புன்னகை – 14
தேன்மொழியின் முத்தங்களை மனதார பெற்றுக்கொண்டவன் அவளின் வேகம் தணியும் வரை அவனின் மொழியிடம் தன்னை ஒப்புக்கொடுத்து அவளை அணைத்தபடி அமர்ந்திருந்தான்.
சிலநொடிகளுக்கு பின்பே தான் செய்துகொண்டிருப்பது என்னவென்றே விளங்க மெதுவாய் அவனை விட்டு விலகமுயல இடையில் கோர்த்த கையை இன்னும் நெருக்கமாக்கிக்கொண்டவன்,
“முடிஞ்சதா? இப்போ ஓகே வா?…” என கண்சிமிட்டி சிரிக்க,
“நான் நினைக்கவே இல்லை. கார் எங்கையோ போகுதுன்னதும் ரொம்ப லாங்கல போய்ட்டு அப்படியே வீட்டுக்கு போறோம்னு தான் நினைச்சேன். இங்க என்னோட ஊருக்கு கூட்டிட்டு வருவீங்கன்னு சத்தியமா நினைக்கலை…” என சொல்ல,
“உன்னோட கனவுகள் எப்பவோ எனக்குள்ள வந்திருச்சு மொழி. இந்த கண்ணுல இருந்ததை என் மனசுக்குள்ள வாங்கிட்டேன். இப்ப நீ ஹேப்பி தானே?…”
“ஹ்ம்ம் ரொம்ப ரொம்ப…” என்றவளின் இதழ்களை விரல்களால் வருடியபடி விஷமமாய்,
“தெரிஞ்சது. நீ குடுத்த முத்தங்களை கவுன்ட் பண்ணவே முடியலை. பர்ஸ்ட் எய்ட் வரைக்கும் லிஸ்ட்ல சேர்த்தேன். அப்பறம் வேற ஒரு டவுட்ல கவுண்டிங் மிஸ்மேட்ச் ஆகிடுச்சு…” என்றான்.
அவன் முதலில் சொல்லியதில் வெட்கம் பூசியவள் பின் டவுட் என்றதில் யோசனையானவள்,
“என்ன டவுட்?…” என,
“முகமெல்லாம் குடுத்த, உச்சந்தலையில கூட. ஆனா இங்க குடுக்கவே இல்லையே…” என்று சொல்லியவனின் தோளில் அடித்தவள்,
“கையை எடுங்க. யாரும் பார்க்க போறாங்க. பப்ளிக்ல இப்படி காருக்குள்ள…” என்று அவனிடமிருந்து விடுபட பார்க்க,
“கேட்டா பதில் சொல்லனும்…”
“அதெல்லாம் சொல்லமுடியாது. விடுங்க…” என அவனின் கூடியிருந்த கரத்தை பிரிக்க பார்க்க அவனின் அணைப்பு இரும்பென வளைத்திருந்தது.
“விண்டோ க்ளோஸ் பண்ணிட்டேன். நீ ஆரம்பிச்சப்போவே. இங்க யாரும் பார்க்கமுடியாது. தெரியாமலா கேட்பேன். சோ நீ தப்பிக்க முடியாது…” என்றவனின் சிரிப்பில் தேன்மொழி முகத்தை மூடிக்கொள்ள அவளின் கழுத்தில் முகம் புதைத்து அவளின் வாசனையை தன் சுவாசப்பையினுள் நிரப்பினான்.
“மொழி…” என்றவனின் குரலே ஜீவனின் மொழியை பித்தமாக்கியது.
மந்திரம் போல அவளின் பெயரை உச்சரித்துக்கொண்டே தன் அதரங்களினால் சின்ன சின்னதாய் அவளின் செல்களை தட்டி எழுப்பியவன் தேன்மொழியின் கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தை தன் பற்களால் கடித்து வெளியில் இழுத்துவிட்டான்.
