“இன்னும் இல்லை. சரி எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்…” என மொழி எழுந்துகொள்ள,
“மொழி, நீங்க சாப்பிடுங்களேன். எனக்கு வேண்டாம்…” என்றவன் குரலில் என்னவோ என பயந்தவள்,
“என்னாச்சு உங்களுக்கு?…” என்றாள் மெல்லிய குரலில்.
“ப்ச்…” என்றவனின் சலிப்பில் வீட்டினர் முன்பு ஒன்றும் கேட்காமல் அமைதியானாள்.
ஷிவாவும், சுலோவும் சாப்பிட்டு கிளம்பினார்கள். மாலையில் இருந்தே தியாகு கத்து கத்தென கத்தியிருந்தான். இன்னும் வீடு வந்து சேரவில்லை என்று.
இன்னும் இரண்டுநாட்களில் ஷிவாவும் கிளம்ப இருக்க அங்கிருந்து கிளம்பவே மனமின்றி கிளம்பினார்கள்.
டிவியை போட்டுவிட்டு அதை பார்த்துக்கொண்டு இருந்தவனிடம் வந்த தேன்மொழி சாப்பிட அழைக்க அப்போதும் மறுத்தான்.
“உங்களுக்கு நான் மட்டும் நீங்க சொன்னதை எல்லாம் செய்யனும். ஆனா நீங்க கேட்கவோ செய்யவோ மாட்டீங்க. அதானே? எனக்கும் சாப்பாடு வேண்டாம். போய் எல்லாத்தையும் சூடு பண்ணி மூடி வச்சுட்டு போறேன். சாப்பிட்டா சாப்பிடுங்க. இல்லைன்னா சேர்ந்தே பட்டினியா இருப்போம்…”
“ப்ச், மொழி. எனக்கு வேலை இருக்குது…”
“மொழியும் இல்லை, தொழியும் இல்லை. ஆளை பாரு. மொழியாம் மொழி…” என சண்டை போட்டுக்கொண்டே அவள் கிட்சனிற்குள் வர சேனலை மாற்றிக்கொண்டு இருந்தவன் அங்கேயே ரிமோட்டை வைத்துவிட்டு வந்து,
“பசிக்கலைன்னு சொன்னா கேட்க மாட்டியோ? எவ்வளவு கோபம் வருது உனக்கு…” என்று வந்து நிற்க,
“ஒன்னும் பேச வேண்டாம். நானும் பார்த்துட்டே இருக்கேன். சும்மா சும்மா அதட்டிட்டே இருக்கீங்க. ஆனா நான் மட்டும் எல்லாத்துக்கும் தலையாட்டனும். உங்களோட இதே தலைவலியா போச்சு…”
“சொல்லவே இல்லை…” என்று அவளின் கோபத்தின் வேகத்தில் சிரிக்க,
“சொல்லுறாங்க. அதெல்லாம் சொல்ல முடியாது. அதான் பசிக்கலைன்னு சொல்லிட்டீங்க இல்ல. (riverbendresort.us) போங்க. போங்க…” என அவனை தள்ளிக்கொண்டு சென்று ஹாலில் சோபாவில் மேல் தள்ளியவள்,
“வேலை இருக்குன்னு சொன்னீங்க தானே? இங்க இருந்து நகர கூடாது. ஆமா….” என்று சொல்லி மீண்டும் கிட்சனிற்குள் வந்துவிட்டாள்.
ஆனாலும் சத்தமாய் அவன் கேட்கும் விதமாய் முணுமுணுத்துக்கொண்டே அவள் பேச அங்கிருந்தே அவளை பார்த்தபடி இருந்தவனின் மனநிலை முற்றிலும் மாறியிருந்தது.
ரிமோட்டை கையில் எடுத்தவன் அவளை பார்த்துக்கொண்டே சேனலை மாற்ற அவளோ அங்கிருந்து பார்வையை திருப்பும் படி சைகையால் மிரட்டினாள். அதே நேரம்,
“செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்…” என்ற பாடலில் அவனும் சேர்ந்து அவளை பார்த்துக்கொண்டே சீண்டலுடன் பாட வேகமாய் வந்தவள் ரிமோட்டை பிடுங்கி டிவியை ஆஃப் செய்துவிட்டு,
“வேலை பார்க்க தான வந்தீங்க. பாருங்க… என்று சொல்லி சென்றவளை இழுத்து அலேக்காய் தூக்கியவன்,
“ஓவரா துள்ளுது இன்னைக்கு இந்த மீனு. சின்ன பொண்ணாச்சேன்னு நானும் போகுதுன்னு பார்த்தா…” என்றவளை கைகளுக்குள் நெறுக்க,
“சாப்பிடுங்கன்னு சொன்னா, மாட்டேன்னு சொல்லுவீங்க. உங்களுக்கு பின்னாடியே சுத்தனுமோ. எனக்கும் கோபம் வரும் தானே?….” என்றவள் அவனின் கைகளில் இருந்து துள்ளி இறங்க பார்க்க அவன் விட்டால் தானே?
