புன்னகை – 12
கோவிலில் இருந்து வந்தவர்கள் அகல்யா வீட்டிற்கு சென்று விருந்தை முடித்துக்கொண்டு ஜீவனின் இல்லம் வந்தனர் மாலை நேரம்.
ஜீவனும் பார்த்துக்கொண்டுதான் இருந்தான் தேன்மொழியின் நடவடிக்கைகளை. அவளின் முகமே ஏதோ கலவரத்தை பூசியிருப்பதை போல இருக்க அங்கு வைத்து எதுவும் பேசமுடியாமல் பல்லை கடித்தபடி அமைதியாக இருந்தான்.
ஆனால் பார்வை அவளை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. தூரத்தில் கூட பார்வையால் அவளை அணைத்து தன்னை உணரவைத்துக்கொண்டே தான் இருந்தான் ஜீவன். தேன்மொழிக்கு அதில் அலாதி சுகம். ஆனாலும் பதில் பார்வை பார்க்கவில்லை.
கோவிலில் இருந்து வந்ததும் திருமூர்த்தி தனியே ஜீவனை அழைத்தவர் அகல்யாவையும் வைத்துக்கொண்டு வர்ஷா வந்ததை பற்றி கேட்க அமைதியாய் நின்றான்.
திருமூர்த்தி வர்ஷாவை அவனின் குடும்பத்தினர் கூட்டிக்கொண்டு சென்றதையும் ஜீவனும் மொழியும் அங்கே நின்றிருந்ததையும் பார்த்துதான் வேகமாய் வர அதற்குள் ஷிவாவோடு ஜீவன் வந்துவிட்டான்.
அவர் கேட்டதும் நடந்ததை சொல்ல அகல்யா பொங்கிவிட்டாள். ‘நீ எப்படி அவளை வெறுமனே விட்டு வரலாம்?’ என கேட்டு ஜீவனை திட்டி தீர்க்க திருமூர்த்திதான் அடக்கி வைத்தார்.
இரவு நெருங்க நெருங்க கிளம்பும் நேரம் வந்துவிட்டது. கிளம்பும் முன் மிகப்பெரிய மூட்டைகளை கட்டியிருந்தாள் அகல்யா.
“அத்தே இது உங்களுக்குத்தேன். வண்டியைவிட்டு எறங்கவும் மறக்காம எடுத்துக்கங்க….” என்று சொல்ல,
“என்னம்மா, எதுக்கு இதெல்லாம்?…” என வியந்து போனார்.
“பெருசா ஒண்ணுமில்ல, கொஞ்சூண்டு பலகாரம், இங்கன கெடைக்கிற வகைகன்னு எல்லாத்தையும் போட்டுருக்கேன்…” என்று சொல்லிவிட்டு அடுக்களைக்குள் சென்று அங்கிருந்து இரண்டு பெரிய எவர்சில்வர் வாளியுடன் வந்தாள்.
“இதுல உப்பு போட்டு வேவவச்ச கறி இருக்குது. நாளைக்கு ஆக்கிக்கிவீங்க…” என தர,
“இல்ல நாளை வரை…” பத்மா தயங்கி நின்றார்.
மறுநாள் வரை தாக்குப்பிடிக்காதே என்று யோசித்து அவர் நிற்க அவரின் எண்ணம் புரிந்ததை போல,
“ஒண்ணுமாவாதுத்தே. தம்பி வந்தியான்னா இப்பிடித்தேன் குடுத்தனுப்புவோம். ஆட்டுக்கறியும், நாட்டுக்கோழியும் உப்பு மஞ்ச தடவி நல்லா வேவவச்சு சுருட்டி எடுத்து கரண்டிபடாம சட்டில போட்டு நல்லா ஆவி போக ஆறவும் மூடி வச்சா காலைக்கி எறங்கினதும் மணக்க மணக்க கறி கொழம்புதேன்….”
“இல்ல அதுக்கு எதுக்கும்மா இவ்வளவு?…” கார்மேகம் சொல்ல,
“அட அடிச்ச ஆட அம்புட்டுமா உங்கினோம். நல்லா எலும்பு தனியா, துண்டு தனியான்னு அப்பவே எடுத்துவைக்க சொல்லிட்டேன். போயி வச்சு உங்கத்தான. அங்க இந்த மாரி இளசா கெடச்சிடுமா? இது நம்ம காட்டுல வளக்குற ஆடு…”
ஒருவரையும் பேசவிடாமல் வாயடைத்தாள் அகல்யா. அவளிடம் எதையும் மறுக்கமுடியவில்லை.
