புன்னகை – 15
“மொழி, உன்னோட பேவரெட்….” என்று டீ கடையை காண்பிக்க சற்று தெளிவிற்கு வந்திருந்தவள் அதை பார்த்ததும் முகம் மலர்ந்தது.
“அந்த மாமா இருக்காரா?…” என்று ஆர்வமாய் காரை விட்டு இறங்கிகொண்டே கேட்க,
“மாமாவா?…” என்றவன்,
“அவர் உன்னோட ரிலேட்டிவ்ன்னு சொல்லவே இல்ல…” என சிரிக்க,
“ப்ச், அப்படி இல்லை. அவரை மாமான்னு கூப்பிட்டு பழகிடுச்சு…” என அவனோடு முன்னால் நடக்க,
“கூடவே வா. ஓடாத….” என அவளின் கையை பிடித்து நிறுத்தியவன் சேர்ந்தே போனான். கடைக்கு முன்னால் சென்றதும் அவளின் முகம் சட்டென வாட,
“என்னாச்சு?….” என கடையில் இருந்தவரை பார்த்தான். அதே கடை தான். ஆனால் உள்ளிருந்தவர் வேறு யாரோ.
“இரு கேட்போம்….” என அங்கே டீ போட்டுக்கொண்டிருந்தவனை பார்த்தான்.
“இங்க முன்னாடி ஒருத்தர் இருந்தாரே. அவர் எங்க?…” என ஜீவன் கேட்க,
“என் மாமனார் தான். உடம்புக்கு முடியலைன்னு ஊருக்கு போயிருக்காரு. நீங்க?…” என்றான் அவன்.
“நாங்க சில வருஷத்துக்கு முன்னாடி காலேஜ் போறப்போ இங்க தான் பஸ்க்கு வெய்ட் பண்ணுவோம். அப்படி தெரியும். இப்போதான் இந்த ஊருக்கு வந்தோம். அதான் பார்க்கலாமேன்னு…”
“அப்படிங்களா? ரொம்ப சந்தோஷம்ங்க. எப்போ வருவாருன்னு சொல்ல முடியாதே…”
“ஓகே, நோ ப்ராப்ளம். ரெண்டு மசாலா டீ குடுங்க. வடை இப்போ போட்டது இருக்குதா?…”
“வாழைப்பூ வடை தான் சூடா போட்டுட்டு இருக்கோம் பின்னாடி. இருங்க பையனை கொண்டு வர சொல்றேன்…” என உள்ளே யாருக்கோ சத்தம் கொடுத்தான் அந்த கடையில் இருந்தவன்.
ஜீவன் அவனுடன் பேசிக்கொண்டிருக்க தேன்மொழி சுற்றிலும் பார்வையை ஓட்டி நினைவுகளை கோர்த்துக்கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில் டீயும் வடையும் வந்துவிட சுட சுட சாப்பிட்டுவிட்டு கடையில் தேன்மொழி விரும்பி உண்ணும் சில வகைகளையும் வாங்கிகொண்டான் ஜீவன். அவரிடம் ரகசியமாய் மசாலா டீ ரகசியத்தை கேட்டுவிட்டு விடைபெற்றவன் காரில் ஏறவும்,
“இதெல்லாம் சாப்பிடுவேன்னு இன்னும் ஞாபகம் இருக்கா உங்களுக்கு?…” என அவள் ஆச்சர்யமாய் கேட்க,
“ஏன் இல்லாம? பார்த்ததும் ஞாபகம் வந்துச்சுன்னு வச்சுக்கோயேன்…”
“நிஜமாவே உங்களுக்கு என்னை அப்பவே…” என்று சொல்லி நிறுத்த,
“ஹ்ம்ம், அப்பவே. கேளேன்…” என அவள் பேச தூண்டினான்.
“ம்ஹூம்…” என தலையாட்டியவள் மனது ஒரு நிலையில் இல்லை.
“ஸ்பீக் அவுட் மொழி. இப்படி உனக்குள்ளையே எல்லாம் கேட்டுட்டு இருந்தா நான் எதுக்கு இருக்கேன்?…”
“என்ன கேட்கன்னு தெரியலை. எதை முதல்ல கேட்கன்னும் தெரியலை. நிறைய பேசனும்னு மனசு அடிச்சுக்குது. ஆனாலும்…”
“வெறும் காத்துதான் வருதா?….” என அதற்கும் கிண்டல் பேசினான்.
