புன்னகை – 19
கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்ததும் தேன்மொழி ஒரு நொடி அனைத்தையும் கண்விரித்து பார்த்தவள் கோபத்துடன் வேகமாய் பாத்ரூமிற்குள் நுழைந்துகொண்டாள்.
அவள் ஹாஸ்பிட்டல் சென்ற அன்று வீடு எப்படி இருந்ததோ அப்படியே போட்டது போட்டபடியே இருந்தது. இன்னும் அதை விட மோசமாகவே இருந்தது.
பார்த்தவளுக்கு ஒருநொடி தலைசுற்றி போக ஒரு பெருமூச்சுடன் குளித்துவிட்டு வந்தவள் பரபரவென அனைத்தையும் ஒழுங்குபடுத்த ஆரம்பித்திருந்தாள்.
ஜீவன் என்றுமே இப்படி போட்டு வைத்திருக்கமாட்டான். தனக்கு மேல் சுத்தம் பார்ப்பவனாகிற்றே. எப்போதும் ஒழுங்காக வைத்திருப்பவன் தன் மீதான கோபத்தில் தான் இப்படி இறைத்து வைத்திருக்கிறான் என்று தெரிந்தது.
படுக்கை ஹாலில் போடப்பட்டிருந்தது. வெறும் பாயும் தலையணையுமாய் போர்த்தியிருந்த போர்வை சுருண்டுக்கிடக்க அதை கூட மடித்து வைக்காமல் அலங்கோலமாய் இருந்தது.
குளித்துவிட்டு துவட்டிய டவல் விரித்துவிடாமல் அப்படியே சுருட்டி சோபாவில் வீசியிருந்தான் போலும். அதுவும் அப்படியே இன்னுமே லேசான ஈரத்துடன் ஒரு வாடையுடன் இருக்க பல்லை கடித்தபடி அத்தனையையும் எடுத்து மிஷினில் போட்டு சுற்றவிட்டாள்.
ஜங்க்ஷன் பாக்ஸ் ஒன்றை விரித்திருந்த பாயருகே போட்டு வைத்திருந்தவனின் மொபைல் சார்ஜர், லேப்டாப் சார்ஜர் அப்படியே மாட்டப்பட்டு அதனருகே லேப்டாப் மூடாமல் விரிந்த நிலையில் இருந்தது.
டிவி ஸ்விட்ச்சில் அமர்த்தபடாமல் ரிமோட்டில் அமர்த்திருப்பான் போலும். ரிமோட்டும் அதனருகே. பால் குடித்த டம்ளரும் அதனருகே. தண்ணீர் குடித்திருந்த பாட்டில் காலியாகி அதன் மூடி ஒருபக்கம் எங்கோ கிடந்தது.
ஒரு பெருமூச்சுடன் அவற்றை எல்லாம் சுத்தம் செய்தவள் அடுக்களைக்குள் செல்ல பால் காய வைத்த பாத்திரம் அப்படியே காய்ந்து கிடந்தது. சாப்பிட்ட தட்டும் அப்படியே கிடக்க, பனங்கற்கண்டு வைத்திருந்த கண்ணாடி டப்பா மூடாமல் திறந்திருந்தது.
பாத்திரம் கழுவாமல் வெறுமனே சிங்கில் நிறைந்திருக்க அழுகையே வந்துவிட்டது தேன்மொழிக்கு.
கோபத்தில் அத்தனையையும் எடுத்து போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்தவள் எதையும் சமைக்கவோ, செய்யவோ தோன்றாமல் வேகமாய் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
தேன்மொழி கிட்சனிற்குள் நுழையவுமே இன்னொரு அறையில் குளித்துவிட்டு வந்தவன் பார்த்துவிட்டான். எதுவும் பேசுவாள், திட்டுவாள் என பார்த்தபடி இடுப்பில் கை வைத்துக்கொண்டு அங்கேயே அவளை பார்த்து நின்றான் ஜீவன்.