ஜீவனை பார்க்க அவன் சிரித்தபடி நின்றுகொண்டு இருந்தான் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு.
“சரி நேரமாகுதே, நல்ல நேரத்துல கிளம்பினாத்தான்…” என தியாகு சொல்ல அவனை முறைத்த ஷிவா ஜீவாவுடன் சேர்ந்து லக்கேஜ் அனைத்தையும் எடுத்து வண்டியில் கொண்டு அடுக்கினான்.
தெய்வாவிடம் களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு அவரிடம் ஆயிரம் அறிவுரைகளை சொல்லிவிட்டே அங்கிருந்து கிளம்பினான் ஜீவன்.
வேனின் சென்றுகொண்டிருக்கும் பொழுதும் அவன் எதுவும் பேசாமல் இருக்க தேன்மொழி தானே சென்று பேச யோசித்தபடி அப்படியே அமர்ந்திருந்தாள். அவளின் மௌனம் ஜீவனை இன்னும் கோபமூட்ட,
“ஆட்டமா காட்டற? வீட்டுக்கு போய் உனக்கு இருக்குது காலையில. உனக்கு மந்திரிச்சா சரிப்படும்…” என்று அவளின் காதில் பல்லைக்கடித்தபடி மெல்லியகுரலில் சொல்ல பாவமாய் அவனை பார்த்தாள்.
அந்த இருளில் திறந்துவிடப்பட்டிருந்த ஜன்னலினுள் சீறிக்கொண்டு பாய்ந்த காற்றின் குளுமையும் மனைவியின் முகமும் அவன லேசாய் அமைதிப்படுத்தியது. ஒரு நொடி மூச்சை இழுத்துவிட்டவன்,
“விண்டோ பக்கம் திரும்பிக்கோ. இல்ல என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. இவ்வளவு நேரம் முகத்தை கூட பாக்கலை. இப்ப லுக் விடறா….”
“அது இல்லை…”
“எதுவும் தான் இல்லை. உன்னை கேட்டேனா? நான் சொன்னேன். நாளைக்கு வீட்டுக்கு போய் பேசிக்கலாம். இங்க டென்ஷன் ஆகிடுவேன்…” என்று சாய்ந்து படுத்து கண் மூடிக்கொள்ள தேன்மொழி அவனை பார்த்தவாறே தூக்கத்தை தொலைத்து அமர்ந்திருந்தாள்.
“ப்ச், வா…” என்று என்று தன் தோளில் அழுத்திக்கொண்டவன் அவளை நிமிரவிடாமல் பிடித்துக்கொள்ள அவளின் கைகளை பிரிக்கமுடியாமல் இருக்க சிறிது நேரம் விட்டு அவனின் கை உறக்கத்தில் தளரவும் விலகி அமர்ந்தாள்.
“பிடிவாதம். வாயை திறக்காம படுத்தறது. நானும் வச்சுக்கறேன் வீட்டுக்கு வரட்டும்…” என முணுமுணுத்து ஜன்னலை லேசாய் சாற்றி சிறிதளவு காற்று வரும்படி வைத்துவிட்டு இப்போது தன் தோளில் சாய்ந்திருந்தவனின் தலையில் தலை சாய்த்தபடி உறங்க முற்பட்டாள்.
அதிகாலை நேராக கார்மேகத்தின் வீட்டிற்கு சென்று அவர்களை அங்கு இறக்கிவிட்டுவிட்டு கிளம்புவதாக இருந்தான் ஜீவன்.
அங்கு போக அவர்களை இறக்கிவிட்டு கிளம்ப நினைக்க அவர்கள் விடவே இல்லை.
எவ்வளவு மறுத்தும் மாலை செல்லலாம் என்று சொல்லி அங்கேயே இருக்க செய்தவர்கள் கார்மேகத்தின் அறையில் சென்று படுக்க சொல்ல மறுத்து சோபாவில் அமர்ந்துகொண்டான் ஜீவன்.
