புன்னகை – 11
நடு இரவில் ஜீவனின் மொபைல் வைப்ரேட் ஆக எடுத்து பார்க்க அகல்யா தான் அழைத்திருந்தாள்.
பார்த்ததும் கட் செய்தவன் ஒரு டிஷர்ட்டை எடுத்து போட்டுக்கொண்டு போர்வையை தேன்மொழிக்கு போர்த்திவிட்டு மெதுவாய் எழுந்து கதவை திறந்து வெளியேறினான்.
அங்கே தாயின் அறை வாயிலில் அகல்யா பயத்துடன் நின்றிருந்தாள். பார்த்ததும் தாய்க்கு என்னவாகியற்றோ என பதறி வேகமாய் போய்,
“என்னத்தா, என்னாச்சு?…” என கேட்டுக்கொண்டே உள்ள நுழைய தெய்வா மேல்மூச்சுவாங்கியபடி படுத்திருந்தார்.
கட்டிலில் இருந்து சற்று தள்ளி கீழே பாயில் வைதேகி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க மெதுவாய் தாயின் அருகே அமர்ந்தான்.
“யத்தா, இங்க பாரு…” என தாயின் கன்னத்தை தட்டியவன் அவர் கண்ணீருடன் மகனை பார்த்து எதுவோ சொல்ல முற்பட அவன் கலங்கி போனான்.
“ராவுக்கு மாத்தர குடுத்த தான?…”
“நீதானடா பக்கத்துல இருந்த. பாத்த தான…” என அழுகையுடன் சொல்லி ஒருபக்கம் அமர்ந்துகொண்டவள்,
“மெல்ல பேசு. எல்லாரும் முழிச்சுட்டா சங்கட்டமா போவும்…” என்றும் கடிந்தாள்.
தொண்டைக்குழி ஏறி இறங்க அவரின் முகத்தை பார்த்தவன் அவரின் முகத்தில் தெரிந்த ஒவ்வாமையில்,
“இரு வாரேன்…” என எழுந்து சென்று தனது மெடிக்கல் கிட்டை எடுத்து வந்தான்.
“ராவுக்கு என்ன குடுத்த? உங்கறப்ப நா வெளில இருந்தேன்…” என்று கேட்டு அவரை பரிசோதித்தான்.
பயப்படும்படியாக எதுவும் இல்லை என்றாலும் அவனுக்கு பதட்டமாக இருந்தது. தெய்வாவின் உடலெல்லாம் தெப்பமாக வியர்த்திருக்க உடல் சில்லிட ஆரம்பித்தது.
“கால தேச்சுவிடு…” என்று கையையும் காலையும் சூடுபறக்க தேய்த்துவிட,
“ரெண்டு இட்லிதேன். அதுவும் வெறும் சாம்பாரோட…” என்றவள் பின்,
“ஜீவா, ரெண்டு துண்டு ஆட்டுக்கறி…”
“நீ குடுத்தியா?…” என வெடுக்கென்று கோபமாய் அவன் திரும்பி கேட்க,
“இல்ல, பத்மா அத்ததேன் அவுகளோட சாப்படறப்ப பரிமாறுனாக. அதேன் ஒதுக்கமாட்டாம…”
“கொஞ்சமாட்டும் கூறு இருக்காதத்தா? ஒத்துக்கறதில்லன்னு தெரிஞ்சு என்னத்துக்கு உங்கவிட்ட?. பாரு இது படற பாட்டை…” என எரிந்துவிழ அகல்யாவிற்கு கண்ணீர் பொங்கியது.
தெய்வாவிற்கு நுரையீரலில் கொழுப்பு அடைப்பு இருப்பதால் மாமிசம் எடுப்பதில்லை. அதை சாப்பிடுவதை நிறுத்தி இருந்தார்.
மீன் மட்டுமே உண்டுகொண்டு இருக்க இன்று பத்மாவோடு அமர்ந்து அவர் வைத்துவிடவும் ‘ஒருநாள் தானே? சிறிதளவு என்ன செய்துவிடும்’ என்ற ஒரு அலட்சியத்தில் சாப்பிட்டுவிட இரவில் மூச்சடைக்க ஆரம்பித்தது.
“ஆஸ்ப்பத்திரிக்கு போவோமாடா?…”
“இரு இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். நார்மல் ஆகும். நீ போயி நல்லா பொறுக்க சூட்டுல தண்ணி வச்சு ஒரு எலுமிச்சம்பழத்த புளிஞ்சு உப்பு போட்டு கொண்டா…” என சொல்லிவிட்டு தெய்வாவிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருந்தான் ஜீவன்.
