தெய்வா தான் உயிர் மருகி போனார். விரும்பி விரும்பி வாழ வந்தவளே மகனை வீதியில் வீசி சென்ற அவலம். அதிலும் போனவள் தன்னுடைய பூவையும் சேர்த்து பறித்து சென்றது இன்னும் கொடுமை.
இதில் ஊரார் வேறு மகனை இன்னும் பேச சுத்தமாய் நொறுங்கி போனார் அவர். இதில் மகன் வேறு தெய்வநம்பிக்கை இழந்து, உறவுகள் மீது வேறு பெரிதாக ஈடுபாடில்லாமல் வாழ ஆரம்பித்திருந்தான்.
இன்னொரு திருமணம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்பது அவனின் வார்த்தையில் என்றுமே வந்ததில்லை. ஆனால் செயலில் அப்படித்தான் இருக்கும்.
முதலில் சொந்தங்களில் தான் ஜீவனிற்கு பெண் பார்த்தது. அவனின் முதல் மனைவி விவாகரத்தானதற்கான காரணம் பெரிதென்றால் ஜீவன் இயல்பு அவர்களை தள்ளி நிறுத்தியது.
“இங்க பாரு தெய்வா, உன் மகன்றதுக்காகவேண்டி பொண்ணை குடுக்கலாம். கோர்ட்டு சொல்லுறதை எல்லாம் நம்பலை தான். ஆனாலும் ஒரு மட்டுமருவாதி இல்லாதவனால இருக்கான். என்னன்னு பொண்ணை கட்டி வைக்க?…”
ஜீவாவின் திருமணத்திற்கு முன்பு வந்து ‘அது எப்படி வெளியில் இருந்து பெண் எடுக்கலாம்? நாங்கள் சொந்தத்தில் காத்துக்கொண்டிருக்க வசதி பார்த்து முடித்தீர்களா?’ என்று ஆளாளுக்கு உரிமையாக சண்டையிட்டதெல்லாம் மறந்துவிட்டனர் போலும் என நினைத்துகொள்வார் தெய்வா.
அந்தளவிற்கு ஜீவாவிற்கு பெண் தர நான் நீ என போட்டியில் இருக்க இப்பொழுது இரண்டாவது திருமணம், அதிலும் அவனின் தன்னம்பிக்கையான பேச்சு அவர்களை அதிருப்தி அடைய செய்திருந்தது.
சிலர் பெண்ணை கொடுக்க தயாராக இருந்தாலும் ஜீவா தங்கள் சொல்படி கேட்டு காலுக்கடியில் கிடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அதற்கு தெய்வாவே விரும்பவில்லை.
‘நீங்களும் ஆச்சு, உங்க பொண்ணுங்களும் ஆச்சு’ என்றுவிட்டார் அவர்.
“என்னம்மா கொசுவத்தி பொசுங்கி முடிஞ்சதா? ஏகப்பட்ட கொசு மட்டையாகிருக்குமே?…” என்று வந்து நின்ற மகனை பார்த்தவரின் கண்கள் பனித்தது.
அவர் எடுத்து தந்த சட்டையில் வந்து நின்றவனை நெருங்கி நெட்டிமுறித்து திருஷ்டி கழித்தவர்,
“இப்பத்தான் ராசாவாட்டம் இருக்க…” என்று சொல்ல,
“அப்படியே ஒரு சொம்பை கொண்டாந்தேனா போற வழில ஒரு மாட்டை பிடிச்சு பாலை கறந்துடுவேன். என்னை பார்க்க செண்பகமே செண்பகமேன்னு பாடற மாதிரியே இருக்குதுல…” என்று சிரிக்க,
“உனக்கு வேற சோலிக்கழுதை கிடையாது. போடா போடா…” என்றவர் தானும் சாப்பிடு முடித்து கிளம்ப,
“ம்மா, எங்க ஓடற? கார் புக் பண்ணிருக்கேன். வெய்ட் பண்ணு…” என்று டிவியை போட்டுவிட்டு அமர்ந்தவன் மொபைலில் கார் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்று பார்த்தான்.