தேன்மொழி அவனின் முகத்தை பார்ப்பதும், குடும்பத்தினரிடம் பேசுவதுமாக இருந்தாள்.
சோபாவில் அமர்ந்தவண்ணம் அப்படியே கையை கட்டிக்கொண்டு தலைசாய்த்து விட்ட உறக்கத்தை பிடித்தவன் நன்றாக விடிந்ததும் தான் கண்விழித்தான்.
“என்னங்க மாமா செம்ம தூக்கம் போல?…” என ஷிவா வந்தமர,
“பார்த்தா எப்படிடா தெரியுது?…” என சொல்லி கையை மேலே தூக்கி முறித்தவன்,
“மொழி எங்க?…” என கேட்டான்.
“உள்ள தான் கிட்சன்ல வேலையா இருக்கா. உங்களுக்கும் சேர்த்து கறி குடுத்தாங்கள்ள. அதை இங்கயே செஞ்சு கொண்டுபோய்க்கோன்னு அம்மா சொல்லிட்டாங்க…”
“ஓஹ், அப்போ கிளம்பறோம்…” என்றவன்,
“மொழி…” என சத்தமாக அழைக்க,
“அப்படியே காபி கொண்டுவா தேனு…” என்றான் ஷிவா.
அவனுக்கும் மட்டும் ஒரு கப்பில் காபியை கொண்டுவந்தவள் ஜீவனின் முன்னால் வந்து நின்று,
“உங்களுக்கு குளிக்க ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டேன். குளிச்சுட்டு வந்தா சாப்பிடலாம்…” என சொல்ல,
“இல்லை வேண்டாம். வீட்டுக்கு போய் குளிச்சுக்கலாம். கிளம்பு. ஓலா புக் பன்றேன்…” என மொபைலை எடுக்க சார்ஜ் தீர்ந்துபோயிருந்தது.
“ப்ச்…” என்று அலுத்துக்கொண்டவன்,
“ஷிவா உன் மொபைல்ல இருந்து புக் பண்ணு…” என சொல்ல,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ப்ரெண்ட் கார் இன்னும் இங்க தான் இருக்குது. அவனும் ஊர்ல இல்ல. நானே உங்களை ட்ராப் பன்றேன்…” எனவும்,
“குளிக்க வாங்க…” என மீண்டும் அதையே சொல்லிக்கொண்டு அவள் நிற்க ஒன்றும் பேசமுடியாமல் எழுந்து கார்மேகத்தின் அறைக்குள் சென்றவன் தனக்கு பின்னால் மொழி தான் வருகிறாள் என நினைத்து சட்டென திரும்பி கையை பிடித்து இழுத்து,
“லாக் பன்றீங்க எல்லாரும் சேர்ந்து…” என சொல்லி முடித்திருக்க அவனின் கைகளில் ஷிவா.
“எம்புட்டு இருக்குது ஆச மாமா உங்களுக்கு என் மேல…” என ராகம் போட்டான் ஷிவா.
“அப்படியே விட்டேனா. உன்னை யார் பின்னாடியே வர சொன்னா?…”
“பின்னாடி யார் வரான்னு நீங்க பார்த்திருக்கனும். அதை விட்டுட்டு…” என்றவனின் தலையில் குட்டியவன்,
“போய் மொழியை வர சொல்லு….” என்று பாத்ரூமிற்குள் சென்றுவிட்டான்.
சிரித்தபடி ஷிவாவும் வெளியே வந்து தேன்மொழியிடம் சொல்லி அனுப்பிவிட்டு அங்கே பத்மாவுடன் பேசிக்கொண்டு இருந்தான்.
ஆதிக்கை கையில் பிடித்தபடி தேன்மொழி வர ஜீவன் குளிக்கும் சத்தம் கேட்கவும் அங்கேயே அவனை வைத்துக்கொண்டு அமர்ந்துகொண்டாள்.
குளித்துவிட்டு வெளியே வந்தவன் உள்ளேயே உடை மாற்றியிருக்க ஈரம் திட்டுதிட்டாய் இருந்தது உடையில்.