கோபமாய் திட்டட்டும் பேசலாம் என இவன் நினைத்திருக்க அவளோ கண்ணை துடைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்ததும் தலையில் அடித்துக்கொண்டவன் சற்று நேரம் சென்று அவளை தேடி சென்றான்.
கட்டிலில் படுத்திருந்தவளுக்கு பசியிலும், கோபத்திலும் அழுகை தான் முட்டியது. அவனின் அருகாமையை அவனின் வாசம் வைத்தே உணர்ந்தவள் பேசாமல் கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள்.
அவளின் முகம் இருக்கும் பக்கம் வந்து நின்றவன் தனது போனை எடுத்து உணவிற்கு வெளியில் ஆடர் செய்துவிட்டு அவளருகே வந்தான்.
“என்னாச்சு மொழி?…” என கேட்க,
“இதுவரைக்கும் ஒன்னும் ஆகலை. போதுமா?…” என்றாள் கோபமாக.
“அப்போ எதுக்கு இப்படி படுத்திருக்க? ஹ்ம்ம்?…” என சமாதானமாகும் குரலில் அவளருகே தானும் படுத்துக்கொண்டவன் மொழியின் கைகளை எடுத்து தன்னை சுற்றி போட்டுக்கொண்டான்.
அவள் மீதான கோபமும், ஆதங்கமும் அவனிடத்தில் எங்கோ சென்று ஒளிந்துகொண்டது. இந்த அருகாமையே போதுமானதாக இருக்க அவளின் முகத்தை மெல்ல வருட ஆரம்பித்தான்.
“ஒன்னும் வேண்டாம். இப்படியா போட்டு வச்சிருப்பீங்க வீட்டை? ரெண்டு நாள் தான பெரிம்மா கூட இருந்தேன்?…” என்றவள் அவனுக்கு முதுகு காட்டி திரும்பிக்கொள்ள இன்னும் அவளோடு ஒட்டிக்கொண்டான்.
“ப்ச், செம்ம கோவத்துல இருக்கேன். தள்ளி போங்க….” தன் பசியை பற்றி அப்போதும் அவள் சொல்லாமல் சிடுசிடுக்க,
“இதானே எனக்கும் வேணும். மொழி என் மேல கோபப்படறது. ஐ லவ்ட்…” என்று அவளின் கழுத்தில் குட்டியாய் சுருண்டு கிடந்த முடியை பல்லால் இழுக்க,
“வலிக்குது விடுங்க…” என்று நகர,
“இப்படித்தான் எனக்கும் இருந்துச்சு. நல்லா வலிக்கட்டும். ரெண்டு நாளா இந்த வீட்டுக்குள்ள நான் மட்டும் தனியா இருந்தேன். அதை நினைச்சியா நீ? சாப்பிட முடியலை. தூங்க முடியலை. உன்னோட ஒரே தொல்லை…” என்றவன் அவளின் முகத்தை திருப்பி இரண்டு நாட்களாய் மழிக்கப்படாத தாடியை அவளின் கன்னத்தில் அழுத்தமாய் உராயவிட்டான்.
“ப்ச், குத்துது போங்க…” என தள்ளிவிட இன்னுமே அவளை இறுக்கமாய் அணைத்தான். அவளின் விலகல் அவனை நெருங்க செய்தது.
தேன்மொழியின் பாராமுகம், வர்ஷாவின் திடீர் வரவு, அதனால் உண்டான மனவுளைச்சல் என ஜீவனின் மனம் நிலையில்லாமல் தவித்துக்கொண்டிருக்க தனது மொத்த பாரத்தையும் அவள் மேல் இறக்குவதை போல செயல்பட ஆரம்பித்தான்.
அவனின் திடீர் முரட்டுத்தனத்திலும், அழுத்தத்திலும் தடுமாறிய தேன்மொழி அதிர்ந்துபோனாள்.