அகல்யாவும் உடனே அவன் சொல்லியதை போல கொண்டுவர தெய்வாவை தூக்கி தன் தோள் சாய்த்துக்கொண்டான்.
“குடுத்தா நா புடிச்சுக்குதேன்…” என அக்காவிடம் சொல்ல அகல்யா இன்னும் பதட்டம் தணியாமலேயே கைகள் நடுங்க தாய்க்கு புகட்டினாள்.
கொஞ்சம் கொஞ்சமாய் குடித்தவர் சிறிது நேரத்திலேயே அத்தனையையும் வெளியேற்ற உண்ட உணவு மொத்தமும் ஜீரணம் ஆகாமலே வெளியேறி இருந்தது. அதன் பின்னரே தெய்வாவின் முகம் தெளிந்தது.
“ஒண்ணுமில்ல, அம்புட்டுத்தேன். தாய்க்கெழவிக்கு ஆகாதபோகாத வேலையெல்லாம் அவசியந்தேன். ரெண்டு இட்டிலிக்கே உள்ளுக்க உன் மெஷின் அம்புட்டும் மண்டைய ஆட்டும். அதுவும் ராவுக்கு ஆட்டுக்கறி கேக்குதோ?…”
கிண்டலாய் பேசியபடி பதட்டத்தை தணிக்கும் விதமாய் கேலி செய்து தெய்வாவின் முகத்தை ஈரத்துணியால் துடைத்துவிட அகல்யா அந்த இடத்தை சுத்தம் செய்தாள்.
“இங்காருக்கா இன்னும் நாலு நாளைக்கு வெறும் கஞ்சியும் தண்ணியுமா குடு. அப்பத்தேன் அடங்கும்…” என்று அக்காவிடமும் வம்புபேச,
“அட போடா…” என்று அகல்யா தம்பியை சொல்லி சிரித்தாலும் கண்ணீர் பளபளத்தது கண்களில்.
அனைத்தையும் சுத்தம் செய்து அந்த இடத்தில் ஒரு அகர்பத்தியை பொருத்தி வைத்துவிட்டு கையை, காலை கழுவிக்கொண்டு வந்தமர்ந்தாள்.
“ரொம்ப பயந்துட்டியாக்கும்…” என அவளின் கை பிடித்து ஜீவன் சிரிக்க,
“பின்ன, உசுரே போயிருச்சு…” என குரல் நடுங்கியபடி அவனிடம் சொல்ல,
“இது நம்மளை அம்புட்டு எல்லாம் விட்டுட்டா போவும்?…” என்று அக்காவிடம் ஆரம்பித்து,
“ஏம்த்தா?…” என தாயிடம் முடிக்க இருவரையும் இரு கைகளாலும் பிடித்துகொண்டார் தெய்வா.
“எம்புள்ளைகள விட்டு எங்கிட்டு போவ போறேன்? அதெல்லாம் போவமாட்டேம்த்தா. என் கண்ணுகளா…” என்று நெகிழ்ச்சியாக சொல்ல மூவருக்குமே அந்த நொடி மிகவும் உருக்கமாக இருந்தது.
அவரின் கையிலிருந்து தனது கையை உருவிக்கொண்ட அகல்யா மீண்டும் ஒரு நல்ல துணியில் வெந்நீரில் நனைத்து முகம் கழுத்து என துடைக்க,
“இந்தா வாரேன்த்தா…” என்று வெளியே வந்த ஜீவன் அடுக்களைக்குள் நுழைந்தான்.
இப்பொழுது தெய்வாவின் வயிற்றில் எதுவுமில்லாமல் இருப்பதால் அவருக்கு சத்துமாவை கூழ் பதத்தில் காய்ச்ச ஆரம்பித்தான்.
“நா வரமாட்டேனா? நீ போயி படு. நா குடுத்துக்கறேன்யா…” என தம்பியிடம் வந்த அகல்யா அவனை விரட்ட,
“ப்ச், நீ போங்கறேன்ல. நா கொண்டாறேன்…” என சொல்லி அவளை அனுப்பிவிட்டு சிறிது நேரத்திலேயே மூவருக்கும் தம்ளர்களில் ஊற்றிக்கொண்டு வந்தான்.
வரும் போதே தெய்வாவின் முகம் இன்னும் பளிச்சென்று இருந்தது. அவருக்கு வேறு புடவையை மாற்றியிருந்தாள் அகல்யா. உடல் துடைத்து பவுடர் போட்டுவிட்டு உடை மாற்றி ஜம்மென்று அமர்ந்திருந்தார் தெய்வா.