“வெளில வந்து ட்ரெஸ் பண்ணியிருக்கலாம்ல. பாத்ரூம் சின்னது….” என்று தேன்மொழி சொல்ல,
“உன் கொலுசு எங்க?…”
“ஏன்? கால்ல…” என குனிந்து பார்த்தவள் அப்போதுதான் நியாபகம் வந்து,
“இல்லை அன்னைக்கு அங்க கழட்டிவைக்க சொல்லி நீங்க தான்…” என்றவளின் திணறலை சுவாரசியத்துடன் பார்த்தவன்,
“காலையிலையே போட்டிருக்கலாம்ல. உன் தம்பியை புடிச்சு இழுத்துட்டேன். நீ தான் வரன்னு நினைச்சு…” என்று சொல்ல தேன்மொழி முறைத்தாள்.
“ட்ரெஸ் எல்லாம் எடுத்துவச்சுட்டு வச்சுட்டேன்னு சொல்லிட்டு தான போனேன். என்னமோ என்னாலன்ற மாதிரி பேசறீங்க…”
“முதல்ல கொலுசை மாட்டு. இருக்கியா இல்லையா? வரியா? வரலையான்னு கூட தெரியமாட்டிக்குது. அங்க கழட்டி வைக்க சொன்னா போடாமலே இருந்திருவியா?. முதல்ல எடுத்து போடு…” என்று சொல்லவும் பெட்டியை திறந்து கொலுசை எடுத்தாள்.
அமுதன் இறந்த பின் கழற்றியது. ஜீவனுடனான திருமணத்தின் போது போட கால்களை உறுத்துவதை போல இருந்தது அவளுக்கு. கழற்றவும் உண்மையில் இலகுவாக இருக்க மீண்டும் அவன் போட சொல்லியதும் மறுக்கவில்லை.
முகம் சுருக்கியபடி வாய்க்குள் ஜீவனை திட்டிக்கொண்டு கொலுசை போட தலையை சீவியவன்,
“வீட்டுக்கு கிளம்பனும் மொழி, புரிஞ்சுக்கோ…” என்றான் இறைஞ்சுதலாக.
“போகலாம் தான். பெரிம்மா தான் இருந்து சாப்பிட்டு போக சொன்னாங்க…”
“ஓகே, அப்போ சாப்பிட்டதும் கிளம்புவோமா?…” என்றதற்கு தலையை ஆட்டியவள்,
“வேற ட்ரெஸ் மாத்திருங்களேன். டோர் லாக் பண்ணிட்டு. நான் வெளில இருக்கேன்…”
“ம்ஹூம், அது சரிவராது. இதுவே ஓகே….”
ஜீவனுக்கு அங்கு மனம் ஒட்டவே இல்லை. அதனால் சங்கடத்துடனே ஹாலிலேயே ஷிவாவுடன் அமர்ந்திருந்தான். மாமனார் வீடு. அறையும் அவர்களுடையது. அதை பயன்படுத்தவே அத்தனை யோசித்தான்.
அவனின் முகம் கண்டு கண்டுகொண்டவளை போல அவனை பார்த்து புன்னகைத்தவள்,
“ரொம்ப அன்ஈஸியா பீல் பன்றீங்களோ?…” என்றதற்கு மறைக்காமல் ஆமாம் என்றான்.
“ஓகே கிளம்புவோம்…” என்று அவன் கழற்றி போட்டிருந்த உடைகளை ஒரு கவரில் வைத்தவள் தன்னுடைய உடை காய்ந்திருக்கும் என மாடிக்கு எடுக்க சென்றாள்.
“நானும் வரேன்…” என அவளோடு மாடி ஏற அங்கே சிறிது நேரம் சுற்றி வேடிக்கை பார்க்க,
“சாப்பிட வாங்க…” என மேல வந்துவிட்டாள் சுலோசனா.
“வரோம்மா, நீ போ…” என அவளை அனுப்பியவன் தேன்மொழியை பார்க்க அங்கே காய்ந்த உடைகள் அனைத்தையும் எடுத்து அங்கேயே மடித்திருந்தாள்.
“இங்கயே ஏன் மடிச்சுட்ட? எடுக்க தானே வந்த?…”
“நீங்க வேடிக்கை பார்த்திட்டு இருந்தீங்க, அதான் நானும் வேலையை முடிச்சுட்டேன்…”
“ஓகே வா…” என்று அவன் முன்னால் செல்லவும் உடையை எடுத்துக்கொண்டு இறங்கினாள்.
