புன்னகை – 17
ஷிவாவிற்கு ஜீவனின் முகபாவமும், தேன்மொழியின் அதீத மகிழ்ச்சியும் கேட்டது உண்மைதானோ என்று தோன்றியது.
“அட அப்ரசண்டிகளா? யார் பார்த்த வேலை இது?…” என சத்தமாகவே ஷிவா சொல்லிவிட,
“டேய் யாரை சொல்ற நீ?…” என்ற ஜீவனின் முறைப்பில்,
“மைண்ட்வாய்ஸ் மாமா. மைண்ட் பண்ணாதீங்க…”
“காதுல விழுகுதே. மைண்ட் பண்ணத்தான செய்வேன்…”
“விழுகனும்னு எல்லாம் பேசலை. அழிச்சிடுங்க…”
இருவரும் மாறி மாறி வழக்காட பேசவேண்டிய விஷயத்தை மறந்துவிட தேன்மொழி தான் உருப்படியாக ஆரம்பித்தாள்.
“ஷிவாண்ணா, இதை விடு. பொண்ணை எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்குது. எல்லாம் உனக்கு தெரிஞ்ச பொண்ணுதான். நீ கூட பார்த்திருக்க…” என விஷயத்துக்கு வர,
“நான் தான் பதமா பேசிட்டு இருக்கேன்ல. அப்பறம் என்ன ஊடால? போய் புருஷனுக்கு பால் ஆத்திட்டு வா…” என்று தேன்மொழியை அனுப்ப பார்த்தான் ஜீவன்.
அவனுக்கு ஷிவாவின் முழுமனநிலையும் தெரியவேண்டியதாக இருந்தது. அதற்காக அவளை அனுப்ப நினைக்க மொழியின் முகம் சுண்டிப்போனது.
“ஹ்ம்ம், சரி…” என வெளிவராத குரலில் சொல்லியவள் அங்கிருந்து நகரப்பார்க்க நொடிநேர அந்த முகமாறுதலை கண்டுகொண்ட ஜீவன்,
“ஷிவா டூ மினிட்ஸ்…” என லேப்டாப்பை மூடியவன் தேன்மொழியின் கையை பற்றி நிறுத்தினான்.
“என்ன உன் பிரச்சனை மொழி? எதுக்கு சட்டுன்னு ரியாக்ட் ஆகிட்ட?…” என கேட்க,
“அதெல்லாம் எதுவுமில்லையே. உங்களுக்கு பால் காய்ச்சலாம்னு தான்…”
“இப்ப என்னை மண்டை காயவிட்டுட்டு தான் இருக்க நீ. சொல்லு, எதுக்கு உன் முகம் மாறிடுச்சு…” என்றவனின் பிடிவாதமான குரலில் ஒரு நொடி பயந்தாள்.
சொன்னால் கண்டிப்பாக திட்டுவான். இத்தனைக்கு பிறகும் இன்னமும் அதை நினைத்து என்னையும் அதனுடன் சேர்த்தாயா என்று கோபப்படுவானே என நினைத்து வாயை அழுத்தமாய் மூடிக்கொண்டு நிற்க,
“மொழி…” என்றவனின் அழைப்பில் அதே அழுத்தத்துடன் நிமிர்ந்து பார்க்க,
“இப்ப நீ சொல்ல போறியா இல்லையா?…”
“ஒண்ணுமில்லாததுக்கு இப்ப நீங்க தான் ரியாக்ட் பன்றீங்க…” என தன் கையை உருவ பார்க்க,
“எதே, நானா? என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு? உன்னோட கண்ணு சுத்தற திசையை வச்சே நீ என்ன நினைக்கிறன்னு பார்க்கறவன் நான்…” என்றவனின் பேச்சில் மெல்லிய புன்னகையை சிந்தியது அவளிதழ்கள்.
“என்னடி கொழுப்பா?…” என்று அவளின் கையை இன்னும் அழுத்தமாய் பிடித்து லேசாய் முறுக்கியவன்,
“என்கிட்டயேவா, நீ என்னன்னு சொல்ற வரைக்கும் ஷிவாட்ட நான் பேச மாட்டேன். நீயுமாச்சு, உன் அண்ணன் கல்யாணமும் ஆச்சு. போடி…” என்று சொல்லி லேப்டாப்பை தூக்கி ஓரமாய் வைத்துவிட்டு சென்று படுத்துக்கொண்டான்.
