புன்னகை – 10
நல்லபடியாக பூஜை நடந்து முடிந்ததில் தேன்மொழியின் குடும்பத்தை விட தெய்வாவின் குடும்பத்திற்கு மிக மிக நிறைவாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
அவர்கள் கடவுளின் ஆசிர்வாதத்தின் முக்கியத்துவம் உணர்ந்தவர்கள். தங்கள் வேண்டுதல் நிறைவேறி பூஜை முழுமையானதினால் மகனின் வாழ்வு சிறக்கும் என்ற சந்தோஷம்.
மூன்றுமணியளவில் தோப்பிலிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தனர். ஆளுக்கொரு பக்கம் சோர்வுடன் சாய்ந்து அமர்ந்துகொண்டனர். ஆற்றில் விளையாடியது, வரப்பில் நடந்து வந்தது என உடல் அடித்துபோட்டதை போல இருந்தது தேன்மொழி குடும்பத்தினருக்கு.
ஆனாலும் அந்த இடம் மீண்டுமொருமுறை செல்லமாட்டோமா என ஏங்க வைத்தது அவர்களை.
“அகலு பால கொண்டாந்துட்டாக. எல்லாருக்கும் டீ வைய்யித்தா…” என்ற தெய்வாவின் குரலில் லேசாய் சாய்ந்திருந்த அகல்யா எழுந்து சென்று முகத்தை அலம்பிவிட்டு வந்தாள்.
“செத்த நேரம் போவட்டும்த்தா. இப்பத்தான வந்தோம்…” என்ற ஜீவன் எழுந்து சென்று அடுக்களையில் நுழைய,
“இந்தா இதேன் ஒனக்கு சோலியா? போயி தேன பாரு…” என அவனை நகர்த்திவிட்டு அகல்யா அனைவருக்கும் டீயை போட அவளுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தான் ஜீவன்.
அவர்கள மட்டும் அடுப்படியில் இருக்க தாங்கள் அமர்ந்திருக்கிறோமே என நினைத்து தேன்மொழியுடன் சுலோச்சனா மெதுவாய் நடந்து வந்தாள்.
அவர்கள் வரவும் என்னவென கேட்பதற்குள் சொடலை ஜீவனை தேடி வர அவரை பார்த்து வந்தவர்களிடம் தலையசைத்துவிட்டு வெளியேறிவிட்டான். அவன் சென்றதும்,
“இங்க என்னத்துக்கு வந்தீக? போயி சாயத்தான…” என கனிவாய் கடிந்தபடி கேட்ட அகல்யா,
“காலு ரொம்ப நோவுதோ?…” என,
“ஹ்ம்ம், பழக்கமில்லை இவ்வளவு நடந்து. அதான் அண்ணி…” தேன்மொழி சொல்ல,
“முதல்ல அப்பிடித்தேன் இருக்கும். போவ போவ பழகிப்போவும்…” என கேலி செய்த அகல்யா,
“ராவுக்கு காலுக்கு லேசா வெந்நிய ஊத்து. செரியாப்போவும். என்ன?…”
“உங்களுக்கு வலிக்கலையா?…” சுலோச்சனா கேட்க,
“எங்களுக்கு என்னத்துக்கு வலிக்க? அதெல்லாம் இத்துனூண்டு மொளப்புல(வளர்ப்பு) இருந்தே பழக்கமாயி போச்சு. அதேன் எந்த வழியும் வசதிதேன். லேசா ஒடம்பு அசதி தட்டும். ஒரு உலுக்கு உலுக்குனா ஆவாதா?….” இலகுவாய் அகல்யா சொல்ல சொல்ல அவர்கள் கேட்டுக்கொண்டே நின்றனர்.
“டீய கொண்டு போயி குடுக்கறேன். அங்கன வந்து ஒக்காந்து குடிங்க ரெண்டுபேரும்…” என்று அவர்களை முன்னே அனுப்பி மற்றவர்களுக்கு டீயை எடுத்துக்கொண்டு வந்து தந்தாள் அகல்யா.