“என்ன தேனு துணி எல்லாம் எடுத்துட்டு வந்துட்ட?…” பத்மா கேட்க,
“காய்ஞ்சிடுச்சு பெரிம்மா, அதான் கொண்டுவந்துட்டேன்…” என்று தன் உடைகளை எடுத்துவிட்டு சுலோவிடம் மற்றதை தந்துவிட்டு அதை பெட்டியில் வைக்க சென்றாள்.
“தம்பி காபி குடிச்சுட்டு…”
“பெரிம்மா அவங்க சாப்பிட்டு முடிச்சுட்டு தான் குடிப்பாங்க. முதல்ல சாப்பிட்டும்…” என்று மொழி வர,
“நீயும் உட்கார். சாப்பிட்டு கிளம்பலாம்…” என்று ஜீவன் தன்னருகே அவளை அமர்த்திக்கொள்ள,
“என்ன கிளம்பறீங்களா?…” என வேகமாக கேட்டார் கார்மேகம்.
“ஆமாம் மாமா, வீட்டுக்கு போய்ட்டு கொஞ்சம் வேலை இருக்கு…”
“நாளைக்கு மார்னிங் ஷிப்ட் தானே தம்பி…”
“ஆமா, ஆனாலும்…”
“இருந்து மதியம் சாப்பிட்டு சாயங்காலம் போல கிளம்புங்களேன். நாங்களும் தேனு கூட இருந்தமாதிரி இருக்கும்…” என பத்மா சொல்ல சட்டென மறுக்கமுடியாமல் மௌனமானான்.
பின் உண்டுமுடித்து எழுந்துகொள்ளவும் அங்கேயே அமரமுடியாமல் ஷிவாவை அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பினான்.
“வேணும்னா தேனை அனுப்பறேன். கூட்டிட்டு போங்க. என்னமோ என்னை ஆட்டை அறுக்கற மாதிரி கூட்டிட்டு உர்ருன்னு வந்தா என்ன அர்த்தம்?…” ஷிவா கலாய்க்க,
“ச்சே ச்சே, அப்படிலாம் இல்ல. வீட்டுக்கு போனா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்குமேன்னு தான் நினைச்சேன்…”
“மாமனார் வீடுன்னா இப்படித்தான் இருக்குமா மாமா?…” என கேட்டு அவனிடம் முறைப்பை வாங்கிக்கொண்டவன்,
“சரி சரி, நாங்களும் பழகனும்ல. அனுபவசாலிட்ட தெரிஞ்சா நானும் இப்ப இருந்தே கத்துப்பேன்…” என்றவனிடம் அதற்கு மேலும் அமைதியாக இல்லாமல் பேசிக்கொண்டே வந்தான் ஜீவன்.
வெறுமனே சுற்றியிருக்கும் நான்கு தெருக்களை சுற்றுவிட்டு மீண்டும் வீடுவந்து சேர்ந்தனர்.
“இந்த வெயில்ல வெளில போகனுமா? ரெஸ்ட் எடுக்கலாம்ல…” சுலோ வந்து ஜுஸ் தர,
“அதான் எங்களுக்கும் சேர்த்து உங்க வீட்டுக்காரன் எடுக்கானே ரெஸ்ட்டு. போதாதா அண்ணி?…” என்றான் ஷிவா.
தியாகு வந்ததில் இருந்து உறக்கம் தான். எழுந்துகொள்ள, அறைக்குள்ளேயே உணவை வரவழைத்து சாப்பிட உறங்க என இருக்க அதை சொல்லி கிண்டல் பேசினான் ஷிவா.
சிறிது நேரத்தில் ஜீவனின் எண்ணிற்கு மருத்துவமனையில் உடன் பணிபுரியும் ஒருவர் எண்ணிலிருந்து இருந்து அழைப்பு வர யோசனையுடன் எடுத்தான்.
“டாக்டர் ஜீவன், நான் நட்ராஜ் பேசறேன். ஒரு சின்ன ஹெல்ப்…” என்றார் அவர்.
