புன்னகை – 13
காலை கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த ஜீவன் இன்னும் தேன்மொழி தூங்கிக்கொண்டிருக்க அவளை தொந்தரவு செய்யவேண்டாம் என்று இன்னொரு அறைக்கு சென்று குளித்துவிட்டு வந்து தண்ணீர் குடிக்க கிட்சனிற்கு செல்ல அங்கே உணவு சமைத்திருந்தது.
“எல்லாம் செஞ்சு வச்சிட்டா படுத்தா?…” என சொல்லிக்கொண்டே அவற்றை திறந்து பார்த்தவன் மீண்டும் மூடிவைத்துவிட்டு தண்ணீரை குடித்து முடித்து அவளருகே வந்து படுத்துக்கொண்டான்.
அவனுக்குமே அயர்வாய் இருக்க சிறிது நேரம் தூங்கி எழுவோம் என்று வந்து படுக்க ஒருபக்கமாய் படுத்திருந்தவள் கூந்தல் ஈரத்துடன் இருக்க அருகே படுத்ததும் ஜில்லிட்டது அவளை அணைத்த கையில்.
“மொழி…” என்று அவளை தட்டி எழுப்ப குளித்து முடித்து தான் உறங்கியிருந்தாள்.
“ப்ளீஸ், கொஞ்சம் நேரம்….” என்று அவனின் பக்கம் திரும்பி கையை பிடித்துக்கொண்டு மீண்டும் தூங்க,
“என்ன இது? ஈரத்தலையோட தூங்கறது? தலைல நீர் வச்சிடும். காயவும் தூங்கவேண்டியது தானே? யார் வேண்டாம்ன்னா?…” என அவளை எழுப்பினான் மீண்டும்.
“சாப்ட்டியா மொழி. எழுந்துக்கோ…” என எழுப்ப எழுப்ப மூடிய கண்களை திறக்காமல் இறுக்கமாய் சுருக்கிக்கொண்டவள் உடலை குறுக்கி படுத்தாள். பார்த்ததும் ஓரளவிற்கு அனுமானித்தவன் முகம் கனிய,
“ஹேய் தூதர்ஷன். எழுந்துக்கோ முதல்ல. சாப்பிட்டு தலை காயவும் தூங்கு…” என மெதுவாய் அவளின் கன்னம் பற்றி சொல்ல,
“ம்ஹூம், வேண்டாம்…” என்ற முணங்கலே அவளிடத்தில்.
“பெயின்கில்லர் போடுவியா? டேப்லட் வேணுமா?…” தலையனையை நிமிர்த்தி வைத்தவன் அவளையும் தூக்கி சாய்த்துவிட மீண்டும் சரிந்தாள்.
“உதை வாங்குவ என்கிட்டே. சொன்னா கேட்கமாட்ட…” என்ற அதட்டல் இப்போது எடுபட்டது அவளிடத்தில்.
“எனக்கு முடியலைன்னு தானே படுத்திருக்கேன். கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும். ஏன் புரியமாட்டேங்குது உங்களுக்கு?…” என அவனுக்கு மேல் அவனை அதட்டினாள் மொழி.
“இப்படி படுத்தா இதுவும் சேர்ந்து இன்னும் முடியாம தான் போகும்…”
“எனக்கு எப்படி இருக்குன்னு எனக்குத்தான் தெரியும். சும்மா அதை செய்யாத, இதை செய்யாதன்னு சொல்ற உங்களுக்கு என்ன தெரியும்?…” என இன்னும் தேன்மொழி எரிச்சல்பட,
“ஓகே ஓகே இப்படியே சண்டை போட்டுட்டே வந்து சாப்ட்டுட்டு தூங்கு…” என கூட்டிக்கொண்டே வந்துவிட்டான்.
