மீண்டும் மீண்டும் அவன் அதையே பேசிக்கொண்டே இருக்க தேன்மொழிக்கு பதிலுக்கு கொடுக்கமுடியாமல் அயர்வாய் இருந்தது.
“என்னால முடியலை…” என்றவள் எழுந்து சென்று ஜன்னல் கதவை திறந்து பார்த்தாள்.
“ஏன் விண்டோவை லாக் பண்ணி வச்சிருக்கேங்க? நல்லா காத்து வரும் தானே?…” என வெளியே பார்த்துக்கொண்டே அவனிடம் கேட்க,
“திறந்து வைக்கலாம்தான். கரப்பான்பூச்சி உள்ள ஜன்னல் வழியா எல்லாம் வந்துரும். அதான்…” என்று சொல்லிமுடிக்க கதவை மூடிக்கொண்டுவந்து அவனருகே படுத்துவிட அவளின் வேகத்தில் அடக்கமாட்டாமல் வெடிச்சிரிப்பு சிரித்தான்.
“உங்களுக்கு கிண்டலா இருக்கா? எனக்கு ஒருமாதிரியா இருக்குது அந்த பேரை சொன்னாலே…” என அவனை முறைக்க,
“கொஞ்சம் முன்னதானே சொன்னேன். என்ன சொன்னலும் நம்பாதேன்னு…” என்றவன்,
“இந்த ஜன்னல் வழியா வெளில இருக்கறவங்களும் உள்ள பார்க்கலாம். சில முக்கியமான திங்க்ஸ் கூட இங்க இருக்குது. அதான் லாக் பண்ணி வச்சிருக்கேன். போதுமா?…”
“காலையில உங்க ரூம்னு இதை சொன்னேங்க. நீங்க சின்ன வயசுல இருந்தே இந்த ரூம்ல தான் இருந்தீங்களா?…”
“ஹ்ம்ம், ஆமா. ஒரு ஸ்டேஜ்க்கு மேல நானே தனியா தூங்க ஆரம்பிச்சுட்டேன். அது இந்த ரூம் தான். இந்த ரூம் நிறைய நிறைய சம்பவங்களை நினைவுப்படுத்தும்…” என்றதும் தேன்மொழி அவனை பார்க்க,
“ஹா ஹா ஹேய் மொழி, உனக்கு நான் மீன் பண்ணின சம்பவத்தை சொல்லலை. ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் கூட இங்க நிறைய அரட்டை அடிச்சிருக்கேன். மாமா பசங்க கூட நிறைய அட்டூழியம் பண்ணிருக்கேன். முறைப்பொண்ணுங்க எல்லாம் வீட்டுக்கு வரப்போ என் ரூம்ல இருந்து என் பென் கலெக்ஷன்கள எல்லாம் சுட்டுட்டு போக வந்தா ரூம்க்குள்ள பூட்டி வெளில தாழ் போட்டு பயம்காட்டிருக்கேன்…”
“அதுவும் குறிப்பிட்ட காலம் தான். காலேஜ்ன்னு சேர்ந்ததும் இந்த ரூம்க்குள்ள யாரையும் அலோவ் பண்ணலை. இப்ப உன்னோட தான் இந்த ரூம் ஷேர் பண்ணிருக்கேன்…” என்று சொல்ல அவளின் குழப்பங்களின் எண்ணிக்கை கூடியது.
கல்லூரிக்கு சென்றதில் இருந்து இந்த அறையில் யாரையும் அனுமதிக்கவில்லை என்றால்? வர்ஷா பெரிய கேள்விக்குறியாக நின்றாள் அவளின் மனதில். அவளே நினைக்க கூடாதென்று இருந்தாலும் சில பேச்சுக்கள் அவளறியாமல் வர்ஷாவினோடு தொடர்பு செய்து பார்த்தது.
“இந்த ரூம் பிடிச்சிருக்கா மொழி?…” என்றான் ஜீவன்.
