“முதல்லயேன்னா…”
“நீ கண்ணை கசக்கிட்டு ரூம்க்குள்ள போனியே அப்பவே…” என்றதும்,
“இது தேவையா? இப்படி ஏன் போடனும்? இப்ப ஆளை கூப்பிடனும்?. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நானே பார்த்துப்பேன்…”
“நீ பார்த்த வரைக்கும் போதும். நீ ஏன் போற? போனதால தான இப்படி போட்டு வச்சேன். போகாம இரேன். நானே இதையும் பார்த்துக்கறேன்…” என அவளை வாயடைக்க செய்ய,
“டெலிவரின்னா அம்மா வீட்டுக்கு தானே போகனும். அப்ப என்ன செய்வீங்க?…” என்று கிண்டலாக கேட்டவள் சிரிப்புடன் எழுந்து செல்ல ஜீவன் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தான்.
சில நினைவுகளின் தாக்கம் அவனை அன்று புரட்டிக்கொண்டு இருந்தது. வேண்டாம் வேண்டாம் என விலகி ஓட பார்த்தாலும் சுத்தமாய் முடியவில்லை அவனால்.
“என்ன ஆச்சு? கையை கழுவுங்க. அப்படியே உட்கார்ந்திருக்கீங்க?…” என கேட்டவள் அப்போதும் ஜீவன் அப்படியே இருக்க அவளாகவே அவனின் கையில் தண்ணீரை ஊற்றி கழுவிவிட்டு ஒரு டவலை கொடுத்துவிட்டு அந்த தட்டையும் மற்ற பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு கிட்சனிற்குள் சென்று வைத்துவிட்டு வந்தாள்.
“ரொம்ப டயர்டா இருக்குது…” என படுக்க அதுவரை தன் நினைவுகளிலேயே இருந்தவன் சட்டென சுதாரித்து,
“ப்ச், மொழி, இப்பதான் சாப்பிட்டிருக்க. உடனே படுக்காத. சாஞ்சு உட்காரு…” என அதட்ட,
“சரியான ரூல் புக்…” என அவனை திட்டியவள் அவன் சொல்லியதை போலவே சாய்ந்து அமர்ந்தாள்.
பசியில் அதிகமாகவே சாப்பிட்டுவிட திக்குமுக்காடி போனது அவளுக்கு. ஒருமாதிரி அவஸ்தையாக இருக்க,
“என்ன பண்ணுது மொழி?…”
“ஏப்பம் வரலை. ஒரு மாதிரி அன் ஈஸியா இருக்குது…” என சொல்ல,
“இரு வரேன்…” என்றவன் அவளுக்கு குடிக்க வெந்நீர் வைத்து கொண்டுவந்து தந்தான்.
“ஒரு மடக்கு கூட குடிக்க முடியாது. அவ்வளோ ஃபுல்…” என வயிற்றை தடவி சொல்ல சிரிப்புடன் அவளருகே அமர்ந்தவன்,
“தண்ணி குடிக்க எல்லாம இடம் நிறையவே இருக்குது. இப்ப குடி. உடனே ஏப்பம் வந்திரும். இப்படியே படுக்காத…” என குடுக்க கொஞ்சம் கொஞ்சமாய் வாங்கி குடித்தவள்,
“தண்ணி ஒரு மாதிரியா இருக்குது…”
“சுடுதண்ணி அப்படித்தான் இருக்கும்…” என சமாளிக்க அவளும் குடித்து முடித்து தம்ளரை வைத்த சிறிது நேரத்தில் ஏப்பமும் வந்துவிட்டது.
“தண்ணில என்ன போட்டீங்க?…” என்றாள் மொழி.
“பெருங்காயத்தூள் தான். வேற ஒண்ணுமில்லை…” என்றவன் அவள் கால் நீட்டி சாய்ந்திருக்க அவளின் மடியில் படுத்தவன் தன் இரு கரங்களையும் அணைவாய் பிடித்தவாறு வயிற்றில் வைத்தான்.
“கூசுது…” என லேசாய் மொழி நெளிந்தாலும் அவனின் தொடுகையில் அவளுமே நெகிழ்ந்திருந்தாள்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ தேன்மொழிக்கு உறக்கம் கண்களை சுழற்றியது.