சொல்வதை கேட்காமல் பிடிவாதமாய் செய்கிறானே என்னும் எரிச்சலில் தேன்மொழி சோபாவில் சென்று அமர அவளுக்கு தட்டில் கொண்டுவந்து தந்தவன் தானும் ஒன்றை வைத்துக்கொண்டு அவளருகே அமர்ந்தான்.
“தூங்கறவ சாப்பிட்டாவது தூங்கனும். சும்மா சாப்பிடாம தூங்கினா?…” என அதற்கும் சத்தம் போட பதில் பேச தேம்பில்லாதவள் போல உண்டுமுடித்துவிட்டு தண்ணீரை தேட சோபாவின் அருகே தான் வைத்திருந்தான்.
அவளுக்கு எடுத்து தரவும் வாங்கி குடித்தவள் தட்டை கழுவி வைத்துவிட்டு அவனுக்கு அருகே அமர்ந்து அப்படியே சாய்ந்துகொண்டாள்.
“படுக்க போவான்னு நினைச்சேன்…” என லேசாய் சிரித்தபடி அவன் சாப்பிட,
“போனா அதுக்கும் திட்டுவீங்க. அதான்…” கண்ணை மூடி அவள் சொல்ல ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தவன்,
“எதாச்சும் சூடா குடிக்கறியா மொழி?…” என கேட்க,
“ஹ்ம்ம், ஓகே…” என்றவள் அங்கேயே மீண்டும் சாய்ந்துகொண்டாள்.
இருவருக்குமாய் சூடாய் பனங்கற்கண்டு சேர்த்து பால் ஆற்றி கொண்டு வந்து அவளுக்கு தர,
“காபி போடுவீங்கன்னு நினைச்சேன்…” என அதற்கும் நொட்டை சொல்லியபடி வாங்கிக்கொண்டவளுக்கு வயிற்றுக்கு இதமாய் இருந்தது அந்த பால்.
நன்றாக அவளுக்கு பிடித்தவிதத்தில் ஆற்றியே கொண்டு வந்திருக்க முழுவது குடித்தவள் அவனை பார்க்க,
“ஒரு டென் மினிட்ஸ். இப்படியே உட்கார்ந்திரு…” என சொல்லி பேனை போட்டு முழுவேகத்தில் வைத்தவன் தம்ளரை கழுவி வைத்துவிட்டு வந்து வெதுவெதுப்பான நீருடன் ஒரு மாத்திரையை அவளுக்கு நீட்ட என்னவென பார்த்தாள்.
“முகத்தை சுருக்கிட்டே இருக்கே. இது பெய்ன் கில்லர் தான். போட்டுக்கோ…”
“சும்மாலாம் டேப்லட் போட கூடாதுன்னுவீங்க…”
“ப்ச், அது சும்மா சும்மா கூடாது. எப்பவாச்சும் ஒரு தடவைன்னா ஒன்னும் பிரச்சனை இல்லை…” எனவும் மேலும் கேள்வி கேட்டால் டென்ஷன் ஆகிவிடுவானே என அவன் நீட்டியதை வாங்கி போட்டுக்கொண்டவள் படுக்க போக,
“இப்பத்தான மாத்திரை போட்ட. உடனே படுக்கற. அடி வேணுமா?…” என்று இடுப்பில் கை வைத்து அதட்ட,
“சத்தியமா உங்க பேஷன்ட்ஸ் ரொம்ப ரொம்ப பாவம்…” என சொல்லிவிட்டு அவள் சிரிக்கவும் அவளின் தலையில் குட்டியவன்,
“இந்த வீக்கென்ட் ஷிவா ஊருக்கு கிளம்பறதா சொன்னான். லீவ் முடியுதே…” என அவளிடம் பேச்சுக்குடுக்க,