தன் நினைவுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு அவனின் கேள்வியில் அந்த அறையை பார்வையிட்டவள்,
“இது என்ன கேள்வி? ரொம்பவே பிடிச்சிருக்கு…”என யோசிக்காமல் பட்டென சொன்னாலும் அவளின் குரல் ஆத்மார்த்தமாக இருந்தது.
அவளை அணைத்து அழுத்தமாய் நெற்றியில் முத்தமிட்டவன் தன் நெஞ்சோடு புதைத்துக்கொண்டான்.
“என்னாச்சு?…” என்று அவனின் மார்பிலிருந்துகொண்டே அவனிடம் வினவ,
“மொழி தூங்கலாம்…” என்று கண்களை மூடிக்கொள்ள அவனின் குரல் கரகரத்துபோய் இருந்தது. மேலும் பேசவேண்டாம் என நினைத்தவள் அப்படியே உறங்கி போனாள்.
விடியற்காலை கண்விழித்தவள் எழுந்து குளித்துவிட்டு வர அங்கே ஜீவன் இல்லை. இன்னும் இருள்பிரியாத இந்த காலை வேளையில் எங்கே சென்றிருப்பான் என நினைத்துக்கொண்டே தலையை உலர்த்தி நுனியில் மட்டும் ஒரு முடிச்சிட்டு வெளியே வந்தாள்.
வீடே சாம்பிராணி மணக்க புகை சூழ்ந்து இருந்தது. அதையும் மீறி வெளியே சாணம் தெளித்திருந்த வாசனையில் வாசலுக்கு செல்ல அங்கே அந்த பெரிய வாசலை அடைத்துக்கொண்டு கோலம் போட்டிருந்தாள் அகல்யா.
அழகாய் வரைந்திருந்த கோலத்திற்கு வர்ணம் தீட்டிக்கொண்டு இருந்தனர் வைதேகியும், அகல்யாவும். கொலுசு சத்தத்தில் நிமிர்ந்து பார்த்த அகல்யா,
“வா தேனு, என்ன அங்கயே நின்னுட்ட?…” என அழைத்தவள்,
“அந்த ஊதா கலர் டப்பாவ இங்கிட்டு நவட்டேன்…” என்றபடி கோலத்தில் பார்வையை பதிக்க அவளுக்கு எடுத்து நீட்டியவள்,
“நானும் கலர் குடுக்கட்டா அண்ணி?…” என கேட்க,
“அதுக்கென்ன? உனக்கு எந்த கலர எதுல நெறைக்கனுமோ போடு…” என்று சொல்லவும்,
“இல்லை எனக்கு அந்தளவுக்கு கலர் மேட்சிங் தெரியாது. நீங்க சொல்லுங்க. நான் குடுக்கறேன்…” என்று கேட்கவும்,
“அம்புட்டுத்தான. நா சொல்ல சொல்ல போடு…” என்றவள் அவளுக்கு சொல்லிக்கொடுக்க மூவருமாய் வர்ணம் தீட்டி முடித்து நிமிர லேசாய் பொழுது புலர துவங்கியது.
காலை பனி இன்னும் விலகாதிருக்க சின்ன சின்ன சரிபார்த்தல்கள் செய்துவிட்டு தள்ளி நின்று ஒரு நிமிடம் கோலத்தை ரசித்தாள் அகல்யா.