“தூங்கட்டா?…” என அரைக்கண்ணை சொக்கியபடி அவள் கேட்க,
“நீயெல்லாம் என்னன்னு ஹோட்டல்ல வேலை பார்க்கிறியோ?. சரியான தூங்குமூஞ்சி…” என கிண்டலாய் சொல்லி எழுந்தமர,
“வேலையை விட்டுடலாம்னு பார்க்கறேன்…”
“வாட்?…”
“நிஜமா தான். என்னால இனி அலைய முடியுமான்னு தெரியலை. ரெண்டு நாளா ரொம்ப டயர்டா பீல் ஆகுது…”
“நீயா நினைச்சுட்டு சொல்ற. அதுவும் மாசமா இருந்தா டயர்டா இருக்கும்னு நம்ம மனசு நம்ப ஆரம்பிச்சிடுது. அதான். நாளைக்கு செக்கப் போய் கேட்டுப்போம்…” என சொல்ல,
“வேலைக்கு போகனுமா நான்?…” என்றாள் முகத்தை சுருக்கியபடி.
“முதல்ல டாக்டர்ட்ட கன்சல் பண்ணிப்போம். ஒன் வீக் லீவ் போடு நீ. உனக்கு போரடிக்காம, அப்பவும் முடியலைன்னா தாராளமா ரிலீவ் ஆகிக்கோ. நோ இஷூஸ்…” என சொல்லியவன்,
“ஆனா டெலிவரி இங்க தான். நம்ம வீட்டுல…” என்றான் தீவிரமாய்.
“என்னது? அதெப்படி முடியும்? அதெல்லாம் ஒத்துக்கமாட்டாங்க…”
“அதெல்லாம் ஒத்துப்பாங்க. நான் பார்த்துக்கறேன். உன்னை எங்கயும் விட முடியாது. ஒன்னொண்ணுக்கும் உன்னை தேடி என்னால அங்க வர முடியாது. இப்பவே சொல்லிட்டேன்…” என்றவனின் குரல் அத்தனை ஸ்திரமாய் ஒலிக்க ‘என்னடா இது?’ என்ற ஆயாசத்துடன் பார்த்தாள்.
“அது என்ன அடுத்தவங்க வீடா? என் பெரிப்பா வீடு. என்னோட வீடு மாதிரி தானே? உங்க மாமியார் வீடு. அங்க வர என்ன உங்களுக்கு கஷ்டம்?…” என தேன்மொழி கேட்க,
“அதான் வேண்டாம்னு சொல்றேன்ல. அதெல்லாம் ரு அளவுக்குத்தான். உரிமை, மாமியார் வீடு. ப்ச். சுத்த ஹம்பக்…” என்றான் வெறுப்பான குரலில்.
திடுக்கிட்டு அவனின் முகத்தை திரும்பி பார்த்த மொழிக்கு என்னவோ போல் இருந்தது ஜீவனின் திக்கற்ற வெறித்த பார்வை. மனதிற்குள் பயப்பந்து சுழல எதுவோ வர இருக்கிறதென்று பரபரப்புடன் அமர்ந்திருந்தாள்.
ஜீவன் பேசினான் பேசிக்கொண்டே இருந்தான். நிறுத்தவே இல்லை. அவனின் வாழ்க்கை, அவனின் வலிகள், அனுபவித்த சுவடுகளின் தடங்கள் கொஞ்சமும் மாறாமல் அதன் தாக்கம் அப்படியே மொழியினுள் இறங்கியது.
அழவில்லை. ஆனால் மொழியின் கண்களிலும் கண்ணீர் வடிந்துகொண்டே இருந்தது. வர்ஷாவினால் ஜீவன் அனுபவித்தவைகள் அத்தனையும் சுமக்கமுடியாத பாரமாய் அவளை அழுத்த வாயிருந்து வார்த்தையின்றி ஊமையானாள் மொழி அவளவனுக்கு ஆறுதல் சொல்லவும் முடியாமல்.
ஏதோ வேகத்தில் அழுத்திக்கொண்டிருந்த பாரங்களை, கஷ்டங்களை அத்தனையையும் அவளிடம் கொட்டிவிட்டான். கொஞ்சமும் மிச்சமின்றி ஒப்பித்துவிட்டான். பேசி முடித்தப் பின்னல் சொல்வதற்கு எதுவுமில்லை என்று மொத்த வார்த்தைகளும் வடிவம் பெற்று சேரவேண்டிய இடத்தில் சென்று அடைந்துகொண்ட பின்னர் தான் சுயம் உணர்ந்தான் ஜீவன்.
தேன்மொழி அசையாது அதிர்ந்து அமர்ந்திருந்த விதத்தில் தான் எத்தனை பெரிய தவறிழைத்திருக்கிறான் என்றே புரிந்தது அவனுக்கு.
இதோ இதற்குத்தானே மொழிக்கு தெரியவேண்டாம் என்று நினைத்தான். தாங்கமாட்டாள். நிச்சயம் தாங்கமாட்டாள்.
அவளின் தவிப்பை அவனுள் உள்வாங்கிக்கொண்டவன் நெருக்கமாக அணைத்துக்கொண்டான்.
