புன்னகை – 16
அந்த நாள் எப்படி சென்றதென்றே தெரியவில்லை. அங்கே ஒவ்வொரு இடத்தையும் பார்த்து பார்த்து அதன் சுவாரசியமான விஷயங்களை இருவருக்குள்ளும் பரிமாறிக்கொண்டனர்.
முதல்நாள் காயங்களும் கவலைகளோ எதுவுமின்று புத்துணர்ச்சியாய் இருந்தது விடியும் பொழுதே.
முதலிலேயே ஜீவனுக்கு முன்பு எழுந்துகொண்டவள் குளித்து கிளம்பி தலையை காய வைத்தபடி வெளியே அமர்ந்திருந்தாள் கடலலைகளை வேடிக்கை பார்த்தவாறு.
“மொழி…” என்றவனின் குரல் திறந்திருந்த கதவின் வழியே கேட்க எழுந்து சென்றவள் அவனின் சிவந்திருந்த முகத்தை பார்த்ததும் நெற்றியில் கைவைத்து பார்த்தாள்.
“ப்ச், என்ன?…” என அவளின் கையை பிடித்துக்கொள்ள,
“தூங்கலையா நீங்க? ஏன் முகமெல்லாம் இவ்வளோ டயர்ட்?…”
“ஹ்ம்ம், தூக்கம் வரலை. அதான் தலை வலிக்குது…” என அவளின் மடியில் தலைசாய்த்துக்கொண்டான் ஜீவன்.
“டேப்லட் எதாச்சும் வச்சிருக்கீங்களா?…” என அங்கிருந்தே அவனின் முதலுதவி பெட்டியை பார்வையால் தேட,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்தா சரியா போய்டும்…” என அவளை எழுந்துகொள்ள விடவில்லை.
“உனக்கு தலைவலின்னா எப்படிலாம் பார்த்துக்கறேன். நல்லதுக்கே காலமில்லை…” என்று வேறு அவளோடு வம்பு பேச,
“வாயை குறைச்சுட்டு தூங்குங்க. உங்களை யார் நைட் எல்லாம் முழிச்சிருக்க சொன்னா?…” என அவனின் தலையை கோதியபடி பேசினாள் தேன்மொழி.
“உன்னை காக்கா தூக்கிட்டு போய்டாம கண்மூடாம பாத்துக்கிட்டதுக்கு நீ பேசுவ. எதாச்சும் சாப்பிட சொல்லு மொழி. அப்படியே சூடா ஸ்ட்ராங்கா காபியும்…” என்றுவிட்டு எழுந்து பாத்ரூம் சென்றான்.
“பார்த்தாராம் காக்கா தூக்கினதை…” என முனுமுனுத்தபடி ரூம் சர்வீஸ்க்கு கால் செய்து உணவை தருவித்தாள்.
வந்ததும் உண்டுவிட்டு சிறிது நேர ஓய்விற்கு பின் கிளம்பி வெளியே வந்தனர். தேன்மொழி எத்தனை சொல்லியும் கேட்காமல் அவளை விவேகானந்தர், திருவள்ளுவர் சிலை பார்க்க கூட்டிக்கொண்டு சென்றான்.
“மாட்டேன்னாலும் கேட்கறீங்களா? காதுகுடுத்து கேட்கறதே இல்லை…” என பயந்துகொண்டே வந்தாள் தேன்மொழி.
பாதுகாப்பு உடையை போட்டுவிட்டவல் இன்னும் கெஞ்சுதலாய் அவனின் முகம் பார்க்க,
“வா…” என கூட்டிக்கொண்டு படகில் ஏறிவிட்டான்.
இன்னும் கிளம்பாத அந்த படகு ஆக்ரோஷ அலையின் மேல் வேகமாய் மிதக்கும் பொழுதெல்லாம் தேன்மொழியின் இதயம் நின்று துடித்தது.
பயத்தில் அவனின் கைகளை இறுக்கமாய் பிடித்துக்கொண்டவள் முகத்தை அவன் தோளில் புதைத்துக்கொண்டாள்.
“என்னால முடியலை. ப்ளீஸ் இறங்கிடலாமே…” என மீண்டும் கேட்க,
“இப்ப எல்லாரும் ஏறினதும் படகை எடுத்துடுவாங்க. நீ அமைதியா இரு…”
“எனக்கு பாக்க வேண்டாம். ஏற்கனவே பார்த்தது தானே?…”
“எனக்கு உன்னோட போய் பார்க்கனும். அவ்வளவு தான்…” என்றான் பிடிவாதமாய்.