முதலில் வண்டியில் சென்றவர்கள் எல்லாம் ஆற்றிற்கு செல்லும் பொழுது வரப்பில் நடந்து சென்று வர அந்த உற்சாகத்தில் மீண்டும் கோவிலுக்கு வந்து அங்கிருந்து வரப்பிலே நடந்து மெயின்ரோட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
தெய்வாவை மட்டுமே திருமூர்த்தி தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றார். மற்றவர்கள் நடந்தே வருகிறோம் என்றுவிட்டனர்.
பேசிக்கொண்டே நடந்து வந்ததில் அப்போது எந்த வலியும் தெரியவில்லை. வேனிற்கு வந்து அதில் அமர்ந்து வீட்டில் வந்து இறங்கும் நேரம் தான் காலை அசைக்கமுடியாத அளவிற்கு வலி எடுத்தது.
ஜீவன், அகல்யா, வைதேகி, சொடலை என அனைவரும் வெகு சாதாரணம் போல இருக்க தேன்மொழியை சேர்ந்தவர்கள் தான் சுருண்டுவிட்டனர்.
கால் வலியில் தியாகுவின் முகம் சினந்து கிடந்தது. ‘சொன்னா ஒருத்தரும் கேட்கலை. இப்ப உக்கார்ந்து அய்யோ அம்மான்னு புலம்பறது’ என அவன் புலம்பினான்.
அவனுக்கு அவன் கவலை. கார்மேகமும், பத்மாவுமே நடந்து செல்வதாக சொல்ல தான் வண்டியில் செல்கிறேன், நடக்க முடியாதென்று சொன்னால் மானம் போய்விடுமே என எண்ணியே அவனும் உடன் நடந்து வந்தான்.
இப்போது பாதமும், உள்ளங்காலும் வலிக்க வலிக்க மனதிற்குள் அவர்களை வசைமாரி பொழிந்தபடி அமர்ந்திருந்தான்.
சொடலையோடு வீட்டிற்குள் வந்த ஜீவன் அமர்ந்திருந்தவர்களின் முகத்தை பார்த்ததுமே கவலையாகி போனது.
“கால் ரொம்ப வலிக்குதா மாமா?…” என கார்மேகத்திடம் கேட்டவன் அவர் சங்கடமாய் பார்த்ததில்,
“நான் ஒரு டாக்டர் மாமா, ஐ நோ…” என சிரித்து தனது அறைக்குள் சென்று ஒரு ஆயின்மெண்டை எடுத்து வந்தான்.
“இதை போடுங்க. கொஞ்சம் பெட்டரா பீல் ஆகும்…” என்றதும் அதனை வாங்கிக்கொண்டவர்,
“உட்காருங்க மாப்பிள்ளை. நீங்க இன்னும் டீ குடிக்கலையே…”
“ஹ்ம்ம், ஆமா…” என அவரருகே அமர்ந்தவன் பார்வை தேன்மொழியை தழுவ அவள் ஆதிக்கின் பாதங்களை லேசாய் பிடித்துவிட்டு அவனிடம் கதை பேசிக்கொண்டு இருந்தாள்.
“ஒக்காரும் மாமோவ், ஒனக்கு தனியா சொல்லனுமோ?…” என சொடலையை தனது பக்கத்தில் அமர்த்தியவன்,
“ஏத்தா…” என்ற அழைப்பில் உள்ளிருந்து சூடான டீயுடன் வந்தார் தெய்வா.
“அக்கா எங்கத்தா? நீ கொண்டாற?…” என கேட்டபடி வாங்கிக்கொண்டான் ஜீவன்.
