புன்னகை – 2
தீபாராதனை காண்பித்து முடிக்கவும் அதனை தொட்டு வணங்கி ஒற்றிக்கொண்டவள் தனக்கெதிரே நின்ற ஜீவனின் பார்வையை கண்டு முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள்.
ஜீவன் கையை கட்டியபடி அப்படியே நிற்க அவன் இன்னும் தீபத்தை வணங்காததை கண்ட பத்மா,
“தம்பி, கண்ணுல ஒத்திக்கோங்க…” என்று சொல்ல புன்னகையுடன் மறுப்பாய் தலையசைத்தான்.
ஒன்றும் புரியாமல் கார்மேகமும், பத்மாவும் ஒருவரை ஒருவர் பார்க்க தெய்வா கையில் வாங்கியிருந்த விபூதியை கீற்றாய் அவனின் நெற்றியில் பூசிவிட்டார்.
அர்ச்சனை கூடை வரவும் இருவரும் வாங்கிக்கொள்ள அதில் இருந்த பூவை எடுத்து ஜீவனின் கையில் கொடுத்து தேன்மொழிக்கு கொடுக்க சொல்ல வாங்கியவனும் எதுவும் பேசாமல் அவளிடம் நீட்டினான்.
லேசாய் கண்ணில் நீர் நிறைந்ததோ என்னும் அளவில் கண்ணீர் திரையிட்ட கண்களுடன் நிமிர்ந்து பார்த்தவளின் விழி மொழியை படிக்க முயன்று தோற்றவன்,
“வாங்கிக்கோ மொழி…” என்றான் இப்பொழுது அழுத்தமாய்.
விரல் நடுங்க அதனை பெற்றுக்கொண்டவள் நெற்றியிலும் வெள்ளை தீற்றலே இருக்க அவளின் நிலை புரிந்தவன்,
“நீங்க முன்னாடி போங்க, நான் பேசி கூட்டிட்டு வாரேன்…” என்றவன் தாயை பார்க்க,
“ஆமா, ஆமா, நீங்க பேசுங்க. நாங்க செத்த அந்தப்பக்கம் உட்கார்ந்திருக்கோம்…” என தெய்வா அவர்களை அழைத்துக்கொண்டு செல்ல,
“மொழி, வா…” என சொல்லி முன்னால் நடக்கவும் அவன் தந்த பூவை கையில் வைத்தபடி அவனின் பின்னால் தொடர்ந்து சென்றாள்.
ஓரிடத்தில் ஆட்கள் குறைவாக இருக்க அங்கே அமர்ந்தவன் அவளையும் அமர சொல்லி அவள் பேச காத்திருக்க கையில் இருந்த பூவை பார்த்தபடி அசையாமல் அமர்ந்திருந்தாள். தூரத்தில் இவர்களை பார்த்தும் பாராமல் இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கவனித்தபடி இருந்தனர்.
சிறிது நேரம் அவள் பேசுவாள் என்று பொறுத்திருந்தவன் அவள் இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்க ஆச்சர்யமாய் போனது ஜீவனிற்கு. இத்தனை நேரங்களில் எத்தனை வார்த்தை பேசியிருப்பாள் இப்பெண் என்ற வியப்புடன்,
“நீ இவ்வளோ சைலன்ட்டா? இப்படி ஒரு மொழியை மீட் பண்ணுவேன்னு நான் நினைக்கலை. எனக்கு தெரிஞ்ச மொழியோட மொழி எப்பவும் கொட்டுற அருவி மாதிரி தானே?…” என்றான் லேசாய் புன்னகைத்தபடி.
“அப்படிலாம் இல்லை. என்ன பேசறதுன்னு தெரியாம…” என்று அவள் தயங்க,
“கொஞ்சம் நேரம் முன்ன என்னை பார்த்ததும் பளிச்சின்னு சிரிச்சு என்னை கலர்க்குருவின்னு கூப்பிட்டியே. என் கூட நல்லா தானே பேசின? இப்போ மட்டும் என்ன ஆச்சு?…”
அவனும் விடாமல் அவளை வாய்திறக்க வைக்க முயல அவனின் முயற்சி புரிந்தது அவளுக்குமே. ஆனாலும் பேச தயக்கம்.