ஒன்றும் சொல்லமுடியாமல் நடுங்கியபடி இருந்தவள் உடல் தூக்கிவாரிபோட்டது படகு சீறிப்பாய்ந்து கிளம்பியதில்.
அவர்கள் அருகே இருந்த ஒருவர் இருவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு ஜீவனிடம் கேட்டார்.
“புதுசா கல்யாணம் ஆனவங்களா?…” என்று.
“ஹ்ம்ம், ஆமா. இவங்க கொஞ்சம் பயப்படுவாங்க. அதான் பயத்தை போக்கலாமேன்னு…” என கிண்டலுடன் சொல்ல நறுக்கென கிள்ளி வைத்தாள் தேன்மொழி.
ஒருவழியாக அந்த படகு சென்று நின்றதும் அதிலிருந்து இறங்குவதற்குள் படாதபாடுபட்டுபோனாள்.
“நீ என்ன குழந்தையா? இத்தனை வருஷம் இந்த ஊர்லையே பிறந்து வளர்ந்துட்டு இப்ப நீ பிஹேவ் பன்றது நம்பர மாதிரி இல்லையே. ஏன் தனியா உன்னால வரமுடியாதா பஃபூன்…” என கடுப்புடன் வர்ஷா கேட்டது ஞாபகம் வந்தது தேன்மொழிக்கு.
அன்றும் இப்படி பயந்து நடுங்கியவளை கை தாங்களாக ஜீவன் அழைத்து அவளை ஆதரவாக அணைத்திருக்க வர்ஷாவினால் அதை ஏற்கவும், பார்க்கவும் முடியவில்லை.
“ப்ச், வர்ஷா. நாம தான் அவளுக்கு பயம்னு சொல்லியும் கூட்டிட்டு வந்தோம். இன்பேக்ட் பிடிவாதமா அவளை அழைச்சிட்டு வந்தது நீ. அவ முதலையே சொன்னா தானே? அப்போ நாம தான் பார்த்துக்கனும். திஸ் இஸ் டூ மச்…” என ஜீவன் கடுமையாய் அதட்டிவிட்டான் அவளை.
“கூட்டிட்டு வரனும்னு வேண்டுதலா? ச்சே…” என ஜீவனுக்கு கேட்காமல் தேன்மொழிக்கு மட்டும் கேட்கும் படி அவள் முணுமுணுத்தது இன்றளவும் ஞாபகத்தில் உள்ளதே.
“மொழி லெட்ஸ் கோ…” என அவளை கூட்டிக்கொண்டு உற்சாகம் ததும்ப உள்ளே சென்றான்.
மதியம் வெயில் கூட அவ்வளவாய் இல்லாமல் லேசாய் மழை தூற ஆரம்பித்தது. வானிலை இதமாய் இருக்க நிதானமாய் ஒவ்வொன்றாய் பார்த்தும், அங்காங்கே இருவருமாய் புகைப்படம் எடுத்துக்கொண்டு பொழுது கழிந்தது.
அலைகள் பாறையில் மோதி மோதி விலக அவ்விடத்தில் ஒரு பாறையின் மீது தண்ணீரில் மிதந்துவந்த நண்டுகள் அந்த பாறை மேல் ஒதுங்குவதும் மீண்டும் தண்ணீருக்குள் பாய்வதுமாக இருந்தது.
“இங்க எவ்வளவு பெரிய நண்டுன்னு பாருங்க…” என்று மொழி சொல்ல,
“இறங்கி புடிச்சா சூப் வச்சிடலாம்…” என்றான் ஜீவன்.
இருவருமாய் சுற்றி முடித்து சூரிய அஸ்தமனமும் பார்த்துவிட்டு தான் கிளம்பி அறைக்கு வந்து சேர்ந்தனர்.
இரவு உணவை வெளியிலேயே முடித்துவிட்டு வந்துவிட்டதால் களைப்பு போக குளித்துவிட்டு உறங்க ஆயத்தமானாள் தேன்மொழி.
சுற்றியதினால் உண்டான அலுப்பில், களைப்பில் முதல் போல சுருண்டு படுத்துக்கொள்ள அவளை அணைத்துக்கொண்டு அவளோடு சுருண்டவன்,
“ஹனிமூனுன்னு வந்துட்டு தனிமூன் தான் கொண்டாடிருக்கோம். இன்னைக்கும் தனியா தூங்கலாம்ன்னா பார்க்கற தூதர்ஷன்…” என அவளை புரட்டி தன் மேல் சாய்த்துக்கொள்ள,
“இது ஹனிமூன் அப்படின்னு நீங்க சொல்லவே இல்லையே கலர்க்குருவி பாஸ்…” என அவனின் நெற்றியோடு முட்டினாள் மொழி.