“லீவ் இட் மொழி. இதுக்குத்தான் சொல்லவேண்டாம்னு இருந்தேன். இன்னைக்கு என்னால முடியலை. அதை விட்டு வெளில வா. மொழி…” என அவளை தேற்ற அவனின் நெஞ்சுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டவள் நிமிரவே இல்லை.
“ப்ச் மொழி, என்னை பாரேன்…” என்றவனின் இதழ்களை விரல் கொண்டு அடைத்தவள் அப்படியே சாய்ந்திருந்தாள். அவனும் அதற்கு மேல் அவளை எதுவும் சொல்லாமல் அமர்ந்திருக்க இருவரின் மனமும் ஒரே படகில் பயணமாக ஆரம்பித்து தங்களின் அறிமுகத்தில் சென்று நின்றது.
மெடிக்கல் கல்லூரி மட்டுமல்லாது கன்னியாகுமரியின் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியரும் அங்கே தான் வந்து பயணம் மேற்கொள்வார்கள்.
தேன்மொழிக்கு அது முதலாம் வருடம். முதல்வருட கல்லூரி வாழ்க்கை. பத்துநாட்கள் ஆகியிருந்தது அவளுக்கு.
ஒருமாதம் ஆகியிருந்தது. அத்தனை குதூகலமும் கொண்டாட்டமுமாக தனது தோழியுடன் அங்கிருப்பவர்கள் யாரை பற்றியும் கவலையின்றி தேன்மொழி இருக்க அவளின் அந்த துறுதுறுப்பே அங்கே பேருந்துக்கு காத்திருக்கும் ஜீவனை ஈர்த்தது.
“யார்ரா இந்த பொண்ணு? ரொம்ப ஆக்ட்டிவா இருக்கா…” என உடன் இருக்கும் நண்பனிடம் கேட்டேவிட்டான்.
“யாருக்கு தெரியும்? ரெக்கை கட்டின மாதிரி சுத்தி பறந்துட்டே வரா. ஆளை பாரேன்…” என்றான் தோழன் மதிவாணன்.
“உதை வாங்குவ படவா. யார்ன்னு கேட்டா இளப்பமா பேசற? வாய் வெத்தலைபாக்கு போட்டுடும் பார்த்துக்க….”
“அடேய், என்னை ஏன்டா திட்டற? நான் யாருன்னு கேட்டதுக்கு தானடா பதில் சொன்னேன்?…” என மதி திகைக்க,
“அதுக்கு இப்படித்தான் சொல்லுவியா? உன்னை கேட்டா என்ன வேணாலும் பேசுவியா?…” என ஜீவன் மிரட்ட,
“என் வாய்டா, எனக்கு என்ன தோணுதோ அதை தான சொல்லுவேன். நீ கூட தான் ரொம்ப ஆக்ட்டிவா இருக்கு இந்த பொண்ணுன்னு சொன்ன…”
“நான் சொன்னதும், நீ சொன்னதும் ஒண்ணா?…”
“இல்லையா?…”
“இல்லை…”
“ரைட்டு விடு. இனி பேசினேனா பாரு…” என்று மதிவாணன் தான இறங்கி வந்தான் ஜீவனிடம்.
ஜீவனுக்கு தேன்மொழியை அவளின் செய்கைகளை கவனிப்பதில் ஒரு சுவாரஸியம் இருந்தது. என்றாவது தாமதமாக வந்து சேர்ந்தால் அவள் எங்கே என தேட ஆரம்பித்தான்.
அங்கிருக்கும் பெண்கள், தான் பழகிய பெண்களுக்கு எல்லாம் மத்தியில் தேன்மொழி வேறாக தெரிந்தாள் அவனுக்கு.
அதற்கு மறுநாளே ஜீவனை தேடி வந்துவிட்டாள் தேன்மொழி. இதை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை ஜீவனே.
“ஹாய் பாஸ், நான் தேன்மொழி…” என சிரிப்புடன் வந்தவள் சொல்ல,
“ஹாய்…” என்றான் சிரிப்புடன்.
அத்தனை மாணவர் கூட்டங்கள் இருக்க கொஞ்சமும் அச்சமின்றி அவள் நடந்துவந்த வேகத்திலேயே யாருடனோ பேச வருகிறாள் என்று தான் ஜீவனும் நினைத்தான்.
தேன்மொழி நடந்து வந்த விதத்தில் அடக்கமாட்டாமல் புன்னகையுடன் ஜீவன் நின்றிருக்க,
“வர்ரதை பாரேன் பஃபூன் ஆடி அசைஞ்சுட்டு…” என சொல்லிவிட்டு ஜீவனை பார்த்து நாக்கை கடித்தான்.