தன் வீட்டின் சூழ்நிலை, தன் நிலை, மாப்பிள்ளையாக ஜீவன், கல்லூரியே கொண்டாடிய வர்ஷா, ஜீவனின் காதல், அவர்களின் திருமணத்திற்கு பிறகான பிரிவு என்று மனம் முழுவதும் ஏகப்பட்ட கேள்விகள்.
“அப்போ அப்போ…” என வார்த்தைகளை தேடினாள் அவனிடம் பேச.
“அப்போ நான் தான் உனக்கு வந்திருக்கும் அலையன்ஸ்ன்னு உனக்கு தெரியாது. அதனால பேசிட்ட. அதானே?…” என அவன் போட்டு உடைக்க அமைதியாக இருந்தாள் அதை ஆமோதிக்கும் விதமாக.
“இங்க பாரு மொழி, எப்பவும் நான் உன்னோட பழைய ஜீவா பாஸ் தான். நீ சொல்லுவியே கலர்க்குருவின்னு. அவனே தான். இவ்வளவு யோசிக்கனும்னு இல்லை…” என தெளிவுபடுத்த பார்த்தான்.
“இல்லை அப்படி இல்லை. நான் அதை யோசிக்கலை. இந்த பேச்சுவார்த்தை, இது எப்படி நமக்கு? அதான், அதைத்தான் யோசிச்சுட்டு இருக்கேன்…”
அவனுக்கும் புரிந்தது தானே அவளின் தடுமாற்றமும், அதிர்ச்சியும், இப்போதைய யோசனையான முகமும்.
“இதுல யோசிக்க என்ன இருக்கு? நாம முன்னாடியே தெரிஞ்சவங்க. நல்ல பழக்கம். சோ லைஃபை லீட் பன்றது பெட்டர் தானே?…” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனின் முகத்தில் இருந்த இலகுத்தன்மையில் குழம்பினாள்.
“வர்ஷாக்கா…”
“அது முடிஞ்சு போன சேப்ட்டர். மூவ் ஆன்…” என்றான் பட்டென்று.
அப்போதும் தேன்மொழி வாயை திறந்தாள் இல்லை. அவனின் அந்த அழுத்தமான பேச்சு இன்னுமே யோசிக்க வைத்தது.
“இங்க கோவிலுக்கு வரும் முன்ன வரைக்கும் உன்னை கல்யாணம் செஞ்சுக்க போறவன் யாருன்னு தெரியாது. எல்லா ஏற்பாட்டுக்கும் சம்மதம் சொல்லி தேதி குறிச்சு எல்லாம் முடிவெடுத்து மீட் பண்ண வர வரைக்கும் ஓகே தான் உனக்கு. ஆமா தானே?…”
“ஹ்ம்ம், ஆமாம்…”
“இங்க வந்ததும், அந்த ஒருத்தன் நான்னு தெரிஞ்சதும் தான் உனக்கு இந்த யோசனையே. கரெக்ட்டா?…”
“ஹ்ம்ம்…”
“ப்ரெண்டா இருக்கற வரைக்கும் ஓகே. ஆனா ஹஸ்பண்டா வேண்டாம்னு யோசிக்கிற. அதுதானே உன்னோட மைண்ட்ல ஓடுது…”
பளிச்சென்று மனதை படம் பிடித்ததை போல அவன் சொல்ல சொல்ல பதிலின்றி தடுமாறினாள்.
“யாரோ ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சவளுக்கு அது உனக்கு நல்லா தெரிஞ்சவன்னதும் அதுவும் நீ…”
“இல்லை, நான் வேண்டாம்னு எல்லாம் யோசிக்கலை…”
“இப்ப நான் வேண்டாம்னு யோசிக்கனுமோ? ஏன் மொழி இப்படி இருக்க? இதுவே நீ இல்லை…” என்றான் அவளை கவலையுடன் பார்த்து.
“என்ன இப்படி இருக்கேன்? நல்லா தானே இருக்கேன்…” என்றாள் மென்னகையுடன்.
காட்டன் சில்க் புடவையில் ஒல்லியான தேகத்துடன் லேசாய் மங்கிய நிறத்தில் ஒடுங்கிய தோற்றத்தில் இருந்தவளின் முகம் மட்டும் இன்னும் மாறாமல் அதே அகன்ற விழிகளும், குண்டு கன்னங்களும் என்று இருந்தாள்.