“எல்லாமே சொல்லனுமா மொழி? சொல்லாம புரியாதாமாம்?…” என அவளோடு இழைய அவனோடு கரைந்தாள் தேன்மொழி.
“தேனே தான்டி நீ. இப்படி தித்திக்கிற போ. ம்ஹூம் போகாத. இன்னும் பக்கம் வா…” என பிதற்றியவனின் மொழி கூட மொழியின் சிணுங்கல்களுக்கு இன்னிசையாய் சிருங்காரம் கூட்டியது.
மறுநாள் மேலும் பார்க்க இருந்தவற்றை எல்லாம் பார்த்துவிட்டு சென்னை நோக்கி பயணமானார்கள் இருவரும்.
வழக்கம் போல வேலையில் இருவரும் நுழைத்துக்கொண்டாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் அந்நியோன்யமாகவே வாழ்ந்துவந்தனர்.
ஒருமாதம் சென்றிருந்தது. ஷிவாவிற்கு வரன் வந்திருகிறதென கார்மேகம் அவனிடம் பேசியிருந்தார். அவனையே ஷிவாவிடமும் பேச சொல்லியிருந்தார்.
அன்று அதை பற்றி பேசத்தான் அவர்கள் வீட்டிற்கு கார்மேகமும், பத்மாவும் சுலோசனாவோடு வந்திருந்தனர்.
தேன்மொழிக்கு விடுமுறை நாள். ஜீவனிற்கு அன்று வேலை நாள் என்பதால் அவன் வரவும் வருவதாய் கார்மேகம் சொல்லி முதலில் பத்மாவையும், சுலோசனாவையும் மட்டும் அனுப்பியிருந்தார்.
“வாங்க மாமா, வந்து ரொம்ப நேரமாச்சா?…” என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவன் மாமியாரையும், சுலோவையும் வரவேற்க,
“இப்ப ஒரு பத்து நிமிஷம் இருக்கும் மாப்பிள்ளை. ரொம்ப எல்லாம் இல்லை…” என்றார் அவர்.
“ஒரு டூ மினிட்ஸ். குளிச்சிட்டு வந்திடறேன்…” என்று உள்ளே சென்றான் அவன். சொல்லியதை போலவே வேகமாய் குளித்து, உடை மாற்றி வந்தவன்,
“சொல்லுங்க மாமா…” என வந்தமர்ந்தான்.
“முக்கியமான விஷயம் தான் மாப்பிள்ளை. நம்ம ஷிவாவுக்கு ஒரு வரன் வந்திருக்கு…” என்றதும் தேன்மொழியை திரும்பி பார்க்க அவளுக்கு பத்மா ஏற்கனவே சொல்லியிருந்தார்.
ஜீவன் பார்த்ததும் அவளும் சந்தோஷமாக தலையசைத்தாள். அவளின் முகமே அத்தனை மகிழ்ச்சியை பிரதிபலித்தது.
“நல்லது மாமா. நல்ல இடமா இருந்தா முடிச்சுடலாம் தானே?…” என சொல்ல,
“நல்ல இடம் தான். ஒரே பொண்ணு. எல்லா பொருத்தமும் கூடி வந்திருக்குது. ஷிவாவுக்கும் ஏத்த பொண்ணு. அவனை மாதிரித்தான் வேலையும் பார்க்குது…”
“ஓஹ், குட். அப்பறம் என்ன பிக்ஸ் பண்ணிடலாம் தானே…”
“இப்ப அவன்கிட்ட நீங்க தான் பேசனும். நீங்க சொன்னா தான் கேப்பான்…”
“ஏன் என்ன சொல்றான்? நீங்க பேசலையா?…”
“என்ன சொல்லுவான்? ஏற்கனவே வந்திருந்தப்பவே சொல்லிட்டு தான் போயிருந்தான் இன்னும் ரெண்டு வருஷம் போகனும்னு…”
“ஓஹ்…”
“வீடு எடுத்து கட்டனும்னு சொல்றான். கார் வாங்கனும். இப்படி நிறைய அவன் சொல்லிட்டே இருக்கான். மாடி எடுத்தாச்சு. கார் மெதுவாவே வாங்கிக்கலாம்ன்னா கேட்கமாட்டேன்றான். இன்னும் கொஞ்சம் ஸ்டேபிளாகனும்னு சொல்றான். கல்யாணம் பண்ணிட்டு ஆகலாம் தானே? இதுக்கு மேல என்ன வேணும்?…” என கார்மேகம் படபடப்புடன் சொல்ல,
“அவனுக்கு இன்னும் கொஞ்சம் செட்டில் ஆகிட்டு பண்ணிக்கலாம்னு நினைக்கிறானா இருக்கும். பொன்னை பத்தி சொன்னீங்களா? அவனுக்கு பிடிச்சிருந்தா ஒருவேளை சம்மதிக்கலாம் தானே?…”
“எங்க மாப்பிள்ளை சொல்லவிட்டான்? அவன் கேட்கவே தயாரா இல்லை. வரன் வந்திருக்குன்னு சொல்லவும் படபடன்னு நிக்கறான். எதையும் கேட்கவே தயாரா இல்லை…”
“ஓஹ், சரி பேசலாம். ஆனா அவனோட சம்மதமும் முக்கியம் தானே?…” என்றவன் பென்வீட்டினர் பற்றிய விவரங்களை கேட்க,
“எல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணுதான் அண்ணா…” என்றாள் சுலோ.