அவனின் அணைப்பிற்குள் மயங்கி இருந்தவள் கண்திறவாமல் அவனின் ஸ்பரிசத்தின் ஜாலங்களை உள்வாங்கிக்கொண்டு இருக்க,
“தாலி கட்டிருக்கேன். எல்லா ரைட்ஸும் இருக்கு மொழி. அதுக்கே நீ குடுக்கனும்…” என்று சீண்ட தன்னுணர்வு வந்தாள்.
“இன்னைக்கு என்ன இப்படி பன்றீங்க?…”
“நீ கேட்கவே மாட்ட. குடுக்கலைன்னா என்ன? வாங்கிக்கோ. குடுத்தாலும் வாங்கினாலும் ஒண்ணுதான்…” என்று அவளின் தலையை பிடித்துக்கொள்ள,
“இன்னும் ப்ரெஷ் கூட பண்ணலை…” என முகத்தை திருப்பியவளுக்கு தகுந்த பரிசை கொடுக்க ஆரம்பித்தவனின் சட்டையை இன்னும் அழுத்தமாய் பற்றிக்கொண்டாள்.
அவனின் முற்றுகையில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள ஜீவனின் பாதத்தின் மேல் தான் பாதத்தை வைத்து அழுத்த இருவரின் பாதவிரல்களும் பிண்ணிக்கொண்டன. சில நொடியிலேயே வேகமாய் அவனை தள்ளியவள் கீழே குனிந்து எதையோ தேட,
“ஒரு முத்தத்தை முழுசா குடுக்க விடுறியா நீ?…” என்று மொழியை நிமிர்த்த,
“ப்ச், சும்மா இருங்க…” என்றவள் நகர்ந்து தனது சீட்டில் அமர்ந்து,
“காலை தூக்குங்க…”
“ஏன்?…”
“ப்ச், தூக்குங்க. காலை வச்சுட்டு சும்மா இல்லாம மெட்டியை கழட்டி விட்டுட்டீங்க…” என அதை தீவிரமாய் தேடினாள்.
என்னவோ அவன் கொலைகுற்றம் செய்துவிட்டதை போல முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு மொழி அவனை திட்டியபடி மெட்டியை தேடினாள்.
“உன்னோட ரோதனையா போச்சு மொழி. ஒரு மெட்டிக்கா இந்த தள்ளு? கார்க்குள்ள தானே கிடக்கும்…” என சலித்தவன் தானும் தேடி எடுத்து நீட்டினான்.
“மெட்டி தான். அதான் வேணும்….” என பிடிவாதமாய் சொல்ல,
“ப்ச், இவ்வளோ பெரிய உருவமா நானே பக்கத்துல இருக்கேன். மெட்டிதான் வேணுமாம். காலை நீட்டு நானே போட்டுவிடறேன்…” என்றதும் அவனின் பக்கம் காலை நீட்ட மெட்டியை போட்டுவிட்டவன் நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ள துள்ளி காலை இழுத்துக்கொண்டவளிடம்,
“கிஸ் மிஸ்ஸானதுக்கு பனிஷ்மென்ட்…” என அவளின் கன்னத்திலும் கிள்ள கன்னத்தை தடவியவள்,
“இப்ப நான் ப்ரெஷ் பண்ணனும்…”
“ஆடு,மாடெல்லாம் ப்ரெஷ் பண்ணிட்டா இருக்குது?…” என வழக்கமான டயலாக்கையும் சொல்ல அவனை முறைக்க முயன்று தோற்றவள் அப்போது தான் அந்த இடத்தையே சுற்றி பார்த்தாள்.
வழக்கமாக பெற்றோருடன் சூர்யோதையம் பார்க்கும் இடம் இதுவல்லவே. அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்திருந்த அவளுக்கு கூட அது என்ன இடம் என்பதே தெரியவில்லை.
பரந்துவிரிந்த முக்கடல், தூரத்தில் திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் மண்டபமும். அதுவே கன்னியாகுமரி என்று பறைசாற்றியது.