அதுவே அந்த முகமே அவளை காட்டிக்கொடுத்தது அவனுக்கு. இல்லையென்றால் அவளை கண்டுபிடித்திருக்கமுடியாது ஜீவனால். அந்தளவிற்கு மாறி இருந்தாள் உடல்மொழியில்.
“என்ன நல்லா இருக்க? இது தூதர்ஷன் இல்லையே…” என்று சிரித்து,
“நீ குழப்பிக்க வேண்டாம் மொழி. இப்பவும், எப்பவும் நான் உனக்கு ஒரு நல்ல ப்ரெண்ட். புரியுதா?…”
“ஹ்ம்ம், நல்லா புரியுது…” என்றாள் அவளும்.
“உண்மையா எனக்கு பொண்ணு காண்பிக்கறேன்னு அம்மா கூட்டிட்டு வரவும், யாரோ எப்படி இருப்பாங்களோன்னு தோணவே இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம யாரா இருந்தாலும் சரின்னு தான் தோணுச்சு. இப்போ உன்னை பார்க்கவும் ஐ’ம் ஹேப்பி…” என்றவனை ஆச்சர்யமாய் அவள் பார்க்க,
“அட நிஜமா தான் சொல்றேன். புதுசா ஒரு பொண்ணு. நிறைய விளக்கம் சொல்லனும். அவளை நான் புரிஞ்சு, என்னை அவளுக்கு புரியவச்சுன்னு எவ்வளவு பெரிய ஆப்பரேஷன். சக்சஸ் ஆகாலைன்னாலும் பெயிலியர் ஆகாம இருக்க நிறையவே கஷ்டப்படனும்…”
“டாக்டர்ன்னு எங்களுக்கும் தெரியுது. சும்மா அதையே உதாரணம் காட்டாதீங்க…” என்று தேன்மொழி கிண்டல் பேச,
“இது, இந்த மொழி தான் வேணும்…” என்றவன்,
“என்னை சொல்றது இருக்கட்டும். நீ என்ன பன்ற? இங்க என்ன பன்ற? உன் பேரன்ட்ஸ் எங்க? உன்னோட வந்திருக்கற அவங்க யார்?…” என்றான் கார்மேகத்தையும், பத்மாவையும் குறித்து.
தூரத்தில் தெய்வாவிடம் பேசிக்கொண்டிருந்தவர்களை பார்த்தவளின் முகம் கலங்கி இருக்க,
“அவங்க என்னோட பெரியம்மாவும், பெரியப்பாவும்…”
“உன்னோட பேரன்ட்ஸ்?…” என்ற ஜீவன் சட்டென அவளின் கண்களில் வழிந்த நீரை விரல்கொண்டு துடைத்தவன்,
“ஓகே, இப்போ எதுவும் சொல்ல வேண்டாம்…” என்று அவளின் கையை தட்டிக்கொடுத்து,
“நெக்ஸ்ட், டேக் டைவர்ஷன். டிகிரி கம்ப்ளீட் பண்ணிட்டு ஹையர் ஸ்டடிஸ் படிக்கனும்னு சொன்னியே. என்ன பண்ணியிருக்க?…” என கேட்டு அவளின் மனநிலையை மாற்றினான்.
“இல்லை, டிகிரி தான் கம்ப்ளீட் பண்ணினேன் பாஸ். இப்ப இங்க ஒரு ஹோட்டல்ல ரிசப்சனிஸ்டா ஒரு செக்ஷன்ல வொர்க் பன்றேன். பெரியப்பாவுக்கு தெரிஞ்சவங்க அங்க மேனேஜர். டே ஷிப்ட் மட்டும் தான். பிரச்சனை இல்லாம போய்ட்டிருக்கு…”
“அப்போ உன் பேரை சொன்னா உடனே அந்த ஹோட்டல்ல ரூம் கிடைச்சிடும். அப்படித்தானே?…” என ஜீவன் சொல்ல,
“எனக்கொரு ஹோட்டல் கட்டி தந்திருங்க. என் பேரை சொல்லி ஒரு ரூம் என்ன ஒருமணி நேரத்துக்கு ஒரு ரூம்ல தங்கிடலாம்..” அவனுக்கு இணையாய் அவளும் பேசினாள்.
பேசியபடி மெதுவாய் அவனின் கைகளுக்குள் இருந்த தனது கரத்தை அவனறியாமல் பேச்சினூடே உருவிக்கொள்ள அவனும் உணர்ந்தான் தான்.