“ப்ச், இதான் நான் பேசறதே இல்லை…” என்றவள் முகத்தை ஜன்னல்புறம் திருப்பிக்கொண்டாள்.
நேராக ரிசார்ட்டிற்கு வந்தவன் காரை பார்க் செய்துவிட்டு வரும் வரை காத்திருந்தவள் அறை இருந்த பக்கம் செல்ல முற்பட,
“ரூம்க்கு வேண்டாம். வா பீச் பக்கம் போவோம்…” என கூட்டிக்கொண்டு ரிசார்ட்டை விட்டு கடல் இருந்த பக்கம் நோக்கி நகர்ந்தான்.
“இந்த கிளைமேட், இந்த இடம் எல்லாமே ரொம்ப மிஸ் பண்ணிருக்கேன் தெரியுமா? இனியாவது அடிக்கடி வரனும்…”
“ஏன் முன்னாடியே வந்திருக்கலாம் தானே நீங்க?…”
“ம்ஹூம், இல்லை மொழி. காலேஜ் முடிச்சுட்டு போனதோட சரி. அதுக்கப்பறம் எங்க வர? வரனும்னு நினைச்சாலும் முடியறதில்லை. இங்க யார் இருக்கானு தோணும். அதோடவே மொழி இங்க தானே இருக்கான்னும் உன்னோட ஞாபகம் வரும்…” உள்ளார்ந்து சொல்லியவனின் முகம் பார்த்தாள்.
“இந்த ஊர்லையே இருந்த ப்ரெண்ட்ஸ் யாரோடையும் கனெக்ட்ல இல்லை. அதுக்கப்பறம் யாரோடையுமே கனெக்ட் ஆக தோணலை. அப்படியே விட்டுட்டேன். வேலை வேலைன்னு சுத்தமா அதுக்குள்ளே போய்ட்டேன்…” என்றவனின் பேச்சில் தேன்மொழியின் மௌனம் கூட லேசாய் உடைய ஆரம்பித்தது.
“சில இழப்புகள் நம்மளை அப்படித்தான் இருக்க வச்சிடும் போல. எனக்கும் அப்படித்தான். நீங்க கிளம்பிட்டீங்க. வர்ஷாக்காவும் கூட. காலேஜ் முடிச்சேன். அதோட என்னோட வாழ்க்கையும் முடிஞ்சிருச்சு…”
“மொழி…” என அவளை அணைத்துக்கொண்டான் ஜீவன்.
“அம்மா, அப்பா, நான் இவ்வளவுதான். மூணு பேர் இருந்தாலும் எப்பவும் ஒரு கலகலப்பு இருக்கும். என்னை என்னைக்கு டவுனா பீல் பண்ணவிட்டதே இல்லை அப்பாவும், அம்மாவும். அப்பாவுக்கு தெரியும் கடல்னா எவ்வளவு புடிக்குமோ அந்தளவுக்கு தண்ணில இறங்கறது பயம்ன்னு….”
“ஆனாலும் என்னை வற்புறுத்தினது இல்லை. என்னோட இஷ்டம் தான் அவங்களோட வாழ்க்கை. திணிக்கப்பட எதுவுமே இல்லை. அப்போ அது தான் வாழ்க்கைன்னு நானும் நம்பிட்டு இருந்தேன். அந்த சந்தோஷம் மட்டும் தான் உலகம்னு. அப்படி இல்லைன்னு ஒருநாள் புரிஞ்சது….”
தேன்மொழியின் உடலில் ஒருவித இறுக்கம் வந்திருந்தது. ஜீவன் அவளை திசைதிருப்ப பார்த்தும் முடியவில்லை. அவளின் பேச்சு தொடர்ந்துகொண்டே இருந்தது.
சிறுவயது நினைவுகள், குறும்புகள், மறக்கமுடியாத சுவாரஸியமான சம்பவங்கள் என் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.