“இது என்ன இடம்?…” என ஜீவனிடம் கேட்க,
“வா, ஒரு வாக் போகலாம்…” என லாக்கை எடுத்துவிட்டு காரை விட்டு இறங்கியவன் அவள் புறம் வந்து கதவை திறக்க தேன்மொழி தனது கலைந்த கூந்தலை சரிசெய்துகொண்டு இருந்தாள்.
“ஹேய் தூதர்ஷன், கீழே இறங்கினாலே கடல் காத்துல மொத்த முடியும் டான்ஸ் ஆடும். இதுல மேடம்க்கு டச் அப். இப்ப கூட நீ குளிக்கலை. ப்ரெஷ் பண்ணாம கிஸ் பண்ணமாட்டேன்ன. இப்ப குளிக்காம அட்ஜஸ்ட் பண்ணற தானே?…” என்று வம்பாய் சொல்ல,
“வந்துட்டேன். வாயை திறக்க வேண்டாம். என்னமோ குடுக்காத மாதிரி தான்…” என இரு கைகளை கூப்பியவள் வேகமாய் காரை விட்டு இறங்கினாள்.
“செப்பலை கழட்டி கார்க்குள்ள போட்டுட்டு வா…” எனும் போது தான் அவனும் வெறும் காலுடன் நிற்பதை கண்டாள். அவள் இறங்கியது காரை லாக் செய்துவிட்டு நடந்தான்.
உள்ளங்காலில் கடல் மணல் ஜில்லென்று உறவாட மனதிற்குள் இனம்புரியாத பரவசம். லேசாய் கண்கள் கூட கலங்கியது.
‘ரொம்ப எமோஷனலா இருக்கா’ அவளை பார்த்தபடி நினைத்தான் ஜீவன்.
“இந்த இடத்துக்கு நீ வந்ததே இல்லையா?…” என அவளின் கை கோர்த்தபடி கடலை நோக்கி நடந்தான்.
“ம்ஹூம், இல்லை. உங்களுக்கு எப்படி இப்படி ஒரு இடம் இருக்குன்னு தெரியும்?…”
“நாங்க பசங்கம்மா. இந்த ஊர் பசங்களுக்கும், படிக்கற பசங்களுக்கும் இந்த இடம் அத்துப்படி. ப்ரெண்ட்ஸ் கூட தான் வந்திருக்கேன். அடிக்கடி வருவோம். இன்னும் நாம ஊருக்குள்ள போகலை. அங்க கசகசன்னு கூட்டமா இருக்கும். இங்கனா இந்த இடம் தெரிஞ்சவங்க ரொம்ப கம்மியான ஆட்கள் தான் வருவாங்க. சோ இங்க வந்துட்டேன்…”
“அப்போ இப்படியே ஊருக்கு திரும்ப போறோமா?…” என்றவளை திரும்பி பார்த்தவன்,
“நீ என்ன சொல்ற? அப்படியே செய்யலாம்…” என்றான் என்னதான் சொல்கிறாள் என்று பார்க்க.
“என்னை கேட்டா கூட்டிட்டு வந்தீங்க. அதே மாதிரி இதையும் நீங்களே டிஸைட் பண்ணுங்க…”
“விவரம். ஹ்ம்ம். ஏன் உன்னோட ஆசையை சொன்னா என்னவாம்? இருக்கனும்னு நினைக்கிறியா இல்லையான்னு அப்போ தானே எனக்கும் தெரியும்…”
“அப்போ என்னோட கனவுகளை நீங்க வாங்கிட்டதா சொன்னது எல்லாம் பொய்யா கோபால்…” என்று கிண்டலாய் கேட்க,
“பார்ரா, சொந்த மண்ணை மிதிச்சதும் தூதர்ஷன் பேக் டூ பெவிலியன்…” என்று அவளை கிண்டல் பேச,
“அதெல்லாம் இல்லை…” என லேசாய் தலைதூக்கிய கூச்சத்துடன் அவனின் தோளில் முகம் புதைத்து மறைந்தாள்.