எத்தனை முறை அவளின் கை பிடித்திருப்பான், காதை திருகியிருப்பான். தலையில் குட்டியிருப்பான். இப்பொழுது அவளின் இந்த செய்கை லேசாய் முறுவலை தந்தது அவனுக்கு.
“உங்க பெரியப்பா வீட்டுல எத்தனை பேர்? அவங்க யாரும் வரலையா?…”
“ம்ஹூம். வரலை. பெரியப்பாவுக்கு ரெண்டும் பசங்க. தியாகு அண்ணா ஒருத்தன் இருக்கான். அண்ணி சுலோச்சனா. சின்ன அண்ணா ஷிவா. இதான் எங்க பேமிலி…”
“நைஸ். ஓகே, வா ரொம்ப நேரம் பேசிட்டோம்…” என்றவன் அவளின் மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டு தன் எண்ணையும் அவளிடம் தந்துவிட்டு பெரியவர்கள் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி சென்றான்.
“அம்மா, கிளம்புவோம்…” என்ற ஜீவன் கார்மேகத்திடம் சொல்லிக்கொள்ள திரும்ப,
“உங்களுக்கு கல்யாண தேதி எல்லாம் சரிதானுங்களே தம்பி. இப்பதான் அம்மா சொன்னாங்க அவங்க ஊருக்கு நாளைக்கு கிளம்பறதா. அதுக்குள்ளே பேசவேண்டியதை எல்லாம் பேசிடலாமேன்னு…”
“இனியும் பேச என்ன இருக்கு அங்கிள். முன்னாடியே பேசி முடிவு பண்ணினது தானே? எனக்கு ஓகே தான். அதுவும் தேன்மொழியை நல்லாவே தெரியும். இந்த சம்பந்தத்தில் எனக்கு பரிபூரண சம்மதம்…” என சிரிப்புடன் அவன் சொல்ல,
“ரொம்ப ரொம்ப சந்தோஷம்ங்க தம்பி. இது போதும் எங்களுக்கு…” என்று பத்மா தழுதழுக்க,
“பெரிம்மா…” என்று அவரின் கையை பற்றிக்கொண்டாள் தேன்மொழி.
“இவ வாழ்க்கையை நாங்க தான் முடிவு பண்ணினோம். நல்லது பண்ணிட்டோம்னு நினைச்சு சந்தோஷப்படறதுக்குள்ள எங்க பொண்ணு எங்கக்கிட்டையே இப்படி வந்து சேர்ந்துட்டா. அதை நினைச்சு வருந்தாத நாள் இல்லை…”
அவர் சொல்ல கேட்டவன் என்ன சொல்லி ஆறுதல் சொல்ல என்று புரியாமல் அமைதியாய் நின்றான்.
“இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிட்டா போதும். அந்த சந்தோஷத்துல…”
“இப்பத்தான் என்கிட்டே இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு சொன்னீங்க. என்ன இது பத்மா?…” என்று உரிமையாய் அதட்டினார் தெய்வா.
இருவரும் அந்தளவிற்கு நெருங்கியிருந்தனர் சிறிது நேரத்திலேயே. தெய்வாவின் வெகுளித்தனமான பேச்சு அவர்களை கவர்ந்திருந்தது.
“அதுக்கில்லைங்க மதினி, நாம ஒரு முடிவுல இருந்தாலும் இந்த ஊர் உலகம் நம்மளை நிம்மதியா இருக்க விடமாட்டிக்குதே. அதான். சரிங்க இனி இப்படி பேசலை…” என பத்மாவும் உடனே அவரிடம் தளைந்து பேசிவிட,
“சரி போவலாம் வாங்க…” என்று கார்மேகம் தேன்மொழியுடன் முன்னால் நடக்க,
“ஏம்த்தா இங்கயும் வந்து அரட்ட ஆரம்பிச்சுட்ட நீ. போற எடமெல்லாம் பஞ்சாயத்துக்கு உட்கார்ந்துட்டு நீ பன்ற அலும்பு இருக்கு பாரு…” என்று தாயை கிண்டல் செய்தவன்,
“அவங்களோட சேர்ந்து போ. பேசிட்டு இரு. கார் புக் பண்ணிட்டு வரேன்…” என்று அனுப்பினான்.