“இந்தா இத குடிச்சுட்டு தெம்பா உறங்கு. நாளைக்கு அடிக்கிற ஆட்டுல அரை ஆட்டை நீ தான் உங்கற…” என்று சொல்ல,
“குடுத்துட்டுத்தேன் நீயும் மறுவேல…” என அகல்யாவும் கிண்டல் பேச,
“இந்த வாய்க்கித்தேன் உனக்கும் காச்சினேன்…” என்று ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொண்டனர்.
“பேசாம என்னோட வாயேம்த்தா. எம்பேச்ச காதுல வாங்கமாட்டிகித நீ…” என்று சலிப்பாய் ஜீவன் சொன்னலும் வந்துவிடேன் என்னும் இறைஞ்சுதலே அதில் விஞ்சி இருந்தது.
ஆனால் தெய்வாவிற்கு அந்த வீட்டை விட்டு செல்வதில் விருப்பமே இல்லை. அங்கேயே இருந்து பழக்கப்பட்டவருக்கு மகனின் இருப்பிடம் செல்வதில் சற்றும் உடன்பாடில்லை.
“இப்ப என்னத்துக்கு கூப்புடுத? நாந்தேன் இருக்கேனில்ல. பாத்துக்கமாட்டேனா?…” என தம்பியிடம் சண்டைக்கு பாய்ந்தாள் அகல்யா.
பின் அவளை சமாதானம் செய்ய தெய்வா தலையிட அதற்கும் ஜீவன் வம்பு பேச என மூவரும் பேசியபடி குடித்து முடிக்க அகல்யா அந்த தம்ளர்களை எடுத்துக்கொண்டு கழுவ போக அந்த பாத்திரத்தில் இன்னும் மிச்சமிருந்தது கூழ்.
“மிச்சத்தோட வந்தானாக்கும்?…” என சொல்லியபடி அந்த பாத்திரத்தை எடுக்க,
“யத்தா அது மொழிக்கு…” என்று வேகமாய் வந்து இன்னொரு தம்ளரில் ஊற்றிக்கொண்டான்.
“ஆறிப்போச்சுடா…” என அகல்யா சொல்ல,
“குடிக்கற சூடுதேன். ரொம்ப சூடா குடிக்கமாட்டா அவ…” என்று எடுத்துக்கொண்டு,
“போயி தூங்கு. இத நாளைக்கி பார்த்துக்கிடலாம்…” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தான்.
கொண்டுவந்த தம்ளரை டேபிளில் வைத்து மூடிவிட்டு பாத்ரூம் சென்று கை கால்களை அலம்புவிட்டு வேறு கைலி பனியனில் வந்து அமர்ந்தான்.
அவன் வந்து அமர்ந்ததில் லேசாய் திரும்பி புரண்டு படுத்தவள் தலையை ஜீவன் கோதிவிட,
“ப்ச், பாஸ்…” என்று அவனின் கைகளை தட்டிவிட்டு உறங்க இப்பொழுது அவளின் கன்னத்தை வலிக்க கிள்ளினான்.
“இப்ப என்னதான் வேணும்? தூங்க கூட விடமாட்டேன்றீங்க…” என கத்த,
“உனக்கு போய் குடிக்க கொண்டு வந்தேன் பாரு. உன் தூக்கத்தையே கட்டிக்க…” என அவனும் கத்திவிட்டு படுத்து கண் மூடிக்கொண்டான்.
“இப்பலாம் சும்மா சும்மா கோபப்படறீங்க. எதுக்கு எழுப்பினீங்க…” என மொத்த தூக்கமும் கலைந்து எழுந்து அவனை குறை சொல்ல,
“எழுப்பினா எழுந்துக்கறியான்னு பார்த்தேன். எழுந்துட்ட. திரும்ப தூங்கு…” என இன்னும் அவளை பாராமல் பேச தேன்மொழிக்கு கோபம் வந்துவிட்டது.
“பன்றதெல்லாம் பண்ணிட்டு கோபம் வேறையா? நான் தான் கோபப்படனும். உங்களால. என்னை எழுப்பிட்டு நீங்க மட்டும் தூங்கறதா? எந்திங்க. முழிச்சுக்கோங்க…” என அவனை பிடித்து உலுக்க கண்திறந்து பார்த்தவனின் விழிகள் விரிய இதழ்கள் சிரிப்பில் துடித்தது.