“சொல்லுங்க ஸார்…” என அவரின் வயதின் பொருட்டு மரியாதையாய் விளிக்க,
“எனக்கு அர்ஜெண்டா ஒரு வேலையாகிடுச்சு. உடனே ஊருக்கு கிளம்பனும். இன்னைக்கு என்னோட ட்யூட்டியை நீங்க பார்த்துக்க முடியுமா?…” என கேட்டதும் ஒருநொடி என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
“ஜீவன்…” என மௌனமாய் நின்றவனிடம் கேட்க,
“ஹ்ம்ம், யாப்….”
“உங்க சூழ்நிலை புரியுது ஜீவன். பட் வேற யார்க்கிட்டயும் கேட்கமுடியாது. உங்களுக்கே தெரியும் நம்ம ஹாஸ்பிட்டல் பத்தி. நீங்க தான் புரிஞ்சுப்பீங்க…”
‘நல்லா புரிஞ்சேன். இவர் வேற நிலைமை புரியாம. பொண்டாட்டி திரும்பிட்டு நின்னா சோதனைக்குன்னு இவர் வேற படுத்தறானே?’ என மனதிற்குள் வைதவன் பின் அவர் சொல்லியதையும் புரிந்துகொள்ளத்தான் செய்தான்.
மருத்துவமனையில் அத்தனை இலகுவில் யாரும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளமாட்டார்கள் என்பது பணியில் அமர்ந்த சிறிது நாட்களிலேயே புரிந்துகொண்டான் ஜீவன்.
அதனாலேயே எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் சென்று நிற்க கூடாது என்ற முடிவில் இருக்க தன்னிடம் ஒருவர் உதவி கேட்க மறுக்கமுடியவில்லை அவனுக்கு. திரும்பி மொழியை பார்க்க அவள் இவனை என்னவென்று பார்த்தாள்.
‘இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை’ என நொடித்துக்கொண்டவன்,
“டெபனட்லி…” என்று சொல்லி விவரங்களை கேட்டுவிட்டு போனை வைத்துவிட்டு தேன்மொழியை பார்த்தவன்,
“இப்ப கிளம்பியே ஆகனும் மொழி. நைட்ஷிப்ட். போய் ஹாஸ்பிட்டல் கிளம்பனும்…” என்று சொல்லவும்,
“நைட்ஷிப்டா அப்ப தேனு…” என்ற பத்மாவை முடிந்தபட்டும் முறைத்தான் ஷிவா.
“தேனு போய் லக்கேஜ் எடுத்துட்டு வா…” என்றவன்,
“நன் கார் எடுக்கறேன் மாமா…” என்றதும்,
“இருடா சாப்பிட்டு போகலாம்…” பத்மா சொல்ல,
“ம்மா,…” என பல்லை கடித்தவன் மேலும் பேசும் முன்,
“ஷிவா…” என்று அவனை அதட்டிய ஜீவன்,
“இல்லை அத்தை, பேக் பண்ணுங்க. அங்க போய் சாப்பிட்டுப்போம்…” என்று ஜீவன் சொல்லி வாசலை பார்க்கவுமே பார்வையால் சென்று எடுத்துவைக்குமாரு சொல்லிய ஷிவா கார்மேகத்திற்கு அழைத்தான்.
அவர் வெளியே கடைக்கு இலை வாங்க சென்றிருக்க அவரிடம் சொல்லி வர சொல்லி சொல்ல அடுத்த பத்து நிமிடத்தில் அவரும் வந்துவிட சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டனர்.
அவர்களை கொண்டுவந்து விட்டுவிட்டு அங்கேயே இருந்து சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டான் ஷிவா.
அவன் கிளம்பியதும் வீட்டை சுத்தம் செய்து கொண்டுவந்ததை ஓரிடத்தில் வைத்துவிட்டு தேன்மொழி வேலையில் இருக்க ஜீவன் அவளுக்கு உதவியாய் வீட்டை துடைக்க செய்ய என்று இருந்தான்.
பேசிக்கொண்டே அனைத்தையும் முடிக்க மாலை ஆகிவிட்டது. ஒரு டீயை போட்டு குடித்துவிட்டு தேன்மொழி அமர ஜீவன் கிளம்ப ஆயத்தமானான்.