அவனுக்கும் கேட்க கேட்க அத்தனை ரசனையாய் இருந்தது. முன்பும் சில அவள் சொல்லி கேட்டிருந்திருக்கிறான் தான். ஆனால் இது இன்னும் ஆழமாக, இன்னும் நெருக்கமாக என்று ஒரு உணர்வு. அவளின் நுண்ணுணர்வு.
காரில் அவர்கள் வீட்டை பார்த்துவிட்டு கதறி அழுததிலேயே வந்திருக்க கூடாதோ என்று நினைத்திருந்தான். இப்பொழுது பெற்றோர்களை பற்றி பேசவும் தடுக்க பார்த்தவன் அவள் ஆர்வமாக தனது சிறுவயது விஷயங்களை பகிர்ந்துகொள்ள ஆரம்பிக்கவும் பேசட்டும் என விட்டுவிட்டான்.
“எல்லாமே நல்லா தான் போய்ட்டிருந்துச்சு. என்னோட பைனல் எக்ஸாம். ஊர்ல அம்மாவோட ரிலேட்டிவ்ஸ் மேரேஜ். அவாய்ட் பண்ண முடியலை. அதனால என்னை விட்டுட்டு கிளம்பினாங்க. அப்படியே கிளம்பிட்டாங்க…” ஒரு நொடி அவளின் மௌனம் அவனை என்னவோ செய்தது.
கண்ணீர் கூட இல்லை. லேசாய் உதடு துடித்தது தேன்மொழிக்கு. தொண்டை உலர்ந்துவிட எச்சிலை கூட்டி வலுக்கட்டாயமாய் விழுங்கினாள்.
“நிறையதடவை நினைச்சிருக்கேன். நானும் அன்னைக்கு அவங்களோட போயிருக்கலாமோன்னு…” என தழுதழுத்து சொல்லும் போதோ உடைந்துபோனது அவள் மட்டுமல்ல, அவனும் தான்.
“மொழி, இனி இப்படி பேசக்கூடாது…” என லேசாய் அதட்ட,
“ப்ச், உங்களுக்கு தெரியாது பாஸ். காலேஜ் போய்ட்டு ப்ரெண்ட்ஸ் கூட நல்லா சுத்திட்டு வீட்டுக்கு வந்தேன். மறுநாள் காலையில அப்பாவும் அம்மாவும் வந்திருவாங்கன்னு போன்ல சொன்னாங்க. திருச்செந்தூர்ல கல்யாணம் முடிஞ்சு திருநெல்வேலில மாப்பிள்ளை வீட்டுக்கு போய் பொண்ணு மாப்பிளையை விட்டுட்டு கிளம்பிடுவோம்னு சொன்னாங்க. சரின்னு பேசிட்டு வச்சுட்டு டின்னர் செஞ்சிட்டு இருந்தேன்…..”
“எனக்கு துணைக்கு அப்போ பக்கத்து வீட்டு பாட்டி வந்து தங்கிருந்தாங்க. திரும்ப எட்டுமணிபோல போன். திரும்ப வந்திட்டு இருந்தவங்க வேன் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுன்னு. ஒருநிமிஷம் எதுவுமே புரியலை. என்ன நடந்துச்சுன்னு எதுவும் விளங்கலை. நான் கண்ணு முழிச்சு பார்க்கும் போது சென்னைல இருந்தேன்…”
“நான் இருந்தேன். ஆனா எனக்குன்னு இருந்தவங்க இல்லையே. அன்னைக்கு தான் பெத்தவங்க இல்லன்னா என்னலாம் கஷ்டம்னு கொஞ்சம் கொஞ்சமா அனுபவிச்சேன். என்னோட சிரிப்பு எங்க போச்சுன்னு எனக்கே தெரியலை…”
“பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும் நான்னா அவ்வளவு இஷ்டம். அண்ணனுங்களுக்கும் தான். ஆனாலும் சும்மா சும்மா அம்மாப்பாவை நினைச்சு நான் அழுதப்போ தான் தியாகு அண்ணா மூஞ்சியை காமிக்க ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கு என்னை பிடிக்கலை….”
