. சாதுவாவும் தெரியுது. பேச்சும் பேர போலவே தேனாட்டம் தான்…” என பேசிக்கொண்டே,
“நமக்கொரு குறை மாதிரி அவங்களுக்கும் தான். இனி நம்மளை யாரும் பேசிட முடியாதுல…”
பேச்சு போக்கில் வாய்தவறி சொல்லிவிட சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் கை அப்படியே அசையாமல் நிற்கவும் தான் தான் பேசிய வார்த்தைகளின் வீரியத்தையே உணர்ந்தார்.
“ஜீவா…” என அதிர்வுடன் மகனை பார்க்க,
“ஒண்ணுமில்லை, இத்தனை நாள் நம்ம ஊரே சொல்லுச்சு. சொந்தங்களும் கூட. இப்ப நீ சொல்ற. அவ்வளவு தான். இதுல என்ன இருக்கு. என்ன ஒன்னு நீ எப்பவும் போலவே சொல்லியிருக்கலாம். இல்லை இல்லைன்னு சொல்லி பேச்சுவாக்குல சொல்லிட்ட…” என்றவனிடம்,
“அய்யய்யோ அதை அப்படி சொல்லலை ஜீவா. நான் அந்த குறையை அவங்க சொன்னதை அர்த்தப்படுத்தி சொல்லலைய்யா. சத்தியமா…” என்று மகனிடம் பதறி பேச,
“அப்போ ரெண்டாவதா கல்யாணம் செய்யறது ஒரு குறைன்னு சொல்றியா? முதல் கல்யாணம் சரிவராம போய் இரண்டாவதா செஞ்சா அதுவும் ஊனம் மாதிரின்னு சொல்ற…”
அவனின் பேச்சில் வேதனையோ, வருத்தமோ எதுவும் இல்லை. சாதாரணமாக சாப்பிட்டாயா? தூங்கினாயா? படித்தாயா? என்பதை போல் வார்த்தை உரையாடல் தான்.
ஆனாலும் அதற்கு பின்னால் அவனின் வேதனை என்ன என்பதை அறிந்தவராகிற்றே தெய்வத்தாய்.
“கண்ணு, இப்படிலாம் பேசி ஆத்தாவை கூறு போடாத…” என குரல் நடுங்க சொல்லியவர் கண்ணீர் வருவதை பெரும்பாடுபட்டு அடக்கினார்.
“ப்ச், அதை விடு. சும்மா இதையே பேசிட்டு. அந்த பொண்ணுக்கு என்னை பிடிக்குமா? நீ பாட்டுக்கு நாளெலாம் குறிச்சு அவங்க வீட்டுக்கே போய் பேசி முடிச்சுட்ட. நம்ம சொந்தத்துக்கு சொல்லியனுப்பிட்ட. அக்கா என்ன சொன்னா?…”
“அகல் கண்ணு என்ன சொல்லுவா. அவளுக்கு ரொம்ப சந்தோஷம். இப்பவாச்சும் இவன் சரின்னானேன்னு நிம்மதியா இருக்கா. கல்யாணத்துக்கு பத்துநா முன்னாடியே வாரேன்னுட்டா…” என்றவர்,
“இன்னைக்கு அந்த பொண்ணுக்கிட்ட செத்த பதவிசா பேசிடு தம்பி. அதுவும் பாவந்தானே?…”
“இதானே வேணாங்கறது. இந்த பாவம் பாத்து கட்டிவைக்கிறது எல்லாம் சரிவராது…” என்று பட்டென்று அவன் சொல்ல,
“என்னது…” என திடுக்கிட்டு போனார்.
“இன்னொருவாட்டி பாவம்னு சொல்லாத. யாரும் தெரிஞ்சும் ஒன்னும் செய்யல. தெரியாமையும்…” என்றவனின் மொபைல் சத்தத்தில் திரும்பியவன் அதை எடுத்து,
“ஹலோ, எஸ் டாக்டர் ஜீவன் தான் பேசறேன். ஆஃப் டே தான் பர்மிஷன். ஆஃப்டர் நூன் வந்திருவேன். ஹ்ம்ம், கன்பார்ம்….” என பேசிவிட்டு திரும்பியவன்,
“அவங்கட்ட பேசிட்டியா நீ? எப்போ வராங்களாம்?…” என்றபடி ஷர்ட்டை டர்க் இன் செய்ய அதை பார்த்தவர்,
“என்னடா சட்டை இது? நான் எடுத்து தரதை போட்டுட்டு போ….” என ஒரு ஷர்ட்டை எடுத்துக்கொண்டுவந்து தர அதை பார்த்ததுமே ஜீவனின் கண்களில் கோபம் தெறித்தது.
“ம்மா, இதை எல்லாம் போட்டுட்டு போனா மாப்பிள்ளைன்னு சொல்லமாட்டாங்க. மோளம் அடிக்கும் போது என்னை கூட்டிட்டு வந்த மாதிரி தான் பார்ப்பாங்க. சும்மா இரு…” என்றான் கடுப்பாக.