“நைட் தனியா இருந்துப்ப தானே?…” என கேட்டுக்கொண்டே கிளம்பி தனத் கோர்ட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு அவன் வர அவனை பார்த்தபடி புன்னகையுடன் நின்றாள் தேன்மொழி.
எத்தனை வருடம் ஆகிற்று அவனை இப்படி ஒரு தோற்றத்தில் பார்க்க. மனம் நிறைந்து ஆசையுடன் பார்த்தபடி இருந்தாள்.
முன்பு வாலிபனாய் இருந்தவன் இன்று முழு ஆண்மகனாக அதற்கேற்ற தோற்றத்துடன் நின்றவனை மிட்டாய்க்கடையை பார்த்ததை போல அவள் பார்த்து நிற்க ஜீவனுக்கு அவள் நின்ற கோலம் உசுப்பேற்றியது.
“இப்படி பார்க்காளே…” என வாய்விட்டே சொல்லியவன்,
“மொழி…” என்ற அழைப்பில் அவள் அசடுவழிய கழுத்தை தேய்த்துக்கொண்டு அவனை பார்க்க பார்த்தவனுக்கு சிரிப்பாய் இருந்தது.
முந்தைய மொழி அவனுக்கு தெரிந்தாள். இப்படித்தான் எதையாவது பேசிவிட்டு அசடுவழிய அவனிடம் நிற்க நினைத்தவனுக்கு இதழ்களில் விரிந்த புன்னகை.
“வரவா…” என கேட்டவனுக்கு அவள் தலையசைக்க கதவை அடைந்தவன் மீண்டும் அவளிடம் வந்து நின்றான்.
“மொழி ஒரு விஷயம் சொல்றதை தெளிவா புரிஞ்சுக்கோ…” என்று பீடிகையுடன் சொல்ல,
“சொல்லுங்க…” என அட்டென்ஷனில் அவள் நிற்க அதில் முறைத்தவன் முகத்தை தீவிரமாய் வைத்துக்கொண்டு,
“அந்தரங்கம் எப்பவும் ரெண்டுபேருக்கு நடுவில அந்தரங்கமாவே இருக்கறதுல தான் அழகு. அது பகிரங்கமாகும் போது அருவருப்பாகிடுது. ஏற்கனவே என்னோட அந்தரங்கம் ஊர்ல, கோர்ட்லன்னு அசிங்கப்பட்டு போய்டுச்சு. அதை நீ தெரிஞ்சுக்க வேண்டாம்னு நான் நினைக்கறேன். என் மேல நம்பிக்கை இருந்தா…”
“சத்தியமா நான் உங்களை நம்பறேன். உங்களை கண்டிப்பா நம்பறேன். நான் அதைப்பத்தி இனி நினைக்கவே மாட்டேன்…” என்று அவனின் இடையிட்டு சொல்ல மென்னகை புரிந்தவன்,
“தட்ஸ் மை கேர்ள்…” என அவளின் கன்னம் தட்டியவன்,
“பை மொழி. லாக் பண்ணிக்கோ. தூங்கு. மார்னிங் பார்க்கலாம்…” என சொல்லிவிட்டு அவளின் கன்னத்தில் லேசாய் இதழொற்றியவன் விடைபெற்று கிளம்ப சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தவள் அதன் பின்னரே எழுந்து உறங்க சென்றாள்.
வர்ஷா அவளின் மனதில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு இருந்தாலும் அதன்பக்கம் மனதை திருப்ப தோன்றவில்லை தேன்மொழிக்கு.
‘ஜீவனே விவாகரத்து கேட்டிருந்தாலும் ஏதேனும் காரணம் பலமாக இருந்திருக்கும். எதையும் காரணமின்றி செய்யும் ஆள் அவனல்ல’ என அவன்மீதான நம்பிக்கையின் அஸ்திவாரத்தை இன்னும் வலுவாக்கினாள் பெண்.
அதனால் அவனாக சொல்லும் பொழுது சொல்லட்டும். தானே கேட்கவேண்டாம் என முடிவெடுத்துக்கொண்டாள். முடிவு மட்டுமே தான் அவள் எடுத்தது.
ஆனால் அவளின் சிறு செயலில் ஜீவன் வெடித்து அவளாலேயே அவளிடம் அவன் சொல்லவிருப்பதை அவள் அப்போது அறியவில்லை.