“கொஞ்சம் கொஞ்சமா அழுக கூட முடியாம எனக்குள்ள அழுகையையும் அடக்கிட்டு நார்மலா இருக்க ரொம்பவே சிரமப்பட்டேன். ஓரளவுக்கு இதுதான் லைப்ன்னு தேத்திகிட்டேன். சாப்பாடு கூட கேட்க அத்தனை தயக்கமா இருக்கும் அம்மாவோட, அப்பாவோட போனப்போ இருந்த உரிமை நிராதரவா போய் நின்னப்போ வரலை…”
“ஒரு வருஷம் அப்படியே நகர்ந்துடுச்சு. மேல்படிப்புன்னு மறுவருஷம் யோசிச்சப்போ தான் அக்கம்பக்கத்துல இருக்கரவனாக ம்மாவோட நகைக்கும், அப்பாவோட பணத்துக்கும் ஆசைப்பட்டு தான் என்னை பெரிப்பா அவங்க வீட்டுல வச்சுக்கிட்டாருன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க…”
“அது பெரியப்பாவை ரொம்பவே காயப்படுத்திருச்சு. என் தம்பிப்பொண்ணை பார்த்துக்க இவனுங்க என்னலாம் பேசறாங்கன்னு. அதுக்குத்தான் பெரியம்மா எனக்கு கல்யாணம் பேசினாங்க. சுலோ அண்ணியோட இருந்ததுல நானும் ஓரளவுக்கு நார்மல் ஆகிட்டேன் தான்…”
“கல்யாணம்னதும் பெரியண்ணா இப்ப வேண்டாம்னு சொன்னாரு. ஆனாலும் பெரியம்மா ஊர் வாயை அடைக்கனும்னு எனக்கு மாப்பிள்ளை பார்த்தாங்க. பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. ஏதோ எனக்கும் கல்யாணம்னு போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்…” என்று சொல்லும் பொழுதே அன்றைய மனநிலையை நினைத்து லேசாக சிரித்துக்கொண்டாள்.
வெகுதூரம் வந்துவிட்ட களைப்பு. இருள் சூழ்ந்திருந்த கடலலையின் அருகே ஓரிடத்தில் அவளாகவே மண்டியிட்டு அமர்ந்துகொண்டாள். உடன் ஜீவனும்.
“மறுக்கவும் வழியில்லை. அவங்க வீட்டுல இருக்கோம். அப்படின்ற நினைப்பே எல்லாத்துக்கும் தலையாட்ட வச்சது. கல்யாணம் ஆனதும் எனக்குன்னு இவங்க இருக்காங்க. ஓரளவுக்கு அப்போ மெச்சூர்ட் தான் போல நான். அந்த மேரேஜை நான் அக்சப்ட் பண்ணிக்கிட்டேன். ஆனாலும் அம்மாவும் அப்பாவும் இல்லைன்ற ஏக்கம் உள்ளுக்குள்ள எங்கையோ இருந்துட்டு இருந்துச்சு…”
“அமுதன், அவர் ரொம்ப நல்லவர் தெரியுமா?…” என்றவள் திடுக்கிட்டு ஜீவனை கண்டாள்.
‘மேலே சொல்’ என்பதை போல அவள் பேசுவதை கேட்டபடிதான் ஒருபக்கமாய் மணலில் கையூன்றி சாய்ந்து அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான். முகத்தில் இப்பொழுது லேசாய் சிரிப்பு கூட. அதை பார்த்து மொழி வை மூடிக்கொள்ள,
“சொல்லு மொழி, எப்படி நல்லவர்ன்னு சொல்ற?…” என கேட்க,
“அது வந்து…”
“வந்து, ஹ்ம்ம் சொல்லு மொழி….”
“அன்னைக்கு, அன்னைக்கு பயத்துல மயங்கி விழுந்துட்டேன். அவரு பயந்துட்டாரு. தண்ணி தெளிச்சு எழுப்பி ஒண்ணுமில்லைன்னு சொன்னாரு…” என மெல்லிய குரலில் சொல்ல ஜீவன் அடக்கமாட்டாமல் சிரித்தான்.
“சிரிக்காதீங்க. அவர் கொஞ்சம் பல்க்கா இருப்பாரு. வெடவெடன்னு ஆகிடுச்சு எனக்கு. ஆனாலும் ரொம்ப நல்லவரு. கோவமே வரலை. ரொம்ப அமைதியா பேசினாங்க தெரியுமா?…”
“ஹ்ம்ம், தெரியும்…” என்றவனின் முகம் பார்த்தவளின் கையை பிடித்துக்கொண்டவன்,
“நான் ஒரு டாக்டர். உன்னை என்னால உணர முடிஞ்சது மொழி. எனக்கு தெரியும். புரியுது தானே?…” என்றான் மென்மையாய்.