“உங்களுக்கு கோலம் போடறதுன்னா ரொம்ப பிடிக்குமோ அண்ணி?…” என அவளின் முகத்தில் இருந்த நிறைவில் கேக்க,
“வாச தெளிச்சு வரையறதுக்கு யாருக்குத்தேன் பிடிக்காது? இங்க எல்லாருக்குந்தேன் கோலம்னா உசுரு. போட்டி போட்டுட்டு போடுவோம். காலாற தெருமுக்கு வரைக்கி நடந்துட்டு வந்தியானா உனக்கும் தெரியும்…”
“நான் போட்டதில்லை அண்ணி. அம்மா போடுவாங்க. ஆனா இப்படி கலர் குடுத்து அப்டிலாம் இல்லை. சும்மா ஒரு ஸ்டார், இல்லைனா பூ இப்டி எதாச்சும் வெள்ளை பொடில மட்டும். இவ்வளவு பெருசெல்லாம் இல்லை. அதனால எனக்கும் போட தெரியாது…”
“அதுக்கென்ன? நா சொல்லித்தாரேன்…” என பேசிக்கொண்டு இருக்க,
“வாவ்…” என்று வந்தான் ஷிவா. உடன் ஜீவனும்.
ஜீவனை போலவே லுங்கி கட்டி அதை மடித்துவேறு கட்டியிருந்தான் ஷிவா. தோளில் அவனை போலவே தலை துவட்டி இருந்த ஈரமான துண்டு. பார்த்ததுமே தேன்மொழி சிரிக்க,
“வாவ்னா சிரிப்பியா நீ?…” அகல்யா கேட்க,
“அவ என்னை பார்த்து தான் சிரிக்கறா அண்ணி. நான் லுங்கி கட்டிருக்கேனாம். அதுக்கு தான் இந்த ஆணவச்சிரிப்பு…” என்றவன்,
“தள்ளி நில்லுங்க, ஒரு போட்டோ எடுத்துக்கறேன்…” என்றதும்,
“இங்கிட்டு வா புள்ள, அப்பத்தேன் வெளிச்சத்துக்கு மூஞ்சி நல்லா தெரியும்…” என்று சேலையை இழுத்துவிட்டுக்கொண்டு சிரித்தபடி அகல்யா நிற்க ஷிவா ங்கே என்று பார்த்தான்.
“ஐயோ அண்ணி, அண்ணா போட்டோ எடுக்கறேன்னது நம்மள இல்லை. கோலத்தை…”
“அப்படி சொல்லத்தான? நா கூட நம்மளத்தேன்னு நினைச்சுட்டேன்…” என்று வெள்ளந்தியாக சொல்ல,
“அதுக்கென்ன கோலத்தை விட நீங்க ரெண்டுபேரும் தான் சூப்பரா இருக்கீங்க. முதல்ல உங்களை எடுக்கறேன்…” என்று தேன்மொழியையும் அகல்யாவையும் ஒரு பொஷிஷனில் நிற்க வைத்து மொபைலில் க்ளாரிட்டி பார்த்தான்.
“என்னையும் எடுங்க…” என வைதேகி சேர்ந்துகொண்டாள்.
“டேய் வெய்ட், நானும் போறேன்…” என்று ஜீவனும் தேன்மொழி அருகே சென்று நின்றுகொண்டான்.
காலை சூரியன் அப்பொழுதுதான் எழ ஆரம்பிக்க தங்ககதிர் வீச்சுக்கள் அள்ளி இறைக்க அந்த வெளிச்சத்தில் அழகாய் படமானது அந்த குடும்பம்.
ஷிவா எடுத்து முடிக்க சுலோசனா வந்துவிட்டாள். ‘என்னையும் சேர்த்து எடு’ என்று. எடுத்து முடித்து ஷிவாவோடு சேர்ந்து செல்பி ஒன்றையும் எடுக்க அந்த இடமும் அழகும் மேலும் மேலும் விதவிதமாய் படம் எடுக்க சொல்லியது.
எந்தவித அலங்காரமும், ஒப்பனையும் இன்றி இயற்கையோடு இயற்கையாக நின்றிருந்ததை போல இருந்தது. அவர்களின் தலைக்கு பின்னால் வேப்பமரம் இருக்க சூரியவெளிச்சம் அதில் ஊடுருவி இருந்தது.
“காலையிலையே இங்க என்ன பன்றீங்க? ஷிவா எங்கடா போன?…” என எழுந்து வந்தான் தியாகு.