“இதெல்லாம் நல்லா இல்லை. மிரட்டறீங்க நீங்க. என் பெரிப்பா எவ்வளவு தூரம் வந்து சொல்லிட்டு போனாங்க. அவங்களுக்காகவாச்சும் பேசனும்ல…”
அப்படியாவது கார்மேகத்தின் மேல் கொண்ட மரியாதைக்கேனும் பேசுவான் என தேன்மொழி சொல்ல அவள் பக்கம் திரும்பி படுத்து இரு கைகளையும் தலைக்கு கீழ் கோர்த்தவன்,
“பொண்டாட்டிக்கே பேசலை. மாமனார் எல்லாம் பார்க்கமாட்டேன். என்ன வேணாலும் பேசிக்கோ…” என அடமாக சொல்ல அவனை இயலாமையுடன் பார்த்தவள் இன்னும் நெருங்கி வந்து அமர்ந்தாள்.
தானாகவே அவனின் தலையை தன் மடிக்கு நகர்த்திக்கொள்ள அவளின் இறக்கத்திலும், இணக்கத்திலும் இதழ்களுக்குள் புன்னகைத்துக்கொண்டவன்,
“லேசா தலையை பிடிச்சுவிடு. பொண்டாட்டின்னாலே தலைவலின்னு ஆகிபோச்சு…” என வேண்டுமென்றே அவனை சீண்டிவிட,
“அப்ப கல்யாணமே பண்ணிருக்க கூடாது நீங்க…” என கடுப்பாய் தேன்மொழி பேசினாள்.
“அப்படி ஒரு உறுதியான முடிவுல தான் வந்தேன். ஆனா பொண்ணு மொழியா இருக்கும் போது அந்த முடிவெல்லாம் முட்டுச்சந்துக்குள்ள முட்டிடுச்சு…” என சிரிக்காமல் சொல்ல,
“ப்ச், இப்ப அதுவா விஷயம். ப்ளீஸ் அண்ணாட்ட பேசுங்க…”
“முடியாது. வேணும்னா உன் பெரியண்ணா மிஸ்டர் நல்லநேரம்ட்ட சொல்லி பேச சொல்லு…”
“ஐயோ அவர் பேசினா நல்லது நடக்காதே…” என மொழி பதற,
“நல்லது பேசினா நல்லது நடக்காதாம். புது தியரியா இருக்கே…” என சிரித்தான் ஜீவன்.
அவன் தன் பிடியிலிருந்து நழுவாமல் இருக்க தேன்மொழி தான் கீழிறங்கி வரவேண்டியதாக போனது.
“ஓகே, சொல்றேன் கோவப்படாதீங்க…”
“அப்போ கோவப்படற மாதிரி தான் நினைச்சிருக்க நீ…” என அப்போதே முறைக்க ஆரம்பித்தான்.
“சொல்றதுக்கு முன்னாடியே சண்டை போடறீங்க நீங்க…” என முகத்தை சுருக்கினாள்.
“இப்படியே பேசிட்டே இரு. எனக்கு என்ன கேட்டேன்ற கேள்வியே மறந்திரும்…” என்றான் அலுப்பாய்.
“நீங்க அண்ணாட்ட ஏதோ முக்கியமா பேச போனீங்கள. பெரிம்மா வீட்டுலையும் இப்படித்தான் செய்வாங்க. முக்கியமா பேசறதா இருந்தா கூட என்னை அனுப்பிடுவாங்க. என்னை வச்சு எதுவும் பேசமாட்டாங்க. அதான் நீங்களும்…” என்றதும்,
“அடடா, நீ எப்போ அந்த பீரியட்ல இருந்து வெளில வருவ? ப்ச், இதெல்லாம் உன்னை வச்சு பேசமுடியாது மொழி. அதான் போக சொன்னேன்…” என்றான் கோபமில்லாத குரலில்.
“நிஜமாவே உங்களுக்கு கோபம் வரலையா?…” என கேட்டவளின் ஆச்சர்யபாவத்தில் ஜீவனின் மனம் துணுக்குற்றது.
தேன்மொழியின் எதிலிருந்தோ விடுபட்டதை போன்ற ஆசுவாசமும், நிம்மதி பெருமூச்சும், சந்தோஷமும் ஜீவனுக்கு என்னவோ போல இருக்க அதை கேட்கவும் செய்தான்.
“உன்கிட்ட அதிகமா கோபப்படறேனா நான்?…” என்றான் அவளின் கேள்விக்கு எதிர்கேள்வியாக.
லேசாய் மனதினுள் சஞ்சலம் ஜீவனுக்கு. தேன்மொழியிடம் அதிகமாக பிடிவாதத்தை காண்பிக்கிறேனோ என அவனாகவே நினைக்க அவளிடம் கேள்வி எழுப்பினான்.
“அச்சோ அப்படி சொல்லலை. அது உங்களுக்கு எப்படி புரிய வைக்கன்னு…” என தேன்மொழி வார்த்தைகளை தேடினாள்.
‘இதற்கு கோபப்பட்டு திட்டியிருக்கலாம்’ என்றே தோன்றியது அவளுக்கு. ஜீவனின் கவலை தாங்கிய முகம் அவளை சாய்த்தது.