“ஹேய் மொழி, சொல்லு, இருக்கலாமா?…”
“உங்க விருப்பம்…”
“எல்லா பாலையும் என் பக்கமே போட்டா எப்படி?…”
“நீங்க சிக்சர் அடிப்பீங்கன்னு நம்பிக்கை தான்…” அவனுக்கு சரிக்கு சரி பேசியவள்,
“சுத்தம், முதல்லையே சொல்லியிருந்தா வரும் போதே ட்ரெஸ் எல்லாம் எடுத்துட்டு வந்திருப்பேன். இப்ப வெறும் ஹேண்ட்பேக் மட்டும் தான். ப்ச்…” என,
“இது ஒரு விஷயமா? ஆளில்லாத அத்துவான காட்டுக்கா வந்திருக்கோம். பத்தடிக்கு ஒரு கடை. பார்த்துக்கலாம் விடு…” என்றவன் அவளுடன் அலைநீரில் காலை நனைத்தபடி நின்றான்.
நுரையாய் அலைகள் அவர்களின் பாதங்களை முத்தமிட்டபடி செல்ல இன்னும் சற்று உள்ளே இழுத்தான் அவளை.
அவனுக்கு தெரியும் மொழிக்கு கடலை பார்க்க, லேசாய் அலையில் நுனிபாதத்தில் விளையாட மட்டுமே பிடிக்கும் என்று. கடலுக்குள் இறங்கவோ குளிக்கவோ அத்தனை பயம்.
அவளுடன் அங்கு ஒருமுறை அவனும் வர்ஷாவும் வந்திருந்தனரே. அன்றுதான் ஜீவன் தேன்மொழியை கடைசியாக பார்த்தது.
“இன்னும் உனக்கு என்ன பயம்? நான் தான் பக்கத்துல இருக்கேனே?…” என அவளுடன் உள்ளே இழுத்துக்கொண்டு இன்னும் இரண்டடி கடலுக்குள் செல்ல,
“ம்ஹூம், வேண்டாம்…” என்றவள் அவனின் கையை உதறிக்கொண்டு ஓடிவந்து கரையில் அமர்ந்து கால்களில் முகம் புதைத்துக்கொண்டாள்.
“மொழி…” அவளருகே வந்தவனின் தோளில் சாய்ந்தவள்,
“அம்மாவும் அப்பாவும் என்னை விட்டு போறதுக்கு முதல் நாள் நாங்க எல்லாரும் சன்ரைஸ் பார்க்க வந்திருதோம். அப்பாவும் அன்னைக்கு இதே தான் சொன்னாரு. தேனுக்குட்டி அப்பா இருக்கேன்டா. கையை பிடிச்சு கூட நில்லுன்னு. அதுதான் கடைசியா நான் பார்த்த சன்ரைஸ்…”
“மொழி…” ஆதுரமாய் அவளை தாங்கிக்கொண்டான் ஜீவன்.
“அடுத்த வாரம் வரும் போது கண்டிப்பா இன்னும் ரெண்டடி முன்னால போகனும்னு சொன்னாங்க. மறுநாள் அவங்க இல்லை. அனாதையா நின்னேன். என்னோட விருப்பம், என்னோட ஆசை, என்னோட சந்தோஷம் எல்லாமே அவங்களோடவே போயிருச்சு…”
“இன்னொருத்தவங்க சொல்றது எனக்கு புடிக்குதோ இல்லையோ எல்லாத்துக்கும் தலையாட்டவேண்டிய கட்டாயத்துக்கு வந்தேன். என்னோட வாழ்க்கையே மாறிடுச்சு…”
இன்னுமின்னும் அவள் ஏதேதோ பேச ஆரம்பிக்க வழியில்லாத சுழலுக்குள் சிக்குண்டுகொள்வதை போல இருந்தது அவளின் இலக்கில்லாத பார்வையும் பேச்சும்.
“மொழி. மொழி…” என்று அவளை உலுக்க,
“ஹாங், என்ன?…” என மலங்க மலங்க விழித்தாள் ஜீவனின் மொழி.