அவன் வரவுமே அனைவருக்கும் டீ வைப்பதாக சொல்லி அகல்யா வைதேகியுடன் உள்ளே சென்றுவிட்டாள். கோபத்துடன் வந்தவன் கையில் ஆதிக் இருக்க,
“எந்திச்சு வந்தா பையனை பார்க்கமாட்டியா? நல்ல நேரத்துல தூக்கம் போச்சு…” என்று சுலோசனாவிடம் எரிந்து விழுந்தவன்,
“நீ எங்கடா போன?…” என தம்பியிடம் கேட்க,
“உன்னை விட்டு தொலைஞ்சு போகலாம்னா முடியுதா? அதான் மாமாவோட கிணத்துக்கு போய் குளிச்சுட்டு வரேன்…”
“என்னது இந்த நேரத்துலையா? அறிவிருக்கா உனக்கு? இன்னும் முழுசா கூட விடியலை. இந்நேரம் கிணத்துல குளிச்சேன்னு வந்து நிக்கறியே…” என்று கத்த,
“உன்கூட பேசறதுக்கு அந்த இருட்டு கிணறே பெருசு. போ…” என்று உள்ளே சென்றுவிட்டான் ஷிவா.
தியாகு இதை ஜீவன் கேட்டிருப்பானோ என சுற்றிலும் பார்க்க தன் மனைவி மகனை தவிர யாருமில்லை.
“யாரும் கேட்கலை. நீங்க கத்த ஆரம்பிக்கவுமே எல்லாரும் போயாச்சு…” என நக்கலாக சொல்லிய சுலோச்சனாவும் உள்ளே சென்றுவிட்டாள்.
ஜீவன் நேராக தாயிடம் வந்தவன் அவரை பரிசோதித்துவிட்டு திருப்தியுடன் தன் அறைக்கு சென்றான்.
சிறிது நேரத்திலேயே அனைவருமே கிளம்பி அகல்யாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் காலை உணவிற்கு.
உணவை முடித்துவிட்டு அமர்ந்திருக்க திருமூர்த்தி தான் மதிய உணவிற்குள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று வரலாம் என சொல்லி அழைத்து சென்றார்.
“இங்க வந்ததில்லைல மொழி?…” என கேட்டுக்கொண்டே பிரகாரத்தை சுற்றி வந்தான் தேன்மொழியுடன் ஜீவன்.
சாமி கும்பிட்டுவிட்டு அனைவரும் சுற்றிப்பார்த்துக்கொண்டு இருக்க மனைவியுடன் சற்று தனியே தள்ளி வந்தான்.
“நான் ரொம்ப சின்ன வயசுல வந்திருக்கேனாம். சரியா ஞாபகம் இல்லை…” என்றவள் தாமரை குளத்தை பார்த்து அந்த பக்கமாக செல்ல அவளுடன் இணைந்து நடந்தான். பேசிக்கொண்டே அவளின் கைபிடித்து நடந்து குளத்தின் படிக்கட்டுக்கள் பக்கத்தில் வந்து நிற்க,
“ஜீவ்…” என்ற குரலில் ஆணியடித்ததை போல நின்றனர் இருவருமே.
அவர்களுக்கெதிரே கண்ணீருடன் வந்து நின்றாள் வர்ஷா. ஜீவன் உணர்வில்லா முகத்துடன் வெறுமையாய் பார்த்தான் என்றால், தேன்மொழிக்கு உயிராழம் வரை நடுநடுங்கி போனது.
அவளின் இடையூட்டை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை தேன்மொழி. அன்றைய வர்ஷாவின் அடையாளம் இன்னும் அப்படியே. அதே அழகு, அதே உடல்வாகு, அதே பாவனை என்று எந்தவித மாற்றமும் இன்றி இருந்தவளின் கண்ணில் மட்டும் கண்ணீர்.