“ஏன்ய்யா அதான் மோட்டாரு சைக்கிள் இருக்குதுல. அதுல போகத்தான?…” என்று சிரிப்புடன் சொல்ல,
“அதுக்கு உன்னை நடத்தியே கூட்டிட்டு போய்டுவேன். போத்தா கடுப்ப கிளப்பாம. என்னமோ கதவில்லாத பிளைட்டுல உன்னை ஏத்தி விட்டுட்ட மாதிரி வண்டியை உலுக்கியே என்னையும் தரைக்கு சாய்ச்சிடுவ. சட்டையும் சரியில்ல. எதாச்சும் தொரத்தினா உன்னை அம்போன்னு வண்டியோட போட்டுட்டு ஓடிருவேன் பார்த்துக்க…”
இப்படி இருவருமாக பேசிக்கொண்டிருக்க கார் அருகே வந்துவிட்டதை பார்த்த ஜீவா,
“கிளம்பும்மா…” என்று டிவியை அமர்த்திவிட்டு மற்ற விளக்குகள், பேன் எல்லாம் அணைத்துவிட்டாகிற்றா என்று அறைகளுக்குள் சென்று பார்த்து பாத்ரூமில் ஒருமுறை சரிபார்த்து என்று கதவை மூடிக்கொண்டு வந்தான்.
“என்னம்மா லிப்ட் பட்டனை அமுக்க வேண்டியது தான?…” என கேட்டு அதையும் தாயையே செய்ய வைத்து கூட்டிக்கொண்டு கீழே இறங்கினான்.
மகனும் சரி, தாயும் சரி தங்களின் பிறப்பிடத்தை மறவாமலே இருந்தார்கள் எவ்விடத்திலும். காரில் செல்லும் பொழுது இருவருமே பேசிக்கொள்ளவில்லை.
இந்த முறை மகனை கேட்காமல் தான் அனைத்தும் ஏற்பாடு. சொல்லிவிட்டு செய்தால் தான் கைகூடாமல் போகிறதோ என்று இவர் மருக ‘நீயே பார்த்துவிட்டு சொல்’ என்றுவிட்டான் ஜீவன்.
அதிலும் முதல் திருமணம் அவனின் விருப்பம். அவனுக்காக சம்மதித்து அவனுக்கு அமைந்த வாழ்க்கை சரியில்லை என்றதும் இரண்டாவது பற்றி பேச முதலில் மறுத்துவிட்டான்.
‘இந்த முறையாவது உன் வாழ்க்கையை எங்களிடம் விட்டுவிடு. சரிசெய்கிறோம்.’ என தாயும், இன்னொரு தாயை போன்ற தன் அக்காவும் சேர்ந்து சொல்ல மறுக்கமுடியவில்லை அவனால்.
எல்லாம் பேசி கைகூடிவரும் வேளையில் ஏதோ ஒரு தடங்கல் ஏற்பட்டு திருமணம் நின்றுவிடும்.
அதனால் இந்த முறை அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டே ஜீவனை அழைத்துக்கொண்டு அப்பெண்ணை பார்க்க செல்கிறார் தெய்வா.
இங்கே பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதை விட மகனின் காயத்திற்கு அப்பெண் மருந்தாக இருப்பாள் என்ற எண்ணத்தில் தான் பேசி முடித்தது.
கோவில் வந்துவிட காருக்கு பணத்தை தந்தவன் அவருடன் கோவிலுக்குள் நுழைந்தான். கோவிலுக்கு செல்வான், தாய் நெற்றியில் தீற்றிவிடும் விபூதி குங்குமத்தை மறுக்கமாட்டான். ஆனால் மனமுருகி கடவுளிடம் மண்டியிடவும் மாட்டான்.