“ஹேய் தூதர்ஷன், நீ எப்படி உட்கார்ந்திருக்க பாரேன். இதுக்குத்தான் என்னை எழுந்துக்க சொன்னியா? நாட்பேட்…” என்று சாய்ந்து அமர்ந்தபடி விஷமக்குரலில் அவளிடம் பேச அவனின் பேச்சிலும் பார்வையிலும் சட்டென பெட்ஷீட்டை எடுத்து தன் மேல் போர்த்தியவள் அதன் பின்னர் தான் சுரணை வந்து தன்னை பார்த்துக்கொண்டாள்.
“போங்கு, போங்கு. அம்புட்டும் பொய். ஒரு நிமிஷம் பயந்துட்டேன்…” என சொல்லி அதே பெட்ஷீட்டால் அவனை மொத்தினாள்.
“நான் என்னவேணாலும் சொல்லுவேன். உன்னை யார் நம்ப சொன்னா? செக் பண்ணிட்டு நம்பனும். அதை விட்டுட்டு இழுத்து போர்த்திட்டா நானா பொறுப்பு?…” என அடக்கப்பட்ட புன்னகையுடன் மிதப்பாய் கேட்க,
“கல்ப்ரிட்…” என்று முறைத்தாள்.
“ஓகே, அப்பறமா சண்டை போடு. இப்ப இதை குடி…” என்று அந்த தம்ளரை அவள் பக்கம் நீட்ட,
“இருங்க ப்ரெஷ் ஆகிட்டு வரேன்…”
“இன்னும் விடியலை மொழி. சும்மா குடி. ஆடு மாடெல்லாம் ப்ரெஷ் பண்ணிட்டா இருக்குது…” என்று கேட்டு அதற்கும் நான்கு அடி வாங்கினான். ஆனாலும் வாய் நிற்கவில்லை.
அவள் பாத்ரூம் சென்று வரும் வரை பேசிக்கொண்டே தான் இருந்தான். வந்தவளுக்கு குடிக்க நீட்ட,
“நீங்களா செஞ்சீங்க? என்னை எழுப்பிருக்கலாமே?…” என்று வேகமாய் குடித்தாள்.
“ஹ்ம்ம், பொண்டாட்டி டயர்டா இருப்பாளேன்னு காய்ச்சி கொண்டுவந்தேன். நீ என்னடானா என்னை குடிச்சியா இல்லையான்னு கூட கேட்கலை. தொயரங்கள்டா ஜீவா…” என்று புலம்ப,
“இல்லை இல்லை. இந்தாங்க இதுல இன்னும் இருக்குது…” என்று அவள் நீட்டவும்,
“இப்டி பக்கத்துல வந்து குடுக்கறது. எனக்கு எதிர்க்க இருந்தா யாரு குடுத்தாலும் வாங்கறதில்லைன்னு ஒரு பாலிசி வச்சிருக்கேன். பக்கத்துல வந்து குடு. வாங்கிக்கறேன்…” என்று அதற்கும் அலும்பாய் பேச,
“இதெல்லாம் அநியாயம்…” என்றவள் அவனை போலவே அருகே வந்தமர்ந்து அவனிடம் நீட்ட வாங்கிக்கொண்டவன் சிறிது குடித்துவிட்டு தந்தான்.
“போதுமா?…” என்று அவள் கேட்க,
“போதும், போதும். எத்தனை தம்ளர் குடிக்க?…”
“என்னது? அப்போ குடிக்கவே இல்லைன்னு சொன்னீங்க…”
“நான் எப்போ அப்படி சொன்னேன்? நீ குடிச்சேனா இல்லையான்னு என்னை கேட்கலைன்னு சொன்னேன்…”
“என்கிட்டே சொல்லவே இல்லை. ஒரு நிமிஷம் பீல் பண்ணிட்டேன். விட்டுட்டு குடிச்சுட்டோமேன்னு. பார்த்தா நீங்க தான் என்னை விட்டுட்டு குடிச்சிருக்கீங்க…” என தேன்மொழி சொல்ல,
“அது கூழ் காய்ச்சறப்போ பதமாகிடுச்சான்னு டேஸ்ட்டுக்கு குடிச்சு பார்த்தது. கொஞ்சம் எக்ஸ்ட்ராவா குடிச்சிட்டேன். அதான்…” என்றான் சமாளிப்பாய்.