ஆனால் வர்ஷாவின் கண்கள் ஜீவனை மட்டுமே பார்த்தது. அவனருகே மனைவி என்னும் ஸ்தானத்தில் இருப்பவளை பார்க்க கூட விரும்பவில்லை. அது தேன்மொழி என்று இன்னும் தெரியவில்லை வர்ஷாவிற்கு.
ஜீவனிற்கு திருமணம் ஆகிவிட்டது என்ற தகவல் அவளை அடைந்திருந்தது. பேச்சுக்கு சொல்கிறார்களோ என்ற ஒரு சந்தேகம் இருந்தது. இன்று கோவிலில் தூரத்திலேயே ஜீவனை பார்த்துவிட்டாள்.
தேன்மொழியின் மாற்றம் வேறு வர்ஷாவின் மூளையில் பதியவில்லை. சற்று கவனித்து உற்று பார்த்திருந்தாள் அதையும் கண்டுகொண்டிருப்பாள்.
அவளின் கவனம் எல்லாம் ஜீவனிடமும், அவன் கைகோர்த்து இருந்த அந்த இன்னொரு கையிடமுமே இருக்க,
“ஜீவ்…” என்றாள் மீண்டும்.
ஜீவனின் அந்நியப்பார்வை அவளை கூறுபோட்டது. கொஞ்சமும் தன்னை தெரிந்ததை போலவே காட்டிக்கொள்ளத அந்த விழிகளின் வெறுமையில் நொறுங்கி நின்றாள்.
“இதுக்காக தான் என்கிட்ட டிவோர்ஸ் கேட்டியா ஜீவ்? செகெண்ட் மேரேஜ் பண்ணிப்பன்னு நான் நினைக்கவே இல்லை…” என்று அழுகையோடு சொல்ல அவள் சொல்லியதில் தேன்மொழி அதிர்ந்தாள்.
‘ஜீவனா வர்ஷாவிடம் விவாகரத்து கேட்டது?’ அவளால் அதை ஜீரணிக்கமுடியவில்லை. கோர்த்திருந்த கரம் தளர்ந்துபோக அதை உணர்ந்தவன் தேன்மொழியின் கரத்தை விட்டுவிடாமல் இறுக்கமாய் பிடித்தான்.
“வாட் யூ வான்ட்?…” என்றான் எரிச்சலுடன்.
“ஜீவ்…”
“தேவையில்லாம இப்ப எதுக்கு என்னை டிஸ்டர்ப் செய்யறீங்க?…” என்றவனின் பேச்சு இன்னும் அழுகையை மூட்ட,
“என்னை ஹர்ட் பண்ணாத ஜீவ். ஐ கான்ட்…” என வர்ஷா வழி விடாமல் பேச,
“மொழி வா போகலாம்…” என்றவனின் பேச்சில் அவன் சொல்லிய மொழியில் திடுக்கிட்டு அருகில் நின்றவளை உற்றுப்பார்த்தாள்.
கண்ணீரோடு அமைதியாய் ஜீவனின் அருகே நின்றவளின் தோற்றம் வர்ஷாவை இளக்காரமாய் பார்க்க செய்தது. முகம் சட்டென இறுக்கம் பெற,
“போயும், போயும் உனக்கு கடைசில இந்த பஃபூன் தான் கிடைச்சாளா?…” என இகழ்ச்சியாய் சொல்ல,
“ஏய், மைண்ட் யுவர் வேர்ட்ஸ்…” என்று ஜீவன் குரலில் கனல் தெறித்தது.
அதை ஒரு பொருட்டாகவே மதிக்காத வர்ஷா இன்னும் தேன்மொழியை நன்றாக பார்த்தாள். உள்ளே பற்றிக்கொண்டு எரிந்தது.