அவளை அப்படி பார்க்கமுடியாமல் உள்ளுக்குள் தடுமாறியவன் சட்டென அவளின் கண்களின் ஈரத்தை தன் கன்னத்தில் ஒற்றிக்கொள்ள,
“வெளில வச்சு என்ன பன்றீங்க…” என அவனை பிடித்து தள்ளியவளை பார்க்க அவளோ முழுவது உணர்வுகளில் இருந்து வெளிவந்திருந்தாள்.
இது போதுமே. மணலில் சாய்ந்திருந்தவன் அப்படியே காலை மடக்கி இன்னொரு காலை மடக்கிய காலின் மேல் போட்டுக்கொண்டவன் இரு கைகளையும் தலைக்கு பின்னால் கோர்த்துக்கொண்டான்.
“என்ன படுத்துட்டீங்க? எழுந்து வாங்க…”
“தள்ளி விட்டுட்டு கேள்வி வேறையா? ஆனா ரொம்ப நாள் ஆச்சு இப்படி இங்க படுத்து. படிக்க முடியாம மூட் ஆஃப் ஆகிட்டா ப்ரெண்டோட இங்க வந்து கண்ணை மூடி படுத்துடுவேன். ப்ரெஷா பீல் ஆகும். மனசுக்கு அவ்வளவு ரிலாக்ஸா…”
“இருக்கும் இருக்கும். இப்ப நீங்க என்ன படிக்கறீங்களா? இல்லைல்ல. வாங்க…”
“யார் சொன்னா இல்லைன்னு? இப்பவும் படிக்கறேன். குடும்பம் எப்படி நடத்தனும்னு. அடுத்து பிள்ளைகளை எப்படி படிக்க வளர்க்கனும், வைக்கனும். இப்படி லைப் லாங் எல்லாரும் ஏதோ ஒரு பாடத்தை படிச்சுட்டு தான் இருப்போம்…” என லெக்சர் அடிக்க,
“எல்லாத்துக்கும் பதில். எனக்கு பசிக்க ஆரம்பிச்சிருச்சு…” என வயிற்றை பிடிக்கவும்,
“இது ஒரு பிரச்சனையா? வா…” என துள்ளி எழுந்தவன் உடையில் ஒட்டியிருந்த மணலை தட்டிவிட்டாள் தேன்மொழி.
காரை நெருங்கியவன் உள்ளே வைத்திருந்த ஒரு கவரில் இருந்து தண்ணீர் பாட்டிலையும் அதில் புது ப்ரெஷ், பேஸ்ட் என அனைத்தையும் வெளியில் எடுக்க,
“இது எப்போ?…”
“கார் ஓட்டினா இறங்காம அப்படியே ஓட்டிட்டா இருப்பேன். அங்கங்க இறங்கி டீ குடிச்சுட்டு ரிலாக்ஸ் பண்ணினேன். அதுல ஒரு கடையில இதெல்லாம் வாங்கினேன். எழுந்ததும் பாட்டு படிப்பியே ஆத்தா வையும் காசு குடுன்னு. அதான் வாங்கிட்டேன்…”
அவளுக்கு கொடுத்துவிட்டு தானும் ப்ரெஷ் செய்து முடித்தவன் முகம் கழுவிவிட்டு காரை கிளப்பினான்.
“கொஞ்சம் உள்ளே போனா ஹோட்டல் இருக்கும். அங்க சாப்பிட்டுடுவோம்…”
“ப்ச், அதுக்கு முன்னாடி…”
“அறிவே, ஹோட்டல்ல வாஷ்ரூம் இருக்கும்ல. வரும் போது உன் மூளையை உன் ஹோட்டல்லையே கழட்டி வச்சுட்டு வந்துட்டியா?…” என்றதும் முகம் சினந்தது தேன்மொழிக்கு.
“ம்ஹூம், வீட்டுல தான் உங்க மூளையோட துணைக்கு இருக்கட்டும்னு கழட்டி வச்சேன்…” என்று கோபமாய் சொல்லவும் சிரித்தவன்,
“கோச்சுக்கிட்டியா? கோச்சுக்க…” என இன்னும் சீண்டினான் அவளை.