அவளின் மறுப்புகளை அலட்சியம் செய்தவனாய் முன்னேற பார்க்க அதற்கு மேலும் அவனை ஏற்கமுடியாமல் வேகமாய் விலகி தள்ளிவிட்டவள் கட்டிலின் ஓரத்தில் கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
ஏனோ உடல் நடுங்க தெப்பமாய் வியர்த்து போனது தேன்மொழிக்கு. அது ஜீவனின் ஆக்ரோஷமான பார்வையினால் உண்டான பயம். அவளின் பயந்த விழிகளில் தன்னை நிதானப்படுத்திக்கொண்டவன் விரல்களை மடக்கி தன் தலையில் குத்திக்கொண்டான்.
சிலநொடிகள் இருவரிடத்திலும் பேச்சுக்கள் இல்லை. ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொண்டு இருக்க ஜீவன் தான் அவளை அழைத்தான்.
“மொழி…” என்றவனின் அமைதியான அழைப்பில் இன்னும் மொழி அப்படியே அமர்ந்திருக்க,
“இங்க வா…” என்றதற்கு தலையசைத்து அவள் மறுத்துவிட அவளை அடிபட்ட பார்வையுடன் எதிர்கொண்டான் ஜீவன்.
“என்னை பார்த்தா உனக்கும் பயமாவா இருக்குது? நீயாவது என்னை புரிஞ்சுப்பனு நினைச்சேன். நீயும் என்னை அப்படித்தான்னு இந்த ஒத்த பார்வையில காமிச்சுட்ட இல்ல…” ஜீவன் சொல்லவும் அதன் அர்த்தத்தில் அதிர்ந்து போனாள்.
“சத்தியமா நான் அப்படிலாம் நினைக்கலைங்க. சத்தியமா சொல்றேன். நம்புங்க…”
“ப்ச், போ மொழி…” என்றவன் ஓய்ந்து போய் சாய்ந்து அமர்ந்தான்.
சில நொடிகள் அவனையே பார்த்திருந்தவள் பின் தானே நகர்ந்து சென்று அவனருகே அமர்ந்து அவனின் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“பாஸ்…” என அவனின் தோளை சுரண்ட,
“மொழி. ப்ளீஸ். லீவ் மீ அலோன்…” என்றவன் கைகள் அவனின் பேச்சிற்கு மாறாக அவளை இறுக்கமாய் அணைத்தது.
“புருஷனா பொண்டாட்டிக்கிட்ட இதை எதிர்பார்க்கிறது ஒரு தப்பா மொழி? இது இயற்கை தானே?…” என்று கண்ணை மூடிக்கொண்டு அவன் கேட்க என்ன பதில் சொல்வதென்று தவித்து போனாள்.
விரல்கள் மட்டும் அவனை வருடிக்கொண்டே இருந்தது ஆதரவாய் ஆறுதலாய். எப்படி தன்னை புரிய வைக்கவென்று யோசித்தவளுக்கு உடனே ஞாபகம் வர.
“இப்ப வந்திடறேன்…” என அவள் கட்டிலைவிட்டு கீழிறங்க போனாள்.
“பார்த்தியா, ஒரு பேச்சுக்கு தனியா விடுன்னா விட்டுட்டு போற நீ…” என்றான் அவளின் கையை விடாமல் பற்றி.
“இப்ப என் கிட்ட தான் உதை வாங்குவீங்க நீங்க…” என்று அவனை மிரட்டியவள் தலை விடுவித்துக்கொண்டு தனது ஹேண்ட்பேக்கை எடுக்க ஹாலுக்கு சென்றாள்.
தேன்மொழி சென்றதும் மனது சொல்லொண்ணா வேதனையில் தவித்தது. ஏனோ இன்று பழைய நினைவுகள் எல்லாம் பொங்கிக்கொண்டு ஆர்ப்பரித்து வந்தது. அவன் கட்டியிருந்த கற்சுவரை பெயர்த்துக்கொண்டு வர பார்த்தது.
“இதை பாருங்க…” என்றவளின் குரலில் கண் திறந்தவன் தன் முன்னே மடக்கப்பட்ட விரல்களுக்குள் மொழி ஒளித்து வைத்திருப்பதை யோசனையுடன் பார்த்தான்.