“ஹ்ம்ம், எனக்குமே ரொம்ப கஷ்டமா இருக்குது. பெரிம்மா அண்ணாவுக்கு கல்யாணம் செய்யனும்னு பேசறாங்க. அண்ணா தான் பிடிகுடுக்கமாட்டேன்றான். இந்த தடவை லீவ் இருந்தா முடிஞ்சிருக்கலாம்…”
“ஹ்ம்ம், வந்த லீவ்ல நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ஓகே, பொண்ணு பார்க்கறாங்களா?…”
“போய்ட்டு தான் இருக்குது. தியாகு அண்ணா தான் இது வேண்டாம். அது சரியில்லைன்னு தட்டிவிட்டுட்டே இருக்காங்க. பெரியப்பாவுக்கு பயங்கர கோபம் அதுல…”
“கல்யாணம் ஷிவாவுக்கு தானே?…”
“ஹ்ம்ம், ஆமாம். ஆனா வீட்டுக்கு பெரியவங்களா தியாகு அண்ணாவை கேட்கனும் தானே? அதை தவிர்க்கமுடியாதுன்னு அவங்கட்ட சொல்லறப்போ ஷிவாண்ணா வெளிநாட்டுல வேலை பார்க்கறாங்க. அதுக்கு தகுதியான பொண்ணை பார்க்கனும்னு சொல்லி தட்டி தட்டி விடறாங்க…” என்றவள் தனக்கு ஜீவாவின் சம்பந்தம் வரும் முன்னர் வந்த சம்பந்தத்தை தன்னை காரணம் கொண்டு தியாகு தட்டியது நினைவிலாடியது.
“இவ வந்த நேரம், எதுவும் உருப்படி இல்லை. எல்லாத்திலையும் அவசரப்பட்டு அவரசப்பட்டு இவ இங்க நம்ம தலை மேல உட்கார்ந்திருக்கறா. இப்ப ஷிவா கல்யாணத்துக்கும் அவசரப்பட்டு அவனுக்கும் எதாச்சும் ஆகவா? என் பேச்சை கேளுங்க…” என ஆடியிருந்தான்.
“இப்பவே ஒன்னும் முடிக்க போறதில்லையே. வரன் வந்திருக்குன்னு தானே சொன்னேன்?…” என பத்மா பேசியிருக்க,
“வந்த வரனை முடிவு பண்ணிட்டா அடுத்தடுத்து எல்லாமே நடக்கும் தானே? அதான் பொறுமையா செய்யலாம்னு சொல்றேன். இது என்ன இடம்னு இந்த பொண்ணை கொண்டு வந்து ஷிவாவுக்கு சொல்றாங்க…” என ஆயிரத்தெட்டு குறை சொல்லி பெரும் காரணமாய் தேன்மொழியை காண்பித்து அந்த வரனை தவிர்த்திருந்தான்.
“மொழி…” என அவளின் அமைதியை பார்த்து ஜீவன் கேட்க,
“ஹ்ம்ம், சொல்லுங்க…”
“நான் என்ன சொல்ல? நீ தான் சொல்லிட்டு இருந்த…”
“ஹ்ம்ம், ஆமால…” என சொல்லியவள்,
“இனி ஷிவா அண்ணா வர ஒருவருஷம் ஆகும்…” என கவலைப்பட,
“சரி விடு. அவனுக்குன்னு எங்கையாச்சும் பொண்ணு ரெடியா தான் இருக்கும். பார்த்துக்கலாம்…” என்றவன் அவளின் கூந்தலில் கை நுழைத்து பார்த்தவன்,
“ஓகே, இப்போ பெட்டர். போய் ரெஸ்ட் எடு….” என்றதும்,
“நீங்க, நைட்லாம் முழிச்சிருந்திருப்பீங்க தானே?…”
“இல்லையே அங்க தூங்க ஆள் போதலையாம். அதான் என்னையும் கூப்பிட்டாங்க…” என ஜீவன் சிரிக்காமல் சொல்ல அவனை முறைத்துவிட்டு எழுந்து சென்றாள் மொழி.