“சொல்லு ஜீவ், இவளுக்காக தான் என்னை விட்டியா நீ? சொல்லு…”
“உன்கிட்ட சொல்லனும்னு எனக்கெந்த அவசியமும் இல்லை…”
“இல்லை நீ சொல்லித்தான் ஆகனும். இவ முன்னாடியே என்னை இக்னோர் பன்ற நீ. அப்படி நீ பண்ண கூடாது…” என அதிகாரமாய் சொல்ல,
“ஆமா, இக்னோர் தான். எல்லாம் படிப்பினை தான். கத்துக்குடுக்கும் போது கத்துக்கனும். நானும் உன்கிட்ட இருந்து நிறையவே கத்துக்கிட்டேன்…” என்றவனின் குரலில் அப்பட்டமான வெறுப்பு மண்டி இருந்தது.
“ப்ச், ஹேய் லிசன், மொழி என்னோட வொய்ப். இந்த மரியாதை இல்லாத பேச்சை இங்க வச்சுக்கிட்ட செவுலு பேந்துடும்…”
“நோ, நோ ஜீவ். நான் மாட்டேன், இவ, இவ முன்னாடி என்னை இன்செல்ட் பண்ணாத. நான் தானே உன்னோட வொய்ப்…” என்றவனின் தீ பார்வையில்,
“ஓகே ஓகே பர்ஸ்ட் வொய்ப்…” எனவும்,
“அன்பார்ச்சுனேட்லி…” என்றான் அலட்சியமாக.
அவனின் அலட்சியமும் அதிலும் தேன்மொழியின் முன்னால் செய்த அவமானமும் வர்ஷாவை நிதானமிழக்க செய்தது.
“வாட்? வாட் யூ மீன்?…” என அவனை நெருங்கி நிற்க,
“ஐ மீன் இட்…” என்றவன் தேன்மொழியை பிடித்துக்கொண்டு அவளை கடந்துசெல்ல முற்பட,
“நோ நோ. போகாத. ஜீவ் இங்க பாரு…” என்று மீண்டும் வழிமறிக்க,
“வர்ஷா என்ன பன்ற?…” என்று அவளை தேடிவந்த குடும்பத்தினர் பிடித்துக்கொள்ள,
“ஜீவ், ஜீவ்…” என்று விடாமல் அவள் கத்த அவளை பார்த்தவன் அப்படியே தான் அசையாது சிலை போல நின்றான். தேன்மொழி தான் அதிர்ந்து போனாள்.
இப்படி ஓர் வர்ஷாவை அவள் எதிர்பார்க்கவில்லை. அவளிடம், அலட்சியமும், அதிகாரமும், பிடிவாதமும் முன்பே இருந்தது தான். அதை பார்க்கும் போது அன்று அதை ஆளுமை என எண்ணி ரசித்து பிரமித்தவள் இன்று பயந்தாள்.
“இவனை பாருங்கம்மா, இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு நிக்கறான். ஜீவ் அப்படி செய்யமாட்டான்னு நினைச்சேன். ஆனா ஆனா…” என பேச பேச ஜீவனை வெறுப்புடன் பார்த்த வர்ஷாவின் குடும்பத்தினர் கூட்டம் சேர்வதை கண்டு அவளை அழைத்து சென்றனர்.
“மாமா…” என்ற ஷிவாவின் அழைப்பில் திரும்பிய ஜீவன் அவனின் பார்வையில் இருந்த கேள்வியில் ஆமோதிப்பாக தலையசைத்தான்.
“மொழி, போகலாமா, இல்லை இன்னும் இங்க இருக்கனுமா?…” என்றவனின் குரல் வழக்கம் போலவே உயிர்ப்போடு இருக்க அவனை கண்டு விழிவிரித்தாள்.
சற்றுமுன் அவனிடம் இருந்த இறுக்கமும், வெறுமையும், உணர்வற்ற தன்மையும் இருந்த இடம் காணாமல் போயிருந்தது.
“எல்லாரும் வெய்ட் பண்ணுவாங்க. வா…” என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றான் ஜீவன்.