மனதில் ஏதோ புது உற்சாகம். அந்த இடமும் ஊரும் அவனின் பழைய நினைவுகளை எழுப்பியிருக்க தனக்கு விருப்பமானதை, தான் அனுபவித்த மகிழ்ச்சிகளை, எல்லாம் அசைபோட்டபடி அந்த ஹோட்டலுக்குள் காரை நிறுத்தினான்.
“நான் வெய்ட் பன்றேன். நீ போய்ட்டு வா…” என்று அவளை அனுப்பிவிட்டு ஒரு இருக்கையில் அமர்ந்தான்.
சிறிது நேரத்திலேயே இருவரும் சாப்பிட்டு முடித்து உடைகள் எடுக்க கிளம்பினார்கள்.
“இதெல்லாம் அநாவசியம்…” என முணங்கிக்கொண்டே தேன்மொழி அவளுக்கு பார்த்துக்கொண்டு இருக்க,
“அநாவசியம் தான். ஆனா வெளில போகனும்னா ட்ரெஸ் வேணும் தானே? உனக்கு வெளில போகவேண்டாம்னா நோ ப்ராப்ளம். வா ரெசார்ட் போவோம்….” என சொல்லியவனை ஏகத்திற்கும் முறைத்தவள்,
“வாய் ரொம்ப ரொம்ப…” என்று முணுமுணுத்துவிட்டு இருவருக்குமாய் வேகமாய் உடைகளை தேர்ந்தெடுத்தாள்.
“போதுமா? வேற பிடிச்சிருந்தாலும் பாரேன் மொழி…”
“இல்லை, ரெண்டு நாள் தானே. இது போதும்…” என்று எடுத்துக்கொண்டு வர பில்லிங் செக்ஷனுக்கு சென்று பணத்தை செலுத்திவிட்டு கிளம்பி நேராக ஜீவன் புக் செய்திருந்த ரெசார்டிற்கு சென்றனர்.
“எல்லாம் பக்கா ப்ளான்…” மொழி கேட்க,
“ஆமா, பெரிய கண்டுபிடிப்பு தான்…” என சிரித்தபடி ரிசார்ட்டில் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே சென்றனர்.
ரூம் கீயை வாங்கிக்கொண்டு அறைக்கு சென்றதும் தேன்மொழி மலைப்பாய் பார்த்தாள்.
பெட்டிலிருந்து கண்ணாடி ஜன்னலின் மேஇருந்த திரையை விலக்க நடந்து செல்லும் தூரத்தில் கடல். அந்த பிரெஞ்ச் விண்டோவை திறந்து கொண்டு பார்த்தவள் அதன் அழகில் அப்படியே மெய்மறந்து நின்றாள்.
“அம்மாடி சுத்தபத்தம், குளிக்கலையா? இங்க வந்து வேடிக்கை பார்த்துட்டு நிக்கற. போ போய் குளிச்சுட்டு வா. லஞ்ச் சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்…” என கேலி செய்து அவளை விரட்டியவன் தேன்மொழி குளித்துவிட்டு வரவும் தானும் குளித்து கிளம்பி வந்தான்.
மதிய உணவை அறைக்கே வரவழைத்து உண்டுவிட்டு இருவருமே பயணக்களைப்பில் உறங்கிவிட மூன்று மணி போல தான் எழுந்தார்கள். முகம் கழுவிவிட்டு வெளியில் கிளம்பினார்கள்.
“எங்க போகலாம்?…” என தேன்மொழி கேட்க,
“போகலாம். எல்லா இடத்துக்கும் போறோம். எல்லாத்தையும் பார்க்கறோம்…” என்றவன் சூரியன் அஸ்தமனத்தை பார்க்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் காரை ஓட்டினான்.
பின் ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு யோசிக்க தேன்மொழி அவனை வித்தியாசமாக பார்த்தாள்.