“ஒக்காருத்தா…” என்ற சொடலை,
“ராவுக்கு ஒன்னும் செய்யவேணா. நா செஞ்சி கொண்டாறேன். எல்லாரும் செத்த நீட்டி நிமித்துங்க…”
“அதெல்லாம் ஒன்னும் வேணாமப்பு. நாலுபேருக்கு ஆக்க என்ன? நாங்களே பாத்துக்கிடுதோம்…” என்று தெய்வா சொல்ல,
“ப்ச், சொன்னா கேளுத்தா. நா இப்ப அதத்தேன் பேசிட்டு வந்தேன். செத்த நேரம் சாயிவோம்…” என்ற ஜீவன் அகல்யாவை பார்க்க அவளும் புரிந்ததை போல,
“ஜீவா சொல்லுததுதேன் செரி. நீ பேசாம இருத்தா…” என அழுத்தமாய் சொல்ல பிள்ளைகளின் பேச்சை புரிந்து தெய்வாவும் தலையாட்டினார்.
அவர்களின் பேச்சை இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் முகத்தில் லேசான புன்னகை.
“மாமா, உண்மைய சொல்லுங்க, இப்பவும் சோத்துல சாம்பாரான்னு தான வீட்டுல சமைக்க வேண்டாம்னு சொல்றீங்க?…” என ஷிவா கிண்டலாக கேட்க,
“என் இனமடா நீ…” என அங்கிருந்து ஹைபை போல இருவரும் காண்பித்துக்கொண்டனர்.
“அப்ப கோழி அடிச்சிடுதேன்…” என உற்சாகமாய் எழுந்துகொண்டார் சொடலை.
“மாமா, அயித்தைட்ட சொல்லி கோழிய ரொம்ப வறட்டாம பதமா எறக்க சொல்லு. இல்ல நா வரட்டா?…”
“அங்க வந்து கோழிக்கு அடிச்சுக்கவா? ரெண்டுத்துக்கும் ஆவாது. நீ ஒன்னு சொல்ல, அவ ஒன்னு சொல்ல பஞ்சாயத்துக்குத்தேன் போயி நிக்கனும். கம்முன்னு இங்கனவே கெட. ஆக்கி முடிச்சு தூக்கியாறேன்…” என சொல்லி கார்மேகத்திடமும் சொல்லிவிட்டு அவர் கிளம்ப,
“இரு நானும் கூட ஒரு எட்டு வாரேன்…” என எழுந்தான் ஜீவன்.
“வாய்யா, நீ கேக்கனுமோ?…” என அவனின் வருகையில் முகம் மலர சொன்னார்.
எத்தனையோ முறை கூப்பிட்டும் வரவேமாட்டாதவன் தானாகவே வருகிறேன் என்றதில் ஏக சந்தோஷம் அவருக்கு.
“ம்க்கும், நாளப்பின்ன மருமவளேன்னு என்னக்கிட்டத்தேன் கஞ்சிக்கு நிக்கனுமாக்கும். அப்ப வெச்சிகிடுதேன் என் பவிச…” என அகல்யா சொடலையை வாரினாள்.
“அம்புட்டுத்தான, எம்மருமவ கொமட்டுல இடிச்சுட்டு குடுத்தா கூட சொவமா வாங்கிப்பேன்த்தா…” என சிரித்தபடி சொல்லிவிட்டு சொடலை அங்கிருந்து செல்ல,
“அயித்தைக்கி தெரிஞ்சா தெரியும் சேதி…” என வம்பிழுத்த அகல்யா,
“போயிட்டு தாக்கல் சொல்லுங்க. வாரேன்…” என அனுப்பிவைக்க,
“உங்க சண்டைக்கே அயித்த நாலு வெடக்கோழி அடிச்சு உங்கினாத்தேன் உண்டு…” என சிரித்தபடி தன் அறைக்கு சென்றான்.