பார்வை தான். கை கட்டி வேடிக்கை பார்த்தபடி தான் இருப்பான். தெய்வாவும் எத்தனையோ சொல்லி பார்த்துவிட்டார்.
“கண்ணு…”
“ப்ச், கீழே கல்லை பார்த்து நடம்மா. எப்ப பாரு என் மூஞ்சியை பார்த்துட்டு…” என அவரை கை தாங்கலாக பிடித்துக்கொண்டு நடந்து உள்ளே நுழைந்தான். தெய்வாவின் மனது சட்டென பரவசம் சூழ அந்த இடத்தின் தெய்வாம்சம் மனதை அமைதிப்படுத்தியது.
அதற்கு நேர்மாறாய் இருந்தது ஜீவனின் மனது. மீண்டும் ஒரு திருமணம். அதை பற்றி எந்த அபிப்ராயமும், எதிர்பார்ப்பும் இல்லை. நடப்பது நடக்கட்டும் என்னும் விட்டேற்றியான மனநிலை தான்.
“இங்க தான் இருக்கேன்னு சொன்னேன். ராசியான இடம். எல்லாருக்கும் கல்யாணம் நடக்கற மண்டபம். இங்க தான் வர சொன்னேன். உனக்கும் கூட இங்க தான்…” என்றவரின் கண்கள் அலைபாய்ந்தது.
“ம்மா, எதுக்கு இவ்வளோ எக்சைட் ஆகற? வரட்டும்…”
“ப்ச், போடா, உன்னை மாதிரியா இருக்க சொல்ற? பார்த்ததுமே நம்ம முகத்துல இருக்கற சந்தோஷம் தான் அவங்க மனசுல பதியும். இப்படி மூஞ்சியை வச்சுக்காத…” என்றவரை முறைத்தான்.
அதற்கு மேலும் மகனை சீண்டுவாரா என்ன? அவனை எரிச்சல் மூட்டாமல் இருப்பதே சால சிறப்பு என்று தான் அதிகமாய் பெண்ணையும், அவர்கள் குடும்பத்தையும் பற்றி எதுவும் பேசாமல் இருந்தார்.
எங்கே தான் புகழ்ந்து பேசி, அதில் அவன் கடுப்பாகி மொத்தத்திற்கு வேண்டாம் என்றுவிட்டால்? ஏற்கனவே அப்படியும் இரண்டு முறை நடந்திருந்ததால் கப்பென்று வாயை மூடிக்கொண்டார்.
“சரி நீ இங்க இரு. குடிக்க தண்ணி வாங்கிட்டு வரேன்…”
“கண்ணு, அப்படியே ஒரு அர்ச்சனை கூடையும். நல்ல காரியத்துக்கு வந்துட்டு தேங்காய் உடைக்காம போக கூடாது பாரு…” என்று சொல்ல,
“எப்படியும் எதாச்சும் சொல்லி வாங்கிட்டு வர வச்சிருவ. அதுக்கு மூஞ்சியை பாவமா வச்சுக்கிட்டு ஏன் கேட்கற? நல்லா நடிக்கறம்மா நீ…” என்றவன் செல்லவும் சிரிப்புடன் மகனை பார்த்தபடி இருந்தார் தெய்வா.
“தெய்வாம்மா…” என்ற குரலில் திரும்பி பார்க்க அங்கே தெய்வா எதிர்பார்த்தவர் கணவருடன் நிற்க கண்டு வேகமாய் எழுந்து கொண்டார் புன்னகையுடன்.
“வாங்க வாங்க சம்பந்தி…” என்று வரவேற்க,
“ஐயோ நீங்க உட்காருங்கம்மா. பத்மா நீயும் உட்காரு…” என தெய்வாவின் அருகே மனைவியை அமர சொல்லிய கார்மேகம் தானும் சற்று தள்ளி அமர்ந்தார்.
“பொண்ணு வரலைங்களா?…” என்ற தெய்வாவின் பார்வை தன் மருமகளை தேடியது.