அவள் சென்றதும் ஊருக்கு போன் செய்து பேசியவன் தாயின் உடல்நலனை விசாரித்துவிதட்டு திருமூர்த்திக்கு அழைத்து பேசிவிட்டு வந்து தானும் உறங்கினான்.
அந்த வார இறுதி விடுமுறை அன்று ஷிவா வந்துவிட உடன் சுலோவும் ஆதிக்குடன் வந்திருந்தாள். உற்சாகமாக அனைவருமாக சேர்ந்து சமைத்து உண்டு என்று கலாட்டாவாக போய்க்கொண்டிருக்க மாலை வரை அங்கேயே இருந்தனர்.
நால்வருமாக கேரம்போர்ட் ஆடிக்கொண்டிருக்க படபடவென வேகமாய் கதவு தட்டப்பட்டது.
“நீங்க விளையாடுங்க. நான் பார்க்கறேன்…” என எழுந்துசென்றான் ஷிவா திறந்ததும் பார்த்தால் அங்கே ஆதிஷக்தி.
“டாக்டர் ப்ளீஸ் ஹெல்ப் மீ. டாக்டர்…” என கண்ணீருடன் ஷிவாவிடம் அவள் கேட்க அப்படியே நின்றவன் அவள் அவனின் கையை பிடிக்கவும் தான் தன்னுணர்வு வந்தான்,
“நான் இனிமே தான் டாக்டருக்கு படிக்கனும். அப்பறமா என்னை கூப்பிட்டுக்கோ…” என்றன நக்கலாய்.
சக்தியின் குரலில் ஜீவனும் எழுந்துவர கண்ணீரை துடைத்துவிட்டு ஷிவாவை பார்த்தவள் பார்வை இன்னும் தவிப்புடன் இருந்தது.
“என்னாச்சும்மா?…” என வந்தவனிடம்,
“அப்பா மூச்சுபேச்சில்லாம இருக்காங்க. ப்ளீஸ் வந்து என்னன்னு கொஞ்சம் பாருங்க டாக்டர்…” என்றதும்,
“ஜஸ்ட் எ மினிட்…” என வேகமாய் உள்ளே சென்று தனது மெடிக்கல்பேக்கை தூக்கிகொண்டவன்,
“ஷிவா நீயும் வா…” என எதற்கும் இருக்கட்டுமென்று அவனையும் கூட்டிக்கொண்டு,
“ஆம்புலன்ஸ்க்கு சொல்லிட்டீங்களா?…” என கேட்டுக்கொண்டே அவளுடன் நடக்க,
“இல்லை. பதட்டத்துல உங்களை பார்க்கத்தான் வந்தேன்…” என ஷக்தி சொல்லவும்,
“ஷிவா…” என்ற ஜீவனை புரிந்து,
“இதோ நான் கால் பன்றேன்…” என்றவன்,
“ஷக்தி, உன் டோர் நம்பர் என்ன?…” என கேட்டு உடனே ஆம்புலன்ஸிற்கு அழைத்துவிட்டான்.
வீட்டிற்குள் நுழைய அங்கே ஷக்தியின் தாய் அவரருகே அமர்ந்து அழுதுகொண்டு இருந்தார். உள்ளே சென்று பார்க்கும் போது ஷக்தியின் தந்தைக்கு வலது கை லேசாய் மடிந்திருக்க காலும் இழுத்திருந்தது.
“எப்போ பார்த்தீங்க?…” என கேட்டவன் உடனடியாக பரிசோதித்தான்.
“லஞ்ச் சாப்பிட்டதும் வந்து படுத்தாங்க. இப்ப வந்து எழுப்பினேன். எழுந்துக்கவே இல்லை….” என்று அழுதுகொண்டே சொல்ல,
“ப்ச், அழாம பேசுங்க. உங்கம்மாவும் அழுதுட்டு இருக்காங்க…” என்று ஷிவா சொல்ல அவனை பார்த்தவள் தன் கண்ணை துடைத்துவிட்டு தாயிடம் திரும்பினாள்.