அவர்களிடையே என்ன பேசவென தெரியாமல் மற்றவர்கள் அமைதியாய் இதை வேடிக்கை பார்க்க ஒரு டிஷர்ட், லுங்கியில் வந்தவன் ஷிவாவை பார்த்து,
“ஷிவா உனக்கு ஓகேனா வாயேன். ஜஸ்ட் ஒரு வாக்…” என அழைக்க,
“நா ஒருத்தேன், கூருகெட்டத்தனந்தேன்…” என தன் தலையில் அடித்துக்கொண்ட சொடலை,
“வந்தவகள வாங்கன்னு சொல்லாம வாச்சவடாலு பேசிக்கிட்டு. ஒரு எட்டு ஊருக்கு போவமின்ன எல்லாரும் வீட்டுக்கு வரனும். பக்கத்துலதேன் வீடு. நாலு எட்டு போட்டா நம்ம வீடுதேன்…” என்று சொடலை சொல்ல,
“நாலு எட்டு போடனுமா? அவ்வளவு டிஸ்டன்ஸா?…” என தியாகு அதிருப்தியாய் சொல்ல அவன் சொல்லவருவதை புரிந்த ஷிவா,
“உன் கால்குலேட்டிங் மைண்ட கொண்டுபோய் பெட்ரோல் பல்க்ல தான் பத்திரமா வைக்கனும். அது அந்த எட்டு இல்லை. இந்த எட்டு…” என்று நடந்து காண்பிக்க அண்ணனாய் அவனின் முகம் கடுகடுத்தது.
“எனக்கும் தெரியும், நான் ரொம்ப டயர்ட்…”
“சரி, அப்ப தூங்கு…” என்ற ஷிவா,
“வாங்க மாமா நாம போவோம்…” என்று ஜீவாவுடன் வெளியே செல்ல போக,
“மொழி…” என மனைவியை அழைத்தான் ஜீவா. அவள் எழுந்து வரும் முன் மகனிடம் வந்த தெய்வா,
“நீ வேணா போய்க்க. மருமவள அனுப்பறது மொற இல்ல…” என சொல்ல,
“சரித்தேன். நீ வாயா. அக்கம்பக்கத்துல இனிதேன் புள்ளைய பாக்க வருவாக. அதனால புள்ள இங்கன இருக்கட்டும். நாளைக்கி கூட்டிட்டு போவோம்…” என சொடலை சொல்லவும் சரி என தலையசைத்தான்.
“ஓகே மொழி, டேக் கேர். இப்ப வந்திடறேன்…” என்று சொல்லிவிட்டு அவனும் ஷிவாவும் சொடலையுடன் வெளியேறினார்கள்.
“எல்லாரும் செத்த சாய்ஞ்சு எந்திச்சு வாங்க…” என சொல்லிய தெய்வா,
“அகலு, கூட்டிட்டு போத்தா…” என மகளை விரட்டினார்.
கார்மேகம் எழுந்து காலையில் தாங்கள் தயாரான அறைக்கு செல்ல, தியாகுவும் சென்றுவிட்டான்.
“சுலோ, நீ போய் பையனை கொஞ்சம் நேரம் தூங்க வை…” என பத்மா மருமகளை அனுப்ப,
“நீங்களும் வாங்க அத்தை…”
“ப்ச், என்ன இது? எல்லாரும் போய்ட்டா சம்பந்தி என்ன நினைப்பாங்க. நான் இங்க இருக்கேன். அவங்க கூட பேசிட்டு. நீ போய் கொஞ்சம் ப்ரெஷ் ஆகிட்டு வா…” என்று சொல்லவும் சுலோச்சனாவும் ஆதிக்குடன் உள்ளே சென்றாள்.
“தேனு போயி மொவத்த கழுவுத்தா. வேற உடுப்பு மாத்திக்க…” என்ற அகல்யா அவள் செல்லவும் பத்மாவின் பக்கம் திரும்பி,
“அத்தே தேன பாக்க செத்த நேரத்து ஒத்த ஒத்தவகளா வருவாக. அவள கொஞ்சம் கெளப்பி விடுங்களேன்….” என சொல்லியதும் அவரும் உள்ளே செல்ல சரசரவென வீட்டை கூட்டி பெருக்கி ஒழுங்குபடுத்தினாள் அகல்யா.