“வந்திருக்கா தெய்வாம்மா, அர்ச்சனை தட்டு வாங்கிட்டு வரேன்னு போயிருக்கா…” என்று சொல்லி அவர்கள் திருமணத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
“ஒரு அர்ச்சனை கூடை எவ்வளவும்மா?…” என கேட்டுக்கொண்டே அந்த கடையின் முன்னர் நின்றவன் பையில் இருந்து பணத்தை எடுத்து நீட்டினான்.
ஒரு கூடையில் தேங்காய், பழம், பூ என பூஜைக்கு தேவையான பொருட்கள் சகிதம் அந்த கூடை தரப்பட வாங்கிக்கொண்டு நடந்தவன் தனக்கு முன்னே சென்ற பெண்ணின் கூடையில் இருந்த பூவும், பழமும் கீழே விழுந்ததும் யாரும் மிதித்துவிடும் முன்னர் அதை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் சென்றான்.
அவள் எதோ ஒரு யோசனையில் கவனிக்காமல் நடந்து செல்வதை புரிந்துகொண்டவன் அவளின் முன்னே சென்று,
“ஏங்க உங்க கூடையில இருந்து இது விழுந்துருச்சு…” என்று அவளிடம் நீட்டி அவளின் முகம் பார்த்தவன் யோசனையுடன் ஒரு நொடி அவளை உற்றுநோக்க அவளோ தன் கூடையை சரிபார்த்துவிட்டு அவன் தந்ததை வாங்கிக்கொண்டு,
“தேங்க்ஸ்…” என்று சொல்லி நகர,
“ஹலோ…” என்றான் மீண்டும்.
அவனின் அழைப்பில் திரும்பி பார்த்தவள் அவனின் பார்வையில் எரிச்சலாகி முகத்தை சுருக்கினாள்.
“ஹலோ என்ன?…” என்று கடுப்புடன் கேட்டவள் மேலும் பேசும் முன்னர்,
“நீங்க நீ நீ ஹேய் தூதர்ஷன்…” என்றான் சட்டென்று.
அவனின் அழைப்பில் அவளுக்கும் ஞாபகம் வந்துவிட முகம் மலர்ந்து ஒளிர்ந்தது. அவளறியாது சட்டென ஒரு துள்ளல் உடலில் பரவ,
“கலர்குருவி…” என்றாள் அவளும். அவளின் அழைப்பில் லேசாய் முறைத்தவன்,
“இந்த பேரை மட்டும் விடவே மாட்ட இல்ல…” என்று சிரித்தான்.
“நீங்களும் கூடத்தான். எங்க பார்த்தலும் தூதர்ஷன்னு கூப்பிடறீங்க…” என பதிலுக்கு சொல்ல,
“ஒரு நிமிஷம் நீ தானோன்னு டவுட் ஆகிடுச்சு. எப்படி இருக்க? சென்னைலையா இருக்க?…”
“ஹ்ம்ம், ஆமாம். சென்னை தான். நீங்க எப்படி இருக்கீங்க பாஸ்? வர்ஷாக்கா எப்படி இருக்காங்க? உங்களுக்கு லவ் சக்சஸ் ஆகி கல்யாணம் ஆகிடுச்சுன்னு கேள்விப்பட்டேன். லேட் விஷ், இருந்தாலும் கங்க்ராட்ஸ்…” என்றாள் மகிழ்ச்சியுடன்.
அவளின் வாழ்த்தில் லேசாய் முகம் கன்றினாலும் அதை சிரிப்பின் பின்னால் மறைத்துக்கொண்டவன்,
“தேங்க் யூ மொழி…” என பெற்றுக்கொண்டான்.