“மைல்ட் அட்டாக் மாதிரி தெரியுது. ஒண்ணுமில்லை. ஹாஸ்பிட்டல் போய்டலாம்…” என ஜீவன் சொல்லும் பொழுதே ஆம்புலன்ஸ் வந்துவிட அவர்களோடு ஜீவனும் கிளம்பினான்.
“நானும் வரவா மாமா…” என கேட்க,
“இல்லை நீ வீட்டுல இரு. மொழிட்ட நான் ஹாஸ்பிட்டல் போட்டு வரேன்னு சொன்னேன்னு சொல்லு…” என சொல்லி ஆம்புலன்சில் ஏறிக்கொண்டான்.
ஷிவாவிடம் கேட்டு தெரிந்து கொண்ட மொழி அவர்களுக்காக வேண்டிகொண்டாள்.
“வேண்டுதல் பலமா இருக்கே…” என கேட்டு கிண்டல் செய்தவன் ஜீவன் வரும் வரை அங்கேயே இருந்தான்.
மூன்று மணிநேரத்தில் வீடு வந்து சேர்ந்தான் ஜீவன். வந்தவன் முதலில் குளித்துவிட்டு வருவதாக சொல்லி செல்ல அவனுக்காக குடிக்க டீ தயாரித்து வைத்துவிட்டு காத்திருந்தாள் மொழி.
வந்தவன் தனக்கு டீயை எடுத்துக்கொண்டு கீழே அமர்ந்து சுவற்றில் சாய்ந்துகொண்டான்.
“எல்லாரும் குடிச்சாச்சா?…” என கேட்க,
“அதெல்லாம் குடிச்சுட்டோம். அவர் எப்படி இருக்கார்? இப்போ ஓகே வா?…” என ஷிவா கேட்க,
“ஷக்தி தானே அந்த பொண்ணு பேரு. என்னாச்சு அவங்கப்பாவுக்கு? ஹாஸ்பிட்டல்ல என்ன சொன்னாங்க?…” என மொழியும் கேட்க,
“முதல்ல அவர் டீயை குடிக்கட்டும். இத்தனை கேள்வியா?…” என சுலோ அதட்டவும் இருவரும் வாயை மூடினார்கள்.
ஜீவனின் முகம் ஏதோ வாட்டமாய் இருக்க தேன்மொழிக்கு என்ன புரிந்ததோ அவனின் கையை லேசாய் அழுத்தினாள். அவளின் தீண்டலில் அவளின் முகம் பார்த்து லேசாய் புன்னகைத்தவன்,
“நல்லா இருக்கார். மைல்ட் அட்டாக் தான். கொஞ்சம் விட்டிருந்தா ஸ்ட்ரோக்ல வச்சிருக்கும். நல்லவேளை சீரியஸ் ஆகாம காப்பாத்தப்பட்டுட்டார்…”
“ஹப்பா அந்த கடவுளுக்கு தான் நன்றி…” என சுலோவும், தேன்மொழியும் சொல்ல,
“கடவுளா? நல்லா காப்பாத்தினார் போ…” என சொல்லியவனின் வார்த்தை அத்தனை வலியுடன் இருந்தது.
அந்த கோவிலின் முன்னே தானே அவர் உயிர் துடிக்க பார்த்தான். கண் முன்னால் தந்தையின் உயிரை காப்பாற்ற இயலாத அன்றைய தன் நிலை. அழுத்தமாய் கண்ணை மூடிக்கொண்டவன் பின் சற்று நிதானித்து,
“ஓகே, இப்ப நல்லாகிட்டார். இப்பத்தான் அந்த குடும்பம் நிம்மதியா இருக்குது…” என சொல்லி,
“சாப்பிட்டாச்சா?…” என அவர்களை பார்த்து ஜீவன் கேட்க,