சிலநொடிகள் தான் அமைதியாய் இருந்தாள். ஏனோ அவனிடம் அத்தனையையும் சொல்லவேண்டும் என்னும் உந்துதல். நிறுத்தமுடியாமல் சொல்லிக்கொண்டே தான் இருந்தாள் தேன்மொழி.
“இல்லை நான் சொன்னது உங்களுக்கு…”
“எனக்கு உன்னை புரிய முடியும் மொழி. அது உனக்கு புரியுதான்றது தான் என்னோட திங்கிங். நீ வொர்ரி பண்ண வேண்டாம்…” என்றவன்,
“அமுதன் என்ன வொர்க் பண்ணிட்டிருந்தார்?…”
இத்தனை தெரிந்த அவனுக்கு இன்னும் தெரிந்துகொள்ள தோன்றியது. ஒருவேளை மொழி அனைத்தையும் சொல்லிவிட்டால் சற்று மனதளவில் இலகுவாக உணரலாமே என்னும் எண்ணமும் அவனிடத்தில்.
“அவர் எலக்ட்ரிக்கல் கடை வச்சு நடத்திட்டு இருந்தார். அவங்க அப்பா, அம்மா அண்ணா, அவங்க வைப் இப்படித்தான். இதே சென்னை தான். இந்த உலகத்துல நல்லவங்களுக்கு இடமே இல்லை. என்னோட அப்பாம்மா, அடுத்து அமுதன்…”
“ஒரு வாரம் இருக்கும். மறுவீடு சம்பிரதாயம் முடிஞ்சு அவங்க வீட்டுக்கு போன அன்னைக்கு அவரோட பைக் வெளில நின்னுட்டு இருந்துச்சு. நல்ல மழை. வீடு கீழே மேலன்னு ரெண்டு அடுக்கா இருக்கும். மாடில வேற ஒருத்தவங்க குடியிருந்தாங்க…” என்றவள் கண்கள் கலங்கின அன்றைய நாளின் நினைவில்.
வீட்டில் அனைவரும் இரவு உணவை சேர்ந்து உண்டுகொண்டு இருந்தனர். வெளியே யாரோ அமுதனை அழைக்கும் சத்தம் கேட்க,
“தேனு மாடி வீட்டு அண்ணே கூப்பிடறாங்கம்மா. சாப்பிடு வரேன்…” என எழுந்து சென்றவன் தான் வெளியே அலறல் குரல் கேட்க சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள் அப்படியே போட்டதை போட்டபடி எழுந்து வெளியே வர வயர் ஒன்று பைக்கின் அருகே அறுந்து விழுந்திருந்ததில் கால் வைத்திருந்தான்.
அவனின் வண்டியை எடுத்து வைக்க வரவும் தனது வண்டியையும் முன்னால் நகர்த்த அவனும் அதே இடத்தில் காலை வைத்திருந்தான்.
இருவரும் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்திருக்க என்ன நடந்தது என்று தெரியும் முன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும் முன்பே அதுவும் அவளின் கை நழுவி போயிருந்தது.
அமுதன் தவறி ஒரு மாதம் கடந்திருக்க அருகே இருந்த கம்பெனிக்கு தேன்மொழி வேலையில் சேர்ந்துவிட மூத்த மருமகள் திலோத்தமா ஆரம்பித்துவிட்டாள் பிரச்சனையை.
தேன்மொழியை வைத்துக்கொண்டு அவளுக்கும் சேர்த்து செய்துகொண்டிருக்க முடியாதென்று சின்ன சின்னதாய் பிரச்சனையை கிளப்பினாள்.
முதலில் பெரிதளவு வாய்வார்த்தையாக இருக்க எதற்கும் வாய்திறக்காத தேன்மொழி கண்ணீரிலேயே கரைய அவளின் மாமியாரும் மாமனாரும் ஆதரவாய் இருக்க கடைசியாக தனிக்குடித்தனம் செல்கிறோம் என்ற திலோத்தமாவின் மிரட்டலில் தேன்மொழியை அவளின் பெரியம்மாவின் வீட்டிற்கே அனுப்பி வைத்தனர்.