“என்ன இவ்வளவு யோசனை?…”
“ஹ்ம்ம், சும்மா தான். எங்க போகலாம்னு லிஸ்ட் அவுட் பண்ணிட்டு இருக்கேன்…” என்றவன் அமைதியாக இருக்க அவளும் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள்.
வந்தவளின் பார்வை கூர்மை பெற ஒவ்வொரு இடத்தையும் பார்த்தவளுக்கு உடல் பரபரத்தது. அந்த ஏரியா, அடுத்த தெரு, இதோ இரண்டாம் வீடு என கார் நின்றது தேன்மொழி முன்பு வாழ்ந்த அந்த வீட்டில்.
“இது தானே? கரெக்ட்டா?…” என்றான் ஜீவன்.
கடைசியாக நினைவின்றி அங்கே மயங்கி விழுந்தது தான் ஞாபகத்தில் இருந்தது. எப்போது சென்னை சென்றாளோ அன்றிலிருந்து இத்தனை வருஷம் கழித்து அதன் பின்னர் இன்று தான் காண்கிறாள்.
“மொழி…” என்றவனின் தொடுகையில் அத்தனை நாள் துக்கங்கள் வெடித்து கிளம்பின.
“சும்மா அழுதா சரியா போச்சா? வாழற வீட்டுல இப்படித்தான் அழுதுட்டே இருப்பாங்களா? விளங்கிடும்…” என்ற குரலில் அதிர்ந்து உள்ளுக்குள் துக்கத்தை அடக்கி கண்ணீரை வற்றிக்கொண்டவள் விழிகள் வெகுநாட்களுக்கு பின்னாக அன்று அணையுடைத்த வெள்ளமென பொங்கியது.
அழுது முடியட்டுமென அவளுக்காய் அமைதியாய் அமர்ந்திருந்தான். அழுது அவளாகவே ஓய்ந்தவள் கண்ணீரை துடைத்துவிட்டு காரை விட்டு இறங்கினாள்.
ஆட்கள் நடமாட்டம் இருந்தாலும் அவளை கவனிக்க ஏது நேரம். அமைதியாய் அவளும் அந்த வீட்டின் வாசலை, அந்த சிறிய கம்பி கேட்டை தொட்டு பார்த்துக்கொண்டு நின்றாள்.
வீடு பூட்டி இருந்தது. ஆனால் யாரோ குடியிருப்பதை போல தான் இருந்தது. ஐந்து நிமிடம் போல அங்கேயே நின்றிருக்க ஜீவனும் காரை விட்டிறங்கி அதில் சாய்ந்து நின்றான் அவனின் மொழியை பார்த்தபடி.
“யாரு வேணும்?…” என பக்கத்து வீட்டு பெண்மணியின் குரல் கேட்க திரும்பி பார்த்தாள் தேன்மொழி. அவருமே புதிதாய் இருந்தார்.
“இல்ல இங்க…” என்று அவள் தடுமாறி நிற்க,
“இந்த வீட்டுல இருக்கறவங்க இல்லையா?…” என வந்தான் ஜீவன்.
“வேலைக்கு போய்ருக்காங்க. வர ஆறு மணியாகும். போய்ட்டு அப்பறமா வாங்க…” என சொல்லிவிட்டு,
“நீங்க யாரு?…” என கேட்க,
“தெரிஞ்சவங்க தான். சரி வரோம்…” என சொல்லி தேன்மொழியை கூட்டிக்கொண்டு கிளம்பினான்.
அடுத்து நேராக சென்றது அவர்கள் சந்தித்துக்கொண்ட பஸ்ஸ்டாப்பிற்கு தான். அவளின் மனதை திசைதிருப்புவதற்காக தான் அங்கே அவன் வந்தது.
அவனே அறியாதது அவளின் அத்தனையும் இன்று அவன் அறியப்போகிறான் என்று.
எதுவும் தெரிந்துகொள்ள வேண்டாம் என நினைத்திருந்தவனுக்கு தான் கேட்காமலேயே ஒப்புவிக்கவிருந்தாள் ஜீவனின் மொழி.