தெய்வாவிற்கு முடியாமல் போனதை பற்றி யாரிடமும் சொல்லவேண்டாம் என அகல்யாவும், தெய்வாவும் சொல்லியிருந்தனர். அதன்பொருட்டு தேன்மொழியிடமும் அவன் சொல்லவில்லை.
“என்ன யோசனை?…” என ஜீவனின் அமைதியை பார்த்து கேட்டவள் முழுவதும் குடித்துமுடித்து எழ,
“எங்க போற மொழி?…” என்றான்.
“குடிச்சுட்டேன். அப்படியே வச்சா காய்ஞ்சுடும். அதன் கிட்சனுக்கு போய் வாஷ் பண்ணிட்டு…”
“அதெல்லாம் வேண்டாம். பாத்ரூம்ல லேசா அலசி கொண்டுவந்து வை. காலையில கொண்டுபோய் வச்சுக்கலாம்…” என்றதும் அவளும் அதன்படியே கழுவி கொண்டுவந்து வைத்துவிட்டு அமர ஜீவன் படுத்துவிட்டிருந்தான்.
“தூங்கலையா மொழி?…” என கண்ணை மூடிக்கொண்டே கேட்க,
“தூக்கம் வரலை. அப்படியே விட்டிருந்தா கூட தூங்கிருப்பேன். பாதில எழுப்பிட்டு…” என்று மணியை பார்க்க இரண்டாக பத்துநிமிடம் இருந்தது.
“ஹ்ம்ம், ப்ச். தூக்கம் போச்சு…”
“தூங்காம இருந்தா தலைவலிக்கும் மொழி…”
“ஆமா…” என்று அவனோடு பேச்சுவாக்கில் சொல்லியவள் அவனின் சிரிப்பு சத்தத்தில் முதுகில் இரண்டடி போட்டாள்.
“ஆளையும், பேச்சையும் பாருங்க. என் தலை, வலிச்சா வலிக்கட்டும். இனி சொல்லி பாருங்க. இருக்குது…” என மிரட்ட,
“இருக்குது, பெரிய சம்பவம் ஒன்னு இருக்குது. அப்படியா மொழி? சம்பவம்னா சொல்ற? நான் கூட சரித்திரம்னு சொல்லுவன்னு நினைச்சேன்…”
“ஐயோ நிப்பாட்டுங்க. உங்களோட என்னையும் சேர்க்காதீங்க. நான் ஒன்னும் அப்படி சொல்லலை…”
“அப்ப இப்ப சொன்னியே…”
“அது பொதுவா சொன்னது…”
“அப்ப சொன்னேன்னு ஒத்துக்கற…”
“மை காட். நான் வாயே திறக்கலை…”
“ப்ச், எனக்கு இப்ப ஒரு பேச்சு, நாளைக்கு ஒரு பேச்செல்லாம் இல்லை. சொன்னியா இல்லையா?…”
பேச பேச அந்த பேச்சுக்களின் தூரங்கள் எல்லைகளை கடந்து அவனின் இதழ்களில் ரகசியப்புன்னகை மலர செய்தது. அப்புன்னகை மந்திரம் போட்டதை போல தேன்மொழியை அவனிடமே கொண்டு சேர்த்தது.
அந்த அர்த்தராத்திரியில் அவளோடு அப்படி வழக்காட அவனுக்கு அத்தனை பிடித்திருந்தது. சுவாரஸியமாய் அவனின் வாழ்க்கைக்கு புது அர்த்தம் சேர்த்தவளை மனதோடு கொண்டாடினான்.
“தெரியாம சொல்லிட்டேன். போதுமா? வாயை பிடுங்கி பேச வச்சு இப்ப வாயடைக்கவும் வச்சாச்சு. முன்னவே ரொம்ப பேசுவீங்க. இப்ப ரொம்ப ரொம்ப பேசறீங்க…” என்று தலையசைத்து சொல்ல அதில் சிரித்துக்கொண்டவன்,
“எப்ப வாயை பிடுங்கினேன்? எப்ப வாயடைக்க வச்சேன்? இப்ப நீ தான் கல்ப்ரிட். உனக்கு கூழ் கொண்டுவந்து குடுத்தேன்ல. இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவ…”
“இப்படி பேசிட்டே இருந்தா சத்தியமா தலைவலிக்கும் எனக்கு…”
“அதை பத்தி ஏன் கவலைப்படற? டோன்ட்வொரி. பீ ஹேப்பி. உன் தலைவலி சும்மா பஞ்சா பறந்து போக நான் ஹெல்ப் பன்றேன்…” என்று அவளை படுத்தினான்.