“எனக்கு தெரிஞ்ச பொண்ணா? சொந்தமா?…” என ஜீவன் பார்க்க,
“ஆமா இங்க இந்த அப்பார்ட்மென்ட் தான். இங்க செகேன்ட் ப்ளோர் பொண்ணுதான். அன்னைக்கு ஒரு நாள் நீங்க எல்லாரும் கூட அந்த பொண்ணோட அப்பாவுக்கு முடியலைன்னு போய்ட்டுவந்தீங்க தானே?…” என்றதும் தான் ஜீவனுக்கு யாரை சொல்கிறார்கள் என்றே விளங்கியது.
“ஷக்தி…” என கேட்க,
“ஆமாங்க மாப்பிள்ளை. நல்ல பொண்ணுன்னு தான் பேசிக்கிட்டாங்க. தியாகு கூட ஒன்னும் பெருசா மறுத்துக்களை…” என பத்மா இப்போது வாய் திறக்க,
“ஓஹ்…” என்றவன் மொழியை பார்க்க அவர்களுக்கு டி எடுத்துவந்தவள் அனைவுக்கும் கொடுக்க அவளுக்கு பூரண திருப்தி என்பது முகத்திலேயே தெரிய அவளை லேசாய் முறைத்தபடி டீயை எடுத்துக்கொண்டான் ஜீவன்.
“போன்ல சொல்லிருக்கலாம் தானே?…” என வாயசைக்க,
“வீட்டுக்கு தானே வருவீங்க. அதான் கால் பண்ணலை…” என்றாள் அவளும் சைகையில் வாயசைத்து.
“இல்லைன்னா சொல்லமாட்டியா நீ?…” என்றவனின் சத்தமில்லாத பாஷைக்கு இல்லை என்று மறுப்பாய் தலையசைக்க,
“கிளம்பட்டும் வச்சுக்கறேன் உன்னை…” என்று மிரட்டலாய் பார்க்க வலதுகையால் தலையை தேய்த்தபடி அவனை பார்க்க,
“தலை வலிக்குதா?…” என்றன கண்கள் மின்ன.
“உதை…” என அவள் மிரட்ட இதழ்களுக்குள் சிரித்தான் ஜீவன்.
வந்தவர்கள் இருவரின் முகத்தையே மாறி மாறி பார்த்தனர். இருப்பவர்களை மறந்து இருவருமாய் அவர்களுக்கான பரிபாஷையில் மூழ்கிவிட கார்மேகத்திற்கும், பத்மாவிற்கும் மனது நிறைந்துபோனது.
“ம்க்கும்…” என சுலோ தான் அவர்களை சற்று உணர்வுக்கு கொண்டுவர அவளின் முயற்சி புரிந்தவன்,
“தங்கச்சிக்கு தொண்டையில கிச்சுகிச்சு. டேப்லட் எதாச்சும் வேணுமா? ஆனா நல்லநேரம் பார்த்து தான் மாத்திரை எடுத்துக்கனும்…” என அவளை கேலி செய்தவன்,
“எனக்கு ரொம்பவே சந்தோஷம். இன்னைக்கே நான் ஷிவாட்ட பேசறேன் மாமா. மோஸ்ட்லி மாட்டேன்னு சொல்லமாட்டானு தான் நினைக்கறேன். நம்புவோமாக…” என பூடகமாய் அவன் சொல்ல அவனின் பேச்சில் பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தத்தில் ‘அப்படியா?’ என்று பார்த்தாள் தேன்மொழி.