“ஹ்ம்ம், உள்ள என்ன இருக்குன்னு முதல்ல பாருங்க. அப்போ தான் நான் ஏன் தள்ளி போனேன்னு தெரியும்…” என்று சொல்லவும் ஜீவனின் மனது படபடவென்று அடித்துக்கொண்டது.
‘அதுவாக இருக்குமோ?’ என நினைத்தபடி அவளின் நடுவிரலை லேசாய் தொட்டதுமே அவளின் விரல்கள் மொத்தமாய் விரிந்து அந்த உள்ளங்கையில் இருந்த நெல்லிக்கனியை காண்பித்து தரவும் பாதுகாப்பாய் அதை எடுத்தான் ஜீவன்.
ஜீவனின் உணர்ச்சிகள் பெருக்கெடுக்க கண்கள் கலங்கி கண்ணீர் லேசாய் இமைவிட்டு இறங்கியது அவனுக்கு.
“மொழி…” என குரல் நடுங்க எழுந்து நின்றவன் கையில் இருந்ததை விட்டு கண்களை அகற்றவில்லை.
“இட்ஸ் ட்ரூ…” என புன்னகையுடன் கேட்டவனை செல்லமாய் முறைத்தவள்,
“நான் பெரிம்மா வீட்டுக்கு போறேன்…” என திரும்ப போக அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் ஜீவன்.
“சொல்லுடி. உன் வாயால கேட்கனும். நீ சொல்லு. எப்போ தெரியும் உனக்கு?…” என அவளின் கழுத்துவளைவில் தன் நாடியை பதித்தபடி கேட்டவன் விரல்கள் வயிற்றை தடவியது.
நைட்டியில் இருந்தவளின் மெய்யை தன் தீண்டலில் உணரமுடியாமல் ஏமாற்றத்துடன் அவளின் முகம் பார்க்க,
“ஹப்பா, என்ன இது பார்வை?…” என்றவள்,
“மூணுநாளைக்கு முன்னதான் டவுட்டா இருந்துச்சு. அதான் இந்த கிட்டை வாங்கிட்டு வந்தேன். காலைல செக் பண்ணதும் கண்பார்ம்ன்னு வந்துச்சா, நீங்க ஹாஸ்பிட்டல்ல இருந்து வரலைன்னதும் நானே தேடி வந்தேன்…” என்றவள்,
“எனக்கு உடனே உங்கள பார்க்கனும்னு வேற இருந்துச்சு, அதான் இதை சொல்லிட்டு அங்கயே செக்கப் பண்ணிடலாம்னு தான் உங்களை தேடி ஹாஸ்பிட்டல் வந்தேன். அப்போ தான் அங்க…” என்ற மொழி அப்படியே பேச்சை நிறுத்த அவளை புரிந்துகொண்டவன்,
“அங்கயே ஒரு அறை விட்டு எனக்கு இதை காமிச்சிருக்கலாம்ல. இப்ப எனக்கு உன்னை அறையனும் போல இருக்குது…” என்றான் சட்டென பூத்த கோபத்துடன்.
“ஹ்ம்ம் அறைஞ்சுக்கோங்க…” என அவளின் கன்னத்தை வாகாய் காட்ட உண்மையில் வலிக்காமல் லேசாய் அடித்துவிட்டவன்,
“வா…” என தனது கையை விரிக்கவும் அவனின் மார்பினுள் பாந்தமாய் அடங்கிக்கொண்டாள்.
“வீட்டுக்கு சொல்லிட்டியா?…” என தேன்மொழியின் தலையை கோதியபடி ஜீவன் கேட்க,
“புருஷனுக்கே சொல்லலையாம். இதுல வீட்டுக்கு. போயா யோவ்ஸ்…” என்று அதட்ட,
“ இதென்ன யோவ்ஸ்?…”
“யோவ்ன்னா கோபமா சொல்றது. யோவ்ஸ்ன்னா செல்லமா சொல்றது. அதான் யோவ்ஸ்…”
“ரொம்ப செல்லம் தான்…” என சொல்ல வாசலில் பெல் அடிக்கும் சத்தம் கேட்டவன்,
“இந்த ட்ரெஸ் வேண்டாம். நைட்டியை மாத்திட்டு ட்ராக் போட்டுக்கோ. நான் வரேன்…” என சொல்லி அவன் அறையை விட்டு வெளியேற யாரோ வந்திருக்கிறார்கள் என நினைத்து மொழியும் வெளியே வந்து பார்த்தாள்.