“அவ்வளவு தானே? பொண்டாட்டி சொன்னா நோ அப்ஜெக்ஷன்…” என்றவன் பேச்சில் சந்தேகமாய் பார்க்க அவளின் சந்தேகத்தை அவனும் ‘அப்படித்தான்’ என ஊர்ஜிதம் செய்தான்.
இரண்டு நாட்களில் ஷிவா கிளம்பும் நேரம் ஏர்போர்ட் சென்று அவனை வழியனுப்பிவிட்டு வந்தனர்.
தேன்மொழியும் தனது வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். அவளுக்கு எப்போதும் பகல் வேலை என்பதால் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால் ஜீவனுக்கு இரவும், பகலும் மாற்றி மாற்றி இருக்க சில நேரங்களில் அவளில்லாமல் வீட்டில் இருப்பதில் எரிச்சலானான்.
ஆனாலும் அவளின் எந்த விருப்பத்திற்கும் தடை சொல்ல விரும்பவில்லை அவன். அவனுக்கு தெரியும் வீட்டில் வெறுமனே இருந்தால் எதையாவது நினைத்து நினைத்து குழப்பிக்கொண்டு இருப்பாள் என. அதன்பொருட்டு அவளுக்காக தன்னை கொஞ்சம் மாற்றிக்கொண்டான்.
வாழ்க்கை சுமூகமாக செல்ல இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் அன்று மாலை தேன்மொழியை அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பினான்.
“சேரி வேண்டாம். சுடி போட்டுக்கோ…” என அவளை கிளப்பியவன் எங்கே செல்கிறோம் என்று எதுவும் சொல்லவில்லை.
கிளம்புவதற்குள் இந்த ட்ரெஸ் வேண்டாம், அந்த கலர் வேண்டாம் என அவளை ஒருவழியாக்கியே கிளம்பினான்.
அதுவும் இப்படி செய்தால் எங்கும் வரமாட்டேன் என்று சொல்லியதால் சற்று அடக்கி வாசித்தவன் அப்போதும் அவள் போட்டிருந்த அந்த காட்டன் அம்பர்லா கட் சுட்டியே பார்த்தபடி யோசனையோடு நிற்க,
“நான் எதையும் போடலை. நைட்டி மாத்திட்டு வீட்டுலையே இருக்கேன். எங்கயும் தனியா போங்க…” என்று பொங்க அவளின் பேச்சில் அடக்கமாட்டாமல் சிரித்து நான்கு அடிகளை வாங்கிக்கொண்டு கீழே கூட்டி வர அங்கே அவர்களுக்காக கார் வெய்ட்டிங்கில் இருந்தது.
“ஏன் பைக்ல போகாம டாக்சி புக் பண்ணிருக்கீங்க? ரொம்ப தூரமா?…” என வழியெல்லாம் கேட்டு அவனை நச்சரித்தவள் கேள்விக்கெல்லாம் விடையாய் அந்த ஷோரூமின் முன் கார் நின்றது.
“கார் பார்க்கவா வந்திருக்கோம்?…”
தேன்மொழி கேட்டுக்கொண்டே இறங்கி நிற்க அவளின் கை பிடித்து உள்ளே அழைத்து சென்றவன்,
“இந்த வாய்க்கு கொஞ்சம் ரெஸ்ட் குடேன்…” என்றவன் அங்கே ஓரிடத்தில் அமரவைத்துவிட்டு உள்ளே சென்று பேசிவிட்டு வந்தவன்,
“மொழி, இங்க வா…” என அழைக்கவும் அவளும் வர,
“என்னோட வொய்ப்…” என அவளை அறிமுகம் செய்தான்.
“ஓஹ் உங்க வொய்ப்க்கு தான் ப்ரெசென்ட் பன்றீங்களா?…” என அந்த மேனேஜர் கேட்டதும் அவன் சிரிப்போடு தலையசைத்து ஆமோதிக்க,
“வாங்கவா போறோம்?…” என்றாள் அப்போதும் ஆச்சர்யத்துடன்.