‘அப்படியும் இருக்கலாம் தான்’ என கண்மூடி ஆமோதித்தவன் அவர்களோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவு உணவை அவர்கள் முடித்துவிட்டு தான் அனுப்பி வைத்தான்.
வீட்டினர் கிளம்பி சென்றதும் அவர்களை அனுப்பிவிட்டு வந்து கதவை அடைத்ததும் தான் தாமதம். பொங்கிவிட்டாள் தேன்மொழி.
“சும்மா கூட தலையில கை வைக்க விடமாட்டேன்றீங்க நீங்க. எப்ப பார்த்தாலும் தலையில் ஒரு விரல் பட்டுட்டா உடனே குறைக்கிறேன் பேர்வழின்னு படுத்தறீங்க. யார் இருக்காங்கன்னு பார்க்கறதில்லை. தலைவலியா மொழின்னு நீங்க குழையறதும் அதை கேட்டுட்டு அப்படியான்னு என்கிட்டே என்னன்னு கேட்கறதும்…”
“உன் மேல அக்கறை தான்…”
“ஆஹா அந்த அக்கறை எதனாலன்னு எனக்கு தெரியுமே. நீங்க கேட்கற அர்த்தம் என்னன்னும் தெரியும். மத்தவங்களுக்கு அது புரியறதில்லை. என்னை திணற வைக்கறீங்க…” என சண்டை பிடிக்க,
“ஓஹ், எப்படி திணற வைக்கறேன். கொஞ்சம் சொல்லேன் கேட்போம்…” என அவளோடு அவனின் விளையாட்டை ஆரம்பிக்க,
“சும்மா இருக்கனும். அண்ணாவுக்கு ஒரு மெசேஜ் போட்டு வைப்போம். அப்போ தான் எழுந்ததும் பேசுவான்…” என மொபைலை தேட,
“நீங கேட்டதுக்கு பதில் சொல்லாம நழுவறதுல தூதர்ஷன் கெட்டிடி நீ…” என கொஞ்ச,
“மூச், பெரிம்மாவும், பெரிப்பாவும் என்ன நினைச்சிருப்பாங்க. அவங்க முன்னாடி அவ்வ்வளவு நேரம் பேசிட்டு இருந்திருக்கோம்…” என்று சொல்ல,
“சந்தோஷப்பட்டிருப்பாங்க. பொண்ணு புது புது பாஷை எல்லாம் மாப்பிள்ளைக்கு சொல்லிகுடுத்திருக்காங்கன்னு…”
அவள் என்ன பேசினாலும் அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தவன் ஷிவாவிற்கும் மெசேஜை போட்டு வைத்தான்.
அடுத்த அரைமணிநேரத்தில் ஷிவாவும் அவனுக்கு வீடியோ காலில் அழைத்துவிட அவனின் நலம்விசாரிப்புகள் இங்கே உள்ள நிலவரங்கள் என வழக்கமான பேச்சுக்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்க,
“எவ்வளவு நேரம் ஊர் கதையே பேசுவீங்க?…” என தேன்மொழி பொறுமையிழந்து சொல்ல,
“என்னவாம் தேனுவுக்கு சுள்ளுன்னு வருது? என்ன மாமா?…” என சிவா கேட்க,
“அவளுக்கு என்னோட நீ பேசினாலே சுள்ளுன்னு தான் பொங்கும். அதையெல்லாம் நீ காதுல வாங்காத மச்சான். நமக்குள்ள கெமிஸ்ட்ரி அவளுக்கும் எனக்கும் இல்லைன்னு பொறாமை….” என சொல்ல அவனின் தலையில் கொட்டியவள்,
“முதல்ல உன் கல்யாணத்தை பத்தி பேசட்டும்…” என தேன்மொழி சொல்ல,
“கல்யாணம், எனக்கா?…” என்றான் ஷிவா.
“ஹ்ம்ம், ஆமா. உனக்கு பொண்ணு பார்த்தாச்சு ஷிவா…” என ஜீவன் சொல்ல,
“ரியல்லி. எல்லாம் நீங்க வலதுகாலை எடுத்துவச்சு வந்த நேரம் மாமா…” என்றான் அவன்.
ஜீவன் கேலியாக சொல்கிறானோ என அவனும் சிரிப்புடன் சொல்லியவன் ஜீவனின் முகத்தில் இருந்த சிரிப்பையும் தாண்டிய தீவிரத்தில் உண்மை தான் என நினைத்தான் அவன்.