இப்படி ஒரு குரலில் அவன் என்றுமே அவளை கேட்டதில்லை. பேசியதில்லை. இன்றானால் ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு தானும் குழப்பி அவனையும் இப்படி நினைக்க வைத்துவிட்டோமே என எண்ணி வருத்தினாள்.
ஜீவனின் இந்த வருத்தம் தோய்ந்த முகமும், கலக்கம் சுமந்த குரலும் அவளுக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம் என்று கூக்குரலிட்டது அவளின் மனது. தன்னை மறந்தவளாய் அவனை அழைத்தாள்.
“ஜீவா…” என்றவளின் குரலில் நிமிர்ந்து பார்த்தவன் விழிகள் சட்டென பளிச்சிட,
“வாட்? கம் அகைன்…” என்றான் ஜீவன் துள்ளல் குரலில்.
அவளின் ஜீவன் தன் ஜீவனை மீட்டுவிட்டான். இந்த குரல் அவளுள் பல மாயங்களை புரியும் குரல். உள்ளுக்குள் சென்று உயிரை மீட்டும் குரல். வெளிப்படையான அதிகார குரல் தான். ஆனாலும் அவளை மொத்தமாய் ஆளும் குரல். விரும்பியே அதில் அவளை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் குரல்.
“காது கேக்கலையா பாஸ்…” என்றாள் குறும்பு மின்னும் விழிகளுடன்.
“அதை தான் செக் பண்ணலாம்னு திரும்ப சொல்ல சொல்றேன். நீ சொல்லு. கேட்குதான்னு பார்ப்போம்…” என்றவன் தன் கீழ் அவனின் ஆளுகைக்குள் கொண்டு வந்தவன் அவளின் முகம் நோக்கி குனிந்திருக்க,
“அவசியமில்லை. இப்போ நான் பேசறது கேட்குது தானே?…”
“இந்த டெபனிஷன் எல்லா வேர்ட்ஸ்க்கும் பொருந்தாதே லாங்க்வேஜ்…” என சிரிப்புடன் சொல்லியவனின் முகத்தில் ஆயிரம் மின்னல்கள்.
“இதென்ன லாங்க்வேஜ்?…” என மொழி அவனை முறைக்க,
“சும்மா ஒரே வார்த்தையை சொன்னா போரடிக்குது. அதான் லாங்க்வேஜ் லாங்க்வேஜ்…” என்றவன் மீசை அவளின் கன்னத்தில் ஊராய,
“ப்ச், ஒழுங்கா எப்பவும் போல கூப்பிடுங்க. அதுதான் எனக்கு பிடிச்சிருக்குது…”
“நான் கேட்க ஆசைப்படறதை நீ சொல்லு. காது கேட்குதான்னு பார்க்கனும். அதுக்கப்பறம் எல்லாம் ஆட்டோமேட்டிக்கா வரும்…”
“அதெல்லாம் முடியாது, நான் போய் பால் காய்ச்சறேன்…” என எழுந்துகொள்ள பார்க்க,
“ஒன்னும் வேண்டாம். நீ சொல்லு…” என்று அவளை ஒரு இஞ்ச் நகரவிடவில்லை.
“ஹப்பா, என்ன இது? போய் மெயின் டோர் லாக் பண்ணிட்டாவது வரேன். விடுங்க…” என்று சொல்ல அதற்கும் விடாமல் போக,
“ஜீவா…” என்று கத்தியவளின் குரல் சட்டென முணங்கலாய் பரிணாம வளர்ச்சியடைய அதன் பின் ஜீவனின் நாமம் தான் அவளிடத்தில். நொடிக்கொருதரம் அவளை சொல்ல வைத்தான் மொழியின் ஜீவன்.
சில நிமிடங்களுக்கு பின் அவளிடமிருந்து விலகி எழுந்தவன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அறை கதவை திறக்க,
“கல்ப்ரிட்…” என்று ஒரு தலையணையை எடுத்து அவனை நோக்கி வீசினாள் தேன்மொழி. அது சற்று தள்ளி விழ அட்டகாசமாய் சிரித்தவன்,
“பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தூதர்ஷன். டயர்டா இருப்ப, தூங்கு. உன் அண்ணன் என்ன சொல்றான்னு பேசிட்டு வந்து சொல்றேன்…” என்றுவிட்டு அந்த அறை கதவை சாற்றிவிட்டு இன்னொரு அறைக்கு வந்துவிட்டான்.
ஜீவன் சென்றதும் விழிகளை மூடிக்கொண்டவள் இதழ்களில் ஊறியிருந்த புன்னகையுடன் பெட்ஷீட்டை நன்றாக போர்த்திக்கொண்டு உறங்க முற்பட்டாள்.