“வாங்கியாச்சு….” என அவளை இன்னும் ஆச்சர்யப்படுத்த முயல முகத்தை சுருக்கியவள்,
“என்கிட்டே சொல்லவே இல்லை. கேட்கவும் இல்லை…” என அவனை ரகசியமாய் முறைக்க,
“இந்த லுக் எல்லாம் தனியா வச்சுக்க. இப்ப இந்த கீயை வாங்கு…” என சொல்லி தள்ளி நின்று அதை போட்டோ எடுப்பதற்காய் நிற்க ‘இதற்கு தான் அத்தனை உடை மாற்ற சொன்னானா?’ என்ற பார்வையுடன் அவனின் கை பிடித்து அழைத்தவள்,
“சேர்ந்து நில்லுங்க. அப்ப தான் வாங்குவேன்…” என,
“முதல்ல காரை பார்த்திருங்க மிஸ்டர் & மிசஸ் ஜீவன்…” என மேனேஜர் சொல்ல,
“ஓஹ், யாப்…” என்றவன் அவளுடன் காரை பார்க்க செல்ல அவளுக்கு பிடித்த லைட் க்ரீன் நிறத்தில் மினுமினுத்தது. சட்டென ஜீவனை திரும்பி பார்த்தவள் அதற்கும் முறைத்தாள்.
“சந்தோஷப்படலைன்னாலும் இப்படி முறைக்காம லேசா சிரிக்கலாம் நீ…”
“உங்களுக்கு ப்ளூ தானே புடிக்கும். ஏன் லைட் க்ரீன்?…” என கேட்க,
“இந்த மாடல்ல இந்த கலர் தான் இருந்துச்சு. எனக்கு இந்த மாடல் தான் வேணும்னு சொல்லி வச்சிருந்தேன். கலர் இல்லை. வேணும்னா வெளில போய் பெயின்ட் வாங்கி தரேன். வீட்டுல வச்சு மெதுவா சேர்ந்தே பெய்ன்ட் பண்ணிக்கலாம். சரியா?…” என்றவனின் நக்கலில் வாயை மூடிக்கொண்டாள்.
“பிடிச்சிருக்கா மொழி?…” என ஆழ்ந்த குரலில் அவளிடம் கேட்க அவனின் அன்பில் நெக்குருகி நின்றவள் தலையை மட்டும் அசைத்தாள்.
அவளுக்கு தெரியும் வேண்டுமென்றே தனக்கு பிடித்த நிறத்தில் வாங்கிருக்கிறான் என்று.
“என்னமோ என்னை பிடிச்சிருக்கான்னு கேட்டது மாதிரி தலையை மட்டும் ஆட்டற? காரை பிடிச்சிருக்கா?…” என அவளை சீண்டி விளையாட,
“இல்லைன்னா உடனே மாத்திட போறீங்களோ?…”
“ப்ச், பதில் சொல்லு மொழி…”
“பிடிச்சிருக்கு. ரொம்ப ரொம்ப ரொம்ப…”
“என்னை தானே?…”
“ஆஹா இதுக்கு என்ன சொல்லனுமாம்?…”
“எனக்கு பிடிச்ச மாதிரி சொல்லுன்னு எல்லாம் சொல்லமாட்டேன். ஆனா சொன்னா எனக்கு சந்தோஷம் தான்…”
காரின் அருகே இருவருமாய் ரகசியகுரலில் முகமெல்லாம் மகிழ்ச்சியுடன் மாறி மாறி பேசிக்கொண்டிருக்க பார்வையின் ரசனையில் இவர்களுக்காக காத்திருந்த மேனேஜர்,
‘இன்னைக்குள்ள இந்த காரை வாங்கிருவாங்களா?’ என பார்த்துக்கொண்டே நின்றார்.
“சொல்லலாம், சொல்லலாம்…” என மொழியும் அவனை போலவே பேச,
“லவ் மேரேஜா ஸார்?…” என்ற மேனேஜரின் கேள்வியில் இருவருமே திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க,
“இல்லை உங்களை பார்த்தா அப்படித்தான் தெரியுது…” என்றார் அவர்.
ஜீவன் தேன்மொழியை பார்க்க சங்கோஜத்துடன் லேசாய் தலைகவிழ்ந்தவள் கையை பிடித்துக்கொண்டவன் மனமோ அடித்துக்கொண்டது.
“காதல் தான்…” என்றான் அவரிடம்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் பார்வையை தாங்கி நின்றவன் இருக்கும் இடம் உணர்ந்து,
“கிளம்பனும் மொழி, வா, கீ வாங்கிக்கலாம்…” என்று அவளை யோசிக்கவிடாமல் இருவருமாக சேர்ந்தே அந்த சாவியை வாங்கிக்கொண்டு மற்ற விபரங்களை முடித்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு வெளியேறினார்கள்.
மற்ற அனைத்தும் மறந்தவள் தங்களுடைய சொந்த கார் என்னும் உற்சாகத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டே அவனிடம் எப்போது வந்து பார்த்தான் என கேட்டுக்கொண்டு இருந்தாள்.
அவளின் பேசசுக்களுக்கெல்லாம் பதில் கொடுத்தபடி காரை ஒட்டிக்கொண்டு இருந்தான் ஜீவன். இப்பொழுது சென்னையை தாண்டி சென்றுகொண்டு இருந்தது அந்த வாகனம்.