“கேட்டுடுச்சு போல உன்னை தான் முறைச்சுட்டு வரா…” என ஜீவன் வேறு பயம் காட்டினான்.
ஆனால் வந்தவள் நேராக ஜீவனிடம் கேள்வி கேட்க அவனுக்கு சிரிப்பு வந்தது தேன்மொழியின் வெடுக்கென்ற கேள்வியில். அதே சிரிப்புடன் பார்க்க,
“உங்க பேர் தான் ஜீவனா?…” என கேட்க ஜீவன் தன்னை சுற்றி நின்ற மாணவர்களை ஒருநொடி பார்க்க அனைவருமே சற்று நகர்ந்து சென்றனர். அவன் நின்றிந்ததே அந்த ஸ்டாப்பில் இருந்து சற்று தள்ளி தான்.
“ஆமா இவன் தான்…” என்று மதிவாணன் சொன்னதும் வேகமாய் தனது பேக்கில் இருந்து ஒரு கிப்ட் ராப் பண்ணின பார்சலை நீட்ட திகைத்து போனான்.
“ஹ்ம்ம்ம், நீங்க தானே ஜீவன். இது உங்களுக்கு தான் வாங்கிக்காங்க…” என்று சொல்லியவளின் வெகுளித்தனத்தில் ஜீவனுக்கு ஆச்சர்யமாக போனது. ஒரு நொடி திகைத்தும் போனான்.
“ஆமா நான் தான் ஜீவன்னு யார் சொன்னா?…” என்றான் அவனும்.
“வர்ஷாக்கா…” என சொல்லவும் அவனுக்கு புரிந்துவிட்டது.
அவளை தான்டி தூரமாய் நின்றுகொண்டிருந்த வர்ஷாவை அங்கிருந்தே பார்த்தவன் மீண்டும் தேன்மொழியை பார்த்து,
“யார் சொன்னா? என் பேர் ஜீவன் இல்லை. பாண்டி. திகில் பாண்டி…” என்று சிரிக்காமல் சொல்ல மதிவாணனுக்கு சிரிப்பு பொங்கியது ஜீவன் சொல்லிய தோரணையில்.
“என்ன?…” என தேன்மொழி பார்க்க.
“திகில் பாண்டி. இட்ஸ் மீ…” என சொல்ல,
“அப்பா இந்த கிப்ட் உங்களுக்கு இல்லை. இங்க யார் ஜீவன்? இதே ஷர்ட் கலர் தான சொன்னாங்க…” என பார்வையை சுழற்ற,
“எம்மா என்ன சொன்னாலும் நம்புவியா? இவன் தான் ஜீவன். இந்த கிப்ட் வர்ஷா குடுத்ததுன்னா அப்பா அது இவனுக்கு தன. குடுத்துட்டு போ…” என மதிவாணன் சொல்லவும்,
“ஓஹ் கலாயா?…” என தேன்மொழி கேட்க,
“வெரிகுட், கண்டுபிடிச்சுட்டியே…” என்ற மதிவாணன்,
“இந்த பஃபூன்க்கு இது கூட தெரியலைடா…” என ஜீவனின் காதில் சொல்ல அதற்குள் தேன்மொழி செல்ல இருந்த பஸ் வந்துவிட,
“ஓகே பாஸ், பஸ் வந்திருச்சு. வாங்கிக்கோங்க…” என சொல்லிவிட்டு அவன் பதில் சொல்லும் முன் அந்த கிப்ட்டை அவனின் கைகளில் திணித்துவிட்டு வந்த பஸ்ஸில் ஏறிக்கொண்டவள் குனிந்து ஜீவனை பார்த்து கையசைத்து விடைபெற ஜீவனுக்கு அவளின் செயலில் இன்னும் விரிந்த புன்னகை.
“நைஸ் கேர்ள்…” என்றன அவனின் இதழ்கள். அதே நேரம் வர்ஷாவிட மதிவாணன் தன்னை சொல்லியதை தேன்மொழி சொல்ல,
“நீ பார்க்க பஃபூன் மாதிரி தானே இருக்க. அதான் சொல்லிருப்பான்…” என்றாள் உள் மறைத்த அலட்சியத்துடன்.
“பஃபூன் அப்படின்னா க்யூட்டா சப்பியா இருக்கன்னு அர்த்தம் தேனு. இனிமே நானும் உன்னை அப்படித்தான் கூப்பிடுவேன். சும்மா பார்பிடால் மாதிரி கொழுக் மொழுக்ன்னு இருக்க…” என ஒட்டவைத்துக்கொண்ட சிரிப்புடன் சொல்ல அதுவே பெரிய விருது கிடைத்ததை போல இருந்தது தேன்மொழிக்கு.