ஜீவன் சாப்பாடு வந்த பார்சலை வாங்கி வைத்துவிட்டு கதவை பூட்டிவிட்டு திரும்ப இவள் நிற்பதை கண்டு முறைதான்.
“ட்ரெஸ் சேஞ்ச் பண்ண சொன்னேன்ல…” என வர,
“நைட்டியே போதும். இதான் ப்ரீயா இருக்குது. வீட்டுக்குள்ள தான இருக்கேன்…” என மொழி சொல்ல,
“புரிஞ்சுக்கோ மொழி…” என வந்தவன் அவளின் வயிற்றின் மேல் கை வைத்து,
“பேபியை பீல் பண்ணனும். இது பிடிக்கலை எனக்கு…” என்றான் வழக்கமான பிடிவாத குரலில்.
அதை சொல்லும் பொழுதில் அவனின் முகத்தில் வந்துபோன உணர்வுகள் அத்தனை ரசனைக்குரியதாய் இருந்தது.
ஒரு மென்னகையுடன் அவனின் முகத்தை தலை சாய்த்து அவள் பார்க்க அவளை போலவே கைகட்டி அவனும் பார்க்க,
“உங்களை…” என அவனின் தோளில் தட்டியவள்,
“பசிக்குது…” என்றாள்.
“வா வா. பேபி இருக்குதே. பசிக்கும்…” என அவளை சோபாவில் அமர வைக்க போக அதை சற்று முன்னர் தான் துடைத்துவிட்டிருந்தாள் தேன்மொழி.
ஜீவன் ஈர துணிகளை அங்கே போட்டிருந்ததில் அந்த ஈரம் நன்றாக குஷனில் இறங்கியிருக்க அமர முடியவில்லை. அசடுவழிய தலையை கோதிக்கொண்டவன்,
“நீ கட்டில்ல உட்கார். நான் எடுத்துட்டு வரேன்…” என அவளுக்கும் தனக்கும் தட்டுக்களை எடுத்து வைக்க,
“நானே பன்றேன். நீங்க நகருங்க…” என தேன்மொழி வர,
“நான் சொன்னதை செய் முதல்ல…” என அவளை அதட்டி அனுப்பியவன் இருவருக்கும் எடுத்துவைத்து பெரிய ட்ரேயில் அறைக்கு கொண்டு வந்தான்.
அதற்கு தேன்மொழி ஒரு ட்ராக் போட்டு ஜீவனின் டிஷர்ட் ஒன்றை அணிந்து கட்டிலில் அமர்ந்திருந்தாள். அதை கண்டவன் இதழ்கள் புன்சிரிப்பில் நெளிய,
“போதும், போதும். கொண்டு வாங்க…” என்று சம்மணமிட்டு அமர்ந்துகொண்டாள்.
“இப்ப இதையும் சேர்த்து கழுவனும். அப்படியே கவரோட கொண்டு வந்தா ஓபன் பண்ணி ஊத்திட்டு மிச்சத்தை அப்படியே கட்டி போட்டிருக்கலாம் தானே?…” என அவனுக்கு நொட்டை சொல்லியபடி சாப்பிட,
“அதுக்கு ஏற்கனவே ஆள் சொல்லிட்டேன். ஷக்தி வீட்டுல வேலை பார்க்கற பொண்ணை தான் சொல்லிருக்கேன். ஈவ்னிங் வர சொல்லி…”
“இன்னைக்கு மட்டுமா?…”
“ம்ஹூம், இனி டெய்லி வெசல்வாஷிங்க்கு மட்டும். நல்லவேளை முதல்லையே சொன்னேன்…”