ஒட்டுமொத்தமாய் அந்த உறவே அறுந்துபோனது. அதன் பின்னர் மீண்டும் ஆதரவற்ற பத்மாவின் வீட்டில் அடைக்கலம் புகுந்தாள் தேன்மொழி.
“அப்போ என்னால யோசிக்கக்கூடிய நிலைமைல நான் இல்லை. அந்தளவுக்கு பக்குவம் இல்லைன்னும் சொல்லலாம். சுத்தி சுத்தி நான் எங்க போனாலும் அதிர்ஷடம் இல்லை. ராசியில்லைன்னு ஒதுக்க ஆரம்பிச்சாங்க. நான் திரும்பி வந்த நேரம் தியாகு அண்ணா அவங்க ப்ரெண்டோட தொடங்கின தொழில்ல நஷ்டம் ஆகிடுச்சு. அண்ணனுக்கும் என்னை பிடிக்காம போய்டுச்சு…”
“அதுல இன்னுமே ஒதுங்கிட்டேன். வாழவே லாய்க்கில்லையோன்னு ஒரு நினைப்பு மனசுக்குள்ள பதிஞ்சு போய்டுச்சு. இருக்கற வரைக்கும் இருப்போம்னு தான்..” என்றவள் பேச்சை நிறுத்திக்கொள்ள அவளிடத்தி, மெல்லிய விசும்பல் ஒலியே.
கண்ணீர் உடைபெடுத்து ஓடினாலும் சத்தமில்லாத அழுகை. அலட்டும் மொத்தமாய் இன்றே முடித்துவிடட்டும் என அமைதியாய் இருந்தான் ஜீவன். சற்று நேரம் கழித்து,
“இன்னைக்கு ரொம்ப பேசிட்ட நீ…” என்றான் ஜீவன்.
“ஹ்ம்ம், ஆமா, பேசிட்டேன். எல்லாமே. இங்க இந்த ஊர் இது எனக்கு எவ்வளவு முக்கியம்னு யாருக்கும் தெரியாது. என்னதான் பெரியம்மா வீட்டுல என்னை பார்த்துட்டாலும் ஒட்டாத ஒன்னு தான் எனக்குள்ள. ரொம்ப பாசம் அன்பு எல்லாம இருந்தாலும் எங்கயோ கண்ணுக்கு தெரியாத விலகல்…”
“ப்ச், ஓகே, லீவ் இட்….” என அவளை தன் தோள் சாய்த்து முதுகை ஆதரவாய் வருடினான்.
“ரூம்க்கு போவோமா? குளிருது…” என தேன்மொழி சொல்லிய பின்பே அங்கிருந்து எழுந்தவன் அவளையும் கைபிடித்து கூட்டி சென்றான்.
ஓரிருவார்த்தைகள் அவன் பேசினாலும் பதில்கள் வெறும் ‘ஹ்ம்ம், ம்ஹூம், இல்லைஎன்றால் ஒற்றை வார்த்தை’ இப்படித்தான் இருந்தது.
இரவு உணவை அங்கேயே முடித்துக்கொண்டு உறங்க செல்ல வாங்கியிருந்த இரவு உடையை தொடக்கூட இல்லை.
அப்படியே படுக்கையில் விழுந்தவர்கள் தான். மொழியை தனக்குள் சுருகியபடி அவளை அணைத்தவாக்கில் உறங்க நினைத்தான்.
சொல்லிவிட்ட களைப்போ, அவனிடம் பகிர்ந்ததில் பாதிபாரம் குறைந்துவிட்ட இலகுவோ தேன்மொழி உறங்கிவிட உறங்கா இரவானது ஜீவனுக்கு.
ஆரம்பத்தில் இருந்தே எதுவோ ஒன்று இருவரையும் இணைத்துக்கொண்டே தான் இருந்திருகிறது. புரியாமல் திசைமாறி சென்று மீண்டும் கூடு சேர்ந்த அன்றில்களாய் தங்களை மானசீகமாய் வரித்துக்கொண்டான் மொழியின் ஜீவன்.