வாசலை தெளித்து கோலமிட்டு இன்னும் தேவைக்கு பாலுக்கு சொல்லிவிட்டு வருபவர்களுக்கு கொறிக்க தர தேவையான, இனிப்பு காரத்தையும் தட்டுக்களையும், தம்ளர்களையும் எடுத்து எல்லாம் தயாராக வைத்துவிட்டு தானும் கிளம்பி வந்துவிட்டாள்.
“தேனு…” என தம்பி மனைவியின் அறைக்குள் வந்து எட்டி பார்க்க,
“வாங்க அண்ணி…” என எழுந்துசென்று அழைத்தாள் தேன்மொழி.
“என்னத்தா சீலைய மாத்தியாச்சா? நல்லா இருக்கே இந்த கலரு உனக்கு…” என அவளின் புடவையை தொட்டு பார்த்து சொல்லிய அகல்யா,
“அத்தே நீங்களும் போயி உடுப்பு மாத்திக்கங்க. நா தேனுகூட இருக்கேன்…” என்றதும் அவளிடம்,
“அம்மா எங்க அகல்யா?…” என்றார் பத்மா.
“அது எம்மவ கூட படுத்திருக்குது. ஆராச்சும் வந்தா கூட்டிக்கிடுவோம். நீங்க போங்க…” என அவரை அனுப்பினாள்.
“எங்க அண்ணி அண்ணனை காணோம்? கோவில்ல இருந்து வந்ததில இருந்தே வீட்டுல இல்லையே…” என தேன்மொழி கேட்க,
“அவுக வீட்டுக்கு போயிருக்காக. உனக்கு தெரியாதுல்ல. நாளைக்கி நாம அந்த வீட்டுக்கு போவோம். எங்கயும் கோயிலுக்குன்னு போனா எம்புட்டு நேரமாயிட்டாலும் நேரா வீட்டுக்குத்தேன் போவாரு. அது அவரு பழக்கந்தேன்…”
“ஓஹ்…” என்றவளை அழைத்து கட்டிலில் அமர்த்தியவள்,
“யத்தா நா ஒன்னு சொல்லுதேன். நேரா எடுத்துக்க…” என பூடகமாக சொல்ல தேன்மொழி,
“சொல்லுங்க அண்ணி….” என்றாள்.
“கொஞ்ச நேரத்துல சொந்தக்காரவக எல்லாரும் ஒன்னிய பாக்க இங்க வருவாக. என்னத்தையாச்சும் ஒன்னுக்கு ரெண்டா எடக்கா பேசினா மனசில வச்சிக்கிடாதத்தா…” என்றதுமே தேன்மொழி முகம் மாற,
“நீ ஒன்னுத்துக்கும் வெசனப்படாத. மதினி நா ஓம்பக்கத்திலதேன் இருப்பேன். செரியா?…”
“என்ன பேசுவாங்க அண்ணி?…”
“பேச வெசயமா இல்ல. ஆத்தமாட்டாமைக்கும், பொகச்சலுக்கும் பேசத்தேன் செய்யுவாங்க. அதுக்கெல்லாம் காத கொடுக்காத. என்ன வெளங்குச்சா?…” என கேட்க,
“என்னத்தா என்ன வெளக்கிட்டு இருக்க?…” என வந்தான் ஜீவன்.
“அதுக்குள்ளே வந்தியா நீ?…” என்று தம்பியை பார்த்ததும் எழுந்தவள்,
“சும்மாத்தேன் பேசிக்கிட்டு இருந்தேன்…” என,
“போனதுமே அயித்த, நீ வீட்டுக்கு போ. எல்லாத்தையும் ஆக்கி கொண்டாறேன்னு சொல்லிருச்சு. அப்பறம் என்னத்துக்குன்னு வந்துட்டேன்…”