“இந்த சட்டையை நீ வேலைக்கு போறப்போ போட்டுக்கோ. இப்ப நான் குடுக்கறதை மாத்து…” என்று தெய்வா பிடிவாதமாய் நிற்க அந்த சட்டையை வாங்கி பார்த்தவனுக்கு கண்கள் பூத்து போனது.
பச்சை நிறத்தில் சில்க் துணியில் இருந்த சட்டையை பார்க்கும் போதே அதை போட்டுக்கொண்டு கையில் இரண்டு குச்சியுடன் கொட்டு வாசிப்பதை போல தோன்ற தலையை உலுக்கிக்கொண்டவன் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
“போறது கோவிலுக்கு, இப்படித்தான் மங்களகரமா போகனும்…” தெய்வா சொல்ல,
“நல்லவேளை மங்களகரமான்னு மஞ்சள்ள எடுத்துட்டு வராம போனியே…” என இன்னும் சிரிக்க,
“இன்னொன்னு எடுத்து ஊருல தைக்க குடுத்திருக்கேன். அங்க வரப்போ நம்ம குலதெய்வம் கோவிலுக்கு மருமகளோட போறப்போ அதை போட்டுக்குவியாம்…” என்று அவனின் சிரிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க,
“டெய்லர் ஊரைவிட்டே ஒடிரனும்னு இப்பவே வேண்டிக்கறேன்…” என்று எதார்த்தமாய் அவன் சொல்ல அவனின் ‘வேண்டிக்கறேன்’ என்ற வார்த்தையில் தெய்வாவின் பார்வை மகனை துளைத்தது.
மூன்று வருடங்கள் ஆகிவிட்டது ஜீவன் கோவில், சாமி என்று வேண்டிக்கொண்டு. தந்தையின் இறப்பு. அதிலும் தன்னைக்கொண்டே எனும் பொழுது மருத்துவனாய் அவன் அவ்விடத்தில் தோற்றுவிட்டதாகவே உணர்ந்தான்.
தன்னை வைத்து, தன் விருப்பத்தில், தன் ஆசையில் அவரின் இறுதி நாள் குறிப்பிடப்பட்டிருப்பதை அவன் நினைத்தும் பார்த்தான் இல்லை.
ஆசைகொண்டு ஆரம்பித்த வாழ்வு. மகனுக்காகவே அவனின் ஆசைக்காகவே அவனுக்கு பெற்றோர்கள் அமைத்துக்கொடுத்த வாழ்வு. அந்த வாழ்க்கை அவனுக்கு மகிழ்ச்சி அளிக்காமல் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் கூடவே ஜெயவீரனின் உயிரையும் எடுத்து சென்றது.
திருமணவாழ்வின் தோல்வி விவாகரத்தில் சென்று நிற்க மனைவியின் குற்றசாட்டு வேறு ஊராரின் முன்னால் குடும்பம் மானத்தையும், கௌரவத்தையும் சிதைத்துவிட்டது.
அப்பொழுது கூட திடமாய் இருந்தவன் தந்தையின் உயிரும் பிரிய நிலைகுலைந்து போனான். அவன் அப்படி இருந்தது ஒருசில மாதங்களே.
அதன் பின்னர் தன்னை மீட்டு, தாயையும் மீட்ட்டுக்கொண்டவனின் வழக்கமான இயல்புகள் சுற்றியிருந்தவர்களை உறுத்த ஆளுக்கொன்றாய் பேச ஆரம்பித்தனர். பொறுத்து பார்த்தவன்,
“அதான் வேண்டாம்னு போய்ட்டாளே. அதுக்குன்னு என்னை மூலைல உட்கார்ந்து முட்டி போட்டு அழ சொல்றீங்களா? இல்லை தாடி வளர்த்துட்டு தண்ணியடிச்சுட்டு புலம்ப சொல்றீங்களா? என்னால அதெல்லாம் முடியாது…”
“இப்படித்தான் வளர்ந்தேன். திடீர்ன்னு ஒருத்தி வந்து என்னை தூக்கி எறிஞ்சுட்டு போனதும் நான் என்னோட இயல்பை மாத்திக்கனுமா? சான்சே இல்லை. நான் எப்பவும் இப்படித்தானே? இப்போ மட்டும் அது ஏன் உறுத்துது உங்களுக்கெல்லாம்?…” என்று வெடித்தான் ஜீவன்.
தகப்பனின் இழப்பு மிகப்பெரும் வேதனை தான். அதை கட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் உறவுகளுக்கு மத்தியில் தனித்து தெரிந்தான் ஜீவன்.
அவனின் ஜீவனை கொஞ்சம் கொஞ்சமாக பேசியே குறைக்க நினைக்க அவனோ ‘போங்கடா நீங்களும் உங்க ஆறுதலும்’ என்று நிமிர்ந்து நின்றான்.