இன்னொரு அறைக்கு வந்து லேப்டாப்பை வைத்துவிட்டு முகம் கழுவி லேசாய் தலையை கோதி சரி செய்தவன் ஷிவாவிற்கு அழைக்க அவனும் இவனுக்காக காத்திருந்ததை போலவே வந்துவிட,
“என்னடா ரொம்ப நேரம் ஆகிடுச்சா?…” என கேட்டுக்கொண்டே அங்கிருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடிக்க,
“உனக்கு கல்யாணம்னு சொல்லி என்னை அம்போன்னு விட்டுட்டு போய்ட்டு வந்து கேட்கறீங்க கேள்வி…” என்றான் ஷிவா.
“ஒரு பஞ்சாயத்துடா. அதான் முடிச்சுட்டு வந்தேன்…” என டிஷர்ட் காலரை தூக்கிவிட,
“உங்க மேல தான புகார்…”
“ம்ஹூம். உன் தங்கச்சி தான். சரின்னு சமாதானம் செஞ்சேன்…”
“தேனுவா? சான்சே இல்லை. உங்களை சொல்லுங்க, கண்ணை மூடிட்டு நம்புவேன். அம்புட்டு சேட்டையும் அந்த டாக்டர் கோட்டுக்குள்ள தான் ஒளிச்சு வச்சிருக்கீங்க…” என ஷிவா சொல்லவும் சத்தமின்றி குலுங்கி சிரித்தவன்,
“சரி டாப்பிக் போவோமா?…”
“இதென்ன நீயா நானாவா? டாப்பிக்குக்குள்ள போவோம். ஸ்பான்சர்ட் பை…” டைட்டில் கார்ட் மாதிரி சொல்ல?…”
“பேச விடுடா? பாவம் ஷக்தி…” என்று ஜீவன் பெருமூச்செறிய,
“யூ மீன் பராஷக்தி…” என பிடித்துவிட்டான் ஷிவா.
ஷிவாவின் புத்திக்கூர்மையில் ஒருநொடி வியந்தவன், அவனின் பேச்சில் ஜீவனுக்கு சட்டென ஒரு யோசனை. ஓரளவு ஷிவாவின் மனதை அனுமானித்தவனாக,
“யாருடா அது பராஷக்தி?…” என்றான் வேண்டுமென்றே தெரியாதவனை போல.
ஷிவாவின் முகம் சட்டென யோசனை பிறக்க உடனே தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் தன் யூகம் தவறோ என நினைத்து,
“அது ஒரு ரைமிங்க்ல சொன்னது மாமா. ஷக்தி, பராஷக்தி. அப்படி…” என்று சமாளிக்க,
“ஓஹ் அப்படி. ஓகே ஓகே. நான் கூட வேற என்னமோன்னு நினைச்சுட்டேன்….” என்றான் பிடிகொடுக்காமல்.
“என்னன்னு நினைச்சீங்க?…” ஷிவா சந்தேகமாக கேட்க,
“உனக்கு அங்க ஏதும் கேர்ள் ப்ரெண்டோன்னு…” என்று இழுக்க,
“உங்களுக்கு சொல்லாமலா? அட போங்க மாமா. இருந்துற போறா…” என்றான் சலிப்பாக. ஷிவாவின் மனதில் ஷக்தியின் முகம் மின்னி மறைந்தது.
‘நான்தான் ஓவரா திங்க் பண்ணிட்டேன் போல. ஷக்தின்னதும் சட்டுன்னு அவ தான் கண்ணு முன்னாடி வரா. ராட்சசி. பராஷக்தி தான். உலகமெங்கும் ஷிவாவின் உலகமெங்கும்.’ என அவனின் போக்கில் நினைத்தபடி இருக்க ஜீவனின் பேச்சை கவனிக்கவே இல்லை அவன்.
ஜீவனும் நான்கைந்துமுறை கத்திவிட்டு அவன் அப்படியே இருப்பதை பார்த்தவன் மனதிற்குள் சிரித்தவனாக இணைப்பை துண்டித்தான். அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் மீண்டும் ஷிவா அழைத்துவிட இவனும் இணைப்பில் சேர்ந்துகொள்ள,
“எங்க போய்ட்டீங்க மாமா?….” என்றான் ஷிவா.
“நான் எங்கயும் போகலை. இங்க தான் இருக்கேன். நீ தான் கனவு காண போய்ட்ட போல….” என கேலி குரலில் சொல்ல அசடுவழிந்தான் ஷிவா.
ஜீவனின் பார்வை குறுகுறுவென அவனை துளைத்ததில் லேசாய் நெளிந்தவன் அவனை சமாளிக்க முடியாமல்,
“தேனு எங்க காணும்?…” என்றான் பேச்சை மாற்றும் பொருட்டு.