“எங்க போறோம்?…” என கேட்க,
“ஒரு லாங் ட்ரைவ்…” என்றான் அந்த லாங்கில் அழுத்தம் கொடுத்து.
“எது? ஊரை விட்டு காலி பன்றதா?…”
“திரும்பி இந்த ஊருக்கு தானே வருவோம். இப்போதைக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிப்போம்…”
“ப்ச், போதும்ங்க. இப்ப வீட்டுக்கு போவோம். நைட் டின்னர் செய்யனும்…”
“நாளைக்கு லீவ் தானே? அப்பறம் ஏன் பறக்கற?…”
மறுநாள் பண்டிகை என்று ஜீவனுக்கு விடுப்பு இருக்க அவனுக்காக தேன்மொழியும் லீவ் எடுத்துக்கொண்டாள். வார இறுதி வேறு. இரண்டு நாள் சேர்ந்து இருக்கமுடியும் என்பதால் அவளும் லீவ் எடுத்திருந்தாள்.
“இவ்வளோ தூரம் வந்துட்டு திரும்ப வீட்டுக்கு திரும்பும் போது ரொம்ப லேட் நைட் ஆகிடும்…”
“ஆகட்டுமே. இப்ப என்ன?…” என அனைத்திற்கும் ஒரு பதில் வைத்திருந்தான்.
இனி என்ன சொன்னாலும் தன் பேச்சை கேட்கமாட்டான் என்ற முடிவுடன் அந்த பேச்சை அப்படியே விட்டவள் அவனின் கைகளை பார்த்தாள். வெகு லாவகமாக ஓட்டிக்கொண்டு இருந்தான் ஜீவன்.
“உங்களுக்கு கார் ஓட்ட தெரியும்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியும்…”
“முன்னாடி ஸ்கூல் படிக்கும் போதே கத்துக்கிட்டேன். பத்தாவது லீவ்ல. அப்படியே பழகினது தான்…”
போகும் வழியில் இரவு உணவை வெளியில் முடித்துக்கொண்டனர். இன்னும் எங்கே செல்கிறோம் என்று அவளிடம் சொல்லவே இல்லை.
விழுப்புரம் தாண்டிக்கொண்டு கார் சென்றுகொண்டு இருக்க அதற்கு மேல் முடியாமல் நன்றாக உறங்கிவிட்டாள் தேன்மொழி.
ஒரு நிமிடம் அவளை திரும்பி பார்த்தவன் இதழ்களில் புன்னகை மலர மீண்டும் சாலையில் கவனத்தை செலுத்தினான்.
அங்காங்கே லேசாய் விழி திறந்து பார்த்தவள் மீண்டும் கண் மூடிக்கொள்வாள். இப்படியாக இருக்க ஜீவன் எழுப்பிய பொழுது லேசாய் இருள் பிரிய காத்திருந்தது அந்த வானம்.
“இப்பதான் வீட்டுக்கு வந்திருக்கோமா?…” என கேட்டபடி இன்னும் கண்ணை கசக்கிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்து கொள்ள அவளின் பக்க ஜன்னலை இறக்கிவிட்டான்.
உப்புக்காற்றின் நெடியும் அந்த காலை நேர சிலுசிலுப்பும் உடலில் ஒரு மாற்றத்தை தர ரத்தமெல்லாம் உள்ளுக்குள் பொங்கி கண்களுக்குள் பாய்ந்தது.
திரும்பி பார்த்தவள் விழிகளில் இலக்கில்லா வானமும் அந்த வானத்தை முத்தமிட்டபடி அதனோடு உறவாடிக்கொண்டிருந்த பரந்துவிரிந்த கடலும் தான் விழுந்தது.
சட்டென்று உணர்வுக்குவியலில் சிக்கியவள் போல ஜீவனை திரும்பி அணைத்துக்கொண்டவளை தூக்கி தன் மடியில் அமர்த்திக்கொண்டவன் விரல் நீட்டி ஜன்னலை காண்பித்தான்.
ஆழ்கடலுக்குள் இருந்து ஜனிக்கும் சூரியனாய் வந்த அந்த சூர்யோதையத்தை கண்கொட்டாமல் பார்த்தவள் கண்களில் அருவியென கண்ணீர் கொட்டியது.
உடலெல்லாம் லேசாய் நடுக்கம் பிறக்க கணவனின் சட்டையை இறுக்கமாய் பிடித்தபடி காருக்குள் அமர்ந்து சூரியன் மேலே எழும்புவதை விழியகற்றாமல் பார்த்தவள் சட்டென திரும்பி இதற்கு பரிசாய் அவனின் முகத்தை முத்தத்தால் நிறைத்தாள் ஜீவனின் மொழி.