“இன்னும் இதையும் விடலை நீங்க. மொழி மொழின்னு…” என அவள் சிரிக்க,
“அது அப்படித்தான், சரி நீ எங்க இங்க? நான் சென்னை வந்து ஆறுமாசம் ஆச்சு. இங்க ஒரு ப்ரைவேட் ஹாஸ்பிட்டல்ல தான் வேலை பார்க்கறேன். அம்மா ஊர்ல இருந்து வந்திருக்காங்க. அதான் அவங்களோட கோவிலுக்கு வந்தேன்…”
இருவரும் பேசிக்கொண்டே கோவிலின் கல்யாண மண்டபத்தில் வந்து தெய்வா அமர்ந்திருக்கும் இடத்தில் வந்து நிற்க, தூரத்தில் இருவரும் பேசியபடி வருவதை முதலிலேயே பார்த்துவிட்டார் தெய்வா.
“இதோ அவங்களே வந்துட்டாங்களே…” என்ற தெய்வா,
“ஜீவா இதுதான் தேன்மொழி. நாம பார்க்க வந்த பொண்ணு…” என்று சொல்ல,
“தேனு உனக்கு தம்பியை முன்னாடியே தெரியுமா?…” என பத்மாவும் கேட்க சம்பந்தப்பட்ட இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்தபடி நின்றனர்.
இதை சுத்தமாய் இருவரும் எதிர்பார்க்கவில்லை என்பது இருவரின் முகபாவனைகளை கொண்டு மற்றவர்களுக்கு புரிந்தது.
ஜீவாவிற்கு தேன்மொழியை தெரியும். அவளின் குடும்பத்தையும் கூட ஓரளவிற்கு அறிந்து வைத்திருந்தான் தான்.
ஆனால் தனக்கு பார்க்கப்பட்ட பெண்ணாய் அவள் இருப்பாள் என்பது முற்றிலும் எதிர்பாராதது. அதையும் விட தேன்மொழிக்கு இது பெரும் அதிர்ச்சி.
பார்த்திருக்கும் மாப்பிள்ளை இவனாக இருப்பான் என்று கனவிலும் எண்ணியிருக்கவில்லை.
வர்ஷா ஜீவனை எந்தளவிற்கு காதலித்தாள் என்று அனைவருக்குமே தெரிந்தது. அது கல்யாணத்திலும் கை கூடியிருக்க இது எப்படி சாத்தியம்? சற்று முன்னர் கூட தன்னுடைய வாழ்த்திற்கு நன்றி சொல்லியிருந்தானே?
மாப்பிள்ளை என்று தேன்மொழிக்கு சொல்லப்பட்ட விஷயம் இதுதான். மாப்பிள்ளை ஒரு மருத்துவன். சென்னையில் வேலை. விவாகரத்தானவன். பெயரும் ஜீவன். இது கூட அவனை நினைவுப்படுத்தவில்லை தேன்மொழிக்கு.
ஜீவன் என்ற ஒருவனை சுத்தமாக மறந்திருந்தாள் தேன்மொழி. அவனுடைய நட்பையும், அவனையும் நினைத்து பார்த்ததில்லை. இன்றானால் இவன் தான் உனக்கு கணவனாக போகிறான் என்ற அறிமுகத்தில் அவன் நிறுத்தப்பட்டிருக்க மனம் முழுவதும் இப்பொழுது வர்ஷா கேள்வியாய் நின்றாள்.
“சரி, முதல்ல வாங்க போய் சாமி கும்பிட்டு வருவோம். வந்து பேசுவோம்…” என்று கார்மேகம் சொல்ல பத்மாவும், தெய்வாவும் முன்னே நடக்க ஜீவாவும், தேன்மொழியும் அங்கேயே நின்றனர்.
இருவரிடமும் மௌனமும், மௌனத்தை உடைக்க துடிக்கும் கேள்விகளும் பிரதானமாய் இருக்க யார் முதலில் பேச்சை துவங்குவது என்ற தயக்கத்தில் இருக்க,
“மொழி, வா போகலாம்…” என்றவனை நிமிர்ந்தும் பாராமல் அவனுடன் இணைந்து நடந